under review

எழிலவன்

From Tamil Wiki
கவிஞர் எழிலவன்

எழிலவன் (நா. பழனி; என். பழனி; டாக்டர் என். பழனி; முனைவர் என். பழனி) (பிறப்பு: ஜூன் 15, 1949) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆய்வு நூல்கள் பலவற்றை எழுதினார்.

பிறப்பு, கல்வி

எழிலவன், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரில், ஜூன் 15, 1949 அன்று, சி. நாராயணசாமி கச்சிராயர் - ரோகிணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியைக் காடாம்புலியூரில் உள்ள பள்ளியில் படித்தார். உயர்நிலைக் கல்வியைப் பண்ருட்டியில் உள்ள மாதிரிப் பள்ளியில் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு படித்தார். அங்கேயே தொடர்ந்து பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், மொழியியல், நூலக அறிவியல், மொழிபெயர்ப்பியல் ஆகிய பிரிவுகளில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். கல்வியலில் இளங்கலை பட்டம் (B.Ed) பெற்றார். ரஷ்ய மொழியில் பட்டயம் பெற்றார். நாட்டுப்புறவியலில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

முனைவர் எழிலவன்

தனி வாழ்க்கை

எழிலவன், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மேலாளர், ஆங்கிலப் பேராசிரியர், ஆலோசகர், அதிகாரி எனப் பல நிலைகளில் பணிபுரிந்தார். 2007-ல் பணி ஓய்வு பெற்றார். தொடர்ந்து நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் ஆலோசகராகப் பணியாற்றினார். மணமானவர்.

முனைவர் எழிலவன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

எழிலவன், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல கவிதைகளை எழுதினார். வானொலியில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசித்தார். முந்நூற்றுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் உவமைக் கவிஞர் சுரதா, கே.சி.எஸ். அருணாசலம், மு.மேத்தா, நா. காமராசன், பொன்னடியான், புத்தனேரி ரா. சுப்பிரமணியன், மீரா, பாலா ஆகிய கவிஞர்களுடன் பங்கேற்றார்.

இதழ்களில் படைப்புகள்

எழிலவன், தீபம் நா. பார்த்தசாரதியால் ஊக்குவிக்கப்பட்டார். தீபம் இதழில் எழிலவனின் பல கவிதைகள் வெளியாகின. கண்ணதாசன், ஆனந்த விகடன், அவள் விகடன், தாமரை, தீபம், கணையாழி, கல்கி, முல்லைச்சரம், அமுதசுரபி, கவிதாமண்டலம், இனப்போர், சிந்தனையாளன், குயில், கவியமுதம், பூஞ்சோலை, தினகரன், தமிழோசை நாளிதழ், உரிமை வேட்கை, அன்னம், முக்கனி, நடவு, மாற்று, குளம், ஆழி, ஆவாரம்பூ, மருதூர் முரசு, சங்கு, மாணவர் முழக்கம், தேனமுதம், தமிழணங்கு, சகாப்தம், கண்ணியம், தை, காலச்சுவடு, கவிதாசரண், செம்மண், வையம் என 140-க்கும் மேற்பட்ட இதழ்களில் எழிலவனின் படைப்புகள் வெளியாகின.

முதல் கவிதைத் தொகுதி ‘மானிட கீதம்’ 1970-ல் வெளியானது.

முனைவர் எழிலவன் ஆங்கில நூல்
ஆய்வு

கல்லூரி, பல்கலைக்கழக ஆண்டு மலர்களில் எழிலவனின், கவிதை, கட்டுரை, ஆய்வு விளக்கங்கள் வெளியாகின. ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மதிப்புரை, திறனாய்வு, அணிந்துரை எழுதினார். தமிழ் ஓசை நாளிதழில் மரபு வழிக் கலைகள் பற்றிய ஆய்வுத் தொடர் கட்டுரைகளை எழுதினார். எழுத்தாளர் மௌனிக்கு அணுக்கமானவராக அறியப்பட்டார்.

எழிலவன், நாட்டுப்புறவியல் அறிஞர் ஆலன் டான்டிஸின் ஆய்வுகளின் பாதிப்பால் ‘தமிழ்ப்பண்பாட்டில் எண்கள்’ என்ற ஆய்வு நூலை எழுதினார். தமிழ்ப்பண்பாட்டில் எண்கள் பெறும் இடம் பற்றியும், மூன்று என்ற எண்ணுக்குத் தமிழில் இருக்கும் சிறப்பிடம் பற்றியும் எழிலவன் அந்நூலில் விரிவாக விளக்கினார்.

எழிலவனின் கவிதைகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், குடந்தை அரசு தன்னாட்சிக் கல்லூரி போன்றவற்றில் முதுகலை, இளங்கலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டன. எழிலவனின் கவிதைகள் குறித்து ஆய்வு செய்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பில். பட்டம் பெற்றனர். எழிலவன், பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டார்.

மொழிபெயர்ப்பு

எழிலவன், கவிதை, கட்டுரை, நாட்டுப்புற இலக்கிய நூல்கள் எனப் பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் நிகழ்ந்த பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். FOSSILS (Folklore Society of South Indian Languages) சார்பில் திராவிட, காகத்தியா, மதுரை காமராஜர், மைசூர் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் நடைபெற்ற தேசிய மாநாடுகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். திராவிடப் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள ‘நாட்டுப்புறவியல் கலைக் களஞ்சியம் நூலுக்குப் பல்வேறு கட்டுரைகள் எழுதினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு, இந்திரா காந்தி தேசிய கலை மையக் கருத்தரங்கு உள்படப் பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டார்.

இதழியல்

எழிலவன் முக்கனி, மண்வாசம், வையம் போன்ற இதழ்களின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

விருதுகள்

  • 1982-ல், தமிழக அளவில் கல்கி இதழ் நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் எழிலவனின் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • புதுவை பாரதி நூற்றாண்டு விழாவில் பாரதி பட்டயம் பெற்றார்.
  • சென்னைத் தொலைக்காட்சி நிலையம், 1998-ல் நடத்திய கவிதைப் போட்டியில் ஒன்பதாயிரம் கவிதைகளுக்கிடையே எழிலவனின் கவிதை முதல் பரிசு பெற்றது.
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது மற்றும் பொற்கிழி. (2011)
  • கண்ணதாசன் வழங்கிய வித்தகன், கலையின் நேயன் பட்டங்கள்
  • கே.சி.எஸ். அருணாசலம் அளித்த கவித்தென்றல் பட்டம்.
  • பொன்னடியான் வழங்கிய எழுச்சிக் கவிஞர் பட்டம்.
  • நா. காமராசன் அளித்த கவிதைக் குயில் பட்டம்

மதிப்பீடு

எழிலவன் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், நாட்டுப்புற ஆய்வாளர் எனப் பல களங்களில் செயல்பட்டார். த. பழமலய் ‘செம்மண் இலக்கிய முன்னோடி’ என்று எழிலவனை மதிப்பிட்டார். எழிலவன், வட தமிழகத்தின் முன்னோடி நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களுள் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • மானிட கீதம்
  • மரவாடியில் போதிமரம்
  • கடவுளின் கடைசி ஆசை
  • பின்னையிட்ட தீ
  • நதியில் சில தீவுகள்
ஆய்வு நூல்கள்
  • முந்திரிக் காட்டு முகவரிகள்
  • தமிழ்ப் பண்பாட்டில் எண்கள்
  • தமிழகத்தின் மரபுக் கலைகள்
  • தமிழக நாட்டுப்புறக் கதைகள் (தொகுப்பு)
ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள்
  • Folktales of Tamil Nadu
  • Folk Performing Arts of Tamil Nadu
  • Kaasa valanadu – an Historical Study – Ph.D. (Dissertation)
  • Folk Tales of South India

உசாத்துணை


✅Finalised Page