உடுமலை நாராயண கவி
- உடுமலை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: உடுமலை (பெயர் பட்டியல்)
- நாராயணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாராயணன் (பெயர் பட்டியல்)
உடுமலை நாராயணகவி (நாராயணசாமி; செப்டம்பர் 25, 1899 – மே 23, 1981) தமிழ்க் கவிஞர், திரைப் பாடலாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்கள், தெருக்கூத்து மற்றும் நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். சமூக மாற்றத்திற்கான கருவியாக நாடகக்கலையைப் பயன்படுத்தினார். எளிய நகைச்சுவையுடன் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களும் அறிவியல் பார்வையும் கொண்ட நாடக, திரைப்படப் பாடல்களை எழுதினார்.
பிறப்பு, கல்வி
உடுமலை நாராயணகவி அன்றைய கோவை மாவட்டத்தில் (தற்போது திருப்பூர் மாவட்டம்) உடுமலைப்பேட்டைக்கருகில் உள்ள பூவிளைவாடியில் (பூளவாடி) கிருஷ்ணசாமி -முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி.
இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி அண்ணன் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று விற்றார். நான்காம் வகுப்புடன் பள்ளிப்படிப்பு நின்றது. புலவர் பாலசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றார். உடுமலை முத்துசாமிக் கவிராயர் நடத்திய ஆரிய கான சபாவில் இணைந்து நாடகங்களில் நடித்தார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் இசை பயின்றார். சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக்கலை பயின்றார்.
கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்குநாட்டுக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அவற்றைக் கற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தனது 15-ஆவது வயதில் மகாகவி மகாகவி பாரதியைச் சந்தித்தபின் விடுதலைப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டார்
தனிவாழ்க்கை
நாராயணசாமி பேச்சியம்மாளை மணந்தார். நான்கு மகன்கள்.
நாடகம்
நாராயணசாமி பூளைவாடியில் மாரியம்மன் திருவிழாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இராமநாடகத்தில் இலக்குவன் வேடத்தில் நடித்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நண்பரும், ஆரிய நாடக சபாவை நடத்தி வந்தவருமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் அவரது நடிப்பாற்றலைக் கண்டு அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை முத்துசாமிக் கவிராயரின் சபாவில் நாடகங்களில் நடித்தார். பாடல்கள் பாடுவதிலும், உரையாடல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார்.
இருபத்தைந்தாம் வயதில் ஊர் திரும்பிய நாராயணகவி தேசிய எழுச்சி மிகுந்திருந்த அக்காலத்தில் கதர்க்கடை ஒன்றைத் தொடங்கினார். கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார்.
வாணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் தொல்லை ஏற்பட்டது. மதுரைக்குச் சென்று சங்கரதாஸ் சுவாமிகளிடம் முறையாக யாப்பிலக்கணம் கற்று பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதினார்.
இசை நாடகம், நாட்டிய நாடகம், லாவணி, வில்லுப்பாட்டு, நகைச்சுவை நாடகம் போன்றவற்றையும் எழுதினார். கீர்த்தனை, தெம்மாங்கு, குறத்தி பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி, சிந்து, பள்ளு, நடவு, கோமாளிப்பாட்டு, தத்துவப்பாட்டு போன்ற பலவகைப் பாடல்களை பல்வேறு யாப்பு வகைகளில் இயற்றினார்.
இலக்கியவாழ்க்கை
உடுமலை நாராயண கவி நாடகம், திரைப்படம் ஆகியவற்றுக்குப் பாடல்களும் கதைகளும் எழுதியவராகவே அறியப்படுகிறார். நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றிய தனிப்பாடல்களும் எழுதியுள்ளார். தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு கலை வடிவங்களுக்காகப் பாடல்கள் எழுதினார். கவி நயமும், ஓசை நயமும் பொருந்தியிருந்தாலும் பேசுபொருளாலேயே பெரும்பாலும் கவனிக்கப்பட்டன. காதல், மூடநம்பிக்கை மறுப்பு, அறிவியல், பகுத்தறிவு, சாதி மறுப்பு, பெண் விடுதலை, பொதுவுடமை ஆகியவற்றைப் பேசுபொருளாகக் கொண்டிருந்தன. தான் வாழ்ந்த காலத்தின் சமுதாயப் பிரச்சினைகளின் கூர்ந்த அவதானிப்புடன் சீர்திருத்தக் கருத்துக்கள் கதையோடு பொருந்திய நகைச்சுவையுடன் அவர் பாடல்களில் இடம்பெற்றன. திருக்குறளின் கருத்துக்களையும், நீதிகளையும் தன் பாடல்களில் எடுத்தாண்டார். பல பாடல்கள் எளிய உழைக்கும் மனிதர்களின் குரலாக ஒலித்தன. பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சியால் வாழ்க்கை முறையில் ஏற்படப்போகும் மாற்றங்களைக் கணித்த 'விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி' (நல்லதம்பி: 1949) போன்ற பாடல்களில் அவரது அறிவியல் பார்வை வெளிப்பட்டது. அவரது பாடல்கள் மக்களால் மிகவும் விரும்பப்பட்டன.
அரசியல்
காங்கிரஸ்
இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலத்தில் பல தேசிய உணர்வுப் பாடல்களை நாடகங்களுக்காக எழுதி, அவற்றைப் பாட வைத்தார்.
திராவிட இயக்கம்
மதுரையில் வாழ்ந்த போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் ஏற்பட்ட நட்பால் பெரியார், அண்ணா, மு. கருணாநிதி, பாரதிதாசன் போன்றோரின் நட்பு கிடைத்தது. திராவிடர் இயக்கத்தின்மீதும், பகுத்தறிவு கொள்கையின்மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. திராவிட இயக்கத்தின் மேடை நாடகங்களுக்காகப் பாடல்கள் எழுதினார்.
திரைத்துறை
இயக்குநர் ஏ. நாராயணன் நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாடல்கள் எழுத அழைத்தார். சென்னையில் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. 1933-ல் 'ஶ்ரீ கிருஷ்ண லீலா' திரைப்படத்திற்காக 30-க்கு மேற்பட்ட பாடல்கள் வசனமும் எழுதினார்.(ஶ்ரீ கிருஷ்ண லீலா 60-க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டது. மற்ற பாடல்களை பாபநாசம் சிவன் எழுதினார்). 1934-ல் 'திரௌபதி வஸ்திராபஹரணம்' திரைப்படத்துக்கு பாடல்கள் எழுதினார். 1935-ல் அவரது 'தூக்குத் தூக்கி' மேடை நாடகம் அதே பெயரில் திரைவடிவம் கண்டபோது அதற்கான கதை, வசனம் பாடல்கள் (58 பாடல்கள்) எழுதினார். பர்த்ருஹரி, பிரபாவதி போன்ற புராணப்படங்களுக்காக பக்திப் பாடல்கள் எழுதினார். 1942-ல் முதன்முதலில் பின்னணிக் குரல்களில் பாடல்கள் வெளிவந்த 'கண்ணகி' திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதினார். தொடர்ந்து குடும்பக்கதைகள், சமூகம் அரசியல் சார்ந்த திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதினார். செந்தமிழ் வழக்கையும் பேச்சுத்தமிழ் வழக்கையும் பொருத்தமான இடங்களில் கையாண்டார். பொருத்தமான இடங்களில் நாட்டுப்புறப் பாடல்களும் இடம்பெற்றன.
தேசிய எழுச்சியுடன் சமுதாயப் புரட்சிக்கான குரல்கள் எழுந்த காலகட்டத்தில் புதிய உத்திகளுடன் எழுதப்பட்ட கருத்து மிக்க பாடல்களால் விரைவில் பிரபலமடைந்தார். அந்நாட்களில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனை விட அதிகமாகப் பாடல்களை எழுதினார். தனது மேடை நாடகப் பாடல்களை மாற்றங்களுடனும், மாற்றங்கள் இல்லாமலும் திரைப்படங்களில் இடம் பெறச் செய்தார். மூடநம்பிக்கைகளைச் சாடிய பாடல்களும், உழைப்பாளர்கள் குறித்த பாடல்களும் பொதுவுடமைக் கருத்தைத் தழுவிய பாடல்களும் பரவலான கவனமும் புகழும் பெற்றன.
நாராயணகவி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் கிந்தனார் கதாகாலட்சேபம் என்னும் நவீன கதாகாலட்சேபத்திற்குப் பாடல்கள் எழுதினார். தீண்டாமை, ஜாதிக் கொடுமைகளை சிறப்பாக விளக்கிய கிந்தனார் காலட்சேபம் , உடுமலை நாராயணகவி பாடலாசிரியராக, அண்ணா திரைக்கதை வசனம் எழுதி, என்.எஸ்.கே இயக்கிய 'நல்லதம்பி' திரைப்படத்திலும் சேர்க்கப்பட்டது.
அண்ணாதுரை கதை, வசனம் எழுதிய 'வேலைக்காரி', 'ஓர் இரவு', 'நல்லதம்பி', மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய 'பராசக்தி', 'மனோகரா' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். எம்.ஜி. ராமச்சந்திரன் முதன்முதலில் நாயகனாக நடித்த 'ராஜகுமாரி'(1947) திரைப்படத்தில் அவர் எழுதிய 12 பாடல்களும் மக்களிடையே மிகவும் புகழ் பெற்றன. சிவாஜி கணேசன் முதன் முதலில் பின்னணிக் குரலுக்காக வாயசைத்துப் பாடிய 'பராசக்தி' யில் இடம்பெற்ற 'கா கா' பாடலை எழுதியது உடுமலை நாராயண கவி (அப்பாடலை எழுதியவர் மு. கருணாநிதி என்று பரவலாக எண்ணப்பட்டு வந்தது. ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தனது தன்வரலாற்று நூலில் இப்பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவியே என்பதை உறுதிப்படுத்தினார்). பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்ய பாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்கு அவர் எழுதிய பாடல்கள் மக்களிடையே மிகப் பிரபலமடந்தன.
நாற்பதாண்டுகாலம் (1933-76) திரைத்துறையில் பாடல்கள் எழுதினார். 1961 முதல் குறிப்பிட்ட சில இயக்குனர்களுக்காக மட்டும் பாடல் எழுதினார்.
திரைக்கதை
உடுமலை நாராயண கவி 1934-ல் வெளியான 'ஶ்ரீ கிருஷ்ண லீலா' திரைப்படத்திற்கு பாடல்களோடு வசனமும் எழுதினார். அவர் எழுதி அரங்கேற்றிய 'தூக்குத் தூக்கி' நாடகம் இருமுறை திரைவடிவம் கண்டது(1935,1954).
மறைவு
உடுமலை நாராயணகவி மே 23, 1981 அன்று காலமானார்.
பரிசுகள்
கலைமாமணி விருது
மணிமண்டபம்
தமிழக அரசு உடுமலையில் உடுமலை நாராயண கவிக்கு மணிமண்டபம் அமைத்தது. மணிமண்டபத்தில் நாராயணகவியின் மார்பளவு சிலையும் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறுகின்றன.
தபால்தலை
இந்திய அஞ்சல் துறை உடுமலை நாராயணகவியின் நினைவைப் போற்றும் வகையில் டிசம்பர் 31, 2008-ல் இந்திய அஞ்சல்தலை வெளியிட்டது.
இலக்கிய/பண்பாட்டு இடம்
உடுமலை நாராயண கவி தமிழில் தெருக்கூத்து போன்ற நாட்டார் மரபைச் சேர்ந்த அரங்ககலையில் இருந்தும், புராண கதாகாலட்சேபம் போன்ற கோயிற்கலைகளில் இருந்தும் மேடைநாடகம், திரைப்படம் ஆகிய புதியவகை அரங்ககலைகள் உருவாகி வந்த மாறுதல் காலகட்டத்தில் செயல்பட்டவர். பழைய மரபின் தொடர்ச்சியாக புதியவகைக் கலைகளுக்கு தேவையான பாடல்களை எழுதியவர் என்னும் வகையில் தமிழ் பொதுமக்கள் கலைகளின் மாற்றத்தை நிகழ்த்தியவர்களில் ஒருவர். அவருடைய நாடகப்பாடல்களும் திரைப்படப் பாடல்களும் பழைய இசைப்பாடல்கள் (கீர்த்தனைகள்) மற்றும் நாட்டார்ப்பாடல்களின் சொல்லமைப்பையும் இசைமுறைமையையும் கொண்டவை. ஆனால் கூடவே நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் உரியவகையில் நவீன இசையுடனும் நவீன வாழ்க்கைக்கூறுகளுடனும் அவை இணைக்கப்பட்டிருந்தன. நாடகங்களும் திரைப்படங்களும் அரசியல், சமூகசீர்திருத்தம் ஆகியவற்றை பேசுபொருளாகக் கொண்ட மாறுதல்காலகட்டத்தில் அந்தக் கருக்களை தன் பாடல்களில் முன்வைத்தவர் என்னும் வகையிலும் முன்னோடியாக மதிப்பிடப்படுகிறார்
உடுமலை நாராயணகவி ’கூடுதலாக உழைத்து குறைவாக ஊதியம் பெறும் ஏழை கூலித் தொழிலாளர்களின் குரலை ஓங்கி ஒலித்த பாட்டாளிக் கலைஞர்’ என்று அண்ணாத்துரையால் பாராட்டப்பட்டார்.
பாடல்கள் இடம்பெற்ற சில திரைப்படங்கள்
- கிருஷ்ண லீலா(1934)
- கண்ணகி(1942)
- தமிழறியும் பெருமாள்(1942)
- குபேர குசேலா(1943)
- பிரபாவதி(1944)
- வித்யாபதி(1946)
- விகடயோகி(1946)
- பைத்தியக்காரன்(1947)
- ராஜகுமாரி (1947)
- க்ருஷ்ண பக்தி(1949)
- நல்லதம்பி (1949)
- பவழக்கொடி (1949)
- வேலைக்காரி(1949)
- பாரிஜாதம் (1950)
- விஜயகுமாரி(1950)
- மணமகள் (1951)
- மர்மயோகி(1951)
- வனசுந்தரி (1951)
- பணம் (1952)
- பராசக்தி(1952)
- தேவதாஸ் (1953)
- மறுமகள்(1953)
- பொன்னி(1953)
- மனோகரா (1954)
- பெண்(1954)
- ரத்தக் கண்ணீர்(1954)
- சொர்க்கவாசல் (1954)
- தூக்கு தூக்கி(1954)
- செல்லப்பிள்ளை (1955)
- டாக்டர் சாவித்ரி(1955)
- காவேரி(1955)
- மங்கையர் திலகம் (1955)
- முதல் தேதி(1955)
- நீதிபதி(1955)
- ஆசை (1956)
- அமர தீபம் (1956)
- மதுரை வீரன் (1956)
- மாதர் குல மாணிக்கம் (1956)
- ரங்கூன் ராதா (1956)
- எங்கள் வீட்டு மகாலட்சுமி (1957)
- கற்புக்கரசி(1957)
- பொம்மை கல்யாணம் (1958)
- மாங்கல்ய பாக்யம் (1958)
- அபலை அஞ்சுகம் (1959)
- அமுதவல்லி (1959)
- மாமியார் மெச்சிய மருமகள் (1959)
- மஞ்சள் மகிமை (1959)
- நல்லதீர்ப்பு (1959)
- புதுமைப்பெண்P (1959)
- தாய் மகளுக்குக் கட்டிய தாலி(1959)
- தங்கப் பதுமைT (1959)
- சவுக்கடி சந்திரகாந்தா(1960)
- தெய்வப்பிறவி(1960)
- பாட்டாளியின் வெற்றி(1960)
- ராஜா தேசிங்கு (1960)
- அரசிளங்குமரி (1961)
- சித்தூர் ராணி பத்மினி(1963)
- பூம்புகார் (1964)
- சித்தி(1966)
- விவசாயி (1967)
- ஆதி பராசக்தி (1971)
- குறத்தி மகன்(1972)
- தசாவதாரம் (1976)
நாராயணகவியின் பிரபலமான பாடல்களில் சில
- விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி
- கா கா கா
- ஒண்ணில இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
- அந்தக் காலம், இந்தக் காலம்-
- எல்லாம் இன்பமயம்
- தேசம் ஞானம் கல்வி
- துணிந்தபின் மனமே துன்பம் கொள்ளாதே
- ஆடல் காணீரோ
- ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
- அன்பாலே தேடிய என் அறிவு
- பொன்னாள் இது போலே வருமோ
உசாத்துணை
- நூலகம்: உடுமலை தந்த கவிமலை-செ. திருநாவுக்கரசு, தோழமை வெளியீடு
- தமிழ் அறிஞர்கள் அறிவோம்-உடுமலை நாராயண கவி-தினமணி, ஜனவரி 2014
- உடுமலை நாராயணகவி பாடல்கள், தமிழ் இணைய கல்விக்கழகம்
- உடுமலை நாராயண கவி-யுகபாரதி உரை, youtube.com
- உடுமலை நாராயண கவி இணையநூலகம்
- உடுமலைநாராயண கவி காணொளி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
25-Jun-2023, 08:52:29 IST