under review

அமுதபாரதி

From Tamil Wiki
கவிஞர் அமுதபாரதி
அமுதபாரதி என்னும் ஓவியக் கவிஞர் அமுதோன் (படம் நன்றி: அமுதோன், இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள் நூல்)

அமுதபாரதி (கவிஞர் அமுதபாரதி; அமுதோன்; ஓவியக் கவிஞர் அமுதோன்; மா.கு. தாயுமானவன்) (பிறப்பு: ஆகஸ்ட் 31, 1939) கவிஞர், எழுத்தாளர், இதழ் வடிவமைப்பாளர், ஓவியர். தமிழின் முதல் ஹைக்கூ நூலை எழுதியவர். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மா.கு. தாயுமானவன் என்னும் இயற்பெயர் கொண்ட அமுதபாரதி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாமண்டூரில், ஆகஸ்ட் 31, 1939 அன்று, மா. குமாரசாமி - வள்ளியம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார்.

தனி வாழ்க்கை

அமுதபாரதி மணமானவர்.

இலக்கிய வாழ்க்கை

அமுதபாரதியின் முதல் கவிதை, அவர் பள்ளி மாணவராக இருக்கும்போது, 1952-ல், வெளியானது. தொடர்ந்து இலக்கணம் பயின்று மரபுக் கவிதையின் நுட்பங்கள் கை வரப்பெற்றார். தென்றல், கண்ணதாசன் போன்ற பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். முதல் கவிதைத் தொகுப்பு 'உதய காலங்கள்' 1982-ல் வெளியானது. தொடர்ந்து இணை தேடும் இதயம், மன்மத ராகங்கள் போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். அமுதோன் எழுதிய 'புள்ளிப் பூக்கள்' என்னும் தமிழின் முதல் ஐக்கூ கவிதை நூல் 1984- வெளியாகி பரவலான கவனம் பெற்றது. தமிழ், ஜப்பானியக் கவிதை வடிவங்களை இணைத்து அமுதபாரதி எழுதிய 'ஐக்கூ அந்தாதி' குறிப்பிடத்தகுந்த நூலாக அறியப்படுகிறது.

அமுதபாரதியின் ஹைக்கூக் கவிதைகள் பலவும் காட்சியைக் கண் முன் கொண்டு காட்டும் தன்மை கொண்டவையாக அறியப்படுகின்றன.

இந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்?


ஒரு கணம்

கொக்கு சுமக்கும்

நிலா

போன்ற கவிதைகள் சக கவிஞர்களால் பாரட்டப்பட்டன.

அமுதபாரதி சுரதா 100 நூலில், சுரதாவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை காட்சிக் கவிதைகளாக மரபில் எழுதினார். அமுதபாரதி 10-க்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதினார். அமுதபாரதியின் கவிதைகளை ஆய்வு செய்து மாணவர்கள் சிலர் பட்டம் பெற்றனர். மலேசிய நாட்டின் தமிழ்ப் பாடநூல்களிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாடநூலிலும் அமுதபாரதியின் ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றன. அமுதபாரதியின் கவிதைகள் சிலவற்றை பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

கண்ணதாசன் இதழ் - முகப்போவியம் அமுதோன்
உலகத் தமிழ் மாநாட்டு மலர் ஓவியம் - 1968 - அமுதோன்

ஓவியம்

அமுதபாரதி, பள்ளிக் காலத்தில் நடந்த பல ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார். ஓவியர் மணியம் அவர்களின் உதவியாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலத்தில் இதழ்கள் பலவற்றில் ஓவியம் வரைந்தார். 'தென்றல் திரை', 'கண்ணதாசன்' போன்ற இதழ்களுக்கு பக்க வடிவமைப்பாளராகவும், முகப்பு அட்டை ஓவியராகவும் பணியாற்றினார்.

கண்ணதாசன், சுரதா, பாலகுமாரன், ஜெயந்தன், வலம்புரி ஜான், மு.மேத்தா உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் நூல்களுக்கு அட்டை முகப்போவியங்கள் வரைந்தார். புதுமையான வண்ணக்கலவை, புதுமையான எழுத்துரு, நூலின் உள்ளடக்கத்தைக் காட்டும் ஓவியங்கள் என அமுதோனின் நூல் முகப்போவியங்கள் எழுத்தாளர்களாலும், பதிப்பாளர்களாலும் வரவேற்கப்பட்டன. ப. முத்துக்குமாரசுவாமி தொகுத்து, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட 'இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்' நூலுக்கு பக்க வடிவமைப்பு செய்து, முகப்போவியம் வரைந்ததுடன், 100 கவிஞர்களின் படங்களையும் ஓவியமாக வரைந்தார்.

அமுதோன், தமிழக முதல்வர்கள் காமராசர், சி.என் அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றவர்களுக்கும், பாரதிதாசன் போன்ற கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் படைப்புகளுக்கான ஆயிரக்கணக்கான புத்தக முகப் போவியங்களையும் உள்சித்திரங்களையும் வரைந்தளித்தார். 1967-ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்ட மாநாட்டு மலரிலும், 1981-ல் எம்.ஜி. ராமச்சந்திரன். ஆட்சி காலத்தில் நிகழ்ந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரிலும் இடம்பெற்ற அமுதோனின் ஓவியங்கள் வரவேற்பைப் பெற்றன.

விருதுகள்

கவிஞர் காப்பீடுத் திட்டம்

உறவுகளை இழந்து தனிமையில் வசிக்கும் கவிஞர் அமுதபாரதியை கவிஞர் காப்பீடுத் திட்டத்தின் மூலம் தத்தெடுத்துக் கொள்வதாகவும், ஆயுள் முழுமைக்குமான அமுதபாரதியின் வாழ்நாள் செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் படைப்புக் குழுமம், ஆகஸ்ட் 2021-ல் அறிவித்தது [1].

மதிப்பீடு

அமுதபாரதி என்னும் அமுதோன், யாப்பிலக்கணப்படி பாடல் எழுதுபவர். மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என கவிதையின் அனைத்து வடிவங்களிலும் கவிதைகள் எழுதினார். நூல்களை வெளியிட்டார். தமிழின் முன்னோடி ஹைக்கூக் கவிஞராகவும், சிறந்த புத்தக வடிவமைப்பாளராகவும், முன்னோடி ஓவியராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • உதய காலங்கள் - 1982
  • இணை தேடும் இதயம் - 1982
  • மன்மத ராகங்கள் - 1983
  • நிகழ்கால மேகங்கள் - 1983
  • புள்ளிப் பூக்கள் (தமிழின் முதல் ஐக்கூ கவிதை நூல்) -1984
  • ஐக்கூ அந்தாதி - 1989
  • காற்றின் கைகள் - 1990
  • ஐக்கூ அருவி - 1998
  • நூறு நிலா - 1999
  • ஐக்கூ விதைகள் - 2000
  • சுரதா நூறு - 2009

உசாத்துணை

  • இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள், தொகுப்பாசிரியர்: ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, முதல் பதிப்பு: 2004
  • தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 22:07:06 IST