being created

மயிலை சீனி. வேங்கடசாமி

From Tamil Wiki
Revision as of 20:14, 20 November 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added, Inter Link Created;)
மயிலை சீனி. வேங்கடசாமி
மயிலை சீனி. வேங்கடசாமி

மயிலை சீனி. வேங்கடசாமி (பிறப்பு: டிசம்பர் 16, 1900 - இறப்பு: ஜூலை 8, 1980) ஒரு வரலாற்று ஆய்வாளர். தமிழறிஞர். எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை, வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கியது.

பிறப்பு, கல்வி

மயிலை சீனி. வேங்கடசாமி, சென்னை மயிலாப்பூரில், சீனிவாச நாயகர் - தாயாரம்மாள் இணையருக்கு, டிசம்பர் 16, 1900  அன்று பிறந்தார். தந்தை சித்த மருத்துவர். மூத்த சகோதரர்  சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். ‘திருக்குறள் காமத்துப்பால் நாடகம்’, ‘திருமயிலை நான்மணி மாலை’ போன்ற படைப்புகளைத் தந்தவர். அவரிடம் வேங்கடசாமி தமிழ் பயின்றார். பின் மகாவித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் கற்றார்.

உயர்நிலைக் கல்வியை முடித்தவர், சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் கற்பதற்காகச் சேர்ந்தார். ஓராண்டு பயின்றார். ஆனால், குடும்பச் சூழல்களால் அதனைத் தொடர இயலவில்லை. பின் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தந்தையும் சகோதரரும் மறைந்ததால் குடும்பப் பொறுப்பை ஏற்றார் வேங்கடசாமி. மோட்டார் உதிர்ப்பாகம் விற்கும் கடையில் எழுத்தராகப் பணிபுரிந்தார். பின் மயிலாப்பூர் நகராண்மைக் கழகம் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இறுதிவரை ஆசிரியராகவே பணியாற்றி, 1955-ல், பணி ஓய்வு பெற்றார். திருமணம் செய்துகொள்ளவில்லை.

இதழியல் வாழ்க்கை

1925-ல், நீதிக்கட்சி நடத்திய ‘திராவிடன்’ நாளிதழில் பணிக்குச் சேர்ந்தார். ஆசிரியர் குழுவில் இணைந்து சில காலம் பணியாற்றினார். ‘லக்ஷ்மி’ இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதினார். ஈ.வெ.ரா. பெரியாரின் ’குடியரசு’ இதழுக்குப் பல கட்டுரைகளை எழுதினார். தொடர்ந்து ‘ஊழியன்’, ‘ஆரம்பாசிரியன்’ போன்ற பல இதழ்களில் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

மயிலை சீனி. வேங்கடசாமி தமிழ், வடமொழி. ஆங்கிலம், திராவிட மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். வரலாற்றில் ஏற்பட்ட ஈடுபாட்டால், ஊர்தோறும் சென்று கல்வெட்டு ஆய்வினை மேற்கொண்டார். சுயமாகப் பயின்று கல்வெட்டுகளைப் படிக்கும் திறன் பெற்றார். கோலெழுத்து, கிரந்த எழுத்து, பல்லவர் எழுத்து, பிராமி எழுத்து எனப் பல்வகையான எழுத்து முறைகளை அறிந்து கொண்டார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தெளிவாகப் படித்தறிந்தார். தொன்மையான சாசனங்களைச் சேகரித்தார்.

தான் கண்டறிந்த செய்திகளை ‘செந்தமிழ்ச்செல்வி’, ’ஆராய்ச்சி’, ஈழகேசரி’, ‘ஆனந்தபோதினி’, ‘சௌபாக்கியம்’, ‘செந்தமிழ்’, ‘திருக்கோயில்', ‘நண்பன்’, ‘கல்வி’, ‘தமிழ் நாடு,', ‘தமிழ்ப் பொழில்’  போன்ற இதழ்களில் கட்டுரைகளாக எழுதினார். இவர் எழுதிய ‘இராமேசுவரத் தீவு’, ‘உறையூர் அழிந்த வரலாறு’, ‘கண்ணகியார் தெய்வமான இடம் எது?’, ‘மறைந்து போன மருங்காப்பட்டினம்’, ‘இராவணன் ஆண்ட இலங்கை எது?’ என்பது போன்ற கட்டுரைகள் தமிழறிஞர்களால் வரவேற்கப்பட்டன.

மயிலை சீனி. வேங்கடசாமி, யாப்பருங்கல விருத்தியுரையை வாசித்தபோது அதில் எடுத்துக்காட்டுக்களாகக் குறிப்பிடப்பட்டிருந்த நூல்கள் பலவும் வழக்கில் இல்லாததை உணர்ந்தார். வழக்கில் இல்லாது மறைந்து போன அவ்வகை நூல்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதுவே பின்னர் 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. பௌத்த சமயம் சார்ந்த ஆய்வில் ஈடுபட்டார். அதுவே  பின்னர் ‘பௌத்தக் கதைகள்’, ‘கௌதம புத்தர்', ‘பௌத்தமும் தமிழும்’ போன்ற நூல்கள் வெளிவரக் காரணமானது. சமண சமயத்தில் மயிலை சீனி. வேங்கடசாமிக்கு இருந்த ஈடுபாட்டால் பல ஆய்வுகளை மேற்கொண்டார். ‘மயிலை நேமிநாதர் பதிகம்’, ‘சமணமும் தமிழும்’ போன்ற நூல்களை எழுதினார். கிறிஸ்தவர்கள் தமிழ் வளர்ச்சிக்குச் செய்த தொண்டைப் பற்றி அறிந்து அது தொடர்பான ஆய்வுகளால் விளைந்த நூல் ‘கிறித்தவமும் தமிழும்’.

’களப்பிரர்கள்’ காலம் இருண்ட காலம் அல்ல என்னதையும், அக்காலத்தில் தான் தமிழின் முக்கியமான பல நூல்கள் இயறப்பட்டன என்பதையும், ‘களப்பிரர் காலத் தமிழகம்’ நூலில் விளக்கினார். இவரது ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்’ முக்கியமான ஆய்வு நூல். தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு இசை, இலக்கியம், கலை, வரலாறு தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான பல நூல்களையும் எழுதினார். இரு நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ளார்.

சமூக வாழ்க்கை

மயிலை சீனி. வேங்கடசாமி, பெரியார் ஈ.வெ.ராமசாமி, பாரதிதாசன், குத்தூசி குருசாமி போன்றோரது நட்பால் சுயமரியாதை இயக்கச் சார்புடையவரானார். 1937-1938-ல் நடந்த முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1963-1964-ல் தமிழக எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பணிபுரிந்தார். தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். தமிழகப்புலவர் குழுவில் அங்கம் வகித்தார். ச.த. சற்குணர், மறைமலையடிகள், திரு.வி.கலியாண சுந்தர முதலியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சுப்ரமண்யப் பிள்ளை, சுவாமி விபுலானந்தர், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்ற அறிஞர்களுடன் கலந்துரையாடி தனது இலக்கிய அறிவை மேம்படுத்திக் கொண்டார்.

சமண சமய அறிஞர்களான ஜீவபந்து ஸ்ரீபால், அ. சக்கரவர்த்தி நயினார் போன்றோருடன் தொடர்பு கொண்டு சமண சமய நுட்பங்களை அறிந்தார். தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், கே.கே. பிள்ளை, மா. இராசமாணிக்கனார், கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை போன்றோரது நட்பைப் பெற்றிருந்தார். சென்னை மகாபோதி சங்கத்தின் தலைவர் நந்தீஸ்வர தேரோ, இலங்கை பௌத்த மதத் துறவி தருமரத்தின தேரோ போன்றோர்களுடன் நட்புக் கொண்டிருந்தார்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர் வ. சுப்பையா பிள்ளை, கா.அப்பாத்துரையார், அ. சிதம்பரநாதன் செட்டியார், மீ.ப. சோமு, அழ. வள்ளியப்பா, பொருளியல் அறிஞர் பா. நடராசன் உள்ளிட்ட பலர், மயிலை சீனி. வேங்கடசாமியின் பணிகளைப் பாராட்டிப் போற்றினர். செக்கோஸ்லாவியத் தமிழறிஞர் கமில் சுவெலபில், மயிலை சீனி. வேங்கடசாமியைத் தனது ஆசானாகக் கருதினார்.

விருதுகள்

  • 1961-ல், தனது மணி விழாவில் ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
  • 1961-ல், தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது.
  • 1980-ல், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது.

மறைவு

மயிலை சீனி. வேங்கடசாமி, ஜூலை 8, 1980-ல், தனது எண்பதாம் வயதில் காலமானார்.

நினைவேந்தல்

மயிலை சீனி. வேங்கடசாமியின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு, 2001-ல், அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

இலக்கிய இடம்

மயிலை சீனி. வேங்கடசாமி, நிறுவனம் சாராத ஆய்வாளராக இருந்தாலும்,  நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சி நெறிமுறைகளுக்குள்ளேயே அவரது ஆய்வுகள் அமைந்தன. சங்க கால ஆய்வுகள், சிலப்பதிகார ஆய்வுகள், திருக்குறள் ஆய்வுகள், இலக்கிய ஆய்வுகள், சமணம், பௌத்தம், கிறிஸ்தவம் பற்றிய ஆய்வுகள், வரலாறு, சமயம் பற்றிய ஆய்வுகள், கல்வெட்டு சாசனம், நாணயம் பற்றிய ஆய்வுகள், சிற்பங்கள் பற்றிய ஆய்வுகள், சொல்லாய்வுகள், இலக்கண ஆய்வுகள் எனப்பல துறைகளில் ஆய்வு செய்த தமிழ் அறிஞராக மயிலை சீனி. வேங்கடசாமி மதிக்கப்படுகிறார்.

புதிய ஆய்வுச் செல்நெறிப் போக்கு வளர்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவராக மயிலை சீனி. வேங்கடசாமி மதிப்பிடப்படுகிறார்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.