under review

கா.அப்பாத்துரை

From Tamil Wiki
அப்பாத்துரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அப்பாத்துரை (பெயர் பட்டியல்)
கா.அப்பாத்துரை (செம்மைப்படுத்தப்பட்டது)

To read the article in English: Ka. Appadurai. ‎

கா.அப்பாத்துரை
கா அப்பாத்துரை
செந்தமிழ்ச்செல்வர் பட்டம் 1979 (ஹிந்து இணையச் சேகரிப்பு)

கா. அப்பாத்துரை (ஜூன் 24, 1907 - மே 26, 1989) தமிழறிஞர். தமிழ் வரலாற்றாய்வாளர். மொழிபெயர்ப்பாளர். பன்மொழிப்புலவர் என அழைக்கப்பட்டவர். தமிழ், மலையாளம், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் பயிற்சி உடைவர்.

பிறப்பு, கல்வி

கா .அப்பாத்துரை
அமர்ந்திருப்போர். கண்ணதாசன், மு.கருணாநிதி, கவிமணி, கா.அப்பாத்துரை, மதியழகன். நின்றிருப்போர் நடுவே என்.எஸ்.கிருஷ்ணன்

கா.அப்பாத்துரை குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் காசிநாதப்பிள்ளைக்கும், முத்துலட்சுமி அம்மாளுக்கும் ஜூன் 24, 1907-ல் பிறந்தார். அவருடைய இயற்பெயர் நல்லசிவம்.

ஆரல்வாய்மொழியில் ஆரம்பக்கல்வி கற்றபின் நாகர்கோயிலில் பள்ளியிறுதிக் கல்வி முடித்து 1927-ல் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் முடித்தார். பின்னர் திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் வழி எம்.ஏ. தமிழ், சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.டி. பட்டம் பெற்றார்.ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தி மொழியில் 'விசாரத் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார். அதே காலத்தில் சமஸ்கிருதம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்.சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.

கா அப்பாத்துரை மலர்

தனிவாழ்க்கை

அப்பாத்துரை 1937-ல் நாச்சியார் என்ற பெண்ணை மணந்தார். இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துபோனார் பின் சில ஆண்டுகள் கழித்து அலுமேலு என்ற பெண்ணை மணந்தார். அப்பாத்துரைக்குக் குழந்தை இல்லை. மனைவியின் தங்கை மகளை தத்தெடுத்து வளர்த்தார். அந்தப் பெண் இளவயதில் மரணமடைந்தாள்.

கல்விப்பணி

கா.அப்பாத்துரை பல்வேறு கல்விநிலையங்களிலும் பதிப்பு நிறுவனங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

  • கா.அப்பாத்துரை திருநெல்வேலி, ம.தி.தா. இந்துக் கல்லூரியில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • பச்சையப்பன் கல்லூரியில் சிறிது நாள் ஆசிரியராக இருந்தார்.
  • காரைக்குடியில் சுப்பிரமணியச் செட்டியார் குருகுலத் தலைமையாசிரியர் பணிகுருகுலப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது கண்ணதாசன் இவரிடம் பயின்றார்.
  • சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 முடிய பணியாற்றினார். அப்பொழுது, 'இந்தியாவின் மொழிச்சிக்கல்' என்ற ஆங்கில நூலை எழுதியதால் தேச ஒற்றுமைக்கு எதிராகப் பணியாற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்டு பணியை இழந்தார்.
  • சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 முடிய ஆசிரியராகப் பணி செய்தார்.
  • தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்

இதழியல்

கா.அப்பாத்துரை நெடுங்காலம் இதழியலாளராகச் செயல்பட்டவர். அவர் பணியாற்றிய இதழ்கள்.

  • திராவிடன்
  • ஜஸ்டிஸ்
  • இந்தியா
  • பாரததேவி
  • சினிமா உலகம்
  • லிபரேட்டர்
  • விடுதலை
  • லோகோபகாரி
  • தாருஸ் இஸ்லாம்
  • குமரன்
  • தென்றல்

அரசியல்

கா. அப்பாத்துரை ஆரம்பக்காலத்தில் தேசியவாதியாக இருந்தார். அப்பாத்துரை திருவனந்தபுரத்தில் படித்தபோது புளியமூடு ஜங்ஷனில் (இப்போதைய ஆயுர்வேதா கல்லூரி) பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்த கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறார். காந்தி இந்தக் கல்லூரிக்கு வந்தபோது அவரின் பேச்சால் பாதிக்கப் பட்டவர்களில் அப்பாத்துரையும் ஒருவர். அப்பாத்துரை மகாத்மாவிடம் ஈடுபாடு கொண்ட காலத்தில் காந்தி ரத்தினத் திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவுவிழா என்னும் தலைப்புகளில் கவிதை எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் இந்திமொழி கட்டாய பாடமாகத் திணிக்கப்பட்டபொழுது 1938-1939--ம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டார். ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தலைமையில் 1948--ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்பாத்துரையாரும் அவரது மனைவி அலமேலு அம்மையாரும் பெரும்பங்கு கொண்டனர். பின்னர் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் இயக்கத்துக்கு அணுக்கமாக இருந்தார். அவர்களின் இதழ்களிலும் ப்ணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

அப்பாத்துரை எழுதியதாக 170 நூல்களின் பெயர்கள் கிடைத்துள்ளன. இவற்றில் ஐந்து நூல்கள் ஆங்கில மொழில் அமைந்தவை.வரலாறு, வாழ்க்கை வரலாறு, திறனாய்வு, சிறுகதை, நாடகம், கவிதை, அகராதி, அறிவு நூல்கள், பொது அறிவு, குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு (மலையாளம், ஆங்கிலம், இந்தியிலிருந்து தமிழில்) எனப் பல துறைகளில் எழுதியவர். இவரது பல நூல்களைத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தமிழக அரசு இவரது நூலை அரசுடைமை ஆக்கியுள்ளது.

கா.அப்பாத்துரையின் அறிவியக்கப் பணியை நான்கு வகைகளில் தொகுக்கலாம். இதழியல் எழுத்துக்கள், இலக்கிய ஆய்வுகள், இலக்கியம் சார்ந்த வரலாற்றாய்வுகள் மற்றும் மொழியாக்கங்கள்.

இதழியல் எழுத்துக்கள்

கா.அப்பாத்துரை ஈ.வெ.ராமசாமி பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளர். .திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார்.இவ்வெழுத்துக்களில் ஏராளமான வாழ்க்கைவரலாற்று குறிப்புகள், அரசியல் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் அடங்கும். ஜ.நா.வரலாறு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன.

இலக்கிய ஆய்வுகள்

கா.அப்பாத்துரை எழுதிய காற்றும் மழையும் என்னும் நாடகம் சிலம்பு நாடக மன்றத்தால் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் அண்ணாதுரை தலைமையில் 22-4-56-ம் நாள் அரங்கேற்றப்பட்டது. தென்மொழி, திருக்குறள் மணி விளக்க உரை (6 தொகுதிகள்)

வரலாற்றாய்வுகள்

கா.அப்பாத்துரை இலக்கியத்திலுள்ள அகச்சான்றுகளைக் கொண்டு பெரும்பாலும் ஊகங்களின் அடிப்படையில் வரலாற்று வரைவுகளை எழுதியவர். அவருடைய வரலாற்று நூல்களை வரலாற்றாசிரியர்கள் முதன்மைநூல்களாகக் கொள்வதில்லை. 'குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு' என்னும் தலைப்பில் தமிழிலக்கியச் சான்றுகளை கொண்டும் கூடுதலாக தியோசஃபிகல் சொசைட்டியினரின் மறைஞான ஊகங்களை ஆதாரமாகக் கொண்டும் அவர் குமரிக்கண்டம் அல்லது லெமூரியா என்னும் கடலில் மூழ்கிய மாபெரும் நிலப்பகுதியைப் பற்றி உருவகமாக எழுதினார். இலக்கியச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய 'தென்னாட்டுப் போர்க்களங்கள்' தமிழக வரலாற்றுநிகழ்வுகளை விரித்தெழுதிய நூல் என்னும் வகையில் குறிப்பிடப்படுகிறது.

மொழியாக்கங்கள்

அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் ஆகியோர் பற்றிய மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜப்பானிய நூலான The Tale of Genji[1] இவர் மொழியாக்கத்தில் செஞ்சி கதை என்னும் நூலாக வந்துள்ளது. மலையாளத்தில் இருந்து முதல்நாவல்களான இந்துலேகா, மார்த்தாண்டவர்மா ஆகியவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். இவர் மொழியாக்கத்தில் முதன்மையான ஆக்கம் வி.கனகசபைப் பிள்ளை எழுதிய The Tamils Eighteen Hundred Years Ago[2] என்னும் நூல் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. கா. அப்பாத்துரையின் மொழியாக்கங்களை சே. கல்பனா அப்பாத்துரையம் என்னும் நூலாகத் தொகுத்துள்ளார்.

இறப்பு

கா.அப்பாத்துரை மே 26, 1989 அன்று காலமானார்.

நாட்டுடைமை

கா.அப்பாத்துரையின் படைப்புகள் 2001-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

விருதுகள்

கா. அப்பாத்துரைக்கு 16 ஜனவரி 1979-ல் எம்.ஜி.ஆர் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ந்த வள்ளுவர் விழாவில் செந்தமிழ்ச்செல்வர் விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார்- கு.வெ. பாலசுப்பிரமணியன் (சாகித்ய அக்காதமி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)

இலக்கிய இடம்

கா.அப்பாத்துரை இதழியலாளர், பொதுஅறிவுச் செய்திகளை எழுதியவர், மொழிபெயர்ப்பாளர். இந்திய மொழியின் இலக்கியங்களை தொடக்ககாலத்திலேயே 0தமிழில் அறிமுகம் செய்தவர். திராவிட இயக்கத்தின் தொடக்க காலகட்டத்தில் அவ்வியக்கக் கருத்துக்களையும் வரலாற்றுப்பார்வையையும் பொது வாசகர்களுக்காக எழுதியவர். தமிழக வரலாற்றுச் செய்திகளை பொதுவாசகர்களுக்காக இதழியல் பாணியில் எழுதிய வரலாற்றெழுத்தாளர். அப்பாத்துரை எழுதிய 'தென்னாட்டு போர்க்களங்கள்' என்னும் நூல் வரலாற்றுச் செய்திகளை பொதுவாசகர்களுக்காக தொகுத்து எழுதிய நூல் என்னும் வகையில் குறிப்பிடத்தக்கது.

நூல்கள்

வரலாற்று ஆய்வுகள்
  • குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு
  • தென்னாட்டுப் போர்க்களங்கள்
  • சரித்திரம் பேசுகிறது
  • மருதூர் மாணிக்கம்
  • தென்னாடு
  • கிருஷ்ணதேவ ராயர்
  • வெற்றித் திருநகர்
  • சென்னை வரலாறு
  • கொங்குத் தமிழக வரலாறு
  • திராவிடப் பண்பு
  • திராவிட நாகரிகம்
  • சங்க காலப் புலவர் வரலாறு
  • அரியநாத முதலியார்
பொதுக்கட்டுரைகள்
  • ஜ.நா.வரலாறு
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  • 'டேவிட் லிவிங்ஸ்டன்
  • கலையுலக மன்னன் இரவிவர்மா
  • வின்ஸ்டன் சர்ச்சில்
  • அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
  • அறிவுலக மேலை பெர்னாட்ஷா
  • கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர்அலி
  • ஆங்கிலப் புலவர் வரலாறு
  • அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்கிளின்
இலக்கிய ஆய்வுகள்
  • இந்தியாவின் மொழிச்சிக்கல்
  • தென்மொழி
  • திருக்குறள் மணி விளக்க உரை (6 தொகுதிகள்)
மொழியாக்கங்கள்
  • ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் (The Tamils Eighteen Hundred Years Ago[2])
  • செஞ்சிகதை (The Tale of Genji[1])
  • இந்துலேகா (ஓ.சந்துமேனன். மலையாளம்)
  • மார்த்தாண்ட வர்மா (சி.வி.ராமன் பிள்ளைமலையாளம்)
  • அலெக்ஸாண்டர் (ஏ.எஸ்.பி. ஐயர்)
  • சந்திரகுப்தர் (ஏ.எஸ்.பி. ஐயர்)
  • சாணக்கியர் (ஏ.எஸ்.பி. ஐயர்)
  • அப்பாத்துரையம் சேக்கிழார் கல்பனா. (தொகுப்பு)
நாடகம்
  • காற்றும் மழையும்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:52 IST