கு.வெ. பாலசுப்பிரமணியன்
- பாலசுப்பிரமணியன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாலசுப்பிரமணியன் (பெயர் பட்டியல்)
கு,வெ. பாலசுப்பிரமணியன் (கும்பகோணம் வெங்கடாசலம் பாலசுப்பிரமணியன்; கு.வெ.பா.) (பிறப்பு: ஏப்ரல் 06, 1943) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதை, நாவல்களை எழுதினார், இலக்கிய ஆய்வு நூல்களை, உரை நூல்களை எழுதினார். ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆங்கில உரை நூலை தனது உரையுடன் பதிப்பித்தார். தமிழக அரசின் கபிலர் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
கு,வெ. பாலசுப்பிரமணியன், ஏப்ரல் 06, 1943 அன்று தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், வெங்கடாசலம் - செல்லம்மாள் இணையருக்குப் பிறந்தார். குடும்பச் சூழல் காரணமாக சிறிய தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். தொடக்கத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின் தாதன்பேட்டைப் பழூர் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார், திருவிடைமருதூரில் இடைநிலைக் கல்வி பயின்றார். திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றார்.
கு,வெ. பாலசுப்பிரமணியன் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். அதே கல்லூரியில் பயின்று தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பேராசிரியர் வ.சுப. மாணிக்கம், கு.வெ.பா.விற்கு ஆசிரியராக இருந்து வழி நடத்தினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். கல்வெட்டு, சமூகப்பணி, முதியோர் கல்வி ஆகியவற்றில் சான்றிதழ்கள் பெற்றார். படைப்பிலக்கியம், மொழியியல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
கு,வெ. பாலசுப்பிரமணியன் மணமானவர். மனைவி: உமாதேவி. மகள்: அகிலா. மகன்: ராம் பிரபு.
கல்விப் பணிகள்
கு,வெ. பாலசுப்பிரமணியன் 1966-1968 வரை பூண்டி புட்பம் கல்லூரியிலும், 1968-1970 வரை வேலூர் ஊரிஸ் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1970 தொடங்கி திருவண்ணாமலை அரசினர் கல்லூரி, பெரியார் கல்லூரி, கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி, விருத்தாசலம் அரசு கல்லூரி புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி போன்றவற்றில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1987 முதல் 2003 வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறைத் தலைவராகவும், பதிவாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். கு.வெ.பா.வின் நெறியாள்கையில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றனர்.
இலக்கிய வாழ்க்கை
கு.வெ.பா கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, உரை நூல், செய்யுள் காப்பியம், சங்க இலக்கிய ஆய்வுகள், மொழிபெயர்ப்பு என 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மரபுக்கவிதைகளும், வண்டார்குழலி என்னும் காப்பியமும் இயற்றியுள்ளார்.
இலக்கிய ஆய்வு
கு,வெ. பாலசுப்பிரமணியன் கல்லூரி இதழ்களில், மாநாட்டு மலர்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளை எழுதினார். தேவாரம், திருமந்திரம் ஆகியவற்றுக்கு உரைகளும் விளக்கங்களும் எழுதியுள்ளார். தொல்காப்பியம், நற்றிணை ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.
மொழியாக்கம்
கு.வெ.பா ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆங்கில உரை நூலை தனது மெய்யுரையுடன் பதிப்பித்தார். ஆங்கிலத்திலிருந்து மூன்று நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
வாழ்கை வரலாறு
கு.வே.பாலசுப்ரமணியம் கா.அப்பாத்துரை வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதினார். அதை சாகித்ய அக்காதமி வெளியிட்டது.
மேடையுரை
கு.வெ.பா பல்வேறு கருத்தரங்குகள், ஆய்வு மாநாடுகள், அறக்கட்டளைப் பொழிவுகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளர். வானொலியில் முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இலக்கியப் பயிலரங்குகளை ஒருங்கிணைத்தார். அயல்நாடுகளில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பல்வேறு பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். தமிழகத்திற்கு வருகை தரும் இந்தியத் தலைவர்கள் மற்றும் இந்திய அரசு அலுவலர்களுக்கு மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.
பொறுப்புகள்
- இந்திய ஆட்சிப்பணித் தேர்வாணைய வல்லுநர்
- செம்மொழி ஆய்வு நிறுவனப் பதிப்பாசிரியர்
- இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தின் (SRM) தமிழ்ப்பேராயச்
- செயற்குழு உறுப்பினர்
- இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தின் (SRM) இணையவழிக் கல்விப்
- பாட நூல் குழுத் தலைவர்
- பல கல்வி நிறுவனங்களின் பாடநூல் குழு மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்
- பல்கலைக்கழக மானியக்குழுவின் சிறப்பு நிதி நல்கைத் திட்ட உறுப்பினர்
- தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு உறுப்பினர்
விருதுகள்
- வண்டார்குழலி காப்பியம் தமிழக அரசின் பரிசு பெற்றது.
- தமிழக அரசின் கபிலர் விருது - 2017
- முன்றில் இலக்கிய அமைப்பு வழங்கிய மா. அரங்கநாதன் இலக்கிய விருது - 2024
ஆவணம்
கு,வெ. பாலசுப்பிரமணியனின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் க. அன்பழகன் எழுதினார். அந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து 2015-ல் வெளியிட்டது.
மதிப்பீடு
கு.வெ.பாலசுப்பிரமணியன் கல்வியாளர், பேச்சாளர், இலக்கிய ஆய்வாளர், மரபுசார்ந்த இலக்கியப் படைப்பாளி ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார். கல்வியாளராக நீண்டகாலம் இலக்கியம் பயிற்றுவித்தார். இலக்கியச் சொற்பொழிவாளராக புகழ்பெற்று விளங்கினார். சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் சார்ந்த ஆய்வுநூல்களை எழுதினார். அவருடைய மரபுக்கவிதைகளும், நாடகங்களும் கல்விப்புலம் சார்ந்த பார்வைகொண்டவை, பொதுவாசிப்புக்கு உரியவை.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- நிலாக் கால நினைவுகள்
- சாட்டை வீச்சு
- தாழ்ந்த என் தாயகமே - (ஒரு வலி இலக்கியம்)
- வண்டார் குழலி (செய்யுள் காப்பியம்)
- வெட்கப்படாமல் படியுங்கள்
சிறுகதைத் தொகுப்பு
- துண்டு
- நரசிம்மம்
- தாயத்து
- கிளிக்கோலம்
- நல்வரவு
- ஊசிக்கதைகளும் உண்மை நிகழ்வுகளும்
- சிந்தனைத் துளிகளும் சின்னச் சின்னக் கதைகளும்
நாவல்
- மாங்காய்ப்பால்
- காளவா
- நெருஞ்சி
- வயல்
- பொன்னுலகம்
நாடகம்
- கௌதம புத்தர் (உரைநடை நாடகம்)
- மாமன்னன் இராசராசன் (உரைநடை நாடகம்)
- நந்தன் வெளியே நிற்கின்றான் (உரைநடை நாடகம்)
- அறிவியல் சிகரம் அப்துல் கலாம் (சிறார் நாடகம்)
- கபிலர் (உரைநடை நாடகம்)
- கயற்கண்ணி (செய்யுள் நாடகம்)
இலக்கிய ஆய்வு நூல்கள்
- சங்க இலக்கியத்தில் புறப்பொருள்
- சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள்
- சங்க இலக்கிய ஆய்வுகளின் மதிப்பீடு
- சங்க இலக்கியக் கொள்கை
- சங்க இலக்கியத்தில் வாகைத் திணை
- சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும்
- சங்க இலக்கியத்தில் ஆய்வுகளின் மதிப்பீடு
- இலக்கியச் சிந்தனைகள்
- கலம்பகத் திறன்
- இலக்கிய நிழல்
- ஆய்வுக் களங்கள்
- ஆய்வியல் நெறிகள்
- ஆய்வுக் கதிர்கள்
- பாரதி வாழ்கிறார்
- திருக்குறள் உலகப் பேரொளி
பக்தி நூல்கள்
- தினமும் ஒரு திருமந்திரம்
- தினமும் ஒரு தேவாரம்
- சைவ சித்தாந்த அடிப்படைகள்
- மேன்மைகொள் சைவ நீதி
- அருணகிரியார்
- நாச்சியார் திருமொழி
- சுவாமிமலை தலவரலாறு
கட்டுரை நூல்கள்
- இயற்கையோடு இயைந்த அறிவியல் (சிறார் கட்டுரை நூல்)
- காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்
- கா. அப்பாதுரையார் (வாழ்க்கை வரலாறு)
- சிற்ப ரத்னாகரம்
உரை நூல்கள்
- தொல்காப்பியம் மூலமும் உரையும்
- நற்றிணை மூலப்பதிப்பும் உரையும்
- சங்க இலக்கியம் (எட்டுத்தொகை & பத்துப்பாட்டு)
மொழிபெயர்ப்பு
- தமிழ் வீரநிலைக் கவிதை (முனைவர் க. கைலாசபதியின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் மொழிபெயர்ப்பு)
ஆங்கில நூல்
- The Rituals and Ceremonies in Sayam Classics
உசாத்துணை
- கு,வெ. பாலசுப்பிரமணியன், முனைவர் க. அன்பழகன், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2015
- கு.வெ. பாலசுப்பிரமணியன், முனைவர் மு. இளங்கோவன் தளம்
- கு.வெ. பாலசுப்பிரமணியன் நூல்கள்: நூல் உலகம் தளம்
- கு.வெ. பாலசுப்பிரமணியன் நூல்கள்: காமன்ஃபோல்க்ஸ் தளம்
- கு.வெ. பாலசுப்பிரமணியன் சங்க இலக்கியப் பேருரை: யூ ட்யூப் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-May-2024, 12:11:58 IST