under review

செந்தமிழ் (இதழ்)

From Tamil Wiki
செந்தமிழ் 1901-1929
செந்தமிழ் இதழ் 1958
செந்தமிழ்

செந்தமிழ் (1902) தமிழாய்வுகளுக்கான இதழ். நூறாண்டுகளுக்கும் மேலாக மாதம் தோறும் வெளிவந்தது. மதுரையில் பாண்டித்துரைத் தேவர் தொடங்கிய நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட இதழ். ரா.ராகைவையங்கார், மு.ராகவையங்கார் முதலிய அறிஞர்கள் இதன் ஆசிரியர்களாக இருந்தனர். தமிழ் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டது. பழந்தமிழ் நூல்களையும் வெளியிட்டது. 2004 வரை இதழ்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருந்தன.

வெளியீடு

மதுரையில் பாண்டித்துரைத் தேவர் தொடங்கிய நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில் டிசம்பர் 7, 1902 முதல் வெளிவரும் இதழ் இது. ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த 12 இதழ்களைத் தொகுப்பாக்கி விற்பனை செய்துள்ளது. மதுரை தமிழ்ச்சங்க முத்திசாசாலையில் அச்சிடப்பட்டது.

இவ்விதழின் நோக்கம் 'இதுகாறும் அச்சிடப்படாத செந்தமிழ் நூல்களும், தமிழ் நாட்டுப் புராதன சரிதங்களும் சாஸனங்களும், வடமொழியினும் ஆங்கிலத்தினும் தமிழிற்கு வேண்டுவனவாகக் கருதப்படும் நூன் மொழிபெயர்ப்புக்களும், தமிழின் அருமை பெருமை அடங்கிய விஷயங்களும், தமிழாராய்ச்சியைப் பற்றியனவும், தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன பிறவும் இதன் வாயிலாக வெளிவரும்" என்று இதழ் குறிப்பிடுகிறது

இதழின் இதழாசிரியராக தொகுதி 1 முதல் தொகுதி 2 வரை ரா.ராகவையங்காரும், தொகுதி 3 முதல் தொகுதி 9 வரை மு.இராகவையங்காரும், தொகுதி 10 முதல் தொகுதி 46 வரை நாராயணையங்காரும் இருந்துள்ளனர்

உள்ளடக்கம்

செந்தமிழ் இதழின் உள்ளடக்கம் அதன் ஆசிரியர்களைப் பொறுத்து மாற்றம் அடைந்துள்ளது என ஆய்வாளர் பி.ஜீவா கருதுகிறார்[1].

ரா.ராகவையங்கார் காலகட்டம்

ரா.ராகவையங்கார் ஆசிரியராக இருந்த காலத்தில் இதழ் எக்காரணத்திற்காக தொடங்கப்பட்டதோ அதனை நிறைவேற்றும் வகையில், பதிப்பு, ஆராய்ச்சி, நூல் மதிப்பீடு, கல்வெட்டு,மொழிபெயர்ப்பு, சரித்திரம் ஆகியன குறித்து இதழில் கட்டுரைகள் வெளிவந்தன. ரா.ராகவையங்கார் ஆசிரியராக இருந்த காலத்தில் பரிபாடலுக்கு பரிமேழலகர் எழுதிய உரை பற்றிய ஆய்வுகளும் , சி.வை. தாமோதரம் பிள்ளை 1885-ல் பதிப்பித்து வெளியிட்ட தொல்காப்பிய பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரையின் மீதான ஆய்வுகளும் வெளியிடப்பட்டன. நச்சினார்க்கினியர் உரையின் இறுதி நான்கு இயல்கள் பேராசிரியர் உரையே என்று ரா.ராகவையங்கார் எழுதிய கட்டுரையும், புறநானூறு 'மீனுண் கொக்கின்’ என்னும் செய்யுள் பற்றிய ஆய்வும் பெரிதாக விவாதிக்கப்பட்டன

1902-1904 ஆகிய காலப்பகுதிக்குள் செந்தமிழ் இதழில் ரா.ராகவையங்கார்

  • ஐந்திணை ஐம்பது (1902)
  • கனாநூல் (1902)
  • நேமிநாதம் மூலமும் உரையும் (1903)
  • திருநூற்றந்தாதி மூலமும் உரையும் (1904)
  • திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் (1904)
  • முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் (1905)
  • இனியவை நாற்பது மூலமும் உரையும் (1903
  • பன்னிரு பாட்டியல் (1904)
  • நான்மணிக்கடிகை (1904)
  • வளையாபதி செய்யுட்கள் (1903)

முதலிய நூல்களைப் பதிப்பித்தார்.

மு. இராகவையங்கார் காலகட்டம்

செந்தமிழ் இதழில் தமிழறிஞர் மு.இராகவையங்கார் முதன்மைப் பங்களிப்பாற்றியிருக்கிறார். முதல் எட்டு ஆண்டுகளுக்கு செந்தமிழ் இதழின் உதவியாசிரியராக இருந்தார். அதன்பிறகு 43-ம் தொகுதி வரை வெளிவந்த செந்தமிழ் இதழ்ப் பகுதிகளில் ஆய்வுகளை வெளியிட்டார். இலக்கியம், இலக்கணம், மொழிநூல், எழுத்து வரலாறு, நூற்பதிப்பு முறை, நூலாராய்ச்சி, நாட்டு வரலாறு, சமயம், பண்டை ஆசிரியர்கள், பண்டைத் தமிழர்களின் ஒழுக்கநெறி, கல்வெட்டுகள், இடப்பெயர்கள், பண்டைக் காலத்துச் சான்றோர்கள் முதலிய பலபொருள்கள் இவருடைய ஆய்வுகளில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், பழந்தமிழ்ச் சுவடிகளிலிருந்து வெளிவந்த நூல்களின் பிழைநோக்கிய பதிப்புகள் மு.இராகவையங்கார் எழுதிய வாழ்த்துப்பா, இரங்கற்பா ஆகியவையும் செந்தமிழ் இதழில் இடம்பெற்றிருக்கின்றன[2].

ஆனால் இவர் காலத்தில் செந்தமிழ் இதழ் அதன் இயல்பில் இருந்து விலகி பயிர்தொழில், விவசாயம், தொழில், வர்த்தகம், இந்து மதம், ஈயம், அறிவு, நித்திரை, ஒற்றுமை, கரிவாயு, மதுவிலக்கு, ஈகை, யானையாராய்ச்சி, குதிரையாராய்ச்சி, பக்தி என பிற தன்மையிலான கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. ஜனவிநோதினி, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் ஏற்கனவே வெளியானவற்றை செந்தமிழ் இதழில் மீண்டும் வெளியிட்டுள்ளனர். இவை இவ்விதழின் நோக்கத்தில் இருந்து மாறுபட்ட செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

மு.இராகவையங்கார் ஆசிரியராக இருந்தக் காலத்தில் செந்தமிழ் வழியாகம் பதிப்பித்து வெளியிடப்பட்ட நூல்கள்

  • நரிவிருத்தம்
  • சிதம்பரப் பாட்டியல்
  • திருக்கலம்பகம் மூலமும் உரையும்
  • விக்கிரம சோழன் உலா
  • சந்திராலோகம்
  • கேசவபெருமாள் இரட்டை மணிமலை
  • பெருந்தொகை
  • நூற்பொருட் குறிப்பு
  • நிகண்டகராதி
  • திருக்குறள் பரிமேலழகர் உரை

ஆகியவை.

மு.இராகவையங்கார் இவ்விதழில் 'ஐயன் ஆரிதன்’ என்னும் புனைபெயரிலும் எழுதியுள்ளார். மு.இராகவையங்கார் தமிழர் நேசன், கலைமகள், வித்யாபாநு, ஹரிசமய திவாகரன், ஸ்ரீ வாணிவிலாஸினி முதலிய இதழ்களிலும் எழுதியுள்ளார்.

இதழ் தன்னுடைய நோக்கத்தில் இருந்து விலகி செயல்பட்டிருகிறது என்பதை உணர்ந்து பாண்டித்துரைத் தேவர் அவரை விலக்கி நாராயணையங்காரை இதழின் ஆசிரியராக நியமித்தார். அதுபற்றி சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவருக்கு பாண்டித்துரைத் தேவர் எழுதிய கடிதம் இதைச் சொக்கிறது

"மதுரைத் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்ப் பத்திராதிபராய் இருந்த மு.இராகவையங்காரை நீக்கித் திரு.நாராயணையங்காரவர்களை எடிற்றராக நியமித்திருக்கிறேன். இனி, செந்தமிழ் நல்ல கட்டுரைகளோடு உரிய காலங்களில் தவறாது வெளிவருவதற்கு வேண்டுவன செய்திருக்கிறேன். தங்கள் என்மீது தயைகூர்ந்து நம் செந்தமிழ் தம் விஷயங்களைக் கொண்டு முன்னிலுஞ் சிறந்து விளங்குமாறு செய்தற்குக் கேட்டுக்கொள்ளுகிறேன். தங்களன்பன் பாண்டித்துரை அக்கிராசனாதிபதி"

நாராயணையங்கார் காலகட்டம்

நாராயணையங்கார் ஆசிரியர் பொறுப்பு ஏற்ற சில நாட்களிலே பாண்டித்துரைத்தேவர் இறந்து விட்டார். இதனால் இதழைத் தொடர்ந்து வெளியிடுவது என்பதே நாராயணையங்காருக்கு கடினமாக இருந்தது. சங்க அறிக்கைகள், வரவு செலவு கணக்குகள் ஆகியவையும், பிற சங்கங்கள் பற்றிய விஷயங்களும் தொடர்ந்து இதழில் வெளியிடப்பட்டுள்ளன. போகப் போக இவ்விதழின் தரம் குறைந்து பன்முக தன்மை பொருந்திய இதழாக உருமாறியது. மதுரைத் தமிழ்ச் சங்கமும் செந்தமிழ் இதழும் தன்னுடைய நோக்கத்திலிருந்து விலகி மாறுபட்டு செயல்பட்டதனால்தான் செந்தமிழ்ச் செல்வி இதழ் தோற்றுவிக்கப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. (பி.ஜீவா) ,

தமிழியல் கட்டுரைகள்

ஆய்வாளர் பி.ஜீவா செந்தமிழ் இதழில் வெளிவந்த தமிழியல் கட்டுரைகளை 12 வகையாகப் பகுக்கலாம் என்கிறார். அவை,

  • இலக்கியம்
  • இலக்கணம்
  • வரலாறு
  • பதிப்புகள்
  • கல்வெட்டு, சாஸனம்
  • .சரித்திரம்
  • மொழிப்பெயர்ப்பு
  • புராணம்
  • காப்பியம்
  • இதிகாசம்
  • பொதுவானக் கட்டுரைகள்

இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் சங்க இலக்கியம் தொடர்பாக 138 கட்டுரைகளும், பக்தி இலக்கியம் தொடர்பாக 33 கட்டுரைகளும், நீதிநூல்கள் தொடர்பாக 68 கட்டுரைகளும், சிற்றிலக்கியம் தொடர்பாக 120 கட்டுரைகளும் ஆகும். இலக்கணம்தொடர்பாக 175 கட்டுரைகளும், புராணம் தொடர்பாக 85 கட்டுரைகளும், இராமாயணம் தொடர்பாக 87 கட்டுரைகளும், பாரதம் தொடர்பாக 15 கட்டுரைகளும், காப்பியம் தொடர்பாக 38 கட்டுரைகளும், வரலாற்று தொடர்பாக 68 கட்டுரைகளும், சாசனம் தொடர்பாக 51 கட்டுரைகளும், கல்வெட்டு, செப்பேடு தொடர்பாக 8, சரித்திரம் தொடர்பாக 63 கட்டுரைகளும் செந்தமிழில் வெளியாயின என்று பி.ஜீவா குறிப்பிடுகிறார்..

செந்தமிழ் இதழில் ஏறத்தாழ 150 அறிஞர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர் என்று ஆய்வாளர் பி.ஜீவா குறிப்பிடுகிறார்.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

முதன்மை விவாதங்கள்

செந்தமிழ் இதழில் நடந்த முதன்மை விவாதங்கள் இவை

  • வேளிர்கள். ’வேளிர்கள் யார்?" என்னும் விவாதம் வி.கனகசபைப் பிள்ளையால் தொடங்கிவைக்கப்பட்டது. அவர்கள் கர்நாடகப் போசளர்களா, தமிழ் யாதவர்களா என விரிந்த அந்த விவாதத்தில் ப.தி.கார்த்திகேய முதலியார் போன்றவர்கள் கலந்துகொண்டனர்.
  • கருவூர் வஞ்சி. சேரர்களின் தலைநகர் எது என்னும் விவாதம் வி.கனகசபைப் பிள்ளையால் தொடங்கப்பட்டது. .எஸ்.ஸ்ரீநிவாசபிள்ளை , சு.ஸ்ரீநிவாசையங்கார், சி.எஸ்.செலுவையர் ஆகியோர் அவ்விவாதத்தில் கலந்துகொண்டனர்
  • சோழர்கள். சோழர்களின் அடையாளம் பற்றி சோழர்கள் யார் என்னும் தலைப்பில் வி.கனகசபைப் பிள்ளை எழுதிய கட்டுரை விவாதமாகியது. டி.ஏ.கோபிநாத ராவ் போன்ற தொல்லியலாளர்களும் அதில் கலந்துகொண்டனர்.
  • பாண்டியர்கள். மாறஞ்சடையன் என்ற பேரில் டி.ஏ.கோபிநாத ராவ் எழுதிய கட்டுரையை ஒட்டி பாண்டியர்கள் பற்றிய ஒரு விவாதம் நடைபெற்றது.
  • பரிபாடல். வேத்துணையோர் பரிபாடல் என்னும் சொல்லாட்சியின் பொருள் என்ன என்பதைப் பற்றி சுன்னாகம் அ குமாரசாமிப் புலவர் தொடங்கிய விவாதத்தில் பலர் கலந்துகொண்டனர்.
  • திணை. ஐங்குறுநூற்றுத் திணைவைப்பு என்னும் கட்டுரை எஸ்.ரங்கன் எழுத, திணைக்கொள்கைக்கும் பழைய தமிழ்ப்பாடலுக்குமான உறவு குறித்து அவ்விவாதம் நீண்டது.
  • புறநாநூறு. சோமசுந்தர பாரதியார் எழுதிய 'புறநானூறு வைப்புமுறை’ என்னும் கட்டுரை புறநானூற்றுப் பாடல்கள் சேரன், பாண்டியன், சோழன் என்ற வைப்பு முறையில் கோக்கப்பட்டுள்ளன என்றும், தலைச்சங்க புலவர்கள் பாடல்கள் முன்பும் கடைச்சங்கப் புலவர்கள் பாடல்கள் பின்பும் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்றும் வாதிட்டது. அதையொட்டி விவாதங்கள் நடைபெற்றன
  • சங்ககால பெண்கவிஞர்கள் .சங்ககாலத்து 31 பெண்பாற் கவிஞர்களைப் பற்றி ரா. ராகவையங்கார் எழுதிய கட்டுரை தொடர்ச்சியாக அதையொட்டிய கட்டுரைகளுக்கு வழிவகுத்தது. ஔவையார் பற்றியும் விவாதம் நீண்டது
  • திருமந்திரம் சேற்றூர் ரா.சுப்பிரமணிய கவிராயர் திருமந்திர நூறுபாட்டுக்கு உரையெழுதியதை ஒட்டி திருமந்திரத்தின் காலம் பற்றிய விவாதம் நடைபெற்றது
  • கம்பன். திருத்தக்கதேவரும் கம்பரும்’ என்ற கட்டுரையில் கம்பர் தமக்கு முந்தைய திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணியிலிருந்து வடிவம், கருத்து ஆகியவற்றை எவ்வாறு பெறுகிறார் என்பதை ரா.ராகவையங்காரும், கம்பராமாயணம் பாடவேறுபாடு குறித்து 'இராமாவதாரச் செய்யுள் பாடாந்தரம்’ என்னும் தலைப்பில் சி.கணேசையரும் தொடர்ந்து எழுதியுள்ளனர்.
  • காப்பியங்கள் 'சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரு காப்பியங்களின் பிறப்பிடம் யாது?’ என்னும் கட்டுரையில் இரு காப்பியங்களின் பிறப்பிடம் 'திருவஞ்சைக்களமே’ என்று ரா.பொன்னம்பலம்பிள்ளை எழுதியிருக்கிறார்
  • ஆவினன்குடி. ’ஆவிநன்குடி’ என்ற கட்டுரை சங்க இலக்கியங்களில் ஆவிநன்குடி என குறிப்பிடப்பட்டிருக்கும் இப்பகுதி யாருக்குரியது, இக்காலத்து இப்பெயர் என்னவாக வழங்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்துவதாக ரா.ராகவையங்காரால் எழுதப்பட்டுள்ளது.

இலக்கிய இடம்

’ஒவ்வொரு மாதமும் செந்தமிழ் எப்போது வெளிவருமென்று பேராவலோடு தமிழன்பர்கள் எதிர்பார்த்த வண்ணமாயிருந்தார்கள். தமிழ்நாட்டுப் பெரும் பேராசியனாய் அமைந்து தமிழ்மக்கள் வீடுதோறுஞ் சென்று தமிழர் கல்வி நலத்தை அவர்கள் நுகரும்படி செய்துவந்த பெருமை செந்தமிழ்ப் பத்திரிகைக்கே உரியதாயிருந்தது. (ஆராய்ச்சித் தொகுதி, முன்னுரை, பக்.10-11)" என்று பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

செந்தமிழ் இதழின் பங்களிப்புகள் நான்கு களங்களில் அமைந்தவை.

  • பழந்தமிழ் நூல்கள் பல அச்சில் வந்துவிட்டிருந்த காலகட்டத்தில் அவற்றை பாடவேறுபாடு களைந்து பிழைநோக்கி பதிப்பிக்கும் பணி தொடங்கியது. அந்த விவாதங்களுக்கு செந்தமிழ் இடமளித்தது
  • பழந்தமிழ் நூல்களில் இருந்து தமிழ் வரலாற்றையும், பண்பாட்டையும் தரவுகளைச் சேகரித்து உருவாக்கிக் கொள்ளும் பணியை செந்தமிழ் இதழ் தொடங்கிவைத்தது. கல்வெட்டுச்சான்றுகள் பட்டையச்சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலக்கிய ஆய்வுகளை முன்வைத்தது.
  • பழந்தமிழ் நூல்களில் விட்டுப்போன சிற்றிலக்கியங்கள் மற்றும் சிறிய இலக்கண நூல்களை பதிப்பித்தது.
  • பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு உரை எழுதி வெளியிடுவது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page