under review

நவவேதாந்தம்: Difference between revisions

From Tamil Wiki
Line 133: Line 133:
==உசாத்துணை==  
==உசாத்துணை==  


* A history of early Vedānta philosophy :Hajime Nakamura
* A History of Early Vedānta philosophy, Hajime Nakamura
* [https://link.springer.com/article/10.1007/s11407-017-9218-9 Introduction to Special Issue: New Directions in the Study of Advaita Vedānta, International Journal of Hindu Studies, vol 21 (2017)]
* [https://link.springer.com/article/10.1007/s11407-017-9218-9 Introduction to Special Issue: New Directions in the Study of Advaita Vedānta, International Journal of Hindu Studies, vol 21 (2017)]
* [https://www.jstor.org/stable/3270585 The Early Spread of Vedanta Societies: An Example of “Imported Localism”, Gwilym Beckerlegge, International Journal for the History of Religions, vol 51, No. 3 (2004)]
* [https://www.jstor.org/stable/3270585 The Early Spread of Vedanta Societies: An Example of “Imported Localism”, Gwilym Beckerlegge, International Journal for the History of Religions, vol 51, No. 3 (2004)]

Revision as of 18:30, 16 April 2024

நவவேதாந்தம் (புதுவேதாந்தம், Neo-Vedanta): இந்திய வேதாந்த மரபின் நவீன வடிவம். வேதாந்தக் கொள்கை காலப்போக்கில் சாதிய அமைப்புடனும், இந்திய ஆசாரவாதத்துடனும், இந்து வழிபாட்டு முறைகளுடனும் சமரசம் செய்துகொண்டு அதன் அடிப்படைகளை தவறவிட்டுவிட்டது என்று எண்ணிய ஞானிகள் வேதாந்தத்தின் தத்துவ அடிப்படைகளை சமரசமில்லாமல் வலியுறுத்தியமையால் உருவானது. பின்னர் அவர்களின் மாணவர்களால் இந்திய வேதாந்தத்தை நவீன காலகட்டத்தின் மானுடவிடுதலைக் கருத்துக்களுடனும், சமூக மறுமலர்ச்சிக் கருத்துக்களுடனும், நவீன ஐரோப்பிய தத்துவக் கருத்துக்களுடனும் இணைத்து விரிவாக்கம் செய்வதன் வழியாக விரிவாக்கப்பட்டது. இந்திய மறுமலர்ச்சியில் நவவேதாந்தம் பெரும் பங்களிப்பாற்றியது. உலகுதழுவிய இந்து தத்துவமாக இன்று நிலைகொள்கிறது.

கலைச்சொல்

நவவேதாந்தம் Neo-Vedanta கலைச்சொல் இந்திய சிந்தனையை ஆராய்ந்த நவீன ஐரோப்பியச் சிந்தனையாளர்களால் போடப்பட்டது. இந்தியவியலாளரான பால் ஹாக்கர் (Paul Hacker 1913 - 1979) இச்சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.[1] பிரம்மசமாஜம் முன்வைத்த வேதாந்தக் கருத்துக்களைக் குறிப்பிட தொடக்ககால கிறிஸ்தவ இறையியலாளர்களும் இச்சொல்லை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

புது இந்துமரபு (Neo-Hinduism) சர்வதேச இந்து மரபு (Global Hinduism) இந்து பொதுமரபு (Hindu Universalism) போன்ற சொற்களும் இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நவவேதாந்தம் என்பது வேதாந்த அடிப்படை கொண்ட சிந்தனைகளுக்கே பொருந்துவது. தூய பக்தியை முன்வைக்கும் ஹரே கிருஷ்ணா இயக்கம் (International Society for Krishna Consciousness) போன்ற அமைப்புகளுக்கு இச்சொல் பொருந்தாது. விரிவான அத்வைதம் (Greater Advaita Vedanta) என இக்கருதுகோளை சில ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.[2]

வரலாற்றுப் பின்புலம்

முதற்காலகட்டம்

இந்திய வேதாந்தம் என்னும் தத்துவ - இறையியல் கொள்கைக்கு பல காலகட்டங்களிலாக பல பரிணாமப் படிநிலைகள் உண்டு. ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் என்னும் பாடல்பகுதியே வேதாந்தத்தின் தொடக்கப்புள்ளி எனப்படுகிறது. அதில் பிரம்மவாதம் கவித்துவதரிசனமாக உள்ளது. பிரம்மம் மட்டுமே முழுமுதன்மை கொண்டது, பிற அனைத்துமாகி நின்றிருப்பது அதுவே என அப்பாடல் உணர்த்துகிறது. வேதங்களின் தத்துவ அடிப்படையை விளக்கும் ஆரண்யகங்கள் வழியாக பிரம்மவாதம் வளர்ச்சி அடைந்தது. பின்னர் உருவாகி வந்த உபநிடதங்கள் வழியாக திட்டவட்டமான தத்துவக் கொள்கையாக திரண்டது. பாதராயணர் எழுதிய பிரம்மசூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரங்கள் வேதாந்தத்தின் பிரம்மவாதக் கொள்கையை வரையறை செய்தது. வேதாந்தத்தின் இலக்கணநூலாக அது கருதப்படுகிறது. பிரம்மசூத்திரத்தின் பிரம்மவாத தத்துவத்தை பிற தத்துவங்களுடன் இணைத்து மேலும் வளர்த்தெடுத்த நூல் பகவத் கீதை. உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை ஆகியவை மூன்றும் மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்) எனப்படுகின்றன. (பிரஸ்தானத் த்ரயம்)

இரண்டாவது காலகட்டம்

பொயு 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்திய தத்துவ சிந்தனை மரபில் சமண - பௌத்த மதங்கள் மேலாதிக்கம் பெற்றன. அவை வேதாந்தத்திற்கு எதிரானவை என்பதனால் வேதாந்தம் பின்னடைவு பெற்றது. பின்னர் பொயு 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் தோன்றி பௌத்த சமயத்தின் தத்துவங்களுடன் விவாதித்து வேதாந்தத்தை தர்க்கபூர்வமாக விரிவாக்கினார். அது அத்வைதம் எனப்படுகிறது. அத்வைதத்திற்குப் பின்னர் வேதாந்த மரபு அத்வைதத்திற்கு எதிர்த்தரப்புகளாகவும் மாற்றுத்தரப்புகளாகவும் ஒரு விவாதக்களத்தை உருவாக்கிக்கொண்டது. விசிஷ்டாத்வைதம், துவைதம், சுத்தாத்வைதம், துவைதாத்வைதம் போன்ற வேதாந்தப் பிரிவுகள் உருவாயின. வேதாந்தத்துடன் விவாதித்து சைவசித்தாந்தம் உருவாகியது. சைவசித்தாந்தத்திற்குள்ளும் வேதாந்தம் சார்ந்த ஒரு தரப்பு உண்டு.

மூன்றாவது காலகட்டம்

பொயு 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் கடுமையான போக்கு கொண்ட இஸ்லாமிய அரசுகள் இந்தியாவில் உருவானமையால் இந்து மரபை ஒருங்கிணைத்துக் காக்கும் பொறுப்பை வேதாந்தம் ஏற்றுக்கொண்டது. ஏனென்றால் வேதாந்தத்தின் பிரம்மவாதக் கோட்பாடு இந்து மதத்தின் எல்லா பிரிவுகளுக்கும் ஏற்புடையது. சங்கரர் இந்து மரபில் ஆறு மதங்களை ஒன்றாக்கினார். பொதுவான பூசகர்களின் மரபையும் சங்கர மடங்கள் உருவாக்கி நிலைநிறுத்தின. இதன் விளைவாக, மரபான வேதாந்தம் காலப்போக்கில் இந்தியச் சாதியமைப்புடனும், ஆசாரவாதத்துடனும் சமரசம் செய்துகொண்டது. வேதாந்தத்தை அது ஓர் உயர்நிலை தத்துவமாக மட்டுமே வைத்துக்கொண்டு நடைமுறையில் ஆசாரவாதம், வழிபாட்டுமுறைகள், சடங்குவாதம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தது.

பொயு 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஐரோப்பிய ஆதிக்கமும், ஐரோப்பியக் கல்வியும் பரவியது. ஐரோப்பிய மனித சமத்துவக் கருத்துக்களும், மனித உரிமைக் கருத்துக்களும் வேரூன்றத்தொடங்கின. அக்கருத்துக்களின் விளைவாக இந்து மதத்தின் பழமைவாதம், ஆசாரவாதம், சாதிமுறை, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான சீர்திருத்தங்கள் உருவாயின. இது இந்து மறுமலர்ச்சி எனப்படுகிறது. இந்து மறுமலர்ச்சியின் போது இந்துமதத்தின் அறிவார்ந்த மையமாக வேதாந்தமே முன்னிறுத்தப்பட்டது. வேதாந்தம் நவீன சிந்தனைகளுடன் உரையாடி தன்னை மறுஆக்கம் செய்துகொண்டது. அந்த புதியவேதாந்தம் நவவேதாந்தம் என பிற்கால தத்துவ வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகிறது.

தத்துவம்

வேதாந்தத்தின் அடிப்படைக் கருத்துக்கள் இரண்டு. ஒன்று 'தூய அறிவு' என்னும் அணுகுமுறை. இது ஞானமார்க்கம் எனப்படுகிறது. இரண்டு 'அனைத்தும் ஒன்றே' என்னும் ஒருமைவாதம். இது பிரம்மவாதம் எனப்படுகிறது.

தூய அறிவு

வேதாந்தம் அறிந்து கடத்தல் வழியாக விடுதலை அடையப்படும் என முன்வைக்கும் அறிவுப்பாதை (ஞானமார்க்கம்) ஆகும். வேதங்கள் தூய அறிவையே முன்வைக்கின்றன என்று வேதாந்தம் சொல்கிறது. நவவேதாந்திகளில் ஒருவரான சி.சுப்ரமணிய பாரதியார் 'பல ஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ!'[3] என்று இதை தன் அறிவே தெய்வம் என்னும் பாடலில் குறிப்பிடுகிறார். தூய அறிவை முன்வைப்பதனால் வேதாந்தம் விசேஷ தளம் எனப்படும் உயர்நிலையில் வழிபாடுகள், சடங்குகள், ஆசாரங்கள், மதநம்பிக்கைகள் ஆகியவற்றை ஏற்பதில்லை. அவை சாமானிய தளம் எனப்படும் அன்றாடத்தில் ஓர் எல்லைவரை இருக்கலாம் என ஏற்கிறது. ஆனால் அவை அறிவுக்குத் தடையாக ஆகும் என்றால் அவற்றை மறுக்கிறது.

ஆகவே நவவேதாந்தம் மூடநம்பிக்கைகள், பழைய ஆசாரங்கள், பொருளிழந்துபோன சடங்குகள் ஆகியவற்றை நிராகரிக்கிறது. இந்து மரபின் மெய்ஞானம் என்பது பிரம்மமே என்றும், அதுவே இந்து மரபின் சாரம் என்றும் அது கூறுகிறது. இந்து மதத்தில் உள்ள பொருளிழந்துபோன பழைய ஆசாரங்களையும், மூடநம்பிக்கைகளையும், வெற்றுச்சடங்குகளையும் களைந்தால் அதன் மையம் மேலும் துலக்கமடையும் என்று நவவேதாந்தம் விளக்கியது.

ஒருமைவாதம்

வேதாந்தம் பிரம்மமே உண்மை, பிற அனைத்தும் மாயையே என்கிறது. பிரபஞ்சமாகவும், உயிர்க்குலமாகவும். உயிர்களில் பிரக்ஞையாகவும் திகழ்வது பிரம்மமே. பிரம்மம் அன்றி வேறேதும் இல்லை. அந்த ஒருமைவாதம் வேதாந்தத்தின் அடிப்படையான பிரம்மவாதம். ஒன்றான பிரம்மத்தை உயிர்கள் மாயையால் பலவான பிரபஞ்சமாக எண்ணி மயங்குகிறார்கள். அதில் இருந்து உலகியல் உருவாகிறது. உலகியலைக் கொண்டு அறியப்படும் எந்த குணங்களும் இல்லாத நிர்குண பிரம்மம் ஆகிய பரம்பொருளை உணர முடியாது. ஆகவே உலகியலில் திகழும் ஒருவர் பிரம்மம் என்னும் அறியமுடியாத ஒன்றை அறியப்படும் குணங்களை அளித்து சகுண பிரம்மம் ஆக வழிபடலாம் என வேதாந்தம் ஏற்கிறது. ஆனால் ஞானமார்க்கத்தின் உயர்நிலையில் பிரம்மத்தை அறிந்து, உணர்ந்து, பிரம்மமென தன்னை உணரும் நிலையே வீடுபேறு என முன்வைக்கப்படுகிறது.

அனைத்தும் பிரம்மமே என்று அத்வைதம் கூறுவதனால் உயிர்களிடையே வேறுபாடில்லை, மானுடரிடையேயும் வேறுபாடில்லை. சங்கரரின் மனிஷா பஞ்சகம் போன்ற படைப்புகளின் சாராம்சம் அதுவே. ஆகவே நவவேதாந்தம் மானுடரிடையே பிரிவினையை நிராகரித்தது. உயிர்க்கொலையையும் மறுத்தது. நவவேதாந்திகள் தீண்டாமை, சாதிவேறுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான சீர்திருத்தப்பார்வை கொண்டிருந்தார்கள். மானுட இனத்தையே ஒன்றாகப் பார்த்தனர். உயிர்களனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் பார்வையை முன்வைத்தனர்.

நவவேதாந்திகள்

இந்தியா உருவாக்கிய நவவேதாந்திகள் நான்கு காலகட்டத்தினர்.

  • முதல் காலகட்டத்தில் நவவேதாந்திகள் அன்று அறிமுகமான ஐரோப்பியக் கல்வியின் விளைவான ஐரோப்பிய சிந்தனைக்கு மிக அணுக்கமானவர்களாக இருந்தனர். இந்து மரபிலுள்ள பிரம்மவாதம் போன்ற சில கொள்கைகளை மட்டுமே முன்வைத்தார்கள். இந்து மரபிலுள்ள ஏராளமான பண்பாட்டுக்கூறுகளை நிராகரித்தனர்.
  • இரண்டாவது காலகட்டத்தினர் நவவேதாந்திகள் இன்னும் விரிவான பார்வை கொண்டிருந்தனர். தூய அறிவு, ஒருமைவாதம் ஆகியவற்றை அவர்கள் முன்வைத்தாலும் இந்து மரபிலுள்ள வழிபாடுகள், சடங்குமுறைகள் ஆகியவற்றிலுள்ள சிறந்த அம்சங்களை ஏற்றுக்கொண்டனர். இந்து மரபிலுள்ள பண்பாட்டுக் கூறுகளையும் முன்வைத்தனர்.
  • மூன்றாவது காலகட்டத்தினர் நவவேதாந்தக் கருத்துக்களை அரசியல், கல்வியியல் போன்ற துறைகளில் விரிவாக்கம் செய்து முன்னெடுத்தனர்.
  • நான்காவது காலகட்டத்தினர் முந்தைய நவவேதாந்திகளின் மாணவர்களின் வரிசையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நவவேதாந்தத்தை நவீன வாழ்க்கைமுறை சார்ந்த செயல்பாடுகளுடன் இணைத்து ஒரு நடைமுறை ஞானமாகவும், மதம் சாராத ஆன்மிகமாகவும் விளக்கினர். இந்திய யோகமரபுகளுடன் இணைத்து அதற்குரிய பயிற்சிமுறைகளை அமைத்தனர். ஆன்மிக அமைப்புகளை உருவாக்கினர்.

முதல் காலகட்டம்

முதல்காலகட்டத்தைச் சேர்ந்த நவவேதாந்திகள் ஐரோப்பியக் கல்வி கற்று, கிறிஸ்தவ மரபுடனும் ஐரோப்பாவின் நவீன மானுடவிடுதலைக் கொள்கைகளுடனும் விவாதித்து உருவானவர்கள். அவர்கள் கடுமையான ஆசாரஎதிர்ப்பு மனநிலையும், பகுத்தறிவுப்பார்வையும் கொண்டிருந்தார்கள். இந்து மதத்தில் இருந்து வேதாந்தம் முன்வைக்கும் அடிப்படைத் தத்துவங்களை மட்டும் முன்னெடுத்து எஞ்சியவற்றை நிராகரிக்கவேண்டும் என்று கருதினர். அதற்கான அமைப்புகளை உருவாக்கினர்.

ராஜா ராம்மோகன் ராய்

ராஜா ராம்மோகன் ராய் (1772 – 1833) வேதாந்தத்தின் தத்துவமான பிரம்மவாதத்தை மட்டுமே இந்து மரபில் இருந்து எடுத்துக்கொண்டு, கிறிஸ்தவ வழிபாட்டுமுறைகளின் வழியில் பிரம்மத்தை அறிந்து அணுகும் ஒரு துணைமதத்தை உருவாக்கினார். இது பிரம்ம சமாஜம் என அழைக்கப்பட்டது. ராஜா ராம்மோகன் ராய் இந்து மதத்தில் இருந்த மறைஞானச் சடங்குகள், ஆலயவழிபாடு, நோன்புகள், அன்றாடச்சடங்குகள் ஆகிய அனைத்தையும் நிராகரித்தார். கூடவே யோகப்பயிற்சிகள் போன்றவற்றையும் நிராகரித்தார்.

தயானந்த சரஸ்வதி

தயானந்த சரஸ்வதி (1824 –1883) வேதாந்தத்தின் பிரம்மவாதத்தையும், வேதகாலச் சடங்குகளையும் மட்டுமே இந்து மரபில் இருந்து எடுத்துக்கொண்டு ஒரு துணைமதத்தை உருவாக்கினார். இது ஆரியசமாஜம் எனப்படுகிறது. இந்துமதத்தில் வேதங்கள், முற்கால உபநிடதங்கள் ஆகியவற்றை மட்டுமே ஏற்றுக்கொண்டார். வேதஞானத்தை மட்டுமே முன்வைத்து பிற்கால வழிபாடுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை நிராகரித்தார். யோகப்பயிற்சிகளையும் பயனற்றவை என்று கருதினார்.

இரண்டாம் காலகட்டம்

இரண்டாம் காலகட்டத்தைச் சேர்ந்த நவவேதாந்திகள் முதல்காலகட்டத்து நவவேதாந்திகளின் சீர்திருத்தப்பார்வையை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால் மரபில் இருந்து வேதாந்தத்தின் அடிப்படைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு மற்ற அனைத்தையும் நிராகரிக்கும் நோக்கை அவர்கள் மறுத்தனர். வேதாந்தம் நீண்ட வரலாற்றுப் பரிணமத்தில் மதவழிபாடுகள், மதப்பண்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அறிவார்ந்த ஓர் ஒத்திசைவை உருவாக்கியுள்ளது என்றும் அது தவிர்க்கப்படவேண்டியதல்ல என்றும் கூறினர். அன்றாட வாழ்க்கையில் வேதாந்தத்தின் இடம் அந்த ஒருங்கிணைப்பால் உருவாவது என்றனர். யோகப்பயிற்சிகளை வேதாந்தத்தை அக அனுபவமாக ஆக்கிக்கொள்ள பயன்படுத்தினர்.

இந்த மரபில் இந்தியாவில் ஏராளமான ஞானிகளும் அறிஞர்களும் உருவாயினர். அவர்களின் போதனைகளில் இந்து வழிபாட்டு மரபுகளும் வேதாந்தக் கொள்கைகளும் வெவ்வேறு அளவில் கலந்து காணப்படுகின்றன. வைகுண்டர், இராமலிங்க வள்ளலார் போன்றவர்கள் தமிழ்ச் சூழலில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்

நவவேதாந்தத்தின் இரண்டாம் காலகட்டம் ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 - 1886) இருந்து தொடங்குகிறது. அவர் தூய வேதாந்த மரபை முன்வைத்தாலும் இறைவழிபாடுகள், கலாச்சாரச் சடங்குகள் ஆகியவற்றை நிராகரிக்கவில்லை. யோகப்பயிற்சிகளையும் தேவையானவை என நினைத்தார். நவீனக் கல்வி பயின்ற இளைஞர்களுக்குரியதாக வேதாந்த மரபை முன்வைத்தார். அவருடைய வேதாந்தம் பக்திமரபுடன் முரண்பாடு இல்லாததாக இருந்தது.

விவேகானந்தர்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் வேதாந்தக் கருத்துக்களை நவீன உலகுக்கு கொண்டுசென்றவர் விவேகானந்தர் (1863 - 1902). வேதாந்தத்தின் குரலாக ஐரோப்பா நோக்கி பேசியவர். வேதாந்தத்தை இந்துமதச் சீர்திருத்தக் கொள்கையாகவும், உலகுதழுவிய தத்துவக் கோட்பாடாகவும் முன்வைத்தார். யோகமரபுடன் வேதாந்தத்தை இணைத்து அதை ஒரு முழுமையான மெய்ஞான மரபாக நிலைநிறுத்தினார். நவவேதாந்தத்தின் முகம் விவேகானந்தர் வழியாகவே திட்டவட்டமாக துலங்கியது. ஹாஜிமா நகௌமுரா (Hajime Nakamura) போன்ற ஆய்வாளர்கள் நவவேதாந்தத்தை விவேகானந்தரில் இருந்து தொடங்குகின்றனர். விவேகானந்தரின் மாணவர்களில் இருந்து ஒரு பெரிய நவவேதாந்திகளின் வரிசை உருவானது.

நாராயண குரு

நாராயணகுரு (1856 -1928) நவவேதாந்தத்தின் ஞானிகளில் முக்கியமானவர். சமூகசீர்திருத்தவாதி, தத்துவஅறிஞர் , மெய்ஞானி எனும் முகங்கள் கொண்டவர். வேதாந்தத்தில் இருந்த தத்துவத்திற்கும் ஞானத்திற்கும் மட்டுமே முதன்மையிடம் அளிக்கும் நோக்கை நெகிழ்வாக்கி அன்றாட உலகியல் வாழ்க்கையில் விடுதலைக்கான கொள்கையாகவும் அதை விளக்கினார். நவவேதாந்திகளான ஆசிரியர்களின் ஒரு வரிசை அவர் மாணவர்களிடமிருந்து உருவானது

சட்டம்பி சுவாமி

சட்டம்பி சுவாமி (1853 - 1924) கேரளத்தில் அத்வைத மறுமலர்ச்சியை உருவாக்கியவர். வேதாந்த நூல்களை நவீன நோக்குடன் எழுதியவர்

அரவிந்தர்

அரவிந்தர் (1872 – 1950) இந்திய சுதந்திரப்போராளியாக இருந்து மெய்ஞானத்தேடலுக்கு வந்தவர். நவவேதாந்தச் சிந்தனைகளை இந்திய யோக முறைகளுடன் இணைத்தவர். வேதாந்த நோக்கில் வேதங்களை விளக்கியவர். இந்திய வேதாந்தக் கருத்துக்களை மேலைநாட்டு ஒருமைவாதச் சிந்தனைகளுடன் இணைத்தவர். ஒருங்கிணைந்த யோகம் என அவருடைய வழிமுறை அழைக்கப்பட்டது. தன் வேதாந்தக் கருத்துக்களை சாவித்ரி என்னும் தன் காவியத்தில் விளக்கினார்.

மூன்றாம் காலகட்டம்

நவவேதாந்தம் ஓர் சமூகசீர்திருத்த அலையை இந்தியாவில் உருவாக்கியது. அதை இந்து மறுமலர்ச்சி என்று வரலாற்றாய்வாளர் குறிப்பிடுகின்றனர். இந்து மறுமலர்ச்சி இந்திய தேசிய எழுச்சி அல்லது இந்திய மறுமலர்ச்சி எனப்படும் அரசியல் அலையை உருவாக்கியது. இந்திய விடுதலைப்போராட்டம் அதன் விளைவாக உருவாகியது. இந்திய தேசிய எழுச்சியின் விளைவாக வேதாந்தக் கொள்கைகளை அரசியல் கோட்பாடுகளுடன் இணைத்து விரிவாக்கம் செய்யும் அறிஞர்கள் உருவாயினர். இந்திய தேசியப்பார்வையில் வேதாந்தக் கொள்கைகளை தொகுத்து விளக்கும் கல்வியியலாளர்களும் உருவாயினர்.

சகோதரி நிவேதிதா

சகோதரி நிவேதிதா (1867 – 1911) விவேகானந்தரின் நேரடி மாணவர். மார்கரெட் எலிசபெத் நோபிள் என்பது இயற்பெயர், அயர்லாந்தைச் சேர்ந்தவர். விவேகானந்தரின் இயக்கத்தை சமூகப்பணியாற்றவைத்தவர். இந்திய தேசிய இயக்கத்தின் முன்னோடி அமைப்பாக அதை ஆக்கியவர்.

பாலகங்காதர திலகர்

பாலகங்காதர திலகர் (1856 – 1920) இந்திய சுதந்திரப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். வேதாந்தம் இந்திய சிந்தனையின் செயல்துடிப்புகொண்ட ஒரு தத்துவம் என்று கருதிய திலகர் கீதையின் செய்தி அதுவே என விளக்கினார். வேதாந்தத்தின் கர்மயோகம் என்னும் கொள்கை இந்திய விடுதலை இயக்கத்தின் அடிப்படையாக அமையவேண்டும் என்றார். தன் கொள்கைகளை விளக்கி கீதைக்கு கீதாரகசியம் என்னும் பெரிய உரையை எழுதினார்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (1869 – 1948) இந்திய தேசிய இயக்கத்தின் முதன்மை ஆளுமை. காந்தி வேதாந்த தத்துவத்தை நவீன அரசியலுக்கான அறங்களை உருவாக்கும் கொள்கைகளாக விளக்கினார். வேதாந்தத்தின் பற்றற்ற செயல்பாடு என்பதை அனாசக்தி யோகம் என்ற சொல்லால் குறிப்பிட்டார். அறத்தில் நிலைகொண்ட போராட்டத்தை சத்யாக்ரகம் என்ற சொல்லால் குறிப்பிட்ட காந்தி பகவத் கீதையின் வேதாந்தக் கொள்கையை அதற்கு அடிப்படையாக முன்வைத்தார்.

சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்

சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் (1888- 1975) கல்வியாளர், இந்திய தத்துவத்தை மேலைநாட்டுச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டும், மேலைநாட்டுக் கலைச்சொற்களைப் பயன்படுத்தியும் உலகுதழுவிய வாசகர்களுக்காக எழுதினார். ராதாகிருஷ்ணனின் இந்தியஞானம், கீதை உரை ஆகிய நூல்கள் புகழ்பெற்றவை. அவற்றில் இந்து மெய்யியல் மரபின் மையம் வேதாந்தமே என வாதிட்டார். நவீன ஐரோப்பிய தத்துவப் பரப்பில் வைத்து வேதாந்தத்தை வரையறை செய்தார். ராதாகிருஷ்ணனின் நூல்கள் இந்தியக் கல்விப்புலத்தில் அடிப்படை நூல்களாக அமைந்தன.

நான்காம் காலகட்டம்

நான்காம் காலகட்டம் பெரும்பாலும் இந்திய விடுதலையை ஒட்டியும், இந்திய விடுதலைக்குப் பின்னரும் அமைந்தது. இந்த காலகட்டத்தின் நவவேதாந்திகள் முந்தைய வேதாந்திகளின் மாணவர்கள். தங்கள் ஆசிரியர்களின் கொள்கைகளை சமகாலத்தின் தேவைக்கேற்ப விளக்கினர். வேதாந்தக் கொள்கைகளை அரசியல், சமூகவியல் சார்ந்த அன்றாடம் சார்ந்து மறுவிரிவாக்கம் செய்தனர். இந்து யோக- மறைஞான மரபுகளுடன் இணைத்து அதற்குரிய பயிற்சிகளை உருவாக்கினர். மேலைநாட்டுப் புதிய சிந்தனைகளுடன் வேதாந்தக் கொள்கைகளை இணைத்து புத்தாக்கம் செய்தனர்.

சிவானந்தர்

சிவானந்தர் (1854–1934) விவேகானந்தரின் மாணவர்களில் முக்கியமானவர். விவேகானந்தர் தொடங்கிய ராமகிருஷ்ண மடத்தை பெரிய அளவில் வளர்த்தெடுத்தவர் சிவானந்தர்.

சிவானந்த சரஸ்வதி

சிவானந்த சரஸ்வதி (1887–1963) இந்திய யோகமுறைகளை வேதாந்தத்துடன் இணைத்து சிவானந்த யோக மரபை உருவாக்கியவர். Divine Life Society (DLS) என்னும் அமைப்பை 1936 ல் உருவாக்கினார் Yoga-Vedanta Forest Academy யை 1948ல் நிறுவினார்.

நடராஜகுரு

நடராஜகுரு (1895 – 1973) நாராயண குருவின் மாணவர். வேதாந்தத்தை நவீனத்தத்துவ நோக்கில் முதல்முழுமைவாதம் (Absolutism) என விளக்கினார். மேலைத்தத்துவத்தின் முதல்முழுமைவாதச் சிந்தனைகளுடன் அதை இணைத்து விரிவாக்கம் செய்தார். நாராயண குருகுலத்தை நிறுவினார்.

மிரா அல்பாசா

அரவிந்த அன்னை என அழைக்கப்பட்ட அரவிந்தரின் மாணவி (1878 – 1973) மிரா அல்பாசா என்ற இயற்பெயர் கொண்டவர். பிரெஞ்சு தேசத்தவர். அரவிந்தர் முன்வைத்த ஒருங்கிணைந்த யோகம் என்னும் முறையை முன்னெடுத்தவர். பாண்டிசேரியில் ஆரோவில் என்னும் சர்வதேச ஆன்மிக நகரத்தை உருவாக்கினார்.

நித்ய சைதன்ய யதி

நித்ய சைதன்ய யதி (1923 - 1999) நடராஜ குருவின் மாணவர். நாராயணகுருவின் அத்வைத வேதாந்தத்தை நவீன உளவியல், கலையிலக்கியங்கள் ஆகியவற்றினூடாக விரிவாக்கம் செய்தார்.

சின்மயானந்தர்

சின்மயானந்தர் (1916-1993) சிவானந்த சரஸ்வதியின் மாணவர். சின்மயா மிஷனை உருவாக்கினார். வேதாந்தத்தை கீதை உரைகள் வழியாக விளக்கினார்.

ரங்கநாதானந்தர்

ரங்கநாதானந்தர் (1908 – 2005) விவேகானந்தரின் ராமகிருஷ்ண மடத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். நவவேதாந்தக் கருத்துக்களை மேலைநாடுகளில் விரிவுரைகள் வழியாக நிறுவினார்.

தயானந்தர்

தயானந்தர் (ஆர்ஷவித்யா) (1930-2015) சின்மயானந்தரின் மாணவர். தயானந்த ஆசிரமம் என்னும் அமைப்பை உருவாக்கியவர்.

சித்பவானந்தர்

சித்பவானந்தர் (1898 - 1985) ராமகிருஷ்ண மரபைச் சேர்ந்த வேதாந்தி. ராமகிருஷ்ண தபோவனம் அமைப்பை திருச்சி அருகே திருப்பராய்த்துறை என்னும் இடத்தில் அமைத்தார். பகவத்கீதைக்கும் திருவாசகத்திற்கும் புகழ்பெற்ற உரைகள் எழுதினார். கல்விப்பணி ஆற்றினார்.

விமர்சனங்கள்

நவவேதாந்தம் மீது நான்கு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

  1. மரபான மத அமைப்புகள் நவவேதாந்தம் வெறும் அறிவுத்தரப்பாக நின்றுவிட்டதாகவும், ஆன்மிகப் பயிற்சிகளை தவறவிட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றன. ஆன்மிகப்பயிற்சிகளுக்கு ஆசாரங்கள், சடங்குகள், நம்பிக்கை, பக்தி ஆகியவை அவசியமானவை என்கின்றன.
  2. நவீன யோகமரபுகள் நவவேதாந்தம் சமூக, அரசியல் பிரச்சினைகளை மெய்யியலுடன் கலந்து ஆன்மவிடுதலை என்ற அடிப்படையில் சமரசம் செய்துகொண்டதாகக் குற்றம் சாட்டுகின்றன.
  3. இந்தியமரபுவாதிகள் நவவேதாந்தம் மேலைநாட்டுச் சிந்தனைகளின் செல்வாக்கால் உருவானது, மேலைநாட்டுச் சிந்தனைகளின் பார்வைக்கோணத்தை கடன்வாங்கிக்கொண்டது என்று குற்றம் சாட்டுகின்றனர். வேதாந்தத்தை உலகமயமாக்க நவவேதாந்திகள் முயன்றதனால் அதன் இந்தியத்தன்மை அழிந்துவிட்டது என்கின்றனர்.
  4. ஐரோப்பிய தத்துவவாதிகளில் ஒரு சாரார் நவவேதாந்தம் ஐரோப்பிய சிந்தனையாளர்களில் ஒரு தரப்பினர் இந்திய சிந்தனைமேல் தொடுத்த தாக்குதல்களுக்கான எதிர்வினையாக நவவேதாந்தம் உருவானது என்றும், அந்த எதிர்நிலைபாடு அதன் பலவீனம் என்றும் சொல்கின்றனர்.[4]

வரலாற்று இடம்

நவவேதாந்தம் இந்திய சிந்தனை மரபில் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் உருவான முதன்மையான தத்துவ சிந்தனை மற்றும் மெய்ஞான மரபு. நவீன இந்தியாவில் உருவான மிகப்பெரிய ஆன்மிக இயக்கம் நவவேதாந்தமே. நவீன இந்தியா உலகசிந்தனைக்கு அளித்த முதன்மைப் பங்களிப்பு நவவேதாந்தம்தான். இரு நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக அதில் தத்துவஞானிகளும் அறிஞர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

நவவேதாந்தம் இந்து மதச் சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கியது. ஆசாரவாதம், சடங்குவாதம், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து பின்னடையச் செய்தது. இந்தியாவின் சமூக சீர்திருத்த இயக்கங்கள் பெரும்பாலும் நவவேதாந்த மரபில் இருந்து தோன்றியவை. தீண்டாமை மறுப்பு, சாதியொழிப்பு, மானுட சமத்துவம் ஆகியவற்றுக்காக போராடி வெற்றிகளை அடைந்தது. நவவேதாந்தம் இந்தியாவில் மானுடசேவைக்கான ஏராளமான அமைப்புகளை தோற்றுவித்தது. பஞ்சத்தின்போதும் தொற்றுநோய்களின்போதும் பெரும் சேவைப்பணிகளை ஆற்றியது. நவவேதாந்த மரபே ஒட்டுமொத்தமாக இந்தியாவின் கல்வி மறுமலர்ச்சிக்கு முதன்மைப் பங்களிப்பாற்றிய இயக்கம்.

நவவேதாந்தம் தன் உள்விவாதங்கள் வழியாக வளர்ந்துகொண்டே இருந்தது. வேதாந்தத்தின் அடிப்படைகளை விரிவாக்கம் செய்து மானுடசேவை, சமூகசீர்திருத்தப் பணி ஆகியவற்றை அது ஆற்றியது. அரசியல் சித்தாந்தங்களை தன்னிடமிருந்து உருவாக்கியது. வெவ்வேறு இந்து வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும் இணைக்கும் தத்துவமையமாகச் செயல்பட்டது. இந்திய யோகமுறைகளை நடைமுறைத் தளத்தில் இணைத்துக்கொண்டு அரவிந்தர், சிவானந்தர் போன்றவர்களின் புதிய மரபுகளை உருவாக்கியது.

நவவேதாந்தம் நவீன விவாதங்கள் வழியாக பௌத்தம், சமணம் முதலிய பிற இந்திய மதங்களை ஒருங்கிணைக்கும் தத்துவ அடிப்படையை உருவாக்கிக் கொண்டது. கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற பிற மதங்களுடன் உரையாடும் தத்துவ நோக்கு கொண்டிருந்தது. நவீன மானுடவிடுதலைக் கொள்கைகள், நவீன ஜனநாயக மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் ஏற்பு கொண்டு தன்னை விரிவாக்கம் செய்துகொண்டது. நவீன அறிவியலின் தத்துவ அடிப்படைகளுடன் இணைந்து மேலும் விரிவும்கூர்மையும் கொண்டதாக ஆகியது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page