under review

நடராஜகுரு

From Tamil Wiki
நடராஜகுரு
நடராஜகுரு
நடராஜகுரு
நடராஜ குரு
நடராஜ குரு, ஜான் ஸ்பியர்ஸ்
நடராஜ குரு ஜான் ஸ்பியர்ஸ்
நடராஜ குரு, நித்யா

நடராஜகுரு (முனைவர் பி.நடராஜன்) (18 பெப்ருவரி 1895 – 19 மார்ச்1973) (நடராஜ குரு) ஆன்மிகவாதி, தத்துவ அறிஞர். அத்வைதி. நாராயண குருவின் மாணவர். நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கினார், அவரின் சிந்தனைகளை கேரள எல்லையிலிருந்து விடுவித்து உலகம் முழுக்க கொண்டு சென்றவர். நாராயணகுருவின் சிந்தனைகளை மேலைநாட்டுச் சிந்தனையாளர்களுடன் இணைத்து உரையாடி கீழைமேலைச் சிந்தனைச் சந்திப்பை உருவாக்கினார். நித்ய சைதன்ய யதியின் ஆசிரியர்

பிறப்பு, கல்வி

முன்னோர்

நாராயணகுரு வின் கொள்கைகளைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (SNDP) அமைப்பின் நிறுவனரான டாக்டர் பல்பு (டாக்டர் பத்மநாபன்) வின் ஐந்து குழந்தைகளில் ஒருவர் நடராஜ குரு. டாக்டர் பல்பு பண்டைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் செல்வந்தர்களாகிய ஈழவக்குடும்பத்தில் பிறந்தவர். மருத்துவப் படிப்புக்கு திருவிதாங்கூரில் அனுமதி மறுக்கப்படவே பல்பு 1885ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். லண்டன் கேம்பிரிட்ஜ் பள்ளியில் மருத்துவத்தில் உயர்படிப்பை முடித்தபின் பண்டைய மைசூர் சமஸ்தானத்தின் மருத்துவத் தலைமையதிகாரியாக ஆனார். பிரிட்டிஷ் அரசின் தொற்றுநோய் மருத்துவ கழகத்தின் உறுப்பினராக இலங்கையில் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப்பின் பரோடா சம்ஸ்தானத்தின் திவான் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது, அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

பிறப்பு

டாக்டர் பல்புவுக்கு மூன்றாவது குழந்தையாக 18 பெப்ருவரி 1895-ல் பெங்களூரில் நடராஜகுரு பிறந்தார். அன்னையின் பெயர் பகவதி அம்மா. நடராஜ குருவுக்கு கங்காதரன் என்னும் அண்ணனும் அனந்தலட்சுமி என்னும் அக்காவும் ஹரிஹரன் என்னும் தம்பியும் தாட்சாயணி என்னும் தங்கையும் உண்டு.

நடராஜகுரு சமாதி வற்கலா
கல்வி

நடராஜகுரு பெங்களூரில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் கண்டியிலும் திருவனந்தபுரத்திலும் உயர்நிலைக் கல்வி முடித்தார். சென்னை மாகாணக் கல்லூரியில் 1922ல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

நாராயண குருவின் மாணவராகச் சேர்ந்து அங்கே குருகுல முறைப்படி சிலகாலம் பயின்றபின் நாராயண குருவின் ஆதரவுடன் பிரான்ஸில் சார்போன் பல்கலையில் புகழ்பெற்ற தத்துவ அறிஞர் ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக 1928 முதல் 1933 வரை ஆய்வுசெய்து பயிற்றியலில் முனைவர் பட்டம் பெற்றார். Le Facteur Personnel Dans Le Processus Éducatif (Personal factor in Education) என்ற தலைப்பில் ஐந்தாண்டுகள் ஆராய்ச்சி செய்து தன் ஆய்வைச் சமர்ப்பித்தார். கல்வியியல் குறித்த அவரது ஆய்வு யுனெஸ்கோ அமைப்பினால் உலகக் கல்வி முன்வரைவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவருக்கு சிறப்பு பாராட்டுகளுடன் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. குருகுலக் கல்விமுறை பற்றியது அந்த ஆய்வு.

கல்விப்பணி

நடராஜ குரு ஆய்வுமாணவராக இருந்த காலகட்டத்தில் 1930 முதல் 1932 வரை சுவிட்சர்லாந்தில் ஜெனிவா International Fellowship School in Geneva, Switzerland என்னும் கல்லூரியில் நிலவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1933 ல் சார்போனில் கல்வி முடித்து திரும்பி வந்த நடராஜ குரு வர்க்கலாவில் தொடங்கப்பட்ட ஶ்ரீ நாராயண உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக ஓராண்டு பணியாற்றினார்

ஆன்மிகம்

நாராயணகுருவுடன்

முதுகலைப் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் 1922ல் நடராஜகுரு நாராயணகுருவைச் சந்தித்தார். அவரைத் தன் பணிக்கு அளிக்கும்படி நாராயண குருவே டாக்டர் பல்புவிடம் கோரினார். அதன்பின் நடராஜகுரு அவருடன் ஆகஸ்ட் 1922 முதல் ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் தங்கினார். நாராயணகுருவின் சீடராக இருந்து கீழைத் தத்துவத்தைக் கற்றார். நாராயணகுருவுடன் மருத்துவாழ்மலையில் ஒரு குகையில் சிறிதுகாலம் தங்கியிருந்தார். நாராயணகுருவின் தத்துவ நூல்கள் பலவும் நடராஜ குருவுக்கு கற்பிக்கும் பொருட்டு கூறப்பட்டு நடராஜ குருவால் எழுதியெடுக்கப்பட்டவை.

நாராயணகுருவுடன் இருந்த காலகட்டத்தில் அங்கிருந்த பிறர் நடராஜகுருவை ஏற்கவில்லை. நாராயணகுருவின் விருப்பப்படி 1923ல் நடராஜ குரு சென்னைக்குச் சென்றார். அங்கே அத்வைத சபை என்னும அமைப்பில் தலித் மக்களிடையே சிலமாதகாலம் பணியாற்றினார்.

1923 ல் நீலகிரியில் குன்னூரில் நாராயண குருவின் மாணவரான போதானந்தருடன் வந்து தங்கினார். 8 ஜூன் 1923ல் குன்னூரில் மாணவர்களுடன் உண்டு உறையும் ஒரு குருகுல அமைப்பை உருவாக்கி வேதாந்த குருகுலம் என பெயரிட்டார். அங்கே மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார். அவ்வமைப்பே பின்னாளில் நாராயணகுருகுலம் என உருமாறியது.

1926ல் நாராயண குரு நோயுறவே மீண்டும் வர்க்கலாவுக்குச் சென்று நாராயண குருவுடன் தங்கினார். 1926ல் நாராயண குரு இலங்கை செல்லும்போது நடராஜகுருவும் உடன் சென்றார். நாராயண குரு நடராஜ குருவுக்கு ஒரு காவிச்சால்வையை அளித்து அவருக்கு துறவளித்தார். அதன்பின் குரு நடராஜன் என அழைக்கப்பட்டார். ஆனால் 1951ல் தன் அறுபதாவது அகவைக்குப் பின்னரே நடராஜகுரு காவியாடை அணியலானார்.

நாராயண குருவின் ஆணைப்படி தத்துவக் கல்வி பயில பிரான்ஸ் சென்றார். நடராஜ குரு பிரான்ஸில் இருக்கையில் நாராயண குரு 1928ல் சமாதியானார்

நடராஜ குரு எழுத்துப்பணியில்

தத்துவத்தில் பட்டம்பெற்று திரும்பி வந்த நடராஜ குருவுக்கும் நாராயணகுருவின் எஸ்.என்.டி.பி அமைப்புக்கும் நடுவே முரண்பாடுகள் ஏற்பட்டன. எஸ்.என்.டி.பி ஒரு ஈழவ சாதி அமைப்பாக மாறுவதையும் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதையும் எதிர்த்து அவ்வமைப்பை விட்டு நடராஜ குரு வெளியேறினார். இந்தியா முழுவதும் பல இடங்களில் அலைந்து திரிந்தார்

நாராயண குருகுலம்

நடராஜகுரு 1924 ல் போதானந்தரின் உதவியுடன் குன்னூரில் தொடங்கிய குருகுலத்தை பின்னர் ஊட்டியில் நாராயண குருகுலம் என்ற பேரில் ஆன்மிகப் பயிற்சி நிறுவனமாக ஆக்கினார் ( பார்க்க நாராயண குருகுலம்)

ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டி

நடராஜகுரு கீழைச்சிந்தனைகளும் மேலைச்சிந்தனைகளும் ஒன்றுடனொன்று உரையாடுவதே எதிர்காலத்திற்குரிய ஆன்மிகத்தை உருவாக்கும் என்று நம்பினார். உலகதத்துவங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பொதுக்கோட்பாடு ஒன்று உருவாகவேண்டும் என விரும்பினார். ஆல்பிரட் நார்த் வைட்ஹெட் போன்றவர்களுடன் அது குறித்து உரையாடலில் இருந்தார். அதன்பொருட்டு அவர் உருவாக்கிய கல்வியமைப்பு 'ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டி' . ஒட்டுமொத்த தத்துவப்பார்வையை கற்பிக்கக்கூடிய ஒன்றாக இந்த கல்விநிறுவனம் செயல்படவேண்டும் என நடராஜகுரு ஆசைப்பட்டார். பின்னர் இந்த அமைப்பின் பெயர் ஈஸ்ட்வெஸ்ட் யூனிவெர்ஸ் என மாற்றப்பட்டது.

துறவு

நாராயண குரு 1926 ஜூலையில் இலங்கை சென்றபோது நடராஜ குருவும் உடன் சென்றார். கப்பலில் ஏறும்போது நடராஜ குருவுக்கு நாராயண குரு ஒரு காவித்துண்டை அளித்து தோளில் போட்டுக்கொள்ளும்படிச் சொன்னார். அது குருபூர்ணிமா நாள். அது அதிகாரபூர்வமாக துறவு அளித்ததாகவே கருதப்படுகிறது. ஆனால் நடராஜ குரு காவி அணியாமல் வெள்ளை ஆடையிலேயே நீடித்தார்.

குருநிலை

நடராஜ குரு 1936 முதல் தன் கையாலேயே கட்டிய ஊட்டி ஃபெர்ன் ஹில் குருகுலத்தில் தனியாக வாழ்ந்தார்.1952 ல் ஹென்றி பெர்க்ஸனின் மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் நடராஜ குருவின் மாணவரானார். 1953ல் அவருடன் நித்ய சைதன்ய யதி வந்து சேர்ந்துகொண்டார்.

நடராஜ குரு எழிமலை குருகுலம்
நடராஜ குரு, ஜான் ஸ்பியர்ஸ்

ஜெனிவாவில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த The Sufi Quarterly என்னும் இதழில் 1928 முதல் குரு நாராயண குரு பற்றி எழுதிய The Path of The Guru என்னும் நூல் படிப்படியாக புகழ்பெற்றது. (பின்னர் The Word of Guru என்ற பேரில் நூலாகியது) 1949 முதல் 1951 வரை நடராஜ குரு ஐரோப்பியப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவருடைய தத்துவ உரைகள் புகழ்பெற்றன.

1955 முதல் நடராஜ குருவின் சிந்தனைகளை வெளியிடும்பொருட்டு அவருடைய மாணவர் ஜான் ஸ்பியர்ஸ் Values என்னும் இதழை தொடங்கினார். நாராயண குருகுலம் தீவிரமாகச் செயல்படலாயிற்று.

16 ஏப்ரல் 1951 வர்க்கலா சசி தியேட்டர் அரங்கில் ஶ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா தலைவர் டாக்டர் பி.என்.நாராயணன் தலைமையில் , வற்கலா நாராயண தர்ம சங்கத்தில் இருந்த நாராயண குருவின் வழிவந்த துறவிகள் கூடி நடராஜ குருவை நாராயண குருவின் முதற்சீடராகவும், ஆன்மிக வழிகாட்டியாகவும் அறிவித்தனர். அவரை குரு என ஏற்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாராயண குரு உருவாக்கிய அனைத்து அமைப்புகளுக்கும் அவர் தலைமையேற்கவேண்டும் என்று கோரினர். ஆனால் நடராஜ குரு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அமைப்புகளின் நிர்வாகப்பொறுப்புகளை ஆற்ற முடியாது என மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் குரு என அழைக்கப்படலானார்

நடராஜகுரு தொடர்ந்து வெள்ளை ஆடையிலேயே இருந்தார். ஆனால் 1 ஜனவரி 1956 ல் தன் அறுபதாம் அகவையில் காவி அணியத்தொடங்கினார். தன்னை குரு என அழைப்பதை அனுமதித்தார்.

நாராயண குருகுலம் அமைப்பு வர்க்கலாவை தலைமையிடமாகக் கொண்டு 24 பிப்ரவரி 1959-ம் ஆண்டு முறையாகத் தொடங்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது. மங்கலானந்தர், ஜான் ஸ்பியர்ஸ், நித்ய சைதன்ய யதி, முனி நாராயண பிரசாத் ஆகியோர் ஆசிரியர்நிரை என அறிவிக்கப்பட்டனர்.

1956-ல் நடராஜ குரு இரண்டாவது உலகப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு ஏராளமான மாணவர்கள் அமைந்தனர். நாராயண குருகுலத்திற்கு பிரான்ஸிலும் பிரிட்டனிலும் கிளைகள் அமைந்தன. 1970. நித்ய சைதன்ய யதி நடராஜகுருவால் அடுத்த குருவாக தேர்வுசெய்யப்பட்டார். நடராஜகுருவின் சமாதிக்குப்பின் நித்ய சைதன்ய யதி குருகுலத்தின் தலைவராக ஆனார்.

ஊட்டி ஃபெர்ன் ஹில் குருகுலம்

எழுத்துப்பணிகள்

நடராஜ குருவின் எழுத்துப்பணி 1928 முதல் தொடங்கியது. ஜெனிவாவில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த The Sufi Quarterly என்னும் இதழில் நடராஜ குரு நாராயண குரு பற்றி எழுதிய The Path of The Guru என்னும் நூல் அவருடைய முதல் இலக்கிய ஆக்கம். (பின்னர் The Word of Guru என்ற பேரில் நூலாகியது)

1955 செப்டெம்பரில் ஜான் ஸ்பியர்ஸ் நடராஜ குருவை எழுத வைப்பதற்காகவே Values என்னும் மாத இதழை தொடங்கினார். நடராஜகுருவின் பல நூல்கள் அவ்விதழில் தொடராக வெளிவந்தன.

நாராயணகுரு பற்றி

நடராஜகுருவின் நூல்களில் முதலில் புகழ்பெற்றது The Word of Guru . நாராயணகுருவை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் புகழ்ப்பெறச் செய்த நூல் அது. அதன்பின் நாராயணகுருவின் நூல்களுக்கு உரைகளை எழுதினார். நாராயணகுருவின் தத்துவங்கள் பற்றி The Philosophy of a Guru என்னும் நூலையும் எழுதினார்.

வேதாந்தம் பற்றி

வேதாந்தக் கொள்கைகள் ஐரோப்பாவில் விவாதிக்கப்பட்ட காலகட்டத்தில் நடராஜ குரு அவற்றை ஐரோப்பியத் தத்துவக் கொள்கைகளுடன் ஒப்பிட்டு விளக்கி விரிவான ஆய்வுநூல்களை எழுதினார். Absolutism என அவர் வேதாந்தத்தை விளக்கினார். அவருடைய An Integrated Science of the Absolute, Wisdom: The Absolute is Adorable ஆகிய நூல்கள் அவ்வகையில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன

கல்வியியல்

நடராஜகுருவின் தத்துவ முனைவர்பட்டம் கல்வியியலுக்கு அளிக்கப்பட்டது. தன் முனைவர் பட்ட ஆய்வேட்டை குரு பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்தில் World Education Manifesto என்ற பேரில் வெளியிட்டார். கல்வியியல் பற்றி அவர் எழுதிய Dialectical Methodology என்னும் நூலும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது

உரைகள்

நடராஜ குருவின் உரைகளில் பகவத்கீதைக்கு அவர் எழுதிய உரை இந்தியாவில் இருந்து வந்த கீதையுரைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலைத்தத்துவக் கொள்கைகளுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டது அந்த உரை. கீதையின் தத்துவப் பார்வை யோகாத்ம மார்க்கம் என்னும் முரணியக்க (Dialectics) அடிப்படையில் அமைந்தது என விளக்குகிறார் நடராஜ குரு. பிற்காலத்து உரைகளில் எல்லாம் நடராஜ குருவின் உரைகளின் செல்வாக்கு உண்டு. வாழ்வின் இறுதிக்காலத்தில் ஆதிசங்கரரின் சௌந்தரிய லகரிக்கு உரை எழுதினார். அது அவர் மறைவுக்குப்பின் வெளிவந்தது

நாராயணகுருவின் தர்சனமாலாவுக்கு நான்கு தொகுதிகளாக நடராஜ குரு எழுதிய உரையே An Integrated Science of the Absolute என்னும் நூல். கலைக்களஞ்சியத்தன்மை கொண்டது என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் மிகப்பெரிய நூல் இது. இந்திய வேதாந்த மரபின் முழுவுருவும் இந்நூலில் உள்ளது.

தன்வரலாறு

நடராஜகுரு இறுதிக்காலத்தில் Autobiography of an Absolutist என்னும் புகழ்பெற்ற தன்வரலாற்று நூலை எழுதினார். அவர் மறைவுக்கு முன் வெளிவந்த இறுதி நூல் அதுவே.

தத்துவப்பார்வை

பிரெட் ஹாஸ் ( சக்திதாரா), குரு நித்யா, நடராஜ குரு, ஜான் ஸ்பியர்ஸ், மங்களாந்தா

மதம் கடந்த தத்துவம் (Pure Knowledge)

நடராஜகுருவின் காலகட்டத்தில் இந்திய ஞானமரபை தத்துவ தளத்தில் ஒற்றைப்படையாகவும் மதம் சார்ந்தும் விளக்கும் முயற்சிகள் வலுப்பெற்றன. இந்திய தேசிய இயக்கத்தின் விளைவாக இந்திய மெய்ஞானமரபு பிற மெய்ஞான மரபுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது, மேம்பட்டது என்று சொல்லும்போக்கு நிலைபெற்றது. இந்த மனநிலை சிந்தனையில் பெரும் தேக்கநிலையை உருவாக்கும் என நடராஜ குரு எண்ணினார்.

இந்து மெய்ஞான மரபை ஆன்மீகமான உண்மைகள் அடங்கிய பாரம்பரியச் செல்வமாக காணும் நோக்கையும் மத மீட்பு நோக்கை நடராஜ குரு நிராகரித்தார். பகவத்கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம் ஆகியவை மதநூல்கள் அல்ல தத்துவ நூல்களே என்றார். தத்துவநூல்கள் வழிபடவேண்டியவையோ கடைப்பிடிக்கப்படவேண்டியவையோ அல்ல என்றும், அவை ஏற்றும் மறுத்தும் விளக்கியும் விவாதிக்கப்படவேண்டியவை என்றும், அவற்றை வெவ்வேறு புதிய சிந்தனைகளுடன் இணைத்து முன்னெடுப்பதே தேவையானது என்றும் வலியுறுத்தினார்.

ஒருமைத் தரிசனம் (Integral Vision)

மானுடமெய்மை ஒன்றே என்றும், அது வெவ்வேறு தத்துவக் கொள்கைகள் வழியாகவும் தரிசனங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது நடராஜகுரு என்றும் கருதினார். கிழக்கிலும் மேற்கிலுமுள்ள மெய்ஞான மரபுகளை ஒருங்கிணைத்து ஓர் ஒருமைநோக்கை அடையவேண்டும் என்றும், அதுவே சிந்தனையின் முன்னகர்வு என்றும் வலியுறுத்தினார். தரிசனங்களை ஒருங்கிணைப்பது (தர்சன சமன்வயம்) வழியாக நாராயண குரு காட்டியது அந்த ஒருமைநோக்கையே என்று விளக்கினார்.

தர்சனமாலா நூலுக்கு எழுதிய முன்னுரையில் நாராயண குருவின் தரிசனத்தை உலகளாவிய பொதுமைநோக்கு கொண்ட சிந்தனைகளுடன் இணைத்துப் பார்ப்பதே தன் அணுகுமுறை என்று கூறுகிறார். நாராயண குருவின் தத்வ சமன்வயம் என்பதற்கு சமானமாக நடராஜ குரு பயன்படுத்தும் சொல் Unitive Thinking என்பதாகும். ஒருமையினூடாக அடையப்படும் மெய்மையறிதலை ஒருமைத்தரிசனம் ( Integral Vision) என்னும் சொல்லால் நடராஜ குரு குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் உலக சிந்தனையில் பகுப்பாய்வு நோக்கு (Analytic Approach) தொகுப்பு நோக்கு (Synthetic Approach) ஆகிய இரண்டு அணுகுமுறைகளும் இரு துருவங்களாக ஆகிவிட்டன என மதிப்பிடும் நடராஜகுரு, அவற்றின் நடுவே ஓர் ஒருங்கிணைவே வரும் காலகட்டத்திற்கான சிந்தனைச் சவாலாக இருக்கமுடியும் என கருதுகிறார். அறிவியல், தத்துவம், இலக்கியம் ஆகிய எல்லா தளங்களிலும் திரண்டுவரும் உண்மைகளின் நடுவே ஓர் ஒத்திசைவையும் மையத்தையும் கண்டடைதலையே நடராஜ குரு சமகால தத்துவத்தின் முதன்மைப் பணி என முன்வைத்தார்.

இவ்வண்ணம் மானுட சிந்தனைகளுக்குள் ஓர் ஒத்திசைவைக் கண்டடைவதில் இரண்டு அணுகுமுறைகள் உலக தத்துவத்தில் உள்ளன. அந்த ஒத்திசைவு முன்னரே உள்ளது, அதுவே காரணம், காரியங்கள் எனப்படும் புதிய சிந்தனைகள் எல்லாம் அதிலிருந்து உருவாயின என்பது காரணமுதன்மைவாத (priori) அணுகுமுறை. சிந்தனையின் போக்குகள் வளர்ச்சியடைந்து செல்லும் திசையை வைத்து அவை எதிர்காலத்தில் உருவாக்கிக்கொள்ளும் ஒத்திசைவை கணிப்பது காரியமுதன்மைவாதம் (posteriori) என்னும் அணுகுமுறை. நடராஜகுரு முன்வைத்த ஒருமைத்தரிசனம் என்பது காரண முதன்மைவாதம், காரியமுதன்மை வாதம் என்னும் இரண்டு அணுகுமுறைகளுக்கும் நடுவே ஓர் ஒத்திசைவை கண்டடைவதாகும் (1)

முரணியக்கம் (Dialectics)

நடராஜகுரு முன்வைத்த ஒருமைத்தரிசனம் என்பது அனைத்தையும் ஒன்றாக்கும் செயல்பாடு அல்ல. ஒன்றோடொன்று முரண்பட்டு அதன் வழியாக ஒரு பொதுப்புள்ளியை கண்டடையும் முரணியக்கம் (Dialectics) என்பதுதான் தத்துவத்தின் இயக்கமுறை. இந்திய சிந்தனையில் அந்த முரணியக்கம் யோகாத்ம மார்க்கம் எனப்பட்டது. வெவ்வேறு தரிசனங்கள் நடுவே உள்ள உரையாடல்தன்மை (Dialogic Nature) தத்துவ சிந்தனையின் அடிப்படை என நடராஜ குரு வலியுறுத்தினார். முரணியக்க முறைப்படி தத்துவப்பார்வையை முன்வைக்கும் பகவத்கீதையை தத்துவத்தின் அறிவியல் என்று அவர் வரையறை செய்தார்.

முரணியக்க அடிப்படையிலேயே பிரம்மத்தை வரையறை செய்ய முடியும் என்று நடராஜகுரு சொன்னார். "தத்துவஞானி பொருட்களின் இருப்புக்கும் அவற்றின் தோற்றத்திற்கும் நடுவே ஒரு முரண்பாடு இருப்பதை சரியாக அடையாளம் காண்கிறார். அந்த முரண்பாடு இல்லாமலாகுமிடமே முழுமுதன்மை (அல்லது பிரம்மம்). அனைத்து பொருட்களும், பொருட்களைப் பற்றிய எல்லா கருத்துக்களும் முரண்பாடும் மோதலும் இன்றி ஒன்றாகும் ஓர் இடமே முழுமுதன்மை எனப்படும். அதாவது முழுமுதன்மை என்பது பொருளும் கருத்தும் ஒன்றெனத் திகழும் நிலை."

முதல்முழுமைவாதம் (Absolutism)

நடராஜகுரு சிற்பம்
வர்க்கலா குருகுலம்
நடராஜ குரு

நடராஜ குரு நாராயணகுருவால் முன்வைக்கப்பட்ட செயலூக்கம் கொண்ட புதிய அத்வைத நோக்கை மேலைநாட்டு கருத்து முதல்வாத நோக்குகளுடன் இணைத்து விரிவாக விளக்கினார். ஹெகல், காண்ட், குரோச்சே, ஹென்றி பெர்க்சன் ஆகிய மேல்நாட்டு சிந்தனையாளர்களின் கருத்துகளுடன் நாராயண குருவின் சிந்தனைகளை இணைத்து உரையாடியதன் வழியாக தனக்குரிய முதல்முழுமைவாத தத்துவ நோக்கு ஒன்றை உருவாக்கினார். இதன் மூலம் வலுவான ஒரு கீழைமேலைச் சிந்தனைச் சந்திப்பை உருவாக்கினார். ”அனேகமாக இந்திய சிந்தனையில் அரவிந்தருக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட முக்கியமான சிந்தனைப் பாய்ச்சல் இதுவே” என ஜெயமோகன் குறிப்பிட்டார்.

நடராஜகுரு முன்வைத்த முதல்முழுமைவாதம் ஒரு மும்முனை இணைவு. இறையியல், பிரபஞ்சவியல், உளவியல் உண்மைகள் முரண்பாடின்றி இணையும் ஒரு புள்ளியே அந்த மெய்மை என வகுக்கிறார். முதல்முழுமை என்பது இறைமை, பிரபஞ்சம் அல்லது இயற்கை மற்றும் மனிதன் என்னும் மூன்று நிலைகளிலும் உள்ள ஒன்றையொன்று மறுக்கும் இயல்பை கடந்த ஒரு நிலை. ஒன்று- பல, தன்னிலை - பிற, பொதுமை - தனித்தன்மை ஆகிய இருமைகளைக் கடந்தது அது என்கிறார். (2)

முதல்முழுமை என்பது உண்மைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு என்கிறார் நடராஜ குரு. அறிபவன், அறிபடுபொருள், அறிவு, அறிதல் ஆகிய நான்கு நிலைகளும் ஒன்றே என்றான நிலை அது. தூய அறிவே முழுமுதன்மை. ஆகவே தன்னிலை என்பதே முழுமுதன்மையும் ஆகும் என நடராஜ குரு வகுக்கிறார். (3)

ஓருலகம் (One World)

முதல் உலகப்போருக்குப் பின் உலகமெங்கும் தேசியங்கள், மதங்கள், இனங்கள், பண்பாடுகள் ஆகியவற்றை கடந்த மானுட ஒருமைக்கான சிந்தனைகள் தலையெடுத்தன. நடராஜ குரு அச்சிந்தனைகளை மிகத்தீவிரமாக முன்வைத்தவர்களில் ஒருவர். நாராயண குரு முன்வைத்த 'ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்' என்னும் கருத்தின் விரிவாக்கமாகவே இதை அவர் முன்வைத்தார். கீழைநாட்டுப் பண்பாடு மேலைநாட்டுப் பண்பாடு என்னும் இருமைவாதம் முன்வைக்கப்பட்ட அக்காலகட்டத்தில் அதை மறுத்து இரண்டு மரபுகளின் சிந்தனைகளையும் பொருள்சார்ந்து இணைக்கமுடியும் என வாதிட்டார்.

முதல்முழுமைவாதம் அந்த இணைப்பை நிகழ்த்தும் என்று கூறும் நடராஜ குரு அதற்கான அறிவுசார்ந்த வழிகளாக கீழ்க்கண்ட மூன்றையும் முன்வைத்தார்.

தரிசன ஒருங்கிணைப்பு (Coordinates of Vision)

நடராஜ குரு செங்குத்துக்கோடு, கிடைக்கோடு என இரு போக்குகளாகவே அனைத்தும் உள்ளன என்கிறார். ஒவ்வொன்றிலும் ஓர் உச்சம் உள்ளது. அவ்வுச்சம் நோக்கி அது வளரும்போது ஒரு கோடாக செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ நீள்கிறது. அவ்வாறுதான் முரண்பாடுகள் உருவாகின்றன. உதாரணமாக சந்தை என்பது கிடைக்கோடு என்றால் உற்பத்தி சக்தி என்பது செங்குத்துக்கோடு. இரண்டும் வளர்ந்து வளர்ந்து விலகிச் செல்லலாம். ஆனால் அந்த வளர்ச்சியை இரண்டுமே குறைத்தபடியே வந்தால் அவை பின்னோக்கி வந்து ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளி உண்டு. மனிதவாழ்க்கைக்கு உகந்த இடம் அதுவே. இப்படி எல்லா விஷயங்களிலும் செயல்படும் எதிரெதிர் விசைகளை இணைக்க முடியும் என நடராஜ குரு விளக்கினார். அவர் மிக விரிவான உதாரணங்களுடன் இதை வரலாற்றுக்கும், அரசியலுக்கும், பொருளியலுக்கும் பொருத்திக் காட்டுகிறார். (4)

முரணியக்க ஆய்வுமுறை (Dialectics)

ஹெகல் வரலாறு முரண்படும் வரலாற்றுச் சக்திகளின் மோதல் மற்றும் சமசரம் வழியாக மேலும் முன்னகர்கிறது என்ற முரணியக்கப் பார்வையை முன்வைத்தார். அதை ஏற்று விரிவாக்கம் செய்து நடராஜ குரு தன் பார்வையை முன்வைக்கிறார். முரண்படும் எந்தப் புள்ளிகளும் இணையும் ஒரு இடமுண்டு, அந்த இடமே மெய்யான முன்னகரும் விசை. 'ஒரு தத்துவ ஞானி தோற்றத்திற்கும் உண்மைக்கும் இடையேயான முரண்பாடு சரியாக எங்குள்ளது என்று கண்டடைந்துவிட்டாரென்றால் அக்கணமே அந்த முரண்பாடு முதல்முழுமையில் மறைந்துவிடும்' என்று நடராஜ குரு சொல்கிறார். அ-த்வைதம் என அவர் முன்வைக்கும் இரண்டின்மைவாதம் அதுவே. எந்த இருமைநிலையையும் முதல்முழுமையை தொடுவது வழியாக சமநிலைப்படுத்திவிடமுடியும் என்கிறார்.

அமைப்புவாதம் (Structuralism)

நடராஜகுரு முன்வைக்கும் அமைப்புவாதம் பிற்காலத்தில் மொழியியலாளர் முன்வைத்த மொழிசார் அமைப்புவாதம் அல்ல. மானுட உள்ளம் தான் அறியும் ஒவ்வொன்றிலும் ஓர் அமைப்பை கண்டடைந்து, அதன் வழியாகவே செயல்பட முடிகிறது. ஒவ்வொரு பொருளிலும் ஓர் அமைப்பு உள்ளுறையாக உள்ளது. ஒரு செடி ஒவ்வொரு நாளும் வளர்ந்து மாறிக்கொண்டிருந்தாலும் அதற்குள் செடி என்னும் அமைப்பு மாறாமல் உள்ளது. அதையே நாம் உண்மையில் செடி என்கிறோம். வெளியே பொருட்களில் அவ்வாறு அமைப்பு ஒன்று உள்ளடங்கியுள்ளது. நம் அகம் அமைப்பை அறிகிறது. மனிதன் என்பவன் ஓர் அமைப்புவாதி என நடராஜ குரு சொல்கிறார். வெவ்வேறு சிந்தனைகளை அறிகையில் அவற்றை ஒன்றுடனொன்று இணைத்து ஒற்றைப்பேரமைப்பாக ஆக்கிக்கொண்டே இருப்பது மானுட இயல்பு. அவ்வாறாக அறிவியல், தத்துவம் உட்பட எல்லா துறைகளிலுமுள்ள மானுட அறிதல் திரண்டு திரண்டுஒற்றையமைப்பாக ஆகிக்கொண்டே இருக்கிறது. அவ்வாறு ஆனால்தான் மனிதனால் அதை பயன்படுத்த முடியும். அந்த அமைப்புநோக்கு முதல்முழுமைவாதம் நோக்கியே செல்கிறது

மூலமொழியியல்வாதம் (Proto Linguism)

ஒவ்வொரு அறிதலும் அதற்குரிய சொல்லைக் கொண்டுள்ளது. அச்சொல் உருவான வரலாற்றையும். அதன் வேர்ச்சொல்லையும் எடுத்துப் பார்த்தால் மானுட உள்ளம் அந்த அறிதலை முதன்முதலில் எப்படி அடைந்தது என்பதை உணரமுடியும். ஒவ்வொரு அறிதலும் எப்படி மானுடமொழியின் வழியாக பரிணாமம் அடைந்துள்ளது என்று பார்ப்பதென்பது பிற்காலத்தில் நிலப்பகுதி, மொழி, பண்பாடு சார்ந்து உருவான வேறுபாடுகளைக் கடந்து மூலஞானத்தை சென்றடையவும், அதன் பழியாக மானுடர் அனைவருக்கும் பொதுவான ஞானத்தை அறியவும் உதவும் வழியாகும்.

மறைஞானம்

நடராஜ குரு பிற அத்வைத அறிஞர்களைப் போல தூய தர்க்கஅறிவு சார்ந்த அணுகுமுறையை மட்டும் முன்வைக்கவில்லை. கூடவே மறைஞான (Esoteric) அணுகுமுறைகளையும் கருத்தில்கொண்டார். ஆகவே தத்துவத்துடன் கலைகள், இலக்கியம், குறியீட்டுச்செயல்பாடுகள் ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டு மெய்மையை அணுகவேண்டும் என்றார். இந்தப் பார்வையை சௌந்தரிய லகரிக்கான விளக்கவுரையில் முன்வைத்தார். அறிவார்ந்த அணுகுமுறை மறைஞான அணுகுமுறை இரண்டுக்கும் நடுவே ஓர் முரணியக்கம் நிகழவேண்டும் என்றார்.

நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி

மாணவர்கள்

நடராஜகுருவின் மாணவர்கள் வெவ்வேறு துறைகளில் பரவியிருந்தார்கள். தத்துவம், இயற்கையியல், மருத்துவம் என பல தளங்களைச் சேர்ந்தவர்கள் அவரை தங்கள் வழிகாட்டியாகக் கொண்டிருந்தார்கள்.

மறைவு

நடராஜ குரு 1973-ல் சமாதியானார். அவரது சமாதி வர்க்கலாவில் உள்ளது. அங்கே அவர் நினைவாக ஒரு பிரார்த்தனைக்கூடமும் தத்துவ நூலகமும் உள்ளன.

நடராஜ குரு நினைவுநூல்கள்

மங்கலானந்தர், ஜான் ஸ்பியர்ஸ், நடராஜகுரு
நடராஜ குரு
ஆங்கிலம்
  • Nataraja Guru and I - Nitya Chaidanya Yati
  • The Philosophy Of Nataraja Guru- Prof P.Unnikrishnan Calicut University PhD Thesis
மலையாளம்
  • குருவும் வசனமும் - சுவாமி சிதம்பர தீர்த்தர்
தமிழில்
  • குருவும் சீடனும்: நித்ய சைதன்ய யதி


நடராஜ குருவின் அனைத்து முக்கிய படைப்புகளும் அவரது சீடர் பேட்ரிக் மிசன் பராமரிக்கும் இணையதளம் மூலம் ஆன்லைனில் கிடைக்கின்றன. http://www.advaita-vedanta.co.uk/

வரலாற்று இடம்

இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய தத்துவ - மெய்யியல் சிந்தனையாளர்களில் நடராஜ குரு முதன்மையானவர். இருபத்தோராம் நூற்றாண்டு எதிர்நோக்கும் அறிவுச்சிக்கல்களை முன்னரே எதிர்கொண்டு விவாதித்தவர். நடராஜ குருவின் காலகட்டத்திற்குப் பின் இந்தியச் சிந்தனைச் சூழலில் தத்துவம் மீதான உதாசீனமும், அரசியல் கோட்பாடுகள் மேல் அதீத ஆர்வமும் உருவானமையால் அவருடைய சிந்தனைகள் விரிவான விவாதத்திற்குள்ளாகவில்லை. இந்திய கல்விச்சூழலில் மேலைநாட்டு துறைசார் அறிஞர்களே ஆராயப்பட்டனர், இந்திய சிந்தனையாளர்கள் ஒட்டுமொத்தமாக மதம் சார்ந்த சிந்தனையாளர்கள் என நிராகரிக்கப்பட்டனர். இது பெரும் தேக்கநிலையை உருவாக்கி மெய்யான தத்துவசிந்தனை என்பதே உருவாகாத நிலையை உருவாக்கியது

அத்துடன் நடராஜ காலகட்டத்திற்குப் பின்னால் மானுடசிந்தனையின் ஒவ்வொரு துறையும் தனித்தனியாகப் பிரிந்து ஒன்றையொன்று சாராமல் வளர்ச்சியடையும் போக்கு வலுப்பெற்றதனால் நடராஜ குருவைப்போலவே ஒருங்கிணைந்த மானுட சிந்தனையின் தேவையை முன்வைத்த ஏ.என்.வைட்ஹெட், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் போன்ற சிந்தனையாளர்களும் மறக்கப்பட்டனர். ஆகவே நடராஜ குரு மிகச்சிறிய வட்டத்திற்குள் பேசப்படுபவராகவே நீடிக்கிறார்.

நடராஜ குரு ஆன்மிக சிந்தனையாளர், தத்துவ சிந்தனையாளர் என இரு நிலைகளிலும் முக்கியமானவர். இந்திய ஆன்மிக சிந்தனையை மதம், சம்பிரதாயம், சடங்குகள், அமைப்புகள் என்னும் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே கொண்டுசென்று உலகளாவிய ஆன்மிக சிந்தனை மரபுகளுடன் உரையாடச்செய்தவர்களில் அவரே முதன்மையானவர். பின்னர் வந்த ஆன்மிக சிந்தனையாளர்கள் அனைவரிலும் நடராஜகுருவின் செல்வாக்கு உண்டு. தத்துவ சிந்தனையாளராக மானுடம் தழுவிய ஒருமைநோக்கு ஒன்று சிந்தனையில் உருவாவதற்கான வழிகளை முன்வைத்தவர், அறிவியல் தத்துவம் மற்றும் கலைகளை இணைத்துக்கொண்டு முழுமைநோக்கு ஒன்று உருவாகும் முறைமையை உருவாக்கியவர். அவ்வகையில் ஒருங்கிணைந்த மானுட அறிவு என்னும் சிந்தனையுடன் செயல்படும் தத்துவ அறிஞர்கள் நடுவே நடராஜகுருவுக்கு முதன்மையான இடம் உண்டு.

நூல்கள் பட்டியல்

  • The Word of the Guru: Life and Teachings of Narayana Guru
  • Vedanta Revalued and Restated
  • Autobiography of an Absolutist
  • The Bhagavad Gita, Translation and Commentary
  • An Integrated Science of the Absolute (Volumes I, II)
  • Wisdom: The Absolute is Adorable
  • Saundarya Lahari of Sankara
  • The Search for a Norm in Western Thought
  • The Philosophy of a Guru
  • Memorandum on World Government
  • World Education Manifesto
  • Dialectical Methodology
  • Anthology of the Poems of Narayana Guru

உசாத்துணை

குறிப்புகள்

  1. நடராஜ குரு : Wisdom: The Absolute is Adorable 192
  2. நடராஜ குரு : Wisdom: The Absolute is Adorable P. 93
  3. நடராஜ குரு : The Word of the Guru: Life and Teachings of Narayana Guru P 513
  4. நடராஜ குரு : Search For A Norm P 46
  5. நடராஜ குரு : Search For A Norm P 94

இணைப்புகள்


✅Finalised Page