under review

ஞாநி

From Tamil Wiki
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர் ஞாநி
ஞாநி பத்மா திருமணம்
ஞாநி மாணவராக
கேணி கூட்டம்
நடிகர்
ஞாநி குழந்தையாக
ஞாநி

ஞாநி (ஞாநி சங்கரன்) (ஜனவரி 4, 1954 - ஜனவரி 15, 2018) எழுத்தாளர், நாடக இயக்குநர், திரைஇயக்குநர், இதழாளர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி என்று பன்முகங்கள் கொண்டவர். சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும், மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். சிறுவர்களுக்கான இதழியலில் பல புதுமைகளைச் செய்தவர்.

பிறப்பு , கல்வி

ஞாநி சென்னையில் ஆங்கில பத்திரிக்கையாளராக பணியாற்றிய வேம்புசாமி (1907-1997)மற்றும் பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு ஜனவரி 4, 1954 அன்று செங்கற்பட்டில் பிறந்தார்.அவருக்கு மூன்று சகோதரர்கள்,இரண்டு சகோதரிகள்.

ஞாநியின் இயற்பெயர் வே. சங்கரன் .செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்தார். பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில இளநிலை பயின்றார். பின்னர் அதிலிருந்து விலகி 1974-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

இளைஞர் ஞாநி

ஞாநி செப்டம்பர் 7, 1983-ல் பத்திரிக்கையாளர் பத்மாவை பரீக்ஷாவின்'தேடுங்கள்’நாடகம் ம்யூசியம் தியேட்டரில் தொடங்குவதற்கு முன் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டார். பத்தாண்டுகளுக்குப் பின் கணவன் மனைவி உறவில் விலகி நண்பர்களாக நீடித்தனர். இவருக்கு மனுஷ் நந்தன் என்ற மகன் உள்ளார்.திரைஒளிப்பதிவாளாராக பணியாற்றுகிறார்.

ஞாநி இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழில் அலுவலக உதவியாளராக 1973-ல் பணிக்கு சேர்ந்தார். 1974-ல் இதழியல் படிப்புக்காக வேலையை விட்டார். சென்னைப் பல்கலையில் இதழியல் படிப்பை முடித்தபின் அதே இதழில் 1975 முதல் செய்தியாளராகப் பணியாற்றினார். தொழிற்சங்கப் பணிகளுக்காக 1980-ல் வேலைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் வேறு இதழ்களில் புனைபெயரில் எழுதியதாகவே குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 1884-ல் வென்றார். 1985 வேலையை ராஜினாமா செய்தார்.

ஞாநி

அதன்பின் வெவ்வேறு இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார், சுதந்திரச் செய்தியாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பங்களிப்பாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

மனைவியுடன்

ஞாநி முதன்மையாக அரசியல் விமர்சகர், இதழாளர். இதழியல் சார்ந்த அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். குறைவாக கதைகளையும் எழுதினார். தமிழ்த்தேசிய அரசியலை விவாதிக்கும்பொருட்டு 1998-ல் ஆனந்த விகடனில் எழுதிய தவிப்பு எனும் தொடர்கதை ஞாநி எழுதிய ஒரே நாவல்.

பதிப்பகம்

ஞாநி தான் எழுதிய நூல்களை ஞானபாநு பதிப்பகம் வழியாக தானே வெளியிட்டார்.

அமைப்புப்பணிகள்

ஞாநி 1978 லும் 1985லும் சென்னை இதழாளர் சங்க செயலராகப் பங்களிப்பாற்றினார்.

ஞாநி இலக்கிய விவாதங்களுக்காக கேணி என்ற அமைப்பை நண்பர் பாஸ்கர் சக்தி யுடன் இணைந்து 2009 ஜூன் மாதம் நிறுவி தனது வீட்டில் கிணற்றடியிலேயே பல கூட்டங்களை நடத்தினார்.

கோலம் என்ற திரைப்பட அமைப்பை நிறுவி அசோகமித்திரன் சிறுகதைப் போட்டியை 2018-ல் நடத்தினார்.

சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் சுமார் பத்தாண்டுகளாக ஈடுபட்டார்.

இதழியல்

ஞாநி கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ’வம்பன்' என்ற கையெழுத்து இதழை நடத்தினார் மற்றும் பூச்செண்டு என்ற மாணவர் இதழில் கட்டுரைக்கு பரிசு பெற்ற ஊக்கம் வாயிலாக அவர் முழுநேர எழுத்தாளனாக உருவாகினார். இந்தியன் எக்ஸ்பிரஸில் 1975 முதல் 1980 வரை பணியாற்றினார். பின்னர் நீதிமன்ற ஆணைப்படி 1984-ல் மீண்டும் பணிக்குச் சேர்ந்தாலும் உடனே ராஜினாமா செய்தார்

1980-ல் தினகரன் நடத்திய 'இந்தியன் சன் ’, 'அஸ்வினி’, ஆற்காடு வீராசாமி நடத்திய 'எதிரொலி தினசரி ’ போன்ற இதழ்களில் பணியாற்றினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993-ல் மாற்றிக் காட்டினார். 1996-ல் தினமணி ஏட்டின் மேகஸின் எடிட்டர் பதவியில் பணியாற்றிய போது பொங்கல் மலர், தீபாவளி மலர், மகளிர் மலர், மாணவர் மலர், மருத்துவ மலர் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.

ஞாநி குடும்பம்

சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999-ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார். 2016-ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வந்தார்.

பங்கேற்ற இதழ்கள்
  • இண்டியன் எக்ஸ்பிரஸ்
  • முரசொலி (புதையல்)
  • அஸ்வினி
  • டிவி உலகம்
  • இண்டியன் சன்
  • எதிரொலி
  • தினமணி
  • தினமலர் பட்டம்
  • அலைகள்
  • ஜூனியர் போஸ்ட்
  • சுட்டிவிகடன்
  • விண்நாயகன்
நடத்திய இதழ்கள்
  • தீம்தரிகிட
  • ஏழுநாட்கள்
  • கட்டியங்காரன்
  • அரங்கம்
பத்தி
  • தினமணி இதழில் மனிதன் கேள்விபதில்கள், மறுபடியும் பத்தி ஆகியவற்றை ஞாநி எழுதினார்.
  • 2003-ல் தொடங்கி இரண்டாண்டு காலம் 'இந்தியா டுடே’ பத்திரிக்கையில் பத்தி எழுத்தாளராக அறியப்பட்டார் .
  • 2005-ல்ஆனந்த விகடனில் அப்போதைய அரசியல் நிகழ்வுகளை விமர்சித்து'ஓ பக்கங்கள்’ என்ற புகழ்பெற்ற தொடரை வாரம்தோறும் எழுதினார். இளைஞர்களுக்கான ஆலோசனைகளுக்காக அறிந்தும் அறியாமலும் என்னும் தொடரையும் அதில் எழுதினார். பின்னர் ஆனந்தவிகடன் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் விலகிக்கொண்டார்.
தீம்தரிகிட

ஞாநி தீம்தரிகிட என்னும் செய்தி விமர்சன இதழை தொடர்ச்சியாக நடத்த முயன்றார். ஞாநியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அந்த இதழ் ( தீம்தரிகிட)

ஞாநி பரீக்ஷா நாடகக்குழுவில்

நாடகம்

பயிற்சி

ஞாநி 1976ஆம் ஆண்டிலிருந்து 1977ஆம் ஆண்டு வரை ந. முத்துசாமி நடத்திவந்த கூத்துப் பட்டறை அமைப்பின் உறுப்பினராக இருந்தார். 1977இல் காந்தி கிராமத்தில் பேராசிரியர் செ. ராமானுஜம் மலையாள நாடக ஆசிரியர் ஜி. சங்கரபிள்ளை ஆகியோர் நடத்திய நாடகப் பயிற்சி முகாமில் பங்கேற்றார்.

ஞாநி 1978-ல் வீதி தெரு நாடக இயக்கத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார். வீதியின் முதல் நாடகமான நவீன குசேலன் கதையின் ஆசிரியர் ஞாநி. 1980-ல் வீதி அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட வங்க நாடக இயக்குநர் பாதல் சர்க்காரின் பயிற்சி முகாமில் பங்கேற்றார்

பரீக்ஷா

ஞாநி 1978-ல் நண்பர்களுடன் இணைந்து பரீக்ஷாநாடகக் குழுவைத் தொடங்கினார். நாடகத்தின் தேக்கநிலை பற்றி குமுதம் இதழ் நடத்திய விவாதத்தில் 16.ஆகஸ்ட்.1979-ல் ஞாநி எழுதிய ‘ருத்ராட்சப்பூனைகளே’ என்னும் கண்டனக்கட்டுரை அவரைப் பற்றிய கவனத்தை உருவாக்கியது.

ஞாநி விஜய் டென்டுல்கர், பாதல் சர்க்கார், பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர் ஆகியோரின் நாடகங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து மேடையேற்றினார். இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அம்பை, ஜெயந்தன், பிரபஞ்சன், திலீப் குமார், சுஜாதா, சி. என். அண்ணாத்துரை ஆகியோரின் நாடகங்களை மேடையேற்றினார். பலூன், வட்டம், எண் மகன் ,விசாரணை, சண்டைக்காரிகள் போன்ற நாடகங்களை எழுதியிருக்கிறார்

நாடகப்பயிற்சிகள்

ஞாநி 1995- 96-ம் ஆண்டுகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலத் திட்டத்தின் கீழ் சுமார் 400 கல்லூரி மாணவர்களுக்கு தெரு நாடக உத்திகள் பற்றிய பயிலரங்கை நடத்தினார். 1999- 2001 ஆண்டுகளில் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி மாணவிகளுக்கு நாடகப் பயிற்சி அளித்தார்.

சட்டப்போராட்டம்

ஞாநி தமிழக நாடக தணிக்கைச சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றார்.1954-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த நாடகத்தணிக்கைச் சட்டத்தை எதிர்த்து 2012 சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, இந்தச் சட்டப்பிரிவுகள் அரசியல் சட்டத்துக்கு முரணானவை என்று கூறி அச்சட்டத்தை ரத்துசெய்து ஆணையிட்டார்.

நாடக இதழ்கள்

ஞாநி கட்டியங்காரன், அரங்கம் என்னும் இரண்டு இதழ்களை நாடகத்திற்காக வெளியிட்டார். அவற்றை அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

காட்சியூடகம்

ஞாநியின் முதல் குறும்படம் 1988-ல் அணுசக்தி பரவலாக்கத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட கதையம்சம் கொண்ட குறும்படம். அதே சமயத்தில் எடுக்கப்பட்ட இன்னொரு குறும்படம் பெண்ணியக் கருத்துக்களைப் பேசும் 48.2%

தொலைத்தொடர்கள்

சென்னை தூர்தர்சன் இரண்டாவது ஒளிபரப்பை 1990ல் தொடங்கியதும் ஞாநி விண்ணிலிருந்து மண்ணுக்கு, பிக்னிக் பூக்குட்டி, காதலென்ன கத்தரிக்காயா, வேர்கள் ஆகிய கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார். இவற்றில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையின் சாயல் கொண்ட விண்ணிலிருந்து மண்ணுக்கு புகழ்பெற்றது. அறந்தை நாராயணன் எழுதிய வாரந்தோறும் வயசாகிறது என்னும் வாழ்க்கைவரலாற்று நாவலை ஒட்டியது. 1997-ல் இந்திய சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி சுதந்திரப்போரில் ஈடுபட்ட பெண்களைப் பற்றி தயாரிக்கப்பட்ட தொடர் வேர்கள். பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003-ல் உருவாக்கினார். ஞாநி தூர்தர்சன் நிறுவனத்திற்காக40-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும் இயக்கினார் . 2009-ல் UNICEFற்காக ஆனந்தி என்ற இரண்டு பகுதி தொடருக்கு இயக்குநராக இருந்து தயாரித்தார். இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

ஞாநி தான் இயக்கிய கதைத்தொடர்களில் நடித்துமிருக்கிறார். .

ஆவணப்படங்கள்

1995-ல் ஜிஇசி (GEC) தமிழ்த் தொலைக்காட்சி சேனலில் 20 பகுதிகளைக்கொண்ட வினாடிவினா நிகழ்ச்சியையும் 10 பகுதிகளைக்கொண்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சியையும் ஞாநி தயாரித்தார்.

ஞாநி எம்.எஸ். சுவாமிநாதன் ஃபவுண்டேஷனுக்காக, குழந்தைகள் முன்பருவக் கல்வி, பெண்கள் உரிமைகள், சுற்றுச் சூழல் முதலியன பற்றி வீடியோ செய்திப்படங்கள், துண்டுப் படங்களை இயக்கித் தயாரித்து இருக்கிறார். பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்காக சுமார் 40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை ஞாநி எழுதி இயக்கி தயாரித்துள்ளார். பெண்களின் வீட்டுவேலைச் சுமையைப் பற்றிய `என்ன பண்ணிகிட்டு இருந்தே?' என்ற படம் 2000மாவது ஆண்டு பிப்ரவரியில் மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஆவணப்பட விழாவில் திரையிடப்பட்டது. குழந்தைகளின் முன்பருவக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் `கணுவாய் கோபாலின் மலரும் நினைவுகள்’ என்ற வீடியோ திரைப்படம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அறிவியல் மற்றும் மேம்பாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

2001-ல் முன்பருவக் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் 60 நிமிட வீடியோ படத்தைத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஞாநி இயக்கித் தயாரித்திருக்கிறார்.

ஒற்றை ரீல் இயக்கம்

2007-ல் ஒற்றை ரீல் இயக்கம் என்ற பெயரில் புதிய முயற்சியைத் தொடங்கினார் ஞாநி. வணிக சினிமா பார்க்க கொட்டகைக்கு வரும் பார்வையாளர்களுக்கு, மாறுபட்ட ரசனைக்கான சிறுபடங்களை அறிமுகப்படுத்துவது இதன் நோக்கம். ஒரே ஒரு ரீல் நீளமுள்ள பத்து நிமிடக்கதைப் படங்களை மெயின் பிக்சருக்கு முன்னால் காட்டும் இந்த முயற்சியில் உடன் ஒத்துழைத்தது பிரமிட் சாய்மீரா நிறுவனம். படத் தயாரிப்புச் செலவைக் கொடுத்து, படத்தைத் தன் வசம் உள்ள அரங்குகளில் காட்டவும் முன்வந்தது.

முதல் ஒற்றை ரீல் ‘திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் ?’ தமிழகத்தில் 40 அரங்குகளில் 40 எழுத்தாளர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஒற்றை ரீல் இயக்கத்தின் சார்பில் 2008-ல் அவர் இயக்கிய மற்றொரு குறும்படம் ‘உள்ளேன் அய்யா’.

கோலம் அமைப்பு

படைப்பாளியும் பார்வையாளரும் நேரடியாக உறவுகொள்ளவைக்கும் முயற்சியாக கோலம் என்ற அமைப்பை 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஞாநி தொடங்கினார். .

யூடியூப்

ஞாநி மறைவதற்கு முன்பு ’ஓ பக்கங்கள்’ என்னும் யூடியூப் சானலை தொடங்கினார்.

வானொலி

ஞாநி அகில இந்திய வானொலிக்காக நகர்வலம் என்னும் நிகழ்ச்சியில் செய்திக்கட்டுரைகள் எழுதி வாசித்தார்.

அரசியல் களத்தில் ஞாநி

அரசியல்

ஞாநி இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பெரியாரியக் கருத்துக்கள்மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார். 1971-ல் செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் சோஷலிச அரசியல் ஆதரவுப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

1987-ல் பேராசிரியர் சாலை இளந்திரையன், வி.சி.குகநாதன், மு.மேத்தா, சுப.வீரபாண்டியன் ஆகியோருடன் ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டார்.

வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக எழுபதுக்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டார். நிகில் சக்கரவர்த்தி, வி.ஆர். கிருஷ்ணய்யர், மேத்தா பட்கர், நாகபூஷண் பட்நாயக், ஜார்ஜ் பெர்ணான்டஸ் போன்ற முக்கிய பிரமுகர்களின் மேடைப் பேச்சுகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மொழிபெயர்த்து இருக்கிறார்.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை கோரி நடத்தப்பட்ட விழி என்னும் அரசியலியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

ஞாநி 1987 முதல் நேரடி அரசியல் களப்பணிகளில் ஈடுபட்டார். ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டார். 2014-ல் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஜூன் 28,2014-ல் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார்.

விருதுகள்

2016-ல் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் சார்பில் அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட்டது.

விவாதங்கள்

  • 1981-ல் ஞாநி முரசொலி சார்பில் சின்னக்குத்தூசியுடன் சென்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை பேட்டி எடுத்தபோது அவர் திராவிட இயக்கத் தலைவர்கள், மற்றும் சோ பற்றி சொன்ன கடுமையான கருத்துக்களை அவர் பதிவிடவேண்டாம் என்று கோரியபின்னரும் வெளியிட்டார். அஅவை அவதூறான கருத்துக்கள் என்றும் அவற்றை வெளியிடுவதுபொதுநலனுக்கு அவசியமானது என்பதனால் அவ்வாறு வெளியிட்டதாகச் சொன்னார்.
  • திராவிட முன்னேற்றக் கழகத்துடன் அணுக்கமானவராகவும், முரசொலி இதழில் பணியாற்றியவராகவும் இருந்த ஞாநி 2007 அக்டோபர் ஆனந்த விகடன் இதழில் அவர் எழுதிய ஓ பக்கங்கள் என்னும் பத்தியில் மு. கருணாநிதி முதுமையடைந்துவிட்டார் என்றும், அவர் பொறுப்புகளில் இருந்து விலகவேண்டும் என்று எழுதியபோது அவர் பிராமணச் சாதிநோக்கு கொண்டவர் என திராவிட முன்னேற்றக் கழகத்தவரால் கண்டிக்கப்பட்டார்.

மறைவு

சிறுநீரக கோளாறால் தொடர் சிகிச்சை பெற்று வந்த ஞாநி ஜனவரி 15, 2018-ல் காலமானார். ஞாநியின் உடல் அவரது விருப்பப்படி சென்னை மருத்துவ கல்லூரியிடம் மருத்துவ ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டது.

இடம்

ஞாநி தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் சூழலில் மூன்று பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.

  • தமிழில் வீதிநாடக இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். அவருடைய பரீக்ஷா வீதிநாடக இயக்கத்தை தமிழில் தொடந்து முப்பதாண்டுகள் முன்னெடுத்தது.
  • கட்சிசாராத இடதுசாரி அரசியலை தொடர்ச்சியாக இதழ்களிலும் பின்னர் காட்சியூடகத்திலும் முன்வைத்த அரசியல் விமர்சகர் ஞாநி. தமிழகத்தின் நெறிசார் அரசியலின் முகமாக அறியப்பட்டார்.
  • ஓர் இதழாளராக ஞானியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பொதுவாசிப்புக்குரிய இதழியலிலும் சிற்றிதழ் சார்ந்த இதழியலிலும் ஒரே சமயம் செயல்பட்டவர். தீம்தரிகிட இதழ் தமிழில் குறிப்பிடத்தக்க விமர்சனக்கட்டுரைகளை வெளியிட்ட சிற்றிதழ்.

படைப்புகள்

கட்டுரைகள்
  • பழைய பேப்பர்
  • மறுபடியும்
  • கண்டதைச் சொல்லுகிறேன்
  • கேள்விகள்
  • மனிதன் பதில்கள்
  • நெருப்பு மலர்கள்
  • பேய் அரசு செய்தால்
  • அயோக்யர்களும்முட்டாள்களும்
  • கேள்விக் குறியாகும் அரசியல்
  • அறிந்தும் அறியாமலும்
  • ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)
  • என் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)
  • ஆப்பிள் தேசம் (தினமணி கதிர்-ல் வெளிவந்த பயணக் கட்டுரைத் தொடர்)
  • சங்கராச்சாரியார் யார்?
  • ஊழலே உன் வேர் எங்கே?
  • ஏன் இந்த உலைவெறி?
  • கேள்விகள்
  • கண்டதை சொல்லுகிறேன்
நாடகம்
  • பலூன்
  • வட்டம்
  • எண் மகன்
  • விசாரணை
  • சண்டைக்காரிகள்
நாவல்கள், சிறுகதை தொகுப்புகள்
  • தவிப்பு (1998)
சிறுகதைகள்
  • ஞாநி சிறுகதைகள்
  • மாலுவின் டைரி
திரைக்கதை
  • அய்யா (பெரியாரின் வாழ்க்கை)
குறும்படங்கள்
  • அய்யா
  • ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? (ஒரு ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது)
  • 48.2%
  • நிலா(2017)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Dec-2022, 12:30:52 IST