standardised

வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்

From Tamil Wiki
Revision as of 02:36, 22 August 2022 by Tamizhkalai (talk | contribs)
கம்பராமாயணம்

வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், (பொ.யு. 1882-1956) 20- ஆம் நூற்றாண்டு தமிழ்  உரையாசிரியர்களில் முதன்மையானவர்.

பிறப்பு / இளமை

வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்,   சென்னை திருவல்லிக்கேணியில் அக்டோபர் 22, 1882 அன்று பிறந்தார். இவரது தந்தையின் பெயர் வை.மு. பார்த்தசாரதி ஐயங்கார். வை.மு. என்பதன் விரிவு  "வைத்தமாநிதி முடும்பை" எனக் கூறப்படுகிறது. அத்தங்கி குமாரதாதாசாரியார்  மற்றும் அரசாணி பாலை சேஷாசாரியார் ஆகியோர் பயிற்றுவிக்க  வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்  வடமொழியும் வேதமும்  கற்றுக்கொண்டதுடன் தமிழ் மொழியிலும் புலமை பெற்றார். இவரது தந்தையும் ஒன்று விட்ட சகோதரரும் இவருக்கு தமிழில்  ஈடுபாடு உண்டாக்கினார்கள்.

செயல்பாடு

வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்குப் பல உரைகளை எழுதிவெளியிட்டார். இவரது உரையில் மிகுதியான வடமொழி சொற்கள் உள்ளன. இவர் விளக்கங்களை அதிகமாக எழுதும் வழக்கம் உடையவர். பின்னர், சென்னை அரசும் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய தமிழ் பேரகராதி பதிப்பாசிரியர் குழுவில் இரு மொழி ஆசிரியராக இருபது ஆண்டுகள் பணி புரிந்தார். அதன்பின், 1920- ஆம் ஆண்டு முதல் அரும்பெரும் நூல்களுக்கெல்லாம் உரை எழுத ஆரம்பித்தார். இந்தப் பணி இறுதி வரை தொடர்ந்தது.

உரை மற்றும் பதிப்பு

வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், கம்பராமாயணம், வில்லிபாரதம் இரண்டுக்கும் முழுமையாக உரை எழுதினார். பத்துப்பாட்டில் ஏழு நூல்களுக்கும், சிலப்பதிகாரத்தில் எட்டு காதைகளுக்கும், மணிமேகலையின் மூன்று காதைகளுக்கும், சீறாப்புராணத்திலும், இரட்சண்ய யாத்ரீகத்திலும் ஒவ்வொரு பகுதிக்கும் உரை எழுதினார். தனது ஆசிரியர் இருவரோடு இணைந்து  அஷ்ட பிரபந்தத்துக்கு உரை எழுதினார். திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு குறிப்புரை எழுதியதுடன் சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி,  கந்தபுராணம்,  திருமுருகாற்றுப்படை,  தண்டியலங்காரத்தின் ஒரு பகுதி இவற்றுக்கும் உரை எழுதி, பதிப்பித்தார்.

வில்லிபுத்தூரார் பாரதம்

ஒரு நூலைப் பதிப்பிக்கும் முன் வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்  கவனமும் உழைப்பும் செலுத்துவார்.  இவர் கம்பராமாயணம் படித்தபோது  கிடைத்த பாடபேதங்களைக் குறித்துக் கொண்டு, எஸ். வையாபுரிப்பிள்ளை தனக்குக் கொடுத்த ஏட்டுப் பிரதிகளுடன் ஒப்பிட்டு இரண்டாம் பதிப்பு கம்பராமாயணத்தை வெளியிட்டார். அதன்,  மூன்றாவது பதிப்பில் பி.என். அப்புசாமி ஐயர், மு. இராகவையங்கார் ஆகியோரின் பிரதிகளை ஒப்பிட்டு சரிபார்த்து பாடபேதங்களைச் சேர்த்தார். நான்காவது பதிப்பை வெளியிடும் முன்  பி.ஸ்ரீ. ஆச்சாரியா எழுதிய கம்ப சித்திரத்தையும், வெ.ப. சுப்பிரமணிய முதலியார் எழுதிய கம்பராமாயண சாரத்தையும் படித்து ஒப்புநோக்கி சரி பார்த்துக் கொண்டார்.

உ.வே. சாமிநாதய்யரைப் போலவே இவரும் ஒரு நூலில் வரும் ஒரு சொற்றொடர் வேறு எந்தெந்த நூலில் வருகிறது என்பதையும் தனது உரையில் குறிப்பிடுகிறார்,  மேலும் இவர் தனது உரைகளில்  இலக்கண வரலாறுகளையும் குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டில்  தமிழுக்கு இணையற்ற தொண்டு புரிந்த உ.வே. சாமிநாதய்யரின்  உரை இலக்கிய நெறி சார்ந்து அமைந்ததென்றால், அதே காலகட்டத்தில் வாழ்ந்த வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியாரின் உரை சமயநெறி சார்ந்து அமைந்தது.

ஆயினும் பழந்தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்த வகையில் வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்,  உ.வே. சாமிநாதய்யரோடு ஒப்புநோக்கத்தக்கவர்.

படைப்புகள்

வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் கீழ்காணும் நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்;

மறைவு

வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், செப்டெம்பர் 26, 1956 அன்று காலமானார்.

உசாத்துணை

  • வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியரின் உரைவளம் - வெ.இராஜேஸ்வரி, புத்தா பப்ளிகேஷன்ஸ், எழும்பூர், சென்னை- 8
  • தமிழ் வளர்த்த பெருமக்கள், என் ஸ்ரீநிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.