மதுரைக் கலம்பகம்
- கலம்பகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கலம்பகம் (பெயர் பட்டியல்)
- மதுரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மதுரை (பெயர் பட்டியல்)
மதுரைக் கலம்பகம் (பொ.யு.16-ம் நூற்றாண்டு) குமரகுருபரர் மதுரையைக் குறித்து இயற்றிய கலம்பகம் என்னும் சிற்றிலக்கியம். மதுரையின் ஊர், கோவில் மற்றும் கோவில் கொண்ட இறைவனின் சிறப்புகளைப் பாடும் நூல்.
தோற்றம்
குமரகுருபரர், மதுரை மீனாட்சி அம்மை மீது மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம் ஆகிய நூல்களைப் பாடினார். குமரகுருபரர் இறைவன், இறைவியோடு, மதுரையின் சிறப்பையும், பெருமையையும் போற்றிப் பாடி இயற்றிய நூல் மதுரைக் கலம்பகம். இதன் காலம் பொ.யு. பதினாறாம் நூற்றாண்டு.
நூல் அமைப்பு
மதுரைக் கலம்பகத்தில் காப்புச் செய்யுளையும் சேர்த்து நூற்றி மூன்று பாடல்கள் இடம் பெற்றன. கீழ்க்காணும் 18 உறுப்புகள் இடம்பெற்றன.
- புயவகுப்பு
- தவம்
- வண்டுவிடுதூது
- அம்மானை
- பாண்
- மதங்கியார்
- கைக்கிளை
- சிந்து
- ஊசல்
- களி
- மடக்கு
- ஊர்
- மறம்
- காலம்
- தழை விருப்புரைத்தல்
- இரங்கல்
- சம்பிரதம்
- மேகவிடுதூது
இவற்றுடன் பிச்சியார், கொற்றியார், இடைச்சியார், வலைச்சியார், குறம் முதலிய பொருள்களும் பிறபொருள்களும் கலந்துவந்தன. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவால் இயற்றப்பட்ட பாடல்கள் இடம்பெற்றன. இவற்றில் தரவு, தாழிசை, அராகம் தாழிசை அம்போதரங்கள், தனிச்சொல், சுரிதகம் ஆகியவை இடம் பெற்றன. இவை முச்சீர், இரு சீர், அம்போதரங்களாக அமைந்தன.
உள்ளடக்கம்
மதுரைக் கலம்பகம் நூலின் முகப்பில் கட்டளைக் கலித்துறையால் ஆன காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து 102 பாடல்களில் மதுரையின் சிறப்பு, இறைவனின் பெருமை, மக்களின் மாண்பு போன்றவை பாடப்பட்டுள்ளன. ’தமிழ் கூடற் றிருநகரம்’ என்றும், அறம், பொருள், இன்பம் வீடு என்னும் நால்வகைப் பேறுகளையும் ஒருசேர மெய்யடியார்க்குத் தந்தருளுகிற நகரம் என்றும், சிறப்புப் பொருந்திய பொற்றாமரைக் குளமும், நான்மாடக் கூடலும் கொண்ட திருநகரம் என்றும் மதுரைக் கலம்பகத்தில் மதுரை சிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கோவில் கொண்ட சிவனின் பெருமையும் சிறப்பும் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
பாடல் நடை
இயல் இடம் கூறல்
புயல்வண்ண மொய்குழல் பொன்வண்ணம் தன்வண்ணம் போர்த்தடங்கண்
கயல்வண்ண மென்வண்ண மின்வண்ண மேயிடை கன்னற்செந்நெல்
வயல்வண்ணப் பண்ணை மதுரைப் பிரான்வெற்பில் வஞ்சியன்னாள்
இயல்வண்ண மிவ்வண்ண மென்னெஞ்ச மற்றவ் விரும்பொழிலே
அம்மானை
இருவருக்குங் காண்பரிய வீசர்மது ரேசனார்
விருதுகட்டி யங்கம்வெட்டி வென்றனர்கா ணம்மானை
விருதுகட்டி யங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்
அருமையுடம் பொன்றிருகூ றாவதே னம்மானை
ஆனாலுங் காயமிலை யையரவர்க் கம்மானை
சித்து
குரும்பை வெம்முலை சேர்மது ரேசர்பொற் கோபு ரத்திற் கொடிகட்டு சித்தர்யாம்
கரும்பை முன்புகல் லானைக் கிடுஞ்சித்தர் கையிற் செங்கல் பசும்பொன்ன தாக்கினேம்
இருந்த வீடும் வறும்பாழ தாமவர்க் கெருத்துக் கொட்டிலும் பொன்னேய்ந்திடச்செய்தேம்
அருந்த னந்தமக் கோதன மேயப்பா ஆட கத்துமற் றாசையவ் வையர்க்கே
மதுரையின் சிறப்பு
உடையதொர் பெண்கொடி திருமுக மண்டலம் ஒழுகு பெருங்கருணைக்
கடலுத வுஞ்சில கயல்பொரு மொய்ம்புள கடவுணெ டும்பதியாம்
புடைகொள் கருங்கலை புனைபவள் வெண்கலை புனையுமொர் பெண்கொடியா
வடகலை தென்கலை பலகலை யும்பொதி மதுரைவ ளம்பதியே
உசாத்துணை
- மதுரைக் கலம்பகம்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- மதுரைக் கலம்பகம்: தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்
- மதுரைக் கலம்பகம்: சென்னை நூலகம் தளம்
- மதுரைக் கலம்பகம் கட்டுரை: எஸ். ஜயலக்ஷ்மி: சைவம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
07-Jul-2024, 22:03:42 IST