under review

தண்டியலங்காரம்

From Tamil Wiki

தண்டியலங்காரம் (பொ.யு. 946-1070) தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐவகை இலக்கணங்களில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல். இந்நூலின் ஆசிரியர் தண்டி. தண்டியலங்காரம் உரைதருநூல்களில் ஒன்று.

தொல்காப்பியத்தை அடுத்து அணி இலக்கணம் பயிலப் பெரிதும் பயன்படுவது தண்டியலங்காரம். இது தொல்காப்பியத்தையும், வடமொழியின் காவிய தரிசத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது. இக்கருத்தை,

பன்னிரு புலவரில் முன்னவன் பகர்ந்த
தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்
அணிபெறும் இலக்கணம் அரிதினில் தெரிந்து
வடநூல் வழிமுறை மரபினில் வழாது

எனவரும் தண்டியலங்காரச் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம்.

ஆசிரியர்

வடமொழியில் 'காவியதரிசனம்' என்ற அணி இலக்கண நூலின் ஆசிரியர் தண்டி. தமிழிலுள்ள தண்டியலங்கார அணி இலக்கண நூலின் ஆசிரியர் பெயரும் தண்டி என்றே காணப்படுகிறது. இப்பெயர், இவரது இயற்பெயரா? வடமொழி ஆசிரியரை அடியொற்றி தாமே வைத்துக் கொண்ட புனைபெயரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தண்டியலங்காரச் சிறப்புப்பாயிரம், இவரைக் கவிச் சக்கரவர்த்தி கம்பரின் பேரன்; அம்பிகாபதியின் மகன்; வடமொழி, தென் மொழிகளில் வல்லவர்; சோழநாட்டினர் எனச் சுட்டுகின்றது. நூலில் காணப்படும் சோழன் பெயரில் அமைந்த 45 எடுத்துக்காட்டு வெண்பாக்களில் அனபாயன் என்னும் பெயரைக் குறிப்பிடுபவை 6 பாடல்கள். அனபாயன் என்னும் பெயர், பொ.யு. 12-ம் நூற்றாண்டில் அரசுபுரிந்த இரண்டாம் குலோத்துங்க சோழனைக் குறிப்பது. இந்நூல் அனபாயன் அவையில் அரங்கேற்றப்பட்டது எனவும் சிறப்புப்பாயிரம் குறிப்பிடுகின்றது.

அமைப்பு

தண்டியலங்காரம் பொதுவணியியல், பொருள்அணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளை உடையது. தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.

தண்டியலங்காரத்தில் அணிகளின் வகைகள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டு வெண்பாக்களும் இடம்பெறுகின்றன. இதிலுள்ள நூற்பாக்கள் ‘நூற்பா’ யாப்பில் அமைந்தவை.

  • பொதுவியல் (25 நூற்பாக்கள்)-செய்யுள் வகைகளையும், செய்யுள் நெறிகளையும் பற்றி விவரிக்கின்றது.
  • பொருளணியியல் (64 நூற்பாக்கள்)-தன்மை அணி முதல் பாவிக அணி வரையில் உள்ள முப்பத்தைந்து பொருள் அணிகளை விளக்குகின்றது.
  • சொல்லணியியல் (35 நூற்பாக்கள்)-மடக்கு அணி, சித்திரக்கவி என்னும் இரண்டு சொல்லணிகளைப் பற்றி எடுத்துரைக்கிறது. வழு, மலைவு பற்றிய கருத்துகளும் சொல்லணியியலில் இடம் பெற்றுள்ளன.
பொதுவியல்

பொதுவியல்,

  • முத்தகச் செய்யுள்
  • குளகச் செய்யுள்
  • தொகைநிலைச் செய்யுள் (8 வகைகள்)
  • தொடர்நிலைச் செய்யுள் (சொல் தொடர்நிலைச் செய்யுள்,பொருள் தொடர்நிலைச் செய்யுள்)

எனும் நான்கு வகையான செய்யுள்கள் பற்றி விளக்குகிறது. தொடர்நிலைச் செய்யுள் வகை பற்றிக் கூறும்போது அதன் வகைகளான பெருங்காப்பியம், காப்பியம் என்பவற்றின் இலக்கணங்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றது.

பொருளணியியல்

பொருளணியியலில் 37 அணிகளுக்கான இலக்கணம் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் அணியின் இலக்கணம், வகைகள், வகைக்கொன்றாக எடுத்துக்காட்டுகள் கூறப்படுகின்றன.

தன்மை நவிற்சி அணி நுட்ப அணி ஒப்புவமைக் கூட்டவணி
உவமையணி இலேச அணி ஒழித்துக் காட்டணி
உருவக அணி நிரல் நிரையணி மாறுபடு புகழ்நிலையணி
தீவக அணி ஆர்வமொழியணி புகழாப்புகழ்ச்சி அணி
பின்வருநிலையணி சுவையணி நிதரிசன அணி
முன்னவிலக்கணி தன்மேம்பாட்டணி புணர்நிலையணி
வேற்றுப்பொருள் வைப்பணி பரியாய அணி பரிவருத்தனை அணி
வேற்றுமையணி சமாகித அணி வாழ்த்தணி
விபாவனை அணி உதாத்த அணி சங்கீரணவணி
ஒட்டணி (பிறிது மொழிதல் அணி) அவநுதி அணி பாவிக அணி
அதிசய அணி மயக்க அணி
தற்குறிப்பேற்றணி சிலேடை அணி
ஏதுவணி விசேட அணி
சொல்லணியியல்

சொல்லணியியலில் மடக்கு, சித்திரக்கவி, வழுக்களின் வகைகள் ஆகியவற்றின் இலக்கணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

தண்டியலங்கார உரையும் பதிப்பும்

தண்டியலங்காரத்திற்குப் பழைய உரைஒன்று சுப்பிரமணிய தேசிகரால் இயற்றப்பட்டது. இதனை அடியொற்றியே பிற உரைகளும் பதிப்புகளும் தோன்றின. பொ.யு. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தி.ஈ. சீனிவாச ராகவாச்சாரியார், தண்டியலங்காரக் கருத்துகளைத் தொகுத்து, 'தண்டியலங்கார சாரம்’ என்னும் வசன உரைநடை நூலை எழுதியுள்ளார்.இவை இந்நூலின் தனிச்சிறப்புகள்.

வை.மு. சடகோப ராமாநுஜாச்சாரியார் உரை - பொ.யு. 1901
இராமலிங்கத் தம்பிரான் குறிப்புரை - கழகம் - பொ.யு. 1938
சி. செகந்நாதாச்சாரியார் (சொல்லணி) உரை - பொ.யு. 1962
புலவர் கு. சுந்தரமூர்த்தி (பாடபேத உரை) - பொ.யு. 1967
புலியூர்க் கேசிகன் எளிய உரை - பொ.யு. 1989
வ.த. இராமசுப்பிரமணியம் உரை - பொ.யு. 1998

சிறப்புகள்

தண்டியாசிரியர், நூற்பாவும் செய்து, உரையும் உதாரணமும் எழுதினார்’ என்று கி.பி. 18-ம் நூற்றாண்டைச் சார்ந்த பிரயோக விவேகம் என்னும் நூல் குறிப்பிடுகின்றது. தண்டியலங்கார உதாரணப் பாடல்கள் இலக்கணக் கருத்துக்குப் பொருத்தமானவை ; எளிமையானவை. காப்பிய இலக்கணம் பற்றிப் பல அரிய செய்திகளை தண்டியலங்காரம் எடுத்துரைக்கிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2024, 18:15:34 IST