under review

வானம்பாடி கவிதை இயக்கம்: Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
Line 82: Line 82:
*[https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec20/41588-2021-02-17-07-23-58 சிற்பி பேட்டி கீற்று]
*[https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec20/41588-2021-02-17-07-23-58 சிற்பி பேட்டி கீற்று]
*[https://ia903009.us.archive.org/17/items/vaanampaadi/vaanampaadi.pdf ஞானி வானம்பாடிகள் இயக்கம்]  
*[https://ia903009.us.archive.org/17/items/vaanampaadi/vaanampaadi.pdf ஞானி வானம்பாடிகள் இயக்கம்]  
*
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 11:01, 14 February 2022

வானம்பாடி- ஞானி

வானம்பாடி கவிதை இயக்கம் (1971-1982) வானம்பாடி என்னும் சிற்றிதழை ஒட்டி உருவான கவிதை இயக்கம். இடதுசாரி அரசியல் பார்வையும் உரக்கச்சொல்லும் அழகியலும் கொண்ட கவிஞர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்டது. தமிழில் அவர்கள் அந்தவகையான கவிதைகளின் ஒரு மரபை உருவாக்கினர். வானம்பாடி இதழின் பெயரால் அது அழைக்கப்படுகிறது. (பார்க்க வானம்பாடி)

தோற்றம்

’1971 ஆரம்பத்தில், கோவையை அடுத்த சாந்தலிலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி விழா ஒன்றின்போது ஒரு தென்னந்தோப்பில் கருக்கொண்டது இக்கவிதை இயக்கம். முல்லை ஆதவன், அக்கினிபுத்திரன், நித்திலன், இளமுருகு, ஆதி ஆகியோரிடம் நான் பேசினேன். மூன்றாம் அணி உருவாக்கத்திற்கு உற்சாகம் தந்தவர் அனைவரும் தமிழாசிரியர்களே. தமிழையும், தமிழ்க் கவிதையையும் காக்கத் தமிழாசிரியர்களால் உருவாக்கப்பட்டதே வானம்பாடி இயக்கம்’ என புவியரசு ஒரு பேட்டியில் சொல்கிறார். “ஃபிராய்டியத் தாக்கம், அகமன உளைச்சல், வாழ்வின் மீதான வெறுப்பு, சலிப்பு, சுயமோகம், மிகுகாமம் போன்ற மனச் சிதைவுகளுக்கு ஆட்பட்டு அந்நியமாதலிலில் மூழ்கிப் போனார்கள். நிகழ்காலமும், நிகழ்காலக் கொந்தளிப்புகளும், சக மனிதரின் பரிதாப நிலையும், அதற்கான காரணங்களும் அவர்களின் கண்களில் படவேயில்லை. அவர்கள் எழுதுவதே கவிதை என்ற சூழலை அந்த மேட்டுக்குடி மக்கள் உருவாக்கி யிருந்தார்கள். பாரதிதாசனின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த முடியரசன், வாணிதாசன், கோ.நீ. அண்ணாமலை, சுரதா போன்றவர்கள் மரபார்ந்த திராவிடச் சார்பில் கரைந்து போனார்கள்.” என்று சொல்லும் புவியரசு அந்த நிலையை மாற்றும்பொருட்டு வானம்பாடி இயக்கம் உருவானது என்கிறார். மக்களுக்கான அரசியலை பேசவும், பழம்பெருமை இனப்பெருமை ஆகியவற்றில் இருந்து விடுபடவும் வானம்பாடி இயக்கம் உருவானது என்பது புவியரசின் கூற்று.

வளர்ச்சி

புவியரசு

வானம்பாடி பத்து இதழ்களைத் தாண்டிய பிறகு கவிதைத் தொகுதிகள் டிசம்பர் 1973-ல் "வெளிச்சங்கள்'என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பு வெளியிடப்பட்டது. அதில் 33 கவிஞர்களின் கவிதைகள் இருந்தன. அக்கினி புத்திரன், அரசப்பன், அறிவன், ஆதி, இளமுருகு,இன்குலாப், கங்கை கொண்டான், கதிரேசன், ஞானி, சக்திக்கனல், சித்தன், சிற்பி, பா. செயப்பிரகாசம், சுந்தரம், தமிழ்நாடன், தமிழவன்,தமிழன்பன், தேனரசன், பிரபஞ்சன், புவியரசு, மேத்தா, ரவீந்திரன்,பா.வேலுச்சாமி, ஜீவ ஒளி ஆகிய கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. வானம்பாடிகளின் இரண்டாவது தொகுப்பு ’சிநேக புஷ்பங்கள்' 1976-ல் வெளிவந்தது.

வானம்பாடி குழுவினரின் தொகுதிகள் தொடர்ச்சியாக வெளிவந்து அவர்களின் இலக்கிய இயக்கத்தை அடையாளம் காட்டின.

  • தமிழ்நாடன் - மண்ணின் மாண்பு (1973)
  • கங்கை கொண்டான் - கூட்டுப் புழுக்கள் (1974)
  • புவியரசு - இதுதான் (1975)
  • மு.மேத்தா - கண்ணீர்ப் பூக்கள் (1975,
  • சிற்பி - சர்ப்பயாகம் (1975).
  • சக்திக் கனல் - கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும் (1976).
  • இன்குலாப்-வெள்ளை இருட்டு (1973),
  • தமிழன்பன்-தோணி வருகிறது (1973)
  • தேனரசனின்-வெள்ளை ரோஜா (1978),
  • சிதம்பரநாதன் -அரண்மனைத் திராட்சைகள் (1978)

அழகியல்

ஞானி

தமிழில் 1922ல் சி.சுப்ரமணிய பாரதி வசனகவிதையை எழுதியபோது அதை கவிதை என அன்றைய தமிழ்க்கவிஞர்கள் ஏற்கவில்லை. பின்னர் ந. பிச்சமூர்த்தி அம்மரபை பின்பற்றி வசன கவிதைகள் எழுதினார். க. நா.சுப்ரமணியம் வசனகவிதைக்கு புதுக்கவிதை என்று பெயரிட்டு அதற்கான அழகியல்வடிவம் ஒன்றை முன்வைத்தார். அதைத்தொடர்ந்து 19 எழுத்து சிற்றிதழில் புதுக்கவிதை இயக்கம் உருவாகியது. பிரமிள்,பசுவய்யா (சுந்தர ராமசாமி) , நகுலன், சி.மணி ஆகியோர் புதுக்கவிதை இயக்கத்தை முன்னெடுத்தனர். மரபான தமிழறிஞர்களும், கல்வித்துறையினரும் அவ்வியக்கத்தை கடுமையாக எதிர்த்தனர். இடதுசாரி இயக்கத்தவரும் எதிர்த்தனர். தீவிரமான விவாதங்களும் நிகழ்ந்தன. (பார்க்க எழுத்து கவிதை இயக்கம்)

இச்சூழலில் 1971ல் தோன்றிய வானம்பாடி இதழில் எழுதிய கவிஞர்களின் அணி ஒன்று புதுக்கவிதையை ஏற்றுக்கொண்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வித்துறை சார்ந்தவர்கள், அனைவருமே இடதுசாரிகள். அவர்கள் புதுக்கவிதையை ஏற்றுக்கொண்டது தமிழ் நவீனக்கவிதையில் ஒரு பெரிய மாற்றம்.

எழுத்து உருவாக்கிய நவீனக் கவிதைகள் வாசகனே கவிதையின் உட்பொருளை தன் கற்பனையில் உணர்ந்துகொள்ள இடம்விட்டன. இறைச்சி, உள்ளுறை என மரபுக்கவிதையின் இலக்கணத்தால் கூறப்படும் மறைபொருள்தான் கவிதையின் உள்ளடக்கமாக இருக்கவேண்டும் என்று கூறின. கூறப்பட்டதை விட ஊகிக்கவிடப்படுவதே கவிதையின் சாரம் என உருவகித்தன. அவ்வாறு கூறாமல் உணர்த்த படிமம், கவியுருவகம் ஆகியவற்றை பயன்படுத்தின

சிற்பி

ஆனால் வானம்பாடி கவிதைகள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருந்தன. ஆகவே அவை அரசியல்மேடைகளில் பேசப்படும் உரத்த குரலையும், அணிகளும் அலங்காரங்களும் நிறைந்த மொழிநடையையும் கவிதைக்குள் கொண்டுவந்தன. கற்பனாவாத அம்சம் மேலோங்கிய, ஆணைகளையும் அறைகூவல்களையும் அறிவிப்புகளையும் முன்வைக்கும் கவிதைகளை வானம்பாடி இயக்கம் உருவாக்கியது. கலீல் கிப்ரான், ரூமி ,பாப்லோ நெரூதா ஆகியோரின் கவிதைகள் அவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தன.

அரசியல்

வானம்பாடி இயக்கம் உருவானதன் அரசியல் பின்னணி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இரு தளங்களில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை உருவாகியது. ஜவகர்லால் நேருவின் மீது தாராளவாத வலதுசாரிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிமேல் இடதுசாரிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். 1966 ல் நேரு மறைந்தார். 1964ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி உடைந்தது. அவ்விரு நம்பிக்கைகளும் உடைந்தபோது இந்தியாவெங்கும் தீவிரவாத எண்ணங்கள் உருவாயின. 1967 ல் நக்ஸல்பாரி இயக்கம் என்னும் பெயர்கொண்ட இடதுசாரி தீவிர இயக்கம் உருவானது. அது அரசால் ஒடுக்கப்பட்டாலும் அதன் கருத்துக்கள் இளைஞர் நடுவே தீவிரமான செல்வாக்கைச் செலுத்தின. 1965 ல் தெலுங்கில் நிகிலேஸ்வர், நக்னமுனி, மகாஸ்வப்னா, சேரபந்தராஜு, ஜ்வாலாமுகி ஆகியோர் திகம்பர கவிதை இயக்கத்தை தொடங்கினர். 1968ல் அவ்வியக்கம் புகழ்பெற்று அதன் கவிதைகள் தமிழ்,ஆங்கில மொழியாக்கங்களாக கிடைக்கலாயின. இச்சூழலில் வானம்பாடி இயக்கம் நக்ஸலைட் இயக்கத்தின் தீவிரமான செல்வாக்குடன், திகம்பர கவிதைகளின் அழகியல் சார்புடன் உருவாகியது.

தமிழ்நாடன்

வானம்பாடி இயக்கத்தின் அரசியல்கொள்கைகளை உருவாக்கியவர் தீவிர இடதுசாரியான ஞானி. அவர் ஏற்கனவே புதிய தலைமுறை என்னும் தீவிர இடதுசாரி அரசியல் இதழை நடத்திக்கொண்டிருந்தார். அவ்விதழுடன் ஒரு கலையிலக்கிய இதழையும் நடத்தும் நோக்கம் அவருக்கு இருந்தது. அவருடைய அரசியல்பார்வையை பகிர்ந்துகொள்ளும் கவிஞர்களை அவர் அணிதிரட்டினார். அவர்களே வானம்பாடி இதழை உருவாக்கினர். அவர்களில் சிலர் தமிழ்த்தேசியப் பார்வை கொண்டவர்களாகவும் சிலர் திராவிட இயக்க ஆதரவாளர்களாகவும் இருந்தனர். 1969ல் சி.என்.அண்ணாத்துரை ஆட்சியமைத்தத்தும் அவர்கள் தமிழியக்க -திராவிட அரசியலில் நம்பிக்கை இழந்தனர். அது பழம்பெருமை பேசும்,சாதிப்பெருமைகொண்ட, முதலாளித்துவ ஆதரவு அரசு என உணர்ந்தனர். அவர்களும் இடதுசாரிப் பார்வை நோக்கி நகர்ந்தனர். வானம்பாடியின் தொடக்ககால இதழ்கள் அன்றிருந்த மு.கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அரசு பற்றிய கடும் விமர்சனங்கள் நிறைந்தவை.வானம்பாடி பொதுவாக இடதுசாரிப் புரட்சி ஒன்றுக்கு நேரடியாக அறைகூவல்விடக்கூடிய இதழாகவே இருந்தது. சாதி,மத, இன, நில அடையாளங்கள் இல்லாத மானுட அடையாளாம் ஒன்றுக்காக அது குரல்கொடுத்தது. ‘மானுடம் பாடவந்த வானம்பாடிகள்’ என அக்கவிஞர்கள் தங்களை அறிவித்துக்கொண்டனர்.

பங்களிப்பு

எழுத்து உருவாக்கிய கவிதை மரபில் கவிதைகள் இறுக்கமான கட்டமைப்பும், செறிவான மொழியும், படிமங்கள் வழியாக தொடர்புறுத்தும் தன்மையும் கொண்டிருந்தன. ஆகவே அவை அந்தவகையான கவிதைகளுக்குள் பழகிய, நுண்ணுணர்வுள்ள வாசகர்களுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. மிகக்குறைவான வாசகர்களிடம் மட்டுமே அவை புழங்கின. வானம்பாடி கவிதை மரபு எளிமையான நேரடியான மொழிநடையில், மேடைப்பேச்சின் பாணியில், பூடகங்களோ உட்குறிப்புகளோ இல்லாமல் கவிதையை முன்வைத்தது. உவமை, எதுகை-மோனை போன்ற எளிமையான அணிகளும், சொல்விளையாட்டுக்களும் கொண்டிருந்தது. கவிதைகளை அச்சிட்டு வெளியிடுவதோடு மேடைகளில் கவிதைகளை உணர்ச்சிகரமாக படிக்கும் கவியரங்குகளையும் வானம்பாடிக் கவிஞர்கள் நடத்தினர். விளைவாக புதுக்கவிதை மிக விரைவாக மக்களிடம் சென்றது. பொதுவாசிப்பு மட்டுமே உடையவர்களும் கவிதைகள் எழுத ஆரம்பித்தனர். தமிழ்ப்புதுக்கவிதையை ஒரு மக்களியக்கமாக ஆக்க வானம்பாடியால் இயன்றது. அதன் முதன்மை பங்களிப்பு அதுவே.

தமிழன்பன்

எழுத்து மரபு புதுக்கவிதையில் அழகியலையே முன்வைத்தது. வாழ்க்கையின் நுட்பங்களையும் தத்துவநோக்கையும் மட்டுமே அக்கவிதைகள் பேசின. வானம்பாடி வெளிப்படையாகவே அரசியல் பேசியது. வானம்பாடிக் கவிதைகளின் நேரடித்தன்மையும், ஓசைநயம் கொண்ட மொழியும், மேடைப்பேச்சுப் பாவனையும் அரசியலை முன்வைக்க மிக உதவிகரமாக இருந்தன. தமிழ்ப்புதுக்கவிதை அரசியலுக்கான கருவியாக ஆனது வானம்பாடி இயக்கத்திற்குப் பிறகுதான். வானம்பாடி இயக்கத்தின் இரண்டாவது பங்களிப்பு இது. ‘புதுக்கவிதையின் வாசகர் வட்டம் விரிவாக்கம் பெற்றது . . . பாரதி மரபு புதுப்பிக்கப்பட்டது. கவிதைக்குள் இடதுசாரிக் கண்ணோட்டம் இடம் பெறக் காரணமானது . . . தமிழகமெங்கும் சிற்றிதழ்கள் வெளிவருவதற்கு ஆதாரமாக அமைந்தது. . .’ என்று வானம்பாடியின் விளைவுகளைக் குறிப்பிடுகிறார் சிற்பி (தமிழில் சிறுபத்திரிகைகள்)

விமர்சனங்கள்

வானம்பாடி இயக்கம் கவிதையை வெறும் கோஷங்களாக, கூச்சல்களாக ஆக்கிவிட்டது என்று க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி போன்ற விமர்சகர்கள் கண்டித்தனர். கவிதை என்பது அதன் நுட்பங்கள் வழியாக வாசகனின் அகத்துடன் உரையாடுவது என்றும், வானம்பாடிக் கவிதைகள் அரசியல் மேடைப்பேச்சையே கவிதை என முன்வைக்கின்றன என்றும் , அவை நுட்பங்களோ ஆழங்களோ இல்லாத வெறும் பிரகடனங்கள் மட்டுமே என்றும் குற்றம்சாட்டப்பட்டது. வானம்பாடி கவிஞர்கள் எவரும் உண்மையான புரட்சிக்காரர்கள் அல்ல என்றும், அவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களான ஆசிரியர்கள் என்றும், பலர் பின்னர் சினிமாத்துறைக்குச் சென்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இங்குலாப்

பிரமிள் 1972- ஆகஸ்ட் மாதம் வெளியான அஃக் இதழில் எழுதிய ‘ஒரு வானம்பாடிக் கும்பலுக்கு’ என்ற கடுமையான கவிதையில் வானம்பாடி கவிஞர்களை போலிகள், வெற்றுக்கூச்சலிடுபவர்கள் என விமர்சித்தார்

சடலத்துப் பசிதான் சாசுவதமென்றால்

நடைபாதை தோறும் சிசுக்கள் கறியாகும்.

வயிற்றுக்கு

உங்கள் பாட்டாளி கவிதை உணவல்ல

சோறு முளைக்கப் பயிரிடு போ.

வாழ்வோ காலமோ

உங்கள் பிரத்யேகசோளக் கொல்லையல்ல

கிழிசற் சொற்கோவைக்குள்

மார்க்சிய வைக்கோலைத் திணித்து நின்று மிரட்டாதீர்'

என்ற கடுமையான வரிகள் வானம்பாடிகள் மீதான பிற நவீன கவிஞர்களின் மனநிலையின் வெளிப்பாடு.

‘வானம்பாடி இதழில் வெளியான பெரும்பாலான கவிதைகள் மேடை முழக்கங்களாகவும் அரசியல் கோஷங்களாகவும் துணுக்குகளாகவுமே அமைந்துள்ளன. அவற்றில் கவிதையைத் தேடுவது உமிக் குவியலில் அரிசி மணிகளைப் பொறுக்கும் வேலைதான்’ என்று ராஜமார்த்தாண்டன் எழுதினார்.

மு.மேத்தா

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.