under review

ஆர். வேங்கடாசலம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Corrected the links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=வேங்கடாசலம்|DisambPageTitle=[[வேங்கடாசலம் (பெயர் பட்டியல்)]]}}
[[File:Venkatachalam Pillai.jpg|thumb|ஆர். வேங்கடாசலம் பிள்ளை]]
[[File:Venkatachalam Pillai.jpg|thumb|ஆர். வேங்கடாசலம் பிள்ளை]]
[[File:Karanthai Venkatachalam Pillai Book.jpg|thumb|கரந்தைக் கவியரசு - கரந்தை ஜெயக்குமார் நூல்]]
[[File:Karanthai Venkatachalam Pillai Book.jpg|thumb|கரந்தைக் கவியரசு - கரந்தை ஜெயக்குமார் நூல்]]

Revision as of 18:13, 27 September 2024

வேங்கடாசலம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வேங்கடாசலம் (பெயர் பட்டியல்)
ஆர். வேங்கடாசலம் பிள்ளை
கரந்தைக் கவியரசு - கரந்தை ஜெயக்குமார் நூல்
கரந்தைக் கவியரசர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை

ஆர். வேங்கடாசலம் பிள்ளை (அ. வேங்கடாசலம் பிள்ளை; அரங்க வேங்கடாசலம் பிள்ளை; கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை) (டிசம்பர் 18, 1886 - டிசம்பர் 16, 1953) தமிழ் அறிஞர். எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், தமிழ்ப் பொழில் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

ஆர். வேங்கடாசலம் பிள்ளை, டிசம்பர் 18, 1886-ல், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மோகனூர் என்ற சிற்றூரில், அரங்கசாமிப் பிள்ளை-தருமாம்பாள் இணையருக்குப் பிறந்தார். தஞ்சாவூரில் இருந்த தூய பேதுரு (செயின்ட் பீட்டர்) உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். ஆசிரியர் சுப்பிரமணிய ஐயரிடம் தமிழ் பயின்றார். தனிக் கல்வியாக தமிழ் இலக்கணங்களை மா.ந. சோமசுந்தரம் பிள்ளையிடமும், இலக்கியங்களை கரந்தைப் புலவர் வேங்கடராமப் பிள்ளையிடம் கற்றார்.

தனி வாழ்க்கை

ஆர். வேங்கடாசலம் பிள்ளை, தந்தை காலமானதால் குடும்பத் தொழிலான உழவுத் தொழிலில் ஈடுபட்டார். கணக்குப் பிள்ளையாகவும் ஊர் மணியமாகவும் சில காலம் பணியாற்றினார். பள்ளி நண்பர் இராதாகிருட்டிணப்பிள்ளை, 1911-ல், கரந்தையில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார். அவரது அழைப்பின் பேரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றார். ஆசிரியராக பணிபுரிந்தார்

ஆர். வேங்கடாசலம் பிள்ளை மனைவி மங்களத்தம்மை. அவர் இளம் வயதிலேயே மறைந்ததால் ஜெகதாம்பாள் என்பவரை மணம் செய்துகொண்டார். மகனுக்கு தனது தமிழ் ஆசானின் நினைவாக ‘சுப்பிரமணியம்’ என்று பெயர் சூட்டினார்.

கல்விப்பணி

ஆர். வேங்கடாசலம் பிள்ளை கோனாபாட்டில் உள்ள கற்பக விநாயகர் கலாசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1922-ல், தான் பயின்ற தஞ்சை தூய பேதுருப் பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

1932-ல், திருவையாறு அரசர் கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.

1942-ல் பணி ஓய்வு பெற்றார்.

ஆர். வேங்கடாசலம் பிள்ளை கரந்தைப் புலவர் கல்லூரியில் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 1946 முதல் அக்கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஆர். வேங்கடாசலம் பிள்ளை கோனாபாட்டில் பணியாற்றியபோது, பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரின் அறிமுகம் கிடைத்தது. மேலைச்சிவபுரி ‘சன்மார்க்க சபை’யின் தொடர்பும் ஏற்பட்டது. அங்கு மாதந்தோறும் நிகழ்ந்து வந்த பல இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டார். அதன் மூலம் ரா. ராகவையங்கார், அரசஞ்சண்முகனார், உ.வே. சாமிநாத ஐயர், புலவர் அனந்தராம ஐயர் போன்றோரது நட்பையும், மதிப்பையும் பெற்றார்.

உ.வே.சா. எழுதிய சீவகசிந்தாமணியில் செய்ய வேண்டிய சில திருத்தங்களை ‘பெயர் விழையான்’ என்ற புனைபெயரில் எழுதி அனுப்பி திருத்தம் மேற்கொள்ளச் செய்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் மூலமாகவும், திருவையாறு அரசர் கல்லூரி மூலமாகவும் எண்ணற்ற புலவர் பெருமக்களையும், தனித்தமிழ் அன்பர்களையும் உருவாக்கினார். ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, டாக்டர் மா. இராசமாணிக்கனார், முத்தானந்த அடிகள் உள்ளிட்ட பலர் வேங்கடாசலம் பிள்ளையின் மாணவர்கள்.

பதிப்புப்பணி

ஆர். வேங்கடாசலம் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டாருடன் இணைந்து தொல்காப்பியத்திற்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைப் பதிப்பிக்கும் பணியை மேற்கொண்டார். த.வே. உமாமகேஸ்வரம் பிள்ளை, 1929-ல், தமிழ்ச் சங்க வெளியீடாக அந்நூலை வெளியிட்டார்.

தமிழ்ப் பொழில் இதழ்
எச்சம் - கட்டுரை - தமிழ்ப் பொழில் இதழில்

தமிழ்ப் பொழில் இதழில் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் நாடக வடிவில் வெளியிட்டார். தொல்காப்பியம், தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - பேராசிரியர் (தெய்வச்சிலையார்) உரை, ஏறுதழுவுதல், இளவேனிற் காலத்து இன்ப மாலை போன்ற ஆய்வுக்கட்டுரைகளையும், நாட்டுப் புறங்களின் கல்வியும் நாட்டாண்மைக் கழகங்களின் கடமையும், நற்றாயும் செவிலித்தாயும் போன்ற தலைப்புகளில் மொழி உணர்வு சார்ந்த கட்டுரைகளையும் எழுதினார். 'மாணவர் பகுதி'யில், கவியரசர் புகழேந்தி, ஒட்டக்கூத்தர், பச்சையப்ப முதலியார் போன்ற நாடகங்களையும் அ. சோமசுந்தரம், அழுமூஞ்சிச் செல்லையா போன்ற கதைகளையும் எழுதினார். இலக்கண விளக்கங்கள், கலைச் சொல் விளக்கங்கள் பலவற்றை எழுதினார்.

“உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் தாம் பேசுங்காலும் எழுதுங்காலும் தமிழ்ச் சொற்களையே எடுத்தாளுதல் தமது கடமை என்று உறுதி கொள்ளல் வேண்டும். சிறார் முதல் கிழவர் ஈறாக உள்ளார் யாவரும் பிறமொழிக் கலப்பினை எவ்வாற்றானும் வேண்டாது விட்டொழித்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும்'' என்று தமிழ்ப் பொழில் இதழ் மூலம் வலியுறுத்தினார்.

விருதுகள்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவின் போது, ஆர். வேங்கடாசலம் பிள்ளை, கரந்தைக் கவியரசு என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஆர். வேங்கடாசலம் பிள்ளையை, மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் என்று பாராட்டினார்.

மறைவு

ஆர். வேங்கடாசலம் பிள்ளை டிசம்பர் 16, 1953 அன்று காலமானார்.

நினைவுநூல்

கரந்தை ஜெயக்குமார் கரந்தைக் கவியரசு என்ற பெயரில் ஆர். வேங்கடாசலம் பிள்ளை பற்றி நூல் எழுதியுள்ளார்

வரலாற்றுஇடம்

பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், த.வே. உமாமகேஸ்வரம் பிள்ளை போன்றோர் வரிசையில் இடம் பெறத் தக்கவர், ஆர். வேங்கடாசலம் பிள்ளை. தனித் தமிழில் எழுதுவது பேசுவது என்பதைத் தானும் பின்பற்றி தனது மாணவர்களையும் பின்பற்றச் செய்தார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ்ப் பொழில் இதழ் மூலம் பல கலைச் சொற்களை உருவாக்கினார். தமிழ் மொழி வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் உழைத்த முன்னோடி அறிஞர்களுள் ஒருவராக ஆர். வேங்கடாசலம் பிள்ளை மதிப்பிடப்படுகிறார்.

ஆசானாற்றுப்படை

நூல்கள்

  • ஆசானாற்றுப்படை
  • சிலப்பதிகார நாடகம்
  • மணிமேகலை நாடகம்
  • அகநானூறு உரை
  • மொழி அரசி
  • செந்தமிழ்க்கட்டுரைகள்
  • வேங்கட விளக்கு
  • உரைநடைக் கோவை
  • தொல்காப்பியம் - சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை(ந.மு. வேங்கடசாமி நாட்டாருடன் இணைந்து பதிப்பித்தது)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jan-2023, 15:32:31 IST