under review

முப்பத்திரண்டு அறங்கள்

From Tamil Wiki
32 அறங்கள் (தருமம்) பற்றி அறப்பளீசுர சதகம்
32 அறங்கள் பற்றி திவாகர நிகண்டு

மனித வாழ்வில் அறம் செய்தலை இன்றியமையாததாக இலக்கியங்கள் பேசுகின்றன. மக்களின் வாழ்வில் முப்பத்திரண்டு அறங்கள் முக்கியப் பங்கு வகித்ததாக அக்கால இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்றன. திவாகரம், அறப்பளீசுர சதகம் போன்ற நிகண்டு நூல்கள் மக்கள் வாழ்வில் பின்பற்றிய அறங்கள் பற்றிய பட்டியல்களைத் தந்துள்ளன.

அறம்

திருக்குறள் தொடங்கி சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி போன்ற ஐம்பெரும் காப்பியங்களும் உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி போன்ற ஐஞ்சிறுங் காப்பியங்களும், அறப்பளீசுர சதகம் போன்ற பல இலக்கிய நூல்களும் பல்வேறு அறங்களைப் பற்றியும், அறம் செய்தலைப் பற்றியும் வலியுறுத்துகின்றன.

அறம் பற்றிய புராணக் கதை

சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பார்வதி தேவி தன் கரங்களால் மூடியதால் உலகம் இருண்டது. சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்தை வழக்கம் போல் செயல்பட வைத்தார். விளையாட்டாகச் செய்தாலும் அது வினையானதால் பார்வதி தேவி பூவுலகில் பிறந்து, யாகம், தவம் செய்து, இரு நாழி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களைச் செய்து பின் தன்னை அடையுமாறு சிவன் கூறினார்.

அவ்வாறே பார்வதி தேவியும் பூவுலகில் பிறந்து திருவண்ணாமலை, மாங்காடு, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் தங்கி தவம் செய்து, யாகங்கள் செய்து முப்பத்திரண்டு அறங்களை மேற்கொண்டு பின் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. இதனால் ‘அறம் வளர்த்த நாயகி’ என்று பார்வதி தேவி போற்றப்பட்டார்.

அறங்கள் பற்றி அறப்பளீசுர சதகம்

முப்பத்திரண்டு அறங்கள் பற்றி அறப்பளீசுர சதகம் கீழ்காணுமாறு குறிப்பிட்டுள்ளது

பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்
பிள்ளைகள் அருந்திடும் பால், பேசரிய சத்திரம், மடம், ஆவுரிஞ்சுகல்
பெண்போகம், நாவிதன், வணான், மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு
வாயின்உறை, பிணம்அடக்கல், வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்
வழங்கல், சுண்ணாம்பு தவுதல், சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்
செய்தல், முன்னூலின் மனம், திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமயருக்குண்டி,
தேவராலாயம், அவுடதம்; அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட்டறங்களும்முன்
அன்னைசெயல்; அருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அறங்கள் பற்றி திவாகர நிகண்டு

முப்பத்திரண்டு அறங்கள் எவை எவை என திவாகர நிகண்டு கூறும் பட்டியல்.

ஆதுலர் சாலை, ஓதுவார்க்கு உணவு, அறு சமயத்தோர்க்கு உணவு, பசுவுக்கு வாயுறை, சிறைச்சோறு, ஐயம், தின்பண்டம், மகச்சோறு, மகப்பெறுவித்தல், மகவளர்த்தல், மகப்பால், அறவைப் பிணஞ்சுடுதல், அறவைத் தூரியம்; வண்ணார், நாவிதர், வதுவை, பூணூல், நோய் மருந்து, கண்ணாடி, காதோலை, கண்மருந்து, தலைக்கெண்ணெய், பெண்போகம், சுண்ணம், பிறர்துயர் காத்தல், தண்ணீ ர்ப் பந்தர், மடம், தடாகம், கா, ஆவுரிஞ்சி நடுதறி, ஏறு விடுத்தல், விலைகொடுத்துக் கொலையுயிர் மீட்டல், இச்செயல் முப்பத்திரண்டு அறம் என்ப."

முப்பத்திரண்டு அறங்களும் விளக்கமும்

முப்பத்திரண்டு அறங்கள் பற்றிய பட்டியல் இது. இலக்கிய நூல்களுக்கிடையே இந்தப் பட்டியலில் சிறு சிறு மாறுபாடுகளும் காணப்படுகின்றன.

  • ஆதுலர்க்குச் சாலை (ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களும் தங்கி வாழ்வதற்கு விடுதி அமைத்தல்)
  • ஓதுவார்க்கு உணவு (கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்தல்)
  • அறுசமயத்தோர்க்கு உண்டி (சைவம், வைணம், சாக்தம், கௌமாரம் , காணபத்தியம், சௌரம் என்னும் அறுவகை சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவிடுதல்)
  • பசுவிற்கு வாயுரை (பசுவிற்கு உணவு)
  • சிறைச்சோறு (சிறைக் கைதிகளுக்கு உணவு)
  • ஐயம் (இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல் இயன்ற உதவி செய்தல்)
  • தின்பண்டம் நல்கல் (விழாக் காலங்களில் இனிப்பு வகை உணவுகள், சிற்றுண்டிகள் வழங்குதல்)
  • அறவைச் சோறு (ஆதரவற்றோருக்கு உணவளித்தல்)
  • மகப்பெறுவித்தல் (பெண்களின் பிரசவ காலத்தில் உடனிருந்து உதவுதல்)
  • மகவு வளர்த்தல் (குழந்தைகளைப் பராமரித்து அவர்களை வளர்க்க உதவுதல்)
  • மகப்பால் வார்த்தல் (தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கும் உணவுக்கு வழியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கும் பாலளித்தல்)
  • அறவைப் பிணஞ்சுடல் (ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்டோரின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்தல்)
  • அறவைத் தூரியம் (ஆதரவற்றோர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல்)
  • சுண்ணம் (தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல்)
  • நோய்மருந்து (நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல்)
  • வண்ணார் (ஏழை எளியோர்கள், ஆதரவற்றோர்கள், பிணியாளர்களின் துணி துவைக்க உதவுதல்)
  • நாவிதர் (ஏழை எளியோருக்கு தலை முடி திருத்துதல், முகச்சவரம் செய்ய உதவுதல்)
  • கண்ணாடி (ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்திச் சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல்)
  • காதோலை (பெண்கள் காதணி இல்லாது இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல்)
  • கண்மருந்து (பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மை அளித்தல்)
  • தலைக்கு எண்ணெய் (எண்ணெய் பூசாது காய்ந்த தலைகளோடு இருக்கும் ஏழை எளியோருக்கும், ஆதரவற்றோருக்கும்தலைக்கு எண்ணெய் வாங்கித் தந்து உதவுதல்)
  • பெண் போகம் (தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்துத் தந்து அவர்களது காம நோய் தணிக்க உதவுதல்)
  • பிறர் துயர் தீர்த்தல் (காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு, வாழ்க்கையில் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்து உதவுதல்)
  • தண்ணீர் பந்தல் (வெயிலில் வாடி தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் அளித்து உதவுதல்)
  • மடம் (வழிப்போக்கர்கள், வறியோர்கள் தங்க விடுதி அமைத்தல்)
  • தடம்(வழிப்போக்கர்கள், வறியோர்கள் நீர் அருந்தி இளைப்பாறக் குளம் தோண்டுதல், அவற்றைப் பராமரித்தல்)
  • சோலை (நிழல் தரும் மரங்கள், சோலைகள் அமைத்து பயணம் செய்யும் மக்கள் தங்கி இளைப்பாற்றிச் செல்ல உதவுதல்)
  • ஆவுறுஞ்சு தறி (பசுக்கள் மேயும் இடங்களிலும், பசுக் கொட்டில்களிலும் அவை தங்கள் உடலைத் தேய்த்துக்கொள்ள உராய்ந்து கொள்ளும் கல் தூண்களை நிறுவுதல்)
  • ஏறு விடுத்தல் (பசுக்களைச் சினைப்படுத்த தரமான காளைகளைக் கொடுத்து உதவுதல்)
  • விலங்கிற்கு உணவு (பல்வேறு விலங்கினங்களும் பசியாற உணவளித்தல்)
  • விலை கொடுத்து உயிர் காத்தல்(கொலை செய்யப்படுவதற்காகவும், பலியிடப்படுவதற்காகவும் அழைத்துச் செல்லப்படும் உயிர்களை விலைக்கு வாங்கி அவற்றை இறுதிவரை பாதுகாத்தல்)
  • கன்னிகா தானம் (ஏழைப் பெண்களுக்கு, ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் நடக்க உதவுதல்; திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்குத் திருமணம் செய்து வைத்து உதவுதல்)

உசாத்துணை


✅Finalised Page