கொ.மா. கோ. இளங்கோ
- இளங்கோ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: இளங்கோ (பெயர் பட்டியல்)
கொ.மா. கோ. இளங்கோ (கொட்டு முக்கல மாடசாமிராஜா கோதண்டம் இளங்கோ: பிறப்பு - அக்டோபர் 24, 1972) தமிழ் எழுத்தாளர். சிறார்களுக்கான படைப்புகள் பலவற்றை எழுதி வருகிறார். பிற மொழிகளிலிருந்து சிறந்த சிறார் கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்து வருகிறார். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கதைப் பாடல்கள் எனச் செயல்பட்டு வருபவர். தனது சிறார் இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
கொ.மா. கோ. இளங்கோ அக்டோபர் 24, 1972-ல், எழுத்தாளர்கள் கொ.மா. கோதண்டம் - ராஜேஸ்வரி இணையருக்குப் பிறந்தார். தொடக்க, மேல்நிலைக் கல்விகளைத் தொடர்ந்து இளநிலை இயந்திரவியல், முதுநிலை வணிக மேலாண்மைப் படிப்பை நிறைவு செய்தார்.
தனி வாழ்க்கை
கட்டுமான துறை, சிமெண்ட் உற்பத்தித் துறைகளில் இந்தியா மற்றும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா போன்ற பல தேசங்களில் பணியாற்றினார். மனைவி வித்யா, ஆசிரியர். இவர்களுக்கு இரு மகன்கள்.
இலக்கிய வாழ்க்கை
தந்தையின் சேகரிப்பில் இருந்த பெ.தூரன், வாண்டுமாமா, டாக்டர் பூவண்ணன், பொன்ராசன் போன்றோரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். பூந்தளிர், ரத்னபாலா, கோகுலம் போன்ற இதழ்கள் வாசிப்பார்வத்தை வளர்த்தன. ராதுகா பதிப்பகம் மூலம் வெளியான ரஷ்யப் படைப்புகள் எழுத்தார்வத்தைத் தூண்டின. தந்தை கொ.மா.கோதண்டம் மூலம் மரபிலக்கியம் அறிமுகமானது. இளங்கோவின் முதல் படைப்பான கவிதை, கோகுலம் இதழில், அவரது 11-ம் வயதில் வெளியானது. ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ என்ற முதல் சிறுகதையும் கோகுலம் இதழில் வெளியானது. இளங்கோவின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்தார் அழ.வள்ளியப்பா. இளங்கோ, ராஜபாளையம் கோகுலம் சிறுவர் சங்கத்தின் செயலாளராக இருந்து வானொலி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கதை, கவிதை, கட்டுரைகளை எழுதினார்.
உயர்கல்வி மற்றும் பணிநிமித்தம் சில ஆண்டுகாலம் எழுதாமல் இருந்தார். 2011-க்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தார். எழுத்தாளர் யூமா வாசுகி தந்த உந்துதலால் மொழியாக்கங்களில் கவனம் செலுத்தினார். ஹிரோஷிமா-நாகசாகி குண்டுவெடிப்பின் கதிரியக்கத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறாரின் வாழ்வை மையப்படுத்தி ஜப்பான் மொழியில் தோசி மாருகி எழுதிய “மாயி சான் - ஹிரோசிமாவின் வானம்பாடி” என்ற நூல் தான் இளங்கோவின் முதல் மொழிபெயர்ப்பு நாவல். தொடர்ந்து சிறார் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கதைப் பாடல்கள் என்று நிறைய எழுதினார்.
கொ.மா.கோ. இளங்கோவின் ‘ஜிமாவின் கைபேசி’ நாவல் அறிவியல் புனைகதை. ‘தோட்டிகள்’ என அழைக்கப்படும் மலம் அள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவரான ‘சஞ்சீவி’ என்பவருடனான தனது சிறு வயது அனுபவங்களை சிறுவர்கள் மனதில் பதியுமாறு ’சஞ்சீவி மாமா’ என்ற நாவலில் எழுதியுள்ளார். பாரதி புத்தகாலயத்தின் ‘புக் ஃபார் சில்ட்ரன்’ பதிப்பகம் தொடர்ந்து இவரது நூல்களை வெளியிட்டு வருகிறது. ‘நேஷனல் புக் ட்ரஸ்ட்’ மூலமாகவும் இவரது நூல்கள் வெளியாகியுள்ளன. இந்து தமிழ் திசை - மாயா பஜார் பகுதி, தினமலர் - பட்டம், புதிய பாரதி, பெரியார் பிஞ்சு, பஞ்சுமிட்டாய் போன்ற இதழ்களிலும் சிறார்களுக்கான கதைகளை எழுதி வருகிறார். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கதைப் பாடல்கள் என 60-க்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார். இவரது படைப்புகள் சில ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பாட நூல்கள்
ஜெர்மன் நாட்டைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கி வரும் ‘அனைத்துலகத் தமிழ்க் கல்வி பண்பாடு அறிவியல் மேம்பாட்டு இணையம்’ உருவாக்கியுள்ள புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் நிலைப் பாடப் புத்தகங்களில், “செட்டை கிழிந்த வண்ணத்துப்பூச்சி”, “உப்பளத்துக்கு வந்த வெள்ளையானை”, “கதிரவனை ஒளித்த சிறுமி” போன்ற இவரது கதைகள் இடம் பெற்றுள்ளன.
இலக்கியச் செயல்பாடுகள்
மாணவர்கள், பள்ளிச் சிறுவர்களுடனான கலந்துரையாடல், கதை சொல்லல் நிகழ்வுகள், நேரலை நிகழ்வுகள் மூலம் சிறார் இலக்கியம் குறித்த உரையாடல் நிகழ்வுகள் எனப் பங்களிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.
விருதுகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வழங்கிய கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது (ஜிமாவின் கைபேசி நாவலுக்காக)
- இராஜபாளையம் மணிமேகலை மன்றம் வழங்கிய சிறந்த சிறார் இலக்கியப் படைப்பாளிக்கான ஐஸ்வர்யா இலக்கிய விருது
- திருப்பூர் இலக்கிய விருது (ஜிமாவின் கைபேசி நாவலுக்காக)
- திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது (மக்கு மாமரம் நூலுக்காக)
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய குன்றக்குடி அடிகளார் நினைவு விருது (எட்டுக்கால் குதிரை நாவலுக்காக)
- நெய்வேலி புத்தக்காட்சியில் வழங்கப்பட்ட 2017-ம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் விருது
- வாசகசாலை அமைப்பு வழங்கிய 2020-ம் ஆண்டின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது (சூரியனை ஒளித்து வைத்த சிறுமி)
- கம்பம், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை வழங்கிய 2020-ன் சிறந்த சிறார் இலக்கியப் பரிசு (சூரியனை ஒளித்து வைத்த சிறுமி)
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) வழங்கிய, 2021-ம் ஆண்டுக்கான ‘குழந்தைக் கவிஞர்’ அழ வள்ளியப்பா விருது
இலக்கிய இடம்
கொ.மா. கோ. இளங்கோ சிறார் இலக்கியப் படைப்பாளியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பங்காற்றியவர். இவரது படைப்புகள் பற்றி எழுத்தாளரும், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான உதயசங்கர், “குழந்தை இலக்கிய மொழிபெயர்ப்புப் படைப்புகளில் அவருடைய (இளங்கோ) தேர்வு குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற மொழிநடையும், கதை சொல்லும் பாணியும், அவரை குழந்தை இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமானவராக மிளிரச்செய்கிறது.” என்று மதிப்பிட்டுள்ளார்.
நூல்கள்
சிறார் நாவல்கள்
- சஞ்சீவி மாமா
- பச்சை வைரம்
- எட்டுக்கால் குதிரை
- பஷிராவின் புறாக்கள்
- ஜிமாவின் கைபேசி
- வானத்தை எரித்தது யார்?
- பிரியமுடன் பிக்காசோ
- தீப்பறவை
- வாசிக்காத புத்தகத்தின் வாசனை
சிறார் சிறுகதைகள்
- சூரியனை ஒளித்து வைத்த சிறுமி
- நட்சத்திரக் கண்கள்
- ஆயிரங்கால் பூச்சி
- அலைகளின் அம்மா யாரு?
- மந்திரக் கைக்குட்டை
- ஓநாய் கண்டறிந்த உண்மை
- குட்டி டாக்டர் வினோத்
- தேனென இனிக்கும் தீஞ்சுவைக் கதைகள்
- மலைபூதம் வாய் பிளந்த மர்மம்
மொழிபெயர்ப்பு நூல்கள்
- மாயி-சான் - ஹிரோசிமாவின் வானம்பாடி (மூலம்:தோஷி மாருகி)
- குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் (மூலம்:லியோ டால்ஸ்டாய்)
- ராஜா வளர்த்த ராஜாளி (மூலம்:லியோ டால்ஸ்டாய்)
- விடுமுறை வந்தாச்சு (மூலம்:ரவீந்திரநாத் தாகூர்)
- மறக்கமுடியாத விலங்குகள் (மூலம்:ரஷ்கின் பாண்டே)
- ஆர்த்தரின் சூரியன் (மூலம்:ஹட்ஜாக் குல்னஷரியன்)
- ஆரோலட்டும் ஊதாக்கலார் கிரேயானும் (மூலம்:க்ரோகட் ஜான்சன்)
- மந்திர விதைகள் (மூலம்:மித்சுமாசா அனோ)
- ஷாலுவின் புளுபெர்ரி (மூலம்:ராபர்ட் மெக்லோஸ்கே)
- பெர்டினன் (மூலம்:மன்ரோ லீப்)
- உயிர் தரும் மரம் (மூலம்:ஷெல் சில்வர்ச்டீன்)
- மக்கு மாமரம் (மூலம்:ஏ. என். பெட்னேகர்)
- ரெட் பலூன் (மூலம்:ஆல்பர்ட் லாமொரிஸ்)
- அன்புக்குரிய யானைகள் (மூலம்:யுகியோ சுசியா)
- காக்கைச்சிறுவன் (மூலம்:டரோ யஷிமா)
- அன்பின் பிணைப்பு (மூலம்:புஷ்பா சக்சேனா)
- குட்டித் தாத்தா (மூலம்:நடாலே நோர்டன்)
- ஆப்பிள் ஜானி (மூலம்:அலிகி)
- மாஷாவின் மாயக்கட்டில் (மூலம்:கலினா லெபெதெவா)
- சிங்கத்தின் குகையில் சின்னக்குருவி (மூலம்:எலிசா கிலேவேன்)
- தப்பியோடிய குட்டிமுயல் (மூலம்:மார்கரெட் வைஸ் பிரவுன்)
- தேனீக்களின் விந்தை உலகம் (மூலம்:எஸ்.ஐ.பரூக்)
- வேட்டைக்காரன் மெர்கேன் (மூலம்:கென்னடி பாவ்லிஷின்)
- சிவப்புக்கொண்டை சேவல், (மூலம்:க.ஓவ்சீனிக்கவ்)
- எலி எப்படிப் புலியாச்சு! (மூலம்:மர்சியா ப்ரௌன்)
- ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் (மூலம்:வண்ட கக்)
- அழகிய பூனை (மூலம்:வண்ட கக்)
- குட்டன் ஆடு (மூலம்:மன்ரோ லீப்)
- ராஜாவின் காலடி (மூலம்:ரால்ப் மில்லர்)
- சாலுவின் ப்ளூபெர்ரி (மூலம்:ராபர்ட் மெக்லோஸ்கே)
- வில்லி எலி (மூலம்:அல்டா தபோர்)
- நீங்க என்னோட அம்மாவா? (மூலம்:பி.டி.ஈஸ்ட்மேன்)
- சிறகடிக்க ஆசை (மூலம்:டி.சுஜாதா தேவி-தெலுங்கில் பால சாகித்ய விருது பெற்ற நூல்)
- கதைப் புதையல் பாகம் 1 & 2
- பெட்டுனியா - உலகச் சிறார் கதைகள்
உசாத்துணை
- கொ.மா.கோ. இளங்கோ வலைத்தளம்
- தமிழ் ஆன் லைன் தென்றல் இதழ்: எழுத்தாளர் பகுதிக் கட்டுரை
- கொ.மா. கோ. இளங்கோ சிறுகதைகள்: இந்து தமிழ் திசை
- கொ.மா. கோ. இளங்கோ கட்டுரைகள்: இந்து தமிழ் திசை
- கொ.மா. கோ. இளங்கோ நூல்கள்
- குழந்தை இலக்கியம்: தினமலர் இதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:20 IST