under review

மயிலை சீனி. வேங்கடசாமி

From Tamil Wiki
மயிலை சீனி வேங்கடசாமி
மயிலை சீனி. வேங்கடசாமி
மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வு, வீ.அரசு
மயிலை சீனி.வேங்கடசாமி வாழ்வு, வீ.அரசு

மயிலை சீனி. வேங்கடசாமி (பிறப்பு: டிசம்பர் 16, 1900 - இறப்பு: ஜூலை 8, 1980) வரலாற்று ஆய்வாளர். தமிழறிஞர். எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை, வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தமிழுக்கு பௌத்த, சமண சமயங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதிய ஆய்வுகள் முக்கியமானவை.

பிறப்பு, கல்வி

மயிலை சீனி. வேங்கடசாமி, சென்னை மயிலாப்பூரில், சீனிவாச நாயகர் - தாயாரம்மாள் இணையருக்கு, டிசம்பர் 16, 1900  அன்று பிறந்தார். தந்தை சித்த மருத்துவர். மூத்த சகோதரர்  சீனி. கோவிந்தராஜன் தமிழறிஞர். ‘திருக்குறள் காமத்துப்பால் நாடகம்’, ‘திருமயிலை நான்மணி மாலை’ போன்ற படைப்புகளைத் தந்தவர். அவரிடம் வேங்கடசாமி தமிழ் பயின்றார். பின் மகாவித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றார்.

உயர்நிலைக் கல்வியை முடித்தவர், 1920-ல் சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் கற்பதற்காகச் சேர்ந்தார். ஓராண்டு பயின்றார். ஆனால், குடும்பச் சூழல்களால் அதனைத் தொடர இயலவில்லை. பின் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மயிலை சீனி வேங்கடசாமி தன் 22-வது அகவையில் தந்தையும் சகோதரரும் மறைந்ததால் குடும்பப் பொறுப்பை ஏற்றார் . மோட்டார் உதிரிப்பாகம் விற்கும் கடையில் எழுத்தராகப் பணிபுரிந்தார். பின் மயிலாப்பூர் நகராண்மைக் கழகம் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இறுதிவரை ஆசிரியராகவே பணியாற்றி, 1955-ல், பணி ஓய்வு பெற்றார். திருமணம் செய்துகொள்ளவில்லை.

இதழியல் வாழ்க்கை

1925-ல், நீதிக்கட்சி நடத்திய ‘திராவிடன்’ நாளிதழில் பணிக்குச் சேர்ந்தார். ஆசிரியர் குழுவில் இணைந்து சில காலம் பணியாற்றினார். ‘லக்ஷ்மி’ இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதினார். ஈ.வெ. ராமசாமி பெரியாரின் ’குடியரசு’ இதழுக்குப் பல கட்டுரைகளை எழுதினார். தொடர்ந்து ‘ஊழியன்’, ‘ஆரம்பாசிரியன்’ போன்ற பல இதழ்களில் எழுதினார்.

அரசியல் கொள்கை

மயிலை சீனி வேங்கடசாமி ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்க ஈடுபாடும் பகுத்தறிவு பார்வையும் கொண்டவர். “வேதம் , புராணம், கடவுள், கோயில், விதி, வினை என்று சொல்லிக்கொண்டு நாளுக்குநாள் முட்டாளாகப் போகிற வழக்கத்தை விட்டுவிட்டு எந்த விஷயத்தையும் பகுத்தறிவுகொண்டு ஆராயும்படி கேட்டுக்கொள்கிறேன்” (குடியரசு அக்டோபர் 16, 1032) என்று அவர் தன் பார்வையை பதிவுசெய்துள்ளார்.

ஆய்வுகள்

மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்றாய்வு, இலக்கிய வரலாற்று ஆய்வு என்னும் இரு தளங்களில் செயல்பட்டவர். தமிழ், வடமொழி. ஆங்கிலம், திராவிட மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஊர்தோறும் சென்று கல்வெட்டு ஆய்வினை மேற்கொண்டார். சுயமாகப் பயின்று கல்வெட்டுகளைப் படிக்கும் திறன் பெற்றார். கோலெழுத்து, கிரந்த எழுத்து, பல்லவர் எழுத்து, பிராமி எழுத்து எனப் பல்வகையான எழுத்து முறைகளை அறிந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளை முறையாகப் படிக்கக் கற்றார். தொன்மையான சாசனங்களைச் சேகரித்தார்.

மயிலை சீனி.வெங்கடசாமி ‘செந்தமிழ்ச்செல்வி’, ’ஆராய்ச்சி’, ஈழகேசரி’, ‘ஆனந்தபோதினி’, ‘சௌபாக்கியம்’, ‘செந்தமிழ்’, ‘திருக்கோயில்', ‘நண்பன்’, ‘கல்வி’, ‘தமிழ் நாடு,', ‘தமிழ்ப் பொழில்’  போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

வரலாற்றாய்வு

மயிலை சீனி.வேங்கடசாமி தமிழக வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருந்த தொடக்க காலத்தில் செயல்பட்ட அறிஞர். தொல்லியல் சான்றுகளையும் இலக்கியச் சான்றுகளையும் இணைத்து வாசித்து தமிழ் வரலாற்றின் விடுபட்ட பகுதிகளை எழுதினார்.

மயிலை சீனி வேங்கடசாமியின் ஆய்வுக் காலம் மூன்றாகப் பிரிக்கத் தக்கது என்று வீ.அரசு மயிலை சீனி வேங்கடசாமி ( இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) நூலில் கூறுகிறார். வசதிக்காக நான்கு காலகட்டங்களாக பிரிக்கலாம். முதற்காலகட்டத்தில் முதன்மையாக இலக்கிய ஆய்வுகளையே செய்துள்ளார். அவை பெரும்பாலும் இலக்கியத்தில் கிறிஸ்தவ, பௌத்த, சமண மதங்கள் ஆற்றிய பங்களிப்பு சார்ந்த ஆய்வுகள்.

இரண்டாம் காலகட்டத்தில் பல்லவர் கால வரலாற்றை கல்வெட்டுகள், நூல்செய்திகளின் அடிப்படையில் ஆய்வுசெய்துள்ளார். இவை முறையான வரலாற்றாய்வுகள். கல்வெட்டுச் செய்திகளின் அடிப்படையில் மகேந்திரவர்மன் (1955), வாதாபி கொண்ட நரசிம்ம வர்மன் (1957), மூன்றாம் நந்திவர்மன் (1958) ஆகிய வரலாற்றாய்வு நூல்களை எழுதினார். மூன்றாம் காலகட்டத்தில் மீண்டும் இலக்கியவரலாற்று ஆய்வுகளைச் செய்தார்.

நான்காம் காலகட்டத்தில் மீண்டும் வரலாற்றாய்வுகளுக்கு மயிலை சீனி வேங்கடசாமி திரும்பினார். 1966-ல் சென்னை பல்கலை கழகம் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவை மயிலை சீனி.வேங்கடசாமி நடத்தினார். அதை சென்னை பல்கலைக்கழக ஆய்விதழ் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக சங்ககாலத்தில் இருந்த வெவ்வேறு நாடுகளை பற்றி ஆய்வுசெய்து துளிநாட்டு வரலாறு (1966), கொங்குநாட்டு வரலாறு (1974) ஆகிய நூல்களையும், ‘தமிழநாட்டு வரலாறு-சங்ககால- அரசியல்’ (1983), களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (1980) ஆகிய நூல்களையும் எழுதினார்.

இலக்கிய வரலாற்றாய்வு

மயிலை சீனி வேங்கடசாமி தொடக்க காலம் முதலே இலக்கியவரலாறு சார்ந்து ஆய்விதழ்களில் எழுதிவந்தார். இவருடைய ஆய்வுவாழ்க்கையின் முதற்காலகட்டத்தில் இலக்கியத்தில் மதங்களைப் பற்றிய ஆய்வுகளைச் செய்தார். மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய முதல் நூல் கிறிஸ்தவமும் தமிழும். 1936-ல் வெளியான இந்நூல் 1934-ல் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலை பள்ளியில் தெம்.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை நடத்திய கருத்தரங்கில் ச.த.சற்குணர் ஆற்றிய உரையில் இருந்து தூண்டுகோல் கொண்டு எழுதப்பட்டது.

மயிலை சீனி வேங்கடசாமியின் முதன்மையான கொடையாக கருதப்படுவது அவர் தமிழக வரலாற்றில் சமணம், பௌத்தம் ஆகியவை வகித்த பங்கை தொல்தமிழ் நூல்சான்றுகளைக் கொண்டு நிறுவியமைதான். அவர் 1940-ல் எழுதிய ‘பௌத்தமும் தமிழும்’ ஒரு முன்னோடி நூலாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து தம்மபத அர்த்த கதை என்னும் நூலில் இருந்து (புத்தகோஷர் எழுதிய தம்மபதார்த்த கதா) சில கதைகளையும் வேறு சில கதைகளையும் மொழியாக்கம் செய்து பௌத்த கதைகள் என்னும் நூலை 1952-ல் வெளியிட்டார். 1956-ல் கௌதமபுத்தர் என்னும் புத்தர் வரலாற்று நூலை எழுதினார். 1960-ல் புத்தர் ஜாதகக் கதைகள் என்னும் நூலை எழுதினார்.

மயிலை சீனி வேங்கடசாமி 1954-ல் சமணமும் தமிழும் என்னும் நூலை எழுதினார். தொடர்ந்து காந்தருவதத்தையின் இசைத்திருமணம் (1943) என்னும் நூலில் சமணமும் தமிழும் என்னும் நூலை எழுதிக்கொண்டிருக்கும் செய்தியை பதிவுசெய்திருந்தார். மகாபலிபுரத்து ஜைனசிற்பம் (1950) போன்ற நூல்களை எழுதினார்.

மயிலை சீனி வேங்கடசாமி தன் ஆய்வு வாழ்க்கையின் இரண்டாம் காலகட்டத்தில் மீண்டும் இலக்கிய வரலாற்றாராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1962 பிப்ரவரி மாதம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ்த்துறையில் மூன்று அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவை ‘சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்’ (1970) என்ற பெயரில் நூலாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டன. அதன்பின் சங்ககால மன்னர்கள், களப்பிரர்கள் குறித்தும் பண்டைய எழுத்துருவங்கள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டார். பழங்கால தமிழர் வணிகம் (1976) சங்ககாலத்து பிராமி கல்வெட்டெழுத்துக்கள் (1981) ஆகிய நூல்கள் இக்காலத்தில் வெளிவந்தவை.

பதிப்புப் பணி

மயிலை சீனி. வேங்கடசாமி, யாப்பருங்கல விருத்தியுரையை வாசித்தபோது அதில் எடுத்துக்காட்டுக்களாகக் குறிப்பிடப்பட்டிருந்த நூல்கள் பலவும் வழக்கில் இல்லாததை உணர்ந்தார். வழக்கில் இல்லாது மறைந்து போன அவ்வகை நூல்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதுவே பின்னர் 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.

சமண இலக்கணநூல்களான பன்னிரு பாட்டியல் நூல்களில் மறைந்துபோன நூலாகிய அவிநயம் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதை தொகுத்து அந்நூலை பெரும்பாலும் மீட்டெடுத்தார்.

சமூக வாழ்க்கை

மயிலை சீனி. வேங்கடசாமி, பெரியார் ஈ.வெ. ராமசாமி, பாரதிதாசன், குத்தூசி குருசாமி போன்றோரது நட்பால் சுயமரியாதை இயக்கச் சார்புடையவரானார். 1937-1938-ல் நடந்த முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1963-1964-ல் தமிழக எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பணிபுரிந்தார். தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். தமிழகப்புலவர் குழுவில் அங்கம் வகித்தார். ச.த. சற்குணர், மறைமலையடிகள், திரு.வி.கலியாண சுந்தர முதலியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சுப்ரமண்யப் பிள்ளை, சுவாமி விபுலானந்தர், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்ற அறிஞர்களுடன் கலந்துரையாடி தனது இலக்கிய அறிவை மேம்படுத்திக் கொண்டார்.

சமண சமய அறிஞர்களான ஜீவபந்து ஸ்ரீபால், அ. சக்கரவர்த்தி நயினார் போன்றோருடன் தொடர்பு கொண்டு சமண சமய நுட்பங்களை அறிந்தார். தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், கே.கே. பிள்ளை, மா. இராசமாணிக்கனார், கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை போன்றோரது நட்பைப் பெற்றிருந்தார். சென்னை மகாபோதி சங்கத்தின் தலைவர் நந்தீஸ்வர தேரோ, இலங்கை பௌத்த மதத் துறவி தருமரத்தின தேரோ போன்றோர்களுடன் நட்புக் கொண்டிருந்தார்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர் வ. சுப்பையா பிள்ளை, கா.அப்பாத்துரையார், அ. சிதம்பரநாதன் செட்டியார், மீ.ப. சோமு, அழ. வள்ளியப்பா, பொருளியல் அறிஞர் பா. நடராசன் உள்ளிட்ட பலர், மயிலை சீனி. வேங்கடசாமியின் பணிகளைப் பாராட்டினர். செக்கோஸ்லாவியத் தமிழறிஞர் கமில் சுவெலபில், மயிலை சீனி. வேங்கடசாமியைத் தனது ஆசானாகக் கருதினார்.

விருதுகள்

  • 1961-ல், தனது மணி விழாவில் ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
  • 1961-ல், தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது.
  • 1980-ல், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது.

மறைவு

மயிலை சீனி. வேங்கடசாமி, ஜூலை 8, 1980-ல், தனது எண்பதாம் வயதில் காலமானார்.

நினைவேந்தல்

  • மயிலை சீனி. வேங்கடசாமியின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு 2001-ல் அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.
  • பேராசிரியர் முனைவர் வீ. அரசு, சாகித்ய அகாதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில், மயிலை சீனி. வேங்கடசாமியின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார்.
  • ’மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்' என்ற தலைப்பில், வீ. அரசு, மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகளை பல தொகுதிகளில் தொகுத்துள்ளார்.
  • ஆய்வாளர் ப. சரவணன் மயிலை சீனி வேங்கடசாமி நூல்களை ஆறு தொகுதிகளாக ஆய்வுரையுடன் தொகுத்துள்ளார்

இலக்கிய இடம்

மயிலை சீனி. வேங்கடசாமி நிறுவனம் சாராத ஆய்வாளராக இருந்தாலும்,  நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சி நெறிமுறைகளுக்குள்ளேயே அவரது ஆய்வுகள் அமைந்தன. தமிழிலக்கியம் சார்ந்த வரலாற்றாய்வுகளில் அடிப்படைச் செல்நெறிகளை வகுத்தவர்களில் ஒருவராக மயிலை சீனி.வேங்கடசாமி கருதப்படுகிறார். தமிழரின் பண்டைய நாகரீகம் பற்றியும் பல்லவர்கால வரலாறு பற்றியும் அவர் எழுதிய நூல்கள் முன்னோடியானவை.

தமிழிலக்கிய வரலாற்றாய்வின் தொடக்க காலத்தில் தமிழிலக்கியத்திலும் தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றிலும் சமணம், பௌத்தம் ஆகியவற்றின் இடம் உரிய அளவு மதிப்புடன் முன்வைக்கப்படவில்லை. சைவ, வைணவநூல்களே மதநிறுவனங்களால் பேணப்பட்டமையால் சமண, பௌத்தநூல்கள் பெரும்பாலானவை அழிந்துபட்டிருந்தன. பல நூல்கள் பதிப்பிக்கப்படவுமில்லை. குறைவான ஆதாரங்கள் இருந்தமையால் தமிழின் முதன்மையான அறநூல்கள் வெளியான களப்பிரர் காலம் இருண்டகாலமாக ஆய்வாளர்களால் கூறப்பட்டது. அறநூல்களான திருக்குறள், நாலடியார் போன்றவற்றுக்கு சமண, பௌத்த மரபுடனான உறவும் மறுக்கப்பட்டது. மயிலை சீனி.வேங்கடசாமி வெவ்வேறு நூல்களிலுள்ள குறிப்புகளைத் தொகுத்து தமிழிலக்கியத்திலும், பண்பாட்டிலும் சமண- பௌத்த மதங்களின் பங்களிப்பை ஆதாரபூர்வமாக நிறுவினார். அவருடைய முதன்மைப் பங்களிப்பாக இன்று அது கருதப்படுகிறது.

மயிலை சீனி. வேங்கடசாமி நூல்கள் - 1
மயிலை சீனி. வேங்கடசாமி நூல்கள் - 2

நூல்கள்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் (ஆறு தொகுதிகள், 2001) ப. சரவணன் தொகுக்க நூலாக வெளிவந்துள்ளன.

சமய ஆய்வு நூல்கள்
  • பௌத்தமும் தமிழும்
  • கிறித்துவமும் தமிழும்
  • சமணமும் தமிழும்
  • சமயங்கள் வளர்த்த தமிழ்
இலக்கிய ஆய்வு நூல்கள்
  • தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்
  • இறையனார் களவியல் ஆராய்ச்சி
  • 19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்
  • மறைந்து போன தமிழ் நூல்கள்
  • மனோன்மணீயம் - பதிப்பும் குறிப்புரையும்
  • அஞ்சிறைத்தும்பி
வரலாற்றாய்வு நூல்கள்
  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
  • தமிழ்நாட்டு வரலாறு (சங்க காலம் - அரசியல்)
  • பழங்காலத் தமிழர் வாணிகம்
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
  • சேரன் செங்குட்டுவன்
  • மகேந்திரவர்மன்
  • நரசிம்மவர்மன்
  • மூன்றாம் நந்திவர்மன்
  • கொங்கு நாட்டு வரலாறு
  • துளுநாட்டு வரலாறு
கலை ஆய்வு நூல்கள்
  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • நுண்கலைகள்
  • இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்
  • மாமல்லபுரத்துச் சைன சிற்பங்கள்
  • இசைவாணர் கதைகள்
கல்வெட்டு, சாசன ஆய்வு நூல்கள்
  • சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுகள்
  • சாசனச் செய்யுள் மஞ்சரி
பொது நூல்கள்
  • உணவு நூல்
  • புத்தர் ஜாதகக் கதைகள்
  • பௌத்தக் கதைகள்
  • கௌதம புத்தர்
  • இசைத் திருமணம் (சீவக சிந்தாமணியில் காணப்படும் இசைக் கூறுகள் பற்றிய சிறு நூல்)
  • இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி - சிறுநூல்
  • மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு - சிறுநூல்
  • மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
  • மகேந்திரவர்மன் - மயிலை நேமிநாதர் பதிகம் - மயிலாப்பூர் வரலாறு
  • பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி
அச்சில் வெளிவராத நூல்கள்
  • இந்து மதமும் தமிழும்
  • இஸ்லாமும் தமிழும்
  • சமணமும் தமிழும் ( பாகம் 4)
  • 18-ஆம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம்
  • யானைக் கோயில் வரலாறு
  • தமிழ்நாட்டுச் சிற்பக் கலை

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page