under review

சுவாமிநாதம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 81: Line 81:


==புதுமை==
==புதுமை==
சுவாமிநாதம் பிற இலக்கண நூல்களைப் பின்பற்றி எழுந்ததாயினும் மொழியியல் கோட்பாட்டிலும்  தமிழ்மொழி அமைப்பு பற்றிய புதுமையான . தமிழ்மொழி அமைப்பை விளக்கும்போது பிற இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடாத சில உண்மைகளை இவர் கூறியுள்ளார்.   [[பவணந்தி]] முனிவர் நன்னூலில் தன் காலத்தில் வழக்கு ஒழிந்தது என்று கூறாதுவிட்டவற்றை பழைய இலக்கியம் படிப்போர்க்கு அச்செய்திகள் தெரிந்திருக்கவேண்டும்; அதற்கு இலக்கணம் உதவி செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சுவாமிநாதம் தன் காலத்தில் வழக்கு ஒழிந்தவற்றிற்கும் இலக்கணம் கூறுகிறது. இவற்றில் சில பொது உண்மைகளாக எக்காலத்துக்கும் பொருந்துவன. வேறு சில மொழிவரலாற்று மாற்றத்தால் ஏற்பட்டவற்றைக் கூறியதால் குறிப்பிட்ட காலமொழிக்கே (இடைக்காலத் தமிழுக்கு மட்டுமே பொருந்துவன.
சுவாமிநாதம் பிற இலக்கண நூல்களைப் பின்பற்றி எழுந்ததாயினும் மொழியியல் கோட்பாட்டிலும்  தமிழ்மொழி அமைப்பு பற்றியும் புதுமையான செய்திகளைக் கூறுகிறது . தமிழ்மொழி அமைப்பை விளக்கும்போது பிற இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடாத சில உண்மைகளை சுவாமிநாதம் கூறுகிறது. [[பவணந்தி]] முனிவர் நன்னூலில் தன் காலத்தில் வழக்கு ஒழிந்தது என்று கூறாதுவிட்டவற்றை பழைய இலக்கியம் படிப்போர்க்கு அச்செய்திகள் தெரிந்திருக்கவேண்டும்; அதற்கு இலக்கணம் உதவி செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சுவாமிநாதம் தன் காலத்தில் வழக்கு ஒழிந்தவற்றிற்கும் இலக்கணம் கூறுகிறது. இவற்றில் சில பொது உண்மைகளாக எக்காலத்துக்கும் பொருந்துவன. வேறு சில மொழிவரலாற்று மாற்றத்தால் ஏற்பட்டவற்றைக் கூறியதால் குறிப்பிட்ட காலமொழிக்கே (இடைக்காலத் தமிழுக்கு மட்டுமே பொருந்துவன.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 08:43, 26 March 2023

சுவாமிநாதம்(சாமிநாதம்) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ் இலக்கண நூல். ஐந்திலக்கணங்களையும் விளக்கும் நூல். சுவாமிநாதக் கவிராயரால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

சுவாமிநாதத்தை இயற்றிய சுவாமிநாதக் கவிராயர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பொதிகை நிகண்டு அவரால் தொகுக்கப்பட்டது என்ற செய்தியும், அவரது மகன் பெயர் சிவசுப்ரமணியன் என்பதும் பாயிரப்பாடல் மூலம் அறிய வருகிறது.

சுவாமிநாதக் கவிராயரின் மகன் சிவசுப்ரமணியன் இயற்றிய பூவைப் புராணம் என்ற நூலை கொல்லம் 985-ல் (பொ.யு. 1810) அரங்கேற்றியதாகக் குறிப்பிடுகிறார். இதனால் சுவாமிநாதக் கவிராயரின் காலம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் கருதப்படுகிறது.

பதிப்பு

1924-ஆம் ஆண்டு திரு. இ. கோவிந்தசாமி பிள்ளை சுவாமிநாதத்தின் சில பகுதிகளை (பாயிரம் 14 , எழுத்தாக்க மரபு 14 பதமரபு 6 செய்யுள்கள்) கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடான தமிழ்ப்பொழிலில் வெளியிட்டார்[1]. நூலின் முன்னுரையின்படி திருநெல்வேலி நீலமேகம்பிள்ளை என்பவரிடமிருந்து கிடைத்த ஏட்டுப்பிரதி சில இடங்களில் பூச்சிகளால் அரிக்கப்பட்டதால் எழுத்துகளும் காணப்படவில்லை. கேரளப் பல்கலைக்கழக கீழைக்கலை ஏட்டுப்பிரதி நூல் நிலையத்தில் (oriental manuscript library) எழுத்தாக்க மரபிற்கான விருத்தி உரை ஓர் பிரதி இருந்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வுத் துறையைச் சேர்ந்த செ.வை. சண்முகம் 1972-ல் கல்வியியல் உயராய்வுக்காக லண்டனில் உள்ள ரெட்டிங் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலைக் கீழைக் கலைத்துறை நூல் நிலையத்தில் சுவாமிநாதம் முழுமையும் கையெழுத்துப் பிரதியாக இருப்பதைக் கண்டு அதன் புகைப்படப் பிரதி ஒன்றுடன் நாடு திரும்பி, அப்பிரதியுடன் மற்ற இரு பிரதிகளையும் ஒப்பிட்டுஉரையெழுதிப் பதிப்பித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வுத் துறை இந்நூலை வெளியிட்டது.

நூல் அமைப்பு

சுவாமிநாதம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என்னும் ஐந்து பெரும் பிரிவுகளாக (அதிகாரங்கள்) அமைந்துள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் மூன்று மரபுகள் என்னும் உட்பிரிவுகளைக் கொண்டது. அந்தாதித் தொடையால் எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.

  • எழுத்ததிகாரம்
    • எழுத்தாக்க மரபு
    • பத மரபு
    • புணர்ச்சி மரபு
  • சொல்லதிகாரம்
    • பெயர் மரபு
    • வினை மரபு
    • எச்ச மரபு
  • பொருளதிகாரம்
    • அகத்திணை மரபு
    • கைக்கோண் மரபு
    • புறத்திணை மரபு
  • யாப்பதிகாரம்
    • உறுப்பு மரபு
    • பாவின மரபு
    • பிரபந்த மரபு
  • அணியதிகாரம்
    • பொருளணி மரபு
    • சொல்லணி மரபு
    • அமைதி மரபு

சுவாமிநாதத்தில் ஒரு விநாயகர் வணக்க வெண்பா, எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியப்பாவால் ஆன பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமுமாகப் 11 பாயிரங்கள் உள்ளன. ஐந்து அதிகாரங்களிலுமாக மொத்தம் 201 பாடல்கள் உள்ளன.

காப்பு (விநாயகர் துதி)

பூமகளும் பாமகளும் போற்றுமே நாமகளுங்
கோமகளுங் கொண்டார்கைக் குஞ்சரமே - மாமகிமைத்
தொன்னூற்குள் உண்டாய்த் தொகுத்த இலக்கணமாம்
இந்நூற்குக் காப்பாகு மே.

சிறப்புப் பாயிரம்

பூமிசைகீழ்க் கடல்குமரி குடகம்வேங் கடத்துட்
  புகுந்ததமி ழியல்ஐந்தும் அகவல்வி ருத்தமதால் ஆ(ம்)
முன்னூல் வழியாய்மெய் யநித்தநூல்விரி வென்று
  அஞ்சும்அவர் உணர்ந்துபய நூலுணர்ஏ துவினான்
ஏமமெனுஞ் சுவாமிநாதம் பகர்ந்தான்பொ திகைநிகண்டு
  உரைத்தோன்சிவ சுப்பிரமணி யன்எனும் என்னை
மாமகன்என் றருளும்எந்தை நதிகுலன்கல் லிடையூர்
  வாழ்சுவாமி கவிராசன் எனுநூல்வல் லோனே

சுவாமிக் கவிராயரின் மகன் சிவசுப்ரமணியனால் இயற்றப்பட்ட பாயிரம் தமிழ் நிலத்தின் விரிவையும், நூலை இயற்றியவர் பெயரையும், நூலின் பேசுபொருளையும், பாவகையையும் குறிப்பிடுகிறது.

எழுத்ததிகாரம்

எழுத்ததிகாரம் எழுத்தாக்கமரபு, பதமரபு, புணர்ச்சி மரபு என்ற மூன்று பிரிவுகளை உடையது. பெயர், எண், முறை, பிறப்பு, வடிவம், அளவு, முதனிலை, இறுதி நிலை, இடைநிலை, (மெய்ம்மயக்கம்), போலி, பதம், புணர்ச்சி என்று பன்னிரண்டாக வகைப்படுத்தி அவற்றில் முதல் பத்து வகையையும் எழுத்தாக்க மரபு பேசுகின்றது. பதவியல் என்பது பகுபதம், பகாப்பதம் என்பவற்றை விளக்கி வினைப்பகுதி, விகுதிகள், இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகியவற்றைப் பேசுகிறது. புணர்ச்சியின் பொது இலக்கணத்தைக் கூறி முப்பத்தொரு புணர்ச்சி விதிகளையும் தொகுத்து விளக்கிவிட்டு இறுதியில் வடமொழி - தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கி தமிழாக்க விதிகளையும் புணர்ச்சி மரபு பேசுகிறது.

சொல்லதிகாரம்

சொல்லதிகாரம் பெயர்மரபு, வினை மரபு, எச்சமரபு என்ற மூன்று பிரிவுகளை உடையது. சொல்லின் பொதுஇலக்கணமும் சொற்களின் பல்வேறு வகைப் பாகுபாடும், வேற்றுமையின் வகையும் விரியும் பெயர் மரபு உணர்த்துகிறது. வினையின் பொது விளக்கமும், வினைப்பாகுபாடும் கூறி வினைமுற்று விகுதிகளையும், எச்சங்களையும் வினை மரபு விளக்குகின்றது. இடைச்சொல்லின் இலக்கணம், சில இடைச்சொற்களின் பொருள்கள், உரிச்சொல்லின் இலக்கணம், வழு வழு அமைதி, பொருள்கோள்கள் ஆகியவற்றை எச்சமரபு உணர்த்துகிறது.

பொருளதிகாரம்

அகத்திணைமரபு, கைக்கோண்மரபு, புறத்திணைமரபு என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது பொருள் அதிகாரம்.

அகத்திணை வகைகள், அவற்றிற்குரிய முதல், கரு, உரிப் பொருள்கள், ஐந்திணையின் வகை, அவற்றின் விளக்கம் ஆகியவற்றை அகத்திணை மரபு பேசுகின்றது. களவியல், வரைவியல், கற்பியல் என்று மூன்றிற்குரிய கிளவிகளையும், அகப்பாட்டு உறுப்புக்களின் தொகை வகைகளையும் உணர்த்துகிறது கைக்கோண் மரபு. புறத்திணை ஏழையும், பொதுவியலையும் புறத்திணை மரபு பேசுகிறது.

யாப்பதிகாரம்

யாப்பதிகாரம் உறுப்புமரபு, பாவினமரபு, பிரபந்தமரபு என்று மூன்று வகையாக உள்ளது. யாப்பு உறுப்புகளின் வகையும் அவற்றின் விரியும் உறுப்புமரபு உணர்த்துகின்றது. நான்கு வகைப் பாக்கள், அவற்றின் இனம் ஆகிய இரண்டையும் பாவினமரபு பேசுகிறது. செய்யுளின் வகையும் பிரபந்தங்களின் இலக்கணமும் பொருத்தத்தின் வகையும் அவற்றின் இலக்கணமும் பாகமும் உணர்த்துகின்றது பிரபந்த மரபு.

அணியதிகாரம்

அணியதிகாரம் பொருளணிமரபு, சொல்லணிமரபு, அமைதிமரபு என்று மூன்று பிரிவுகளை உடையது. பொருளணி மரபு முப்பத்தொரு பொருளணிகளின் இலக்கணத்தை விளக்குகின்றது. சொல்லணி மரபு; மடக்கு அணியையும் இருபத்து மூன்று சித்திரக்கவிகளையும் உணர்த்துகின்றது. அமைதி மரபு வழு அமைதியை விளக்குகின்றது.

முதல், துணை நூல்கள்

சுவாமிநாதம் பெரும்பாலும் நன்னூலைத் தன் முதல்நூலாகக் கொண்டது. சுவாமிநாதத்தின் எழுத்ததிகார அடிப்படை நன்னூலைத் தழுவியது. சுவாமிநாதக் கவிராயர் தொல்காப்பியம், நேமிநாதம், இலக்கண விளக்கம், இலக்கணக்கொத்து, இலக்கணவிளக்கச் சூறாவளி, முத்துவீரியம், பிரயோகவிவேகம், ஆகியவற்றின் கருத்துக்களையும் பின்பற்றியுள்ளார். நன்னூலில் காணாத கருத்துக்களை மற்ற நூல்களின் துணை கொண்டு விளக்கினார். தொல்காப்பியத்தில் கூறப்பட்டு, - பிற நூல்களில் ஏற்றுக்கொள்ளப்படாத சில கருத்துக்கள் சுவாமிநாதத்தில் விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் கூறப்பட்ட சில கருத்துக்கள் மீண்டும் சுவாமிநாதத்தில் மட்டுமே பேசப்பட்டுள்ளன. சொல்லதிகாரத்தில் நேமிநாதம், இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து ஆகிய நூல்களின் தாக்கம் காணப்படுகிறது.

புதுமை

சுவாமிநாதம் பிற இலக்கண நூல்களைப் பின்பற்றி எழுந்ததாயினும் மொழியியல் கோட்பாட்டிலும் தமிழ்மொழி அமைப்பு பற்றியும் புதுமையான செய்திகளைக் கூறுகிறது . தமிழ்மொழி அமைப்பை விளக்கும்போது பிற இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடாத சில உண்மைகளை சுவாமிநாதம் கூறுகிறது. பவணந்தி முனிவர் நன்னூலில் தன் காலத்தில் வழக்கு ஒழிந்தது என்று கூறாதுவிட்டவற்றை பழைய இலக்கியம் படிப்போர்க்கு அச்செய்திகள் தெரிந்திருக்கவேண்டும்; அதற்கு இலக்கணம் உதவி செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சுவாமிநாதம் தன் காலத்தில் வழக்கு ஒழிந்தவற்றிற்கும் இலக்கணம் கூறுகிறது. இவற்றில் சில பொது உண்மைகளாக எக்காலத்துக்கும் பொருந்துவன. வேறு சில மொழிவரலாற்று மாற்றத்தால் ஏற்பட்டவற்றைக் கூறியதால் குறிப்பிட்ட காலமொழிக்கே (இடைக்காலத் தமிழுக்கு மட்டுமே பொருந்துவன.

உசாத்துணை

சுவாமிநாதம், பதிப்பும் உரையும்-செ.வை.சண்முகம், தமிழ் இணைய கல்விக் கழகம்

அடிக்குறிப்புகள்



✅Finalised Page