first review completed

கவிப்பித்தன்

From Tamil Wiki

கவிப்பித்தன் (தேவராஜு) (பிறப்பு:நவம்பர் 10, 1971 ) தமிழில் எழுதிவரும் கவிஞர், நாவலாசிரியர். கவிதைகள் சிறுகதைகள் நாவல்கள் எழுதியுள்ளார்.

கவிப்பித்தன்

பிறப்பு, கல்வி

கவிப்பித்தன் ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டம் நீவாநதிக்கரையில் உள்ள வசூரில் மு.கண்ணன் - சக்கரவேணி இணையருக்கு நவம்பர் 10, 1971 அன்று மகனாய்ப் பிறந்தார்.(வசூர், தற்போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது . இவரது இயற்பெயர் தேவராஜு

தொடக்கக் கல்வியை வசூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியினை வள்ளிமலை - அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியைப் பொன்னை - அரசினர் மேநிலைப்பள்ளியிலும் கற்றார்.

கவிப்பித்தன் செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் இளங்கலைப் பட்டம்(B.Sc ) பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கவிப்பித்தனின் மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஆகஸ்டு 22, 1999-ல் திருமணம் ஆனது. மகள்கள் ஓவியா, சிந்து. மகன் நிலவழகன்.

கவிப்பித்தன் கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர் பகுதி நேரப் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். பின்னர் சென்னையில் ஒரு தனியார் பார உந்துப் போக்குவரத்து ( Lorry transport) அலுவலகத்திலும் பணி புரிந்தார். பின்னர், பொருளாதர சூழல்களால் அந்தப் பணியை விட்டு விலகினார்.

அதன்பின் உள்ளூரில், 'மக்கள் புது முரசு' என்கிற செய்திப் பத்திரிக்கையைத் துவங்கினார். அதன் வெளியீட்டாளராகவும் செய்தி ஆசிரியராகவும் இருந்தார். இந்திய பத்திரிக்கைப் பதிவாளரிடம் முறைப்படி பதிவு செய்யப்பட்டு, பிரபல செய்தித்தாளுக்கு உரித்தான கட்டமைப்புகளுடன் அந்தப் பத்திரைக்கை வெளியானது. பதினைந்து ஆண்டுகள் அந்தப் பத்திரிக்கையை நடத்தினார். விளம்பரங்களை மட்டுமே நம்பிச் செயல்பட்டதால் அதில் நடைமுறைச் சவால்கள் இருந்தன. அது நிறுத்தப் பட்டது

அந்தச் சமயத்தில், அரசுப் பணிக்கான வேலை நியமனத் தடை விலக்கப்பட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தத் துவங்கியிருந்தது. கவிப்பித்தன், அதில் பங்கேற்று குரூப்-2 தேர்வுகளை எழுதி தனது நாற்பதாவது வயதில் வருவாய் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.

கவிப்பித்தன் தற்போது வருவாய்த் துறையில் வட்டாட்சியராகப் பணிபுரிகிறார்

இலக்கிய வாழ்க்கை

தேவராஜு புதுமைப்பித்தன் பெயர் மீதிருந்த ஈர்ப்பினால் 'கவிப்பித்தன்' என்ற புனை பெயரை வைத்துக் கொண்டார். இவர் எழுதிய முதுகெலும்புகள்’ என்கிற கவிதை 1992-ம் ஆண்டு வெளியானது. கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது ’ஒரு மேகத்தின் தாகம்’ என்கிற கவிதைத் தொகுப்பு வெளியானது. 'ஆண்மை வதை' என்கிற முதல் சிறுகதை 2000-ம் ஆண்டிலும், 'நீவாநதி' என்கிற முதல் நாவல் 2015 -ம் ஆண்டிலும் வெளியாகின.

கவிப்பித்தன், கல்லூரிக் காலத்திற்குப் பின் த.மு.எ.க.ச வுடனான தொடர்பின் வழியாக தீவிர இலக்கியத்திற்குள் வந்தார். முற்போக்கு இலக்கியங்களையும் மற்றும் சோவியத் இலக்கியங்களையும் வாசித்தார்.இவர் முதலில் சமூககோபம் கொண்ட கவிஞராகவே அறியப்பட்டார். இவரது கவிதைகள் த.மு.எ.க.ச மேடைகளில் மேற்கோள் காட்டப்பட்டன. எனது பாட்டன் ஆறு நிறைய நீர் பார்த்தான்/ என் அப்பன் ஆற்றின் ஊற்றில் பார்த்தான்/ நான் ஆற்றிலிருந்து வந்த குழாயில் பார்த்தேன்/ என் மகன் ஒரு ரூபாய் பொட்டலத்தில் பார்க்கிறான்/ என் பேரன்..? என்கிற கவிதை பல மேடைகளிலும் பள்ளி கல்லூரிகளிலும் கூட்டு வாசிப்பிற்கு எடுத்தாளப்பட்டன. ஆழ்ந்த சொல்தேர்ச்சியும் அறச்சீற்றமும் கொண்டவராக கவிதைகளில் அவர் வெளிப்பட்டார்.

அவரது சிறுகதைகளின் ஊடாக நுட்பமான கதைசொல்லியாக மற்றொரு பரிணாமம் வெளிப்படது. காமமும் மரணமும் அவரது கதைகளின் பேசு பொருளாக இருந்தன. பெண்ணியம் மற்றும் தலித்தியம் சார்ந்த கதைகளை அதற்கான பிரகடனங்கள் இல்லாமல் எழுதினார்.

இவரது நாவல்கள் சமூகத்தின் சமநிலையற்றத் தன்மையை வரலாற்றுப் பின்புலத்தில் கூறியவை. மிகவும் வளமான பிரதேசமாக இருந்த ஆற்காடு மாவட்டம், பிற்காலத்தில் ஆந்திர அரசு கலவகுண்டா என்கிற இடத்தில் சத்தமில்லாமல் கட்டிய அணையினால் வறட்சியை எதிர் கொண்டதையும் அதன் ஊடாக பஞ்சம் வந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சிப்காட் நோக்கி வேலைக்குச் சென்ற காலத்தையும் முன்வைத்து தனது நீவாநதி என்கிற நாவலை எழுதினார்.

பஞ்சாயத்துத் தேர்தல் கிராம மக்களைப் பொருளாதார ரீதியாக பிரிப்பதையும் சாதீய ரீதியாக ஒடுக்குவதையும் தேர்தலுக்குப் பிறகும் அந்தச் சாதீய பழிவாங்கல் நிகழ்வதையும் மையமாக வைத்து எழுதிய மடவளி நாவல் விகடன் விருது பெற்றது. விகடன் விருதுக்குப் பின்னர் கவிப்பித்தன் பரவலாக அறியப்படலானார்

மரணம் தற்கொலை மற்றும் பிணம் சார்ந்த சமூக மனநிலையை மகேந்திரன் என்கிற கதாபாத்திரத்தின் வழியாகவும் அவனின் குடும்பம் வழியாகவும் வைத்து எழுதப்பட்ட ’ஈமம்’ நாவலும் லாரி ஓட்டுனர்களையும் கனரக வாகன நிறுவனங்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட ’சேங்கை’ நாவலும் வெளியாகியுள்ளன. இதில் ஈமம் நாவல் சாகித்ய அகாடமி விருதுக்கான குறும் பட்டியலில் இடம் பெற்றிருந்த்து குறிப்பிடத்தக்கது.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், வண்ணதாசன், கி.ரா, தி.ஜானகிராமன், எஸ்.ராமகிஷ்ணன், ஜெயமோகன், பிரபஞ்சன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, ச.தமிழ்ச்செல்வன், வண்ணநிலவன், முகில் இவர்களோடு ஏராளமான சக படைப்பாளிகளும் ஏதேனும் ஒரு இழையினூடாக தனக்கு முன்னோடிகளாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

விகடன் நம்பிக்கை விருது அறிவிப்பு (புகைப்படம் நன்றி: விகடன் வலைத்தளம் )

விருதுகள்/ பரிசுகள்

  • ஊர்ப்பிடாரி தொகுப்பு - சிறந்த சிறுகதை தொகுப்பிற்கான கவிதை உறவு பரிசு
  • பிணங்களின் கதை தொகுப்பு - ஜெயந்தன் விருது மற்றூம் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • மடவெளி நாவல் - ஆனந்த விகடன் நம்பிக்கை விருது
  • நீவாநதி - எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
  • பாலி சிறுகதைத் தொகுப்பு - திருமாவளவனின் எழுச்சித் தமிழர் விருது மற்றும் படைப்பு இலக்கிய விருது
  • ஈமம் நாவல் - செளமா இலக்கிய விருது மற்றும் முற்போக்கு மேடை இலக்கிய விருது

இலக்கிய இடம்

கவிப்பித்தன் இயல்புவாதக் கதைகளை எழுதுபவர். வட ஆற்காடு மக்களின் வாழ்க்கைப்பாடுகளை அம்மக்கள் புழங்கும் மொழியிலேயே எழுதுபவர். அடித்தட்டு மக்களின் வாழ்வியலை பாதிக்கும் புற காரணிகளையும் அவை மக்களுக்குள் உருவாக்கும் எதிர்வினைகளையும் தனது கதைகளில் பதிவு செய்கிறார். கதைகளின் வடிவம் குறித்த மெனக்கெடல் குறிப்பிடத்தக்கது என்றும் வசிகரத்தை உண்டாக்கும் நடை என்றும் அஜயன் பாலா இவரது கதைகள் குறித்து மதிப்பிட்டுள்ளார். கவிப்பித்தனின் படைப்புகள் மரணம் அல்லது விபத்து போன்ற எதிர்பாரா அனுபவங்களை பேரதிசயமாகக் காணும் பார்வை கொண்ட கதைகள் என்றும் வேலூர் மாவட்டத்தின் தனித்த சொல்லாட்சிகளையும் பழக்கவழக்கங்களையும் பதிவு செய்தவர் என்றும் கனலி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கவிப்பித்தனின் கவிதைகளில் கதை சொல்லும் பாணி உள்ளது. பேச்சு வழக்கு பாணியும் உள்ளது. வியன்புனைவுப் போக்கு அற்றவை. தொண்டை மண்டல வழக்காட்டுச் சொற்களையும், சராசரி மனிதர்களையும் அடித்தட்டு மக்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளவை என்றும் அவரது கவிதைகளில் உள்ளடக்கம் மு.சுயம்புலிங்கம் கவிதைகளுக்கும் அதன் கூறுமுறை அழகியபெரியவன் கவிதைகளுக்கும் அணுக்கமானவை என்று கவிஞர் வேல்கண்ணன் மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுதி
  • ஒரு மேகத்தின் தாகம் (1993)
  • யாருமற்ற கனவில் (1999)
சிறுகதைகள்
  • இடுக்கி (2007)
  • ஊர்ப்பிடாரி (2012)
  • பிணங்களின் கதை (2014)
  • சிப்பாய் கணேசன் (2016 )
  • சாவடி (2019)
  • பாலி (2021)
நாவல்கள்
  • நீவாநதி (2015)
  • மடவளி (2017)
  • ஈமம் (2021)
  • சேங்கை (2023)

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.