தமிழ்ப் புத்தகாலயம்
எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளருமான கண. முத்தையா, ஜூன், 1946-ல், சென்னையில் நிறுவிய பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, பி.ஜி.கருத்திருமன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, கா.அப்பாத்துரை, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி, அகிலன், தொ.மு.சி.ரகுநாதன், சாமி.சிதம்பரனார், ராஜம் கிருஷ்ணன், சாலை இளந்திரையன் எனப் பலரது படைப்புகளைத் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. எழுத்தாளர்கள் பலருக்குப் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்துள்ள பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம்.
பதிப்பு, வெளியீடு
கண. முத்தையா, பர்மாவில் நேதாஜியின் இந்திய தேசியப் படையில் பணியாற்றிய காரணத்தால், கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். போர்க் கைதியாக ஒரு வருடம் இருந்தார். சிறையில் அவர் ராகுல் சாங்கிருத்தியாயனின் ‘சாம்ய வாத்ஹி ஹயும்’ , ‘வோல்கா ஸே கங்கே’ என்ற இரண்டு நூல்களையும் படித்தார். அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துக் கையெழுத்துப் பிரதியாக வைத்திருந்தார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் கல்கத்தா வந்தார். பின் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டு வந்தார்.
வெ. சாமிநாத சர்மாவை ஆசிரியராகக் கொண்டு பர்மாவில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ்களான ‘தனவணிகன்’ மற்றும் ‘ஜோதி’ இதழில் பணியாற்றிய அனுபவம் முத்தையாவுக்கு இருந்தது. அங்கு தனது ’புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம் மூலம் வெ.சாமிநாத சர்மாவை ஆசிரியராகக் கொண்டு ‘மகாத்மா காந்தி’, பிளேட்டோவின் அரசியல், ரூசோவின் நூல்கள், சென்யாட்சின் எழுதிய சுதந்திரத்தின் தேவைகள் போன்ற நூல்களைக் கொண்டு வந்த அனுபவமும் இருந்தது. அந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து, ஜூன் 1946-ல், ’தமிழ்ப் புத்தகாலயம்’ பதிப்பகத்தை கண. முத்தையா ஆரம்பித்தார். இவரைப் பதிப்பகம் ஆரம்பிக்குமாறு ஆலோசனை கூறியவர்கள் ‘சக்தி’ வை.கோவிந்தன், ஏ.கே.செட்டியார் மற்றும் முல்லை முத்தையா ஆகியோர்.
முதலில் சிறு வெளியீடாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ எழுதிய ‘புரட்சி’ நூலைக் கொண்டு வந்தார். அதன் பின் ராகுல் சாங்கிருத்தியாயனுக்குக் கடிதம் எழுதி அவரது அனுமதி பெற்று ‘சாம்ய வாத்ஹி ஹயும்’ , ‘வோல்கா ஸே கங்கே’ நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘பொதுவுடைமைதான் என்ன?’ , ’வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற இரண்டு நூல்களையும் கொண்டு வந்தார். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ மிக அதிகம் விற்பனையானதுடன் அரசியல் கட்சியினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது. தொடர்ந்து மாசேதுங்கின் ‘கலையும் இலக்கியமும்’ , ஜூலிஸ் பூசிக், மாவோ, லெனின், ஸ்டாலின் போன்றோரது நூல்கள், மார்க்ஸிம் கார்க்கியின் கட்டுரைகள் எனப் பல நூல்களை வெளியிடத் தொடங்கினார் கண. முத்தையா.
புதுமைப்பித்தனுடன் ஏற்பட்ட நட்பால் ‘நமது இலக்கியம்’ என்ற தலைப்பில் அவரது கட்டுரை நூல் ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, பி.ஜி.கருத்திருமன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, துரை அரங்கனார், கா.அப்பாதுரை, கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி, அகிலன், தொ.மு.சி.ரகுநாதன், சாமி.சிதம்பரனார், ராஜம் கிருஷ்ணன், சாலை இளந்திரையன் எனப் பலரது படைப்புகளைத் தனது தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளியிட்டார்.
ஹெப்சிபா ஜேசுதாசன் , இந்திரா பார்த்தசாரதி , மகரிஷி, கு.அழகிரிசாமி , தொ.மு.சி. ரகுநாதன் , க.நா .சுப்ரமணியம், போன்றோரின் முதல் படைப்புக்களை முதன்முதலில் வெளியிட்டதும் தமிழ்ப் புத்தகாலயம் தான்.
”இலங்கை எழுத்தாளர் க.கைலசபதியின் நூலை முதன் முதலில் வெளியிட்டதும், செ.கணேசலிங்கம், டொமினிக் ஜீவா. டேனியல், கா. சிவத்தம்பி, திருநாதன், வேலுப்பிள்ளை ஆகியோரின் நூல்களை முதன் முதலில் பதிப்பித்ததும் தமிழ்ப்புத்தகாலயம் தான்” என்கிறார், கண. முத்தையா [1] .
தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பித்த நூல்கள் பட்டியல்
புத்தகத் தலைப்பு | எழுதியவர் |
வேங்கையின் மைந்தன் | அகிலன் |
கயல் விழி | அகிலன் |
வெற்றித்திருநகர் | அகிலன் |
சித்திரப்பாவை | அகிலன் |
நெஞ்சின் அலைகள் | அகிலன் |
எங்கேபோகிறோம் | அகிலன் |
பெண் | அகிலன் |
பாவை விளக்கு | அகிலன் |
பொன்மலர் | அகிலன் |
பால்மரக் காட்டினிலே | அகிலன் |
துணைவி | அகிலன் |
புதுவெள்ளம் | அகிலன் |
வாழ்வு எங்கே | அகிலன் |
வானமா பூமியா | அகிலன் |
இன்ப நினைவு | அகிலன் |
கொம்புத்தேன் | அகிலன் |
அவளுக்கு | அகிலன் |
தாகம் | அகிலன் |
சினேகிதி | அகிலன் |
பசியும் ருசியும் | அகிலன் |
சத்திய ஆவேசம் | அகிலன் |
நிலவினிலே | அகிலன் |
ஆண் பெண் | அகிலன் |
வாழ்வில் இன்பம் | அகிலன் |
தங்க நகரம் | அகிலன் |
கண்ணன் கண்ணன் | அகிலன் |
நல்ல பையன் | அகிலன் |
வெற்றியின் ரகசியம் | அகிலன் |
நாடு நாம் தலைவர்கள் | அகிலன் |
எழுத்தும் வாழ்க்கையும் | அகிலன் |
கதைக்கலை | அகிலன் |
புதிய விழிப்பு | அகிலன் |
நான்கண்ட ரஷ்யா | அகிலன் |
சோவியத் நாட்டில் | அகிலன் |
மலேசியா சிங்கப்பூரில் | அகிலன் |
அகிலன் சிறுகதைகள் – இரு தொகுதிகள் | அகிலன் |
காசுமரம் (திரைக்கதை – வசனம்) | அகிலன் |
சுலபா | நா. பார்த்தசாரதி |
தமிழ் இலக்கியக் கதைகள் | நா. பார்த்தசாரதி |
துளசி மாடம் | நா. பார்த்தசாரதி |
வஞ்சிமா நகரம் | நா. பார்த்தசாரதி |
வெற்றி முழக்கம் | நா. பார்த்தசாரதி |
உதயணன் கதை | நா. பார்த்தசாரதி |
பூமியின் புன்னகை | நா. பார்த்தசாரதி |
நெற்றிக் கண் | நா. பார்த்தசாரதி |
ஆத்மாவின் ராகங்கள் | நா. பார்த்தசாரதி |
அனிச்ச மலர் | நா. பார்த்தசாரதி |
மொழியின் வழியே! | நா. பார்த்தசாரதி |
முள் வேலிகள் | நா. பார்த்தசாரதி |
கபாடபுரம் | நா. பார்த்தசாரதி |
அநுக்கிரகா | நா. பார்த்தசாரதி |
நா. பார்த்தசாரதி சிறுகதைகள் | நா. பார்த்தசாரதி |
கற்சுவர்கள் | நா. பார்த்தசாரதி |
குறிஞ்சி மலர் | நா. பார்த்தசாரதி |
மகாபாரதம் அறத்தின் குரல் | நா. பார்த்தசாரதி |
நெஞ்சக்கனல் | நா. பார்த்தசாரதி |
மணிபல்லவம்-சரித்திர நாவல் | நா. பார்த்தசாரதி |
நிசப்த சங்கீதம் | நா. பார்த்தசாரதி |
பிறந்த மண் நாவல் | நா. பார்த்தசாரதி |
நித்திலவல்லி-சரித்திர நாவல் | நா. பார்த்தசாரதி |
பொய் முகங்கள் | நா. பார்த்தசாரதி |
மூலக்கனல் - சமுக நாவல் | நா. பார்த்தசாரதி |
பாண்டிமாதேவி | நா. பார்த்தசாரதி |
மூவரை வென்றான் | நா. பார்த்தசாரதி |
பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் | நா. பார்த்தசாரதி |
பொன் விலங்கு | நா. பார்த்தசாரதி |
புறநானூற்றுச் சிறுகதைகள் | நா. பார்த்தசாரதி |
சிந்தனை வளம் | நா. பார்த்தசாரதி |
ராணி மங்கம்மாள்- சரித்திர நாவல் | நா. பார்த்தசாரதி |
சமுதாய வீதி | நா. பார்த்தசாரதி |
சத்திய வெள்ளம் | நா. பார்த்தசாரதி |
கலித்தொகை பரிபாடல் காட்சிகள் | நா. பார்த்தசாரதி |
சாயங்கால மேகங்கள் | நா. பார்த்தசாரதி |
பொதுவுடைமைதான் என்ன | ராகுல் சாங்கிருத்தியாயன் |
வால்காவிலிருந்து கங்கை வரை | ராகுல் சாங்கிருத்தியாயன் |
தமிழர் பண்பாடு | எஸ். வையாபுரிப் பிள்ளை |
இலக்கிய உதயம் - முதல் பகுதி | எஸ். வையாபுரிப் பிள்ளை |
இலக்கிய உதயம் - இரண்டாம் பகுதி | எஸ். வையாபுரிப் பிள்ளை |
அகராதி நினைவுகள் | எஸ். வையாபுரிப் பிள்ளை |
இலக்கிய மணிமாலை | எஸ். வையாபுரிப் பிள்ளை |
கம்பன் காவியம் | எஸ். வையாபுரிப் பிள்ளை |
உவமான சங்கிரகம் அணியிலக்கண ஆராய்ச்சி | டாக்டர் இ. சுந்தரமூர்த்தி |
கம்பர் கவியும் கருத்தும் | பி.ஜி. கருத்திருமன் |
கலையும் இலக்கியமும் | மா.சே. துங் |
கார்க்கியின் கட்டுரைகள் | மார்க்ஸிம் கார்க்கி |
அமெரிக்காவிலே | மார்க்ஸிம் கார்க்கி |
தெலுங்கானா போராட்டம் | வி.பி. சிந்தன் |
ரஷ்யப்புரட்சியின் வரலாறு | வி.பி. சிந்தன் |
மனித உரிமைகள் | க.பொ. அகத்தியலிங்கம் |
விடுதலைத் தழும்புகள் | க.பொ. அகத்தியலிங்கம் |
இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்ட்களின் பங்கு | பி. ராமமூர்த்தி |
இந்தியாவும் இந்து மதமும் | பி. ஆர். பரமேஸ்வரன் |
தூக்குமேடைக் குறிப்பு | ஜீலிஸ்பூசிக் |
பக்த்சிங்கும் புரட்சித் தோழர்களும் | சிவவர்மா |
அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும் | சி. என். குமாரசாமி |
மாண்புமிகு உளவுத்துறை | வே. இராமநாதன் |
சட்டமன்ற நெறிமுறைகள் | மா. சண்முகசுப்பிரமணியம் |
நேற்று வரை - ஒரு ஐ.ஜி.யின் பார்வையில் | கே. என். சீனிவாசன் |
மேடும் பள்ளமும் | நாஞ்சில் கி. மனோகரன் |
புரட்சி வீரர் மூவர் | சரஸ்வதி ராம்நாத் |
சமூகம் ஒரு மறு பார்வை | மைதிலி சிவராமன் |
பெண்ணுரிமை சில பார்வைகள் | மைதிலி சிவராமன் |
பிரேம்சந்த் கதைகள் | பிரேம்சந்த் |
அகராதிக் கலை | தா.வே. வீராசாமி |
காந்தி பா மாலை | ராய. சொக்கலிங்கன் |
அணுக்கரு பௌதிகம் உட்கரு பௌதிகம் | டாக்டர் ந. சுப்புரெட்டியார் |
தமிழர் பண்பாட்டில் தாமரை | சாத்தான்குளம் அ. இராகவன் |
நம் நாட்டுக் கப்பற் கலை | சாத்தான்குளம் அ.இராகவன் |
தமிழ் நாவல்கள் நாவல் விழாக் கருத்துரைகள் |
மேற்கண்ட நூல்கள் தவிர்த்து மேலும் பல நூல்களைத் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
கண. முத்தையா, நவம்பர் 12, 1997-ல் காலமானார். அவர் மறைவிற்குப் பின் அவரது மருமகனான அகிலன் கண்ணன், தமிழ்ப் புத்தகாலயத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். நவீன காலத்துகேற்ற நூல்கள், க. அபிராமி எழுதியிருக்கும் தொழில்நுட்ப, வாழ்வியல் நூல்கள் பலவற்றையும் அகிலன் கண்ணன் வெளியிட்டுள்ளார். தமிழ்ப் புத்தகாலயத்தின் சார்பு நிறுவனமான ‘தாகம்’ பதிப்பகம் மூலமும் பல நூல்களை வெளியிட்டு வருகிறார்.
விருதுகள், பரிசுகள்
தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட பல நூல்களுக்கு பாரதீய ஞானபீடப்பரிசு, சாகித்ய அகாடமிப் பரிசு, தமிழ்நாடு அரசுப் பரிசு, டாக்டர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு, கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு, இலக்கியச் சிந்தனைப் பரிசு, பாரதீய பாஷா பரிஷத் பரிசு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளைப் பரிசு எனப் பல்வேறு பரிசுகள், விருதுகள் கிடைத்துள்ளன.
உசாத்துணை
- கண. முத்தையாவின் பதிப்புப் பணி பற்றி அகிலன கண்ணன்
- தமிழ்ப் புத்தகாலயம் வெளியீடுகள்பற்றிய குறிப்பு
- தமிழ்ப் புத்தகாலயம் இணையதளம்
அடிக் குறிப்புகள்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.