under review

கு.அருணாசலக் கவுண்டர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:நாட்டாரியல் ஆய்வாளர்கள் to Category:நாட்டாரியல் ஆய்வாளர்Corrected Category:வரலாற்றாய்வாளர்கள் to Category:வரலாற்றாய்வாளர்)
 
Line 80: Line 80:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வரலாற்றாய்வாளர்கள்]]
[[Category:வரலாற்றாய்வாளர்]]
[[Category:நாட்டாரியல் ஆய்வாளர்கள்]]
[[Category:நாட்டாரியல் ஆய்வாளர்]]

Latest revision as of 12:12, 17 November 2024

To read the article in English: K. Arunachala Gounder. ‎

கு.அருணாசலக் கவுண்டர்

கு. அருணாசலக் கவுண்டர் ( 1905- 1999) கொங்குநாட்டின் வரலாற்றாசிரியர்களில் ஒருவர். நாட்டாரியல் ஆய்வாளர். பதிப்பாசிரியர்.

பிறப்பு, கல்வி

கோபியை அடுத்த பங்களாபுதூரில் 1905ல் கு. அருணாசலக் கவுண்டர் பிறந்தார். (சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூலில் பவானி ஆறறங்கரையில் நஞ்சை புளியம்பட்டியில் பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது) கு. அருணாசலக் கவுண்டர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உ.வே.சாமிநாதையர் , சுவாமி விபுலானந்தர் ஆகியோரிடம் தமிழ் பயின்றவர். 1931-ல் தமிழ்வித்வான் பட்டம் பெற்றார்.

கல்விப்பணி

கு.அருணாசலக் கவுண்டர் திருநெல்வேலி ம.தி.தா இந்துக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். துணை முதல்வராக பணியாற்றி 1968-ல் ஓய்வு பெற்றார். 1970 வரை உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் பணிபுரிந்தார். புதுமைப்பித்தன் இவரிடம் தமிழ் பயின்றதாக சிற்பி குறிப்பிடுகிறார்.

இலக்கியப்பணி

கு.அருணாசலக் கவுண்டர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், அ.சீனிவாசராகவன் போன்றவர்களின் நண்பராக திகழ்ந்தார். டி.கே.சிதம்பரநாத முதலியார் நடத்திய வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்குழுவின் உறுப்பினர். கு. அருணாசலக் கவுண்டர் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

சமயம்

கு.அருணாசலக் கவுண்டர் 'தமிழகம் கர்நாடகம் சமய தொகுப்பு', 'வரலாற்றில் வைணவம்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்

வரலாறு

கு.அருணாசலக் கவுண்டர் கொங்கு வரலாற்றை ஆராய்ந்து பழையகோட்டை பட்டக்காரர் பூர்வ பட்டம் என்னும் வரலாற்று நூலை தரவுகளுடன் பதிப்பித்துள்ளார். 'பண்டைத்தமிழர் வேளாண்மை வணிக வாரியங்கள்', 'வாணவராயர் வரலாறு' ஆகியவை முக்கியமான வரலாற்று நூல்கள்.

வாழ்க்கை வரலாறு

கு.அருணாசலக் கவுண்டர் டி.சுவாமிக்கண்ணுப்பிள்ளை வாழ்க்கை வரலாறு, வேதநாயகர் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மொழியாக்கம்

அருணாசலக் கவுண்டர் 'வெனிஸ்நகர வர்த்தகன்' (Merchant of Venice) போன்ற மொழியாக்கங்களையும் செய்துள்ளார்.

அமைப்புப்பணிகள்

கு. அருணாசலக் கவுண்டர் பல்கலைக்கழக கல்விக்குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றினார். பி.டி. ராசன் தலைமை தாங்கிய மதுரை தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும், ஆதீனகர்த்தர்கள் தொடங்கிய தமிழ்நாடு தெய்வீகப்பேரவையின் மாவட்ட அமைப்பாளராகவும் பணியாற்றினார்.

பதிப்புப் பணி

கு.அருணாசலக் கவுண்டர் பல நூல்களை பதிப்பித்துள்ளார். அவருடைய கையெழுத்துப் படிகள் யாவும் தற்சமயம் தன்னிடம் உள்ளன என்று ஆய்வாளர் கு. மகுடீஸ்வரன் குறிப்பிடுகிறார்.

கு.அருணாசலக் கவுண்டர் வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் எழுதிய கம்பராமாயண சாரம், தக்கை இராமாயணம் முதல் 5 காண்டங்கள்) 'தனிக்கவித்திரட்டு', 'பாம்பலங்காரர் குறவஞ்சி', பாம்பலங்காரர் வருக்கக்கோவை முதலிய நூல்களை ஆய்வு செய்து பதிப்பித்தார்.

கு. அருணாசலக் கவுண்டர் தன் கையெழுத்துப் பிரதியொன்றில் பதிப்புப் பணியின் நிலை பற்றிக் குறிப்பு இவ்வாறு எழுதியுள்ளார். "வித்வான் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள், நெடுங்காலம் அரிதின் முயன்று சேகரித்த 300க்கு மேற்பட்ட அபூர்வ சுவடிகளின் புதையலிலே கிடைத்த தக்கை ராமாயணச் சுவடியைச் சென்ற ஏழு ஆண்டுகளாகவே பரிசோதித்துப் பெயர்த்தெழுதிப் பதிப்பித்து வருகிறேன். உ.வே.சா. பதிப்புகளுக்குப் பின் சுவடியினின்றும் அச்சாகும் தனிச் சிறப்பு வாய்ந்த பாரகாவியம் இதுதான். இதற்கு முன் அந்தாதி, பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கிய நூல்களே வெளிவந்திருக்கின்றன. ஏடு கிடைத்தாலும் அதைப் படித்துப் பிரதி செய்வார் இல்லை என்பதால், தொல்பொருள் ஆய்வுத்துறை டாக்டர் நாகசாமி அவர்களைக் கொண்டு நாலைந்து ஆண்டுகளுக்கு முன் பேரூர் மடாலயத்தில் ஒரு பயிற்சி முகாம் பத்துநாள் நடத்தினேன். சுவடிகளைப் பதிப்பித்தாலும் அவற்றை அச்சிடுவதற்குப் புத்தக வெளியீட்டார் யாரும் முன் வருவதில்லை. இதனால் நான் அடைந்த சிரமத்தை அலைச்சல் அவதி அவமதிப்புகளைச் செய்யுள் ஒன்றிலே சொல்லியிருக்கிறேன். இலக்கியம் ஒன்றை அச்சிடுவது என்றால் புலவருக்கு வேண்டும் தகுதிகள்.

'தேயாத செருப்பும் ஒரு பையனும் வேண்டும்
சேர்ந்திருக்க இடம் வேண்டும் திரிய என்றால்
ஓயாத கால் வேண்டும், உண்ணும் சோற்றில்
உருகிக் கெட்ட நாவேண்டும், உலுத்தர்தம்மைக்
காயாத மனம் வேண்டும், புல்லருக்கும்
கனிவுடனே புகழ்மாலை சூட்ட வேண்டும்
தாயாகப் புலவருக்கு இத்துணையும் உண்டானால்
தக்கை இனிப் பதிப்பிக்கத் தொடங்கலாமே'."

மறைவு

கு. அருணாசலக் கவுண்டர் 1998-ல் தன் 94-வது அகவையில் மறைந்தார்

விருதுகள்

  • இராவ்சாகிப் (ஆங்கிலேய அரசு)
  • பேரவைச்செம்மல் (மதுரை பல்கலைக்கழகம்)
  • மூதறிஞர் விருது (ஆதித்தனார் நினைவு விருது)

இலக்கிய இடம்

கு.அருணாசலக் கவுண்டர் கொங்கு வரலாற்றாய்வாளர் என்னும் முறையிலும், கொங்கு இலக்கிய நூல்களின் பதிப்பாளர் என்னும் வகையிலும் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தக்கை ராமாயணம் இவருடைய பதிப்புச்சாதனை.

நூல்கள்

  • அகலிகை வெண்பா (1934)
  • பழைய கோட்டைப் பட்டக்காரர் நாட்டுப் பாடலும் பூர்வ பட்டயமும் (1965)
  • சர்க்கரை மன்றாடியார் காதல் (1966)
  • பூங்காவனப் பிரளயம் (1977)
  • பாம்பண காங்கேயன் குறவஞ்சி (1978)
  • தமிழகம் கர்நாடகம் சமயத்தொகுப்பு
  • வரலாற்றில் வைணவம்
  • பண்டைத்தமிழக வேளாண்மை வணிக வாரியங்கள்
  • எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை (வாழ்க்கை வரலாறு)
  • நவயுக வாசகம் ( இணையநூலகம்)
  • வழிகாட்டும் வள்ளுவர் (இணையநூலகம்)
  • நீதிபதி எஸ். மகாராஜனும் ரசனையும் (இணையநூலகம்)
  • மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை வரலாறு ( இணையநூலகம்)
  • காலவெளியில் ஒரு ஜீவநதி வாணவராயர் வரலாறு
  • தக்கை ராமாயணம் 2-தொகுதிகள்( பதிப்பு)
  • பாம்பலங்காரர் குறவஞ்சி (பதிப்பு)
  • பாம்பலங்காரர் வருக்கக்கோவை (பதிப்பு)

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:22 IST