under review

மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை

From Tamil Wiki
Morur.jpg

மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை(பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) படிக்காசுப்புலவர் இயற்றிய வருக்கக்கோவை என்னும் சிற்றிலக்கியம்.

பதிப்பு, வெளியீடு

தி. அ. முத்துசாமிக் கோனார் 1916-ல் பழையகோட்டைப் பட்டயக்காரர் ராய்பஹதூர்‌ உத்‌தமக்காமிண்ட நல்லதம்பிச்‌ சர்க்கரை மன்றாடியார்,குமாரமங்கலம்‌ இ. மு. ப. ஆறுமுக உபாத்தியாயர்‌ இருவரிடமிருந்த மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவையின் பிரதிகளையும் ஒப்புநோக்கிப் பதிப்பித்தார். தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த படிக்காசுப் புலவருக்குக் கொங்கு நாட்டோடு ஏற்பட்ட தொடர்பு குறித்த செவிவழிக் கதைகள், அவற்றிற்கு ஆதரவாக வழங்கும் தனிப்பாடல்கள் ஆகியவற்றை கோனாரின் முன்னுரை குறிப்பிடுகிறது.

ஆசிரியர்

மோரூர் பாம்பலங்காரர் வருக்கக் கோவையை இயற்றியவர் படிக்காசுத் தம்பிரான் எனப்படும் படிக்காசுப் புலவர்.

திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில் உள்ள மோரூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காங்கேயர் என்னும் குறுநில மன்னர் மரபில் வந்த குமாரசாமிக் காங்கேயன் பொ.யு. 1627-ல்‌ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில்‌ தாண்டவ பத்திரை விலாசம்‌ எனும்‌ மண்டபம் கட்டியதைப்பற்றி சாசனம் குறிப்பிடுகிறது. இம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க படிக்காசுப் புலவர் இந்நூலைப் பாடி பாம்பலங்காரர் கோயிலில் நூலை அரங்கேற்றினார். அரங்கேற்றத்தின்போது பாகம்பிரியான் என்னும் புலவர் படிக்காசுப் புலவரைப் புகழ்ந்து பாடிய பாடல்:

காரூர்‌ பொழி நிகழ்‌ மோரூறிற்‌ பாம்பலங் காரரின்மேற்‌
சீரூர்‌ வருக்கத்‌ தொடைமாலை யன்புறச்‌ செப்பினனால்‌
நீரூர்‌ புடவிக்‌ கவிவாணர்‌ வாழ்த நிமிர்களந்தைப்
பேரூர்‌ வருபடிச்‌ காச னென்றோ து பெரியவனே,

நூல் அமைப்பு

அகர வரிசையில் எழுத்துக்களை செய்யுளின் முதலெழுத்தாக வைத்து அகரநிரல் முறையில் பாடப்படும் கோவை நூல் வருக்கக்-கோவை. வருக்கக் கோவை அகப்பொருள்கோவை எனப்படும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது. நூலில் பாடப்படுவோர் பாட்டுடைத்தலைவர், காமத்தலைவர் என இருவர். பாட்டுடைத்‌ தலைவருக்கு நாடு, நகரம்‌, பெயர்‌ முதலியவை கூறப்படும்‌. இந்நூல் மோரூர் பாம்பலங்காரரை பாட்டுடைதலைவராகக் கொண்டுள்ளது.

மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை காப்பு, நூற்பயன் உட்பட 99 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது. காப்பு தவிர்த்து ஒவ்வொரு பாடலின் மூன்றாவது அடியின் இறுதியிலும் 'மோரூரிற் பாம்பலங்காரர் வெற்பில்' என்ற தொடர் இடம்பெறுகிறது.

புணர்தல், இரங்கல், ஊடல், இருத்தல், பிரிவு என தலைவனும் தலைவியும் முதன்முதலில் காண்பதுமுதல் திருமணத்திற்குப்பின் நடத்தும் வாழ்க்கை நிலைகள்வரை கூறும் பாடல்களில் ஒவ்வொரு காரணம்பற்றி பாம்பலங்காரருடைய மலை, நாடு, ஆறு, அருள் முதலியவை கூறப்படுகின்றன.

பாடல் நடை

காப்பு

பரிதி புசாப்பொழின்‌ மோளுரிற்‌ பாம்பலங்‌ காசர்தன்மேற்‌
சுருதிய தான தமிழால்‌ வருக்கத்‌ தொடைசொலவே
சரிதைய தாகத்‌ திருமாலும்‌ வேதனுர்‌ தாள்பணியக்‌
கருதிய கம்பத்திற்‌ செல்லவி நாயகன்‌ காப்பெமக்கே.

தலைவன்‌ பாங்கனை முனிதல்‌

கொங்கைக்‌ குறியு மதரக்குறியுங்‌ கொடி யிடையாள்‌
செங்கைக்‌ குறியுங்கண்‌ டாற்றுவரேர் திருச்‌செஞ்சடை மேற்‌
கங்கைக்‌ குறிவைத்த மோரூரிற்‌ பாம்பலங்‌ காரர்வெற்பி
லங்கைக்குழியைந்தும்‌ வேளாகமுமறிந்தவரே

பிரிவாற்றாமை

மோகம்‌ பொன்னாகக்‌ கொளும்பொது மாதர்த முன்றிற்புகார்
மேகம்‌ பொன்னாகிலு மீளுவரோ வடமேருசுற்றும்
காகம்‌ பொன்னாகிய மோரூரிற்‌ பாம்பலங்காரர்வெற்பில்
லாலம் பொன்னாவ தறிந்தும் பொன்‌னாசைக்‌ ககன்றவரே.

உசாத்துணை

மோரூர் பாம்பலங்காரர் வருக்கக் கோவை-தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page