ஷோபாசக்தி
ஷோபாசக்தி (பிறப்பு: நவம்பர் 18, 1967) நவீன தமிழ் எழுத்தாளர். நாவல், சிறுகதை, விமர்சனம், நாடகம், திரைப்படம், பதிப்பு ஆகிய தளங்களில் இயங்கி வருகிறார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் பிறந்தவர். தமிழீழ விடுதலையில் ஈடுபாடு கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தார். அதன் பின் அவ்வியக்கத்தின் மேல் கசப்புக் கொண்டு வெளியேறினார். பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கிடைக்கப்பெற்று குடியேறிய ஷோபாசக்தி, அங்கே திரைப்படத் துறையில் நடித்தும், திரைக்கதை எழுதியும் வருகிறார்.
பிறப்பு, இளமை
அந்தோனிதாசன் (அன்ரனி தாசன்) என்னும் இயற்பெயருடைய ஷோபாசக்தி நவம்பர் 18, 1967-ல் இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அல்லைப்பிட்டி என்ற கிராமத்தில் பிரான்சிஸ் யேசுதாசன்-கொலஸ்ரிகா ஜீவராணி இணையருக்கு பிறந்தார். நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும் கொண்ட வறிய குடும்பம். ஷோபா சக்தி ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பு வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் 1983-ம் ஆண்டு முடித்தார்.
தனி வாழ்க்கை
1983-ல் இலங்கையில் தமிழர்கள் மீதான கருப்பு ஜூலை வன்முறைத் தாக்குதல்களையும் கொலைகளையும் தொடர்ந்து ஷோபாசக்தி தமிழீழ விடுதலைப் புலிகள்( LTTE) அமைப்பில் இணைந்தார். ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்ட ஷோபாசக்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த கவிஞர் நிலாந்தனின் அடியொற்றி கவிதைகள் எழுதலானார். புலிகள் நடத்திய விடுதலைக்காளி தெருக்கூத்தில் (1985) முதன்மைப் பாத்திரமொன்றில் நடித்தார். விடுதலைப் புலிகளின் சிங்களப் பொதுமக்கள் மீதான அனுராதபுரப் படுகொலைகளும், பிற தமிழ் விடுதலை இயக்கத்தினர் மீதான வன்முறைகளும், தமிழப் பொதுமக்களின் மீதான சிறிய குற்றங்களுக்குமான கடும் தண்டனைகளும் 1986-ல் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து மனக்கசப்புடன் வெளியேறச் செய்தன.
அதைத் தொடர்ந்து பண்ணைப்பாலத்தில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை கிளப்பிவிட்டதாக சந்தேகத்தின் பேரில் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட ஷோபாசக்தி நீண்ட விசாரணைக்குப் பின் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார். இந்திய அமைதிப்படை 1987-ல் இலங்கையில் தமிழர் பகுதிகளில் நிலைகொண்டிருந்த பொழுது புலிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை துவங்கியபோது ஷோபாசக்தி கொழும்புக்கு தப்பிச் சென்றார். 1990-ம் ஆண்டில் இந்திய ராணுவம் வெளியேறியதும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போரைத் துவங்கின. பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஷோபாசக்தி நான்கு மாதங்களுக்குப் பின்னர் சிங்களத் தோழி ஒருவரின் முயற்சியால் வெளிவந்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கையை விட்டு வெளியேறி தாய்லாந்தில் மூன்றரை வருடங்கள் அகதியாக வாழ்ந்தார். ஐ.நா-வின் 'அகதிகளிற்கான உயர் ஆணையம்’ ஷோபாசக்தியை அகதியாக ஏற்றுக் கொண்டாலும் அதை ஏற்காத தாய்லாந்து அரசு பலமுறை சிறையில் அடைத்தது.
பின்னர் 1993-ம் ஆண்டு பிரான்சை அடைந்தார். அங்கே அவருக்கு அரசியல் தஞ்சம் கிடைக்கப்பெற்றது. 1993 முதல் பிரான்சில் இலங்கை அகதியாக வாழ்ந்து வருகிறார். ஷோபாசக்தி திருமணம் செய்துகொள்ளவில்லை.
கூத்து,நாடகம்
ஷோபாசக்தியின் கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கிறிஸ்துவ தென்மோடிக் கூத்துகளும் அதற்கான மாதக்கணக்கான ஒத்திகையும் அவரது கலையுலகுக்கான அறிமுகமாயின. 10 வயதிலேயே கூத்துக்களில் நடிக்க வந்துவிட்ட ஷோபாசக்தி , சமூக சிர்திருத்த நாடகங்களை எழுதி நடிக்க ஆரம்பித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலும் கவிதைகள் எழுதினார். பரப்பியல் நாடகங்களில் நடித்தார்.
இதழியல்
ஷோபா சக்தி தாய்லாந்தில் இருக்கும் பொழுது நெற்றிக்கண் என்ற கையெழுத்து – ஒளிநகல் பத்திரிகையை நடத்தினார்.
இலக்கியவாழ்க்கை
ஷோபா சக்தி பிரான்ஸில் 'நான்காம் அகிலம்’ என்ற சர்வதேச ட்ராட்ஸிகிய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அங்கு இலக்கிய வாசிப்பினாலும் உரையாடல்களாலும் ஷோபாசக்தி எழுத்தாளராக உருவாகினார். 'நிறப்பிரிகை’ குழுவோடு ஏற்பட்ட தொடர்பால் பின் நவீனத்துவம், தலித்தியம், பெரியாரியம் ஆகியவற்றைக் கற்கத் தொடங்கினார்.
'சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்’ என்ற பாரதியின் வரியில் இருந்து எடுத்த சிவசக்தி என்றபெயரில் பிரான்ஸில் எழுதத்தொடங்கிய அவர், கடவுள் நம்பிக்கையற்ற தான் தன்னுடைய புனைபெயரை மாற்றிக் கொள்ளத் தீர்மானித்தார். அவரது பிடித்த நடிகை "ஷோபா" என்ற பெயருடன் முந்தைய புனைபெயரில் சக்தி என்ற சொல்லை இணைத்து ஷோபாசக்தி என் மாற்றிக்கொண்டார். ஷோபாசக்தி என்கிற பெயரில் அவர் முதல் கதை 1997-ல் அம்மா இதழில் வெளிவந்த 'எலி வேட்டை’. தொடர்ந்து கட்டுரைகள் , சிறுகதைகள் நாவல்கள் எழுதத் தொடங்கினார். அவரது படைப்புகள் "அம்மா" , "எக்சில்" உள்ளிட்ட இதழ்களில் வெளியாகின. ஷோபாசக்தியைப் பாதித்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, ப.சிங்காரம், எஸ். பொன்னுத்துரை, சாரு நிவேதிதா, ரமேஷ் ப்ரேம் என அவர் குறிப்பிடுகிறார்.
ஷோபாசக்தியின் முதல் நாவலான 'கொரில்லா’ (2001) அயல்நாட்டில் தஞ்சம் கோரும் அகதி மனிதனின் விண்ணப்பத்தில் இருந்து துவங்கும் ஈழப் போராட்ட அரசியலைப் புனைவாக்கிய படைப்பு. அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் புலம் பெயர்ந்த வாழ்க்கையின் வலி மிகுந்த வாழ்க்கைப் பதிவு. கொரில்லா நாவல் 2008-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது.
ஷோபாசக்தி தொடர்ந்து நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதி வரலானார் . அவை இலங்கைப் போர்வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் வெளிப்படுத்தின . வெலிக்கடை சிறைப் படுகொலையை மையப்படுத்தி எழுதப்பட்ட "ம்" (2004) ஆங்கிலத்தில் Traitor என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. மாத்ரு பூமி இதழ் இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.
திரைப்படம்
ஷோபாசக்தியின் முதல் திரைப்படம்' செங்கடல்' (2009). இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் தேர்வான செங்கடல் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றிருக்கிறது. ஷோபாசக்தி முதன்மைப் பாத்திரமேற்று நடித்த" தீபன்" திரைப்படம் (2015) சிறந்த படத்திற்கான தங்கப்பனை விருதை கேன்ஸ் திரைப்படவிழாவில் பெற்றது.
விருதுகளும் பரிசுகளும்
- கண்டிவீரன் சிறுகதைத் தொகுப்பிற்காக கனடா இலக்கியத்தோட்டம் வழங்கிய சிறந்த புனைவிற்கான விருது(2015)
- தீபன் திரைப்படம்- சிறந்த நடிகருக்கான பரிந்துரை கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா(2015)
- ஒட்டுமொத்த சிறுகதை பங்களிப்பிற்காக மணல்வீடு இதழ் வழங்கிய "கு.அழகிரிசாமி நினைவு விருது"(2017)
இலக்கிய இடம்
ஷோபாசக்தியின் புனைவுகள் அரசியல் விமர்சனத்தன்மை கொண்டவை. பகடியும் அங்கதமும் வெளிப்படுபவை. நேர்கோடற்ற தன்மையும் மிகைபுனைவுத்தன்மையும் கொண்ட படைப்புகளையும் எழுதியிருக்கிறார். "ஷோபா தன்னுடயை அரசியலைச் சொல்லத்தான் கதைகளை எழுதுவதாகச் சொல்கிறார். இருப்பினும் அவரது கதைகள் வெறுமே பிரச்சாரமாக இருப்பதில்லை. அந்த முக்கியக் கூறே அவரைப் பல ஈழ எழுத்தாளர்களிடம் இருந்து விலத்திக் காட்டுகிறது. ஷோபாவின் பெரும் பலமே பகடிதான். பகடிகள் ஊடாகத் தொடர்ந்து புனித மரபுகளையும் கலாச்சாரத்தையும் கவிழ்க்கிறார். விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்களை எள்ளலாகக் கதைகளில் சித்தரிக்கும் போது உறுதியாக நிறுவப்பட்ட பல இலட்சிய விம்பங்களை உடைக்கிறார். இந்தப் பகடிகளுக்குப் பின்னே கடும் சீற்றம் ஒளிந்திருக்கிறது. அங்கதங்கள் ஊடாக அவற்றை வெளிப்படுத்தும் போதும் கலையம்சங்களைத் தவறவிடுவதில்லை. கூரிய எள்ளல்களைக் கதையாக்க முடிகிறது. ஆனால், பகடியை மட்டும் முன்னிறுத்தும் எழுத்தாளர் அல்ல. கூர்மையாகச் சமகால வரலாற்றையும் அரசியலை கடுமையாக விமர்சிக்கிறார்" என்று அனோஜன் பாலகிருஷ்ணன் மதிப்பிடுகிறார். "ஷோபாசக்தி இலங்கையில் இருந்து எழுத வந்த முக்கியமான இரண்டு தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர்." (இன்னொருவர் அ. முத்துலிங்கம் ) என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். மேலும் தன் விமர்சனத்தில், "ஷோபாசக்தியின் எழுத்துக்கள் கூரிய அங்கதமும் சீற்றமும் கொண்டவை. சமகால வரலாற்றின் முன் தயங்கிநிற்கும் நம் மனசாட்சியை சீண்டக்கூடியவை." எனக் குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
நாவல்கள்
- கொரில்லா - அடையாளம் பதிப்பகம் (2001)
- ம்-கருப்புப்பிரதிகள் பதிப்பகம் (2004)
- Box கதைப்புத்தகம் - கருப்புப்பிரதிகள் பதிப்பகம் (2015)
- இச்சா - கருப்புப்பிரதிகள் பதிப்பகம் (2019)
- 'ஸலாம் அலைக்' (2022)
சிறுகதைத் தொகுப்புகள்
- தேசத்துரோகி -கருப்புப்பிரதிகள் பதிப்பகம் (2003)
- எம்.ஜி.ஆர். கொலை வழக்கு - கருப்புப்பிரதிகள் பதிப்பகம் (2009)
- கண்டி வீரன் -கருப்புப்பிரதிகள் பதிப்பகம் (2014)
- மூமின்-கருப்புப்பிரதிகள் பதிப்பகம் (2021)
கட்டுரைத் தொகுப்புகள்
- வேலைக்காரிகளின் புத்தகம் - கருப்புப்பிரதிகள் பதிப்பகம் (2007)
- முப்பது நிறச்சொல் - கருப்புப்பிரதிகள் பதிப்பகம் (2014)
நேர்காணல்கள்
- போர் இன்னும் ஓயவில்லை (2010)
- நான் எப்போது அடிமையாயிருந்தேன் (2010)
- எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் (2014)
அரசியல் ஆக்கங்கள்
- கொலைநிலம் (2009, வடலி வெளியீடு, இணை எழுத்தாளர்: தியாகு)
எதிர்வினைகள்
- பஞ்சத்துக்கு புலி (2011)
திரைக்கதை
- செங்கடல் (லீனா மணிமேகலை, சி.ஜெரால்டுடன் இணைந்து)
- நியோகா (சுமதி பலராமனுடன் இணைந்து)
- ரூபா (கதை)
- செரஸ் (குறும்படம்)
- Friday And Friday
- The sunshine
திரைப்பட நடிப்பு
- செங்கடல் - Leena Manimekalai
- தீபன் (Dheepan) - Jacques Audiard
- ரூபா - லெனின் எம். சிவம்
- Un Lock (குறும்படம்) - Niru
- Little Jaffna (குறும்படம்) - Lawrence Valin
- L'amour est une fête - Cédric Anger
- Friday And Frida y - Satha Pranavan
- A Private War - Matthew Heineman
- Dernier amour - Benoit Jacquot
- Paris métèque (Clip) - Gaël Faye - Raphael Levy
- The Loyal Man - Lawrence Valin
- Bac Nord - Cédric Jimenez
- Coyotes (TV Series) Jacques Molitor- Gary Seghers
- Notre-Dame brûle - Jean-Jacques Annaud
- Woman at sea - Dinara Drukarova
- TEHU - Éric Barbier
- DILEMNE DILEMME - Jacky Goldberg
இணைந்து தொகுத்தவை
- சனதருமபோதினி (2001, Sugan) (co-author Sugan)
- கறுப்பு (Black) (2002, Sugan) (co-author Sugan)
நாடகங்கள்
- அட்டென்ஷன் ப்ளீஸ் (1996)
- சிங்காரவனம் (1998)
- ஜெய் ஹிந்த் ஜெய் சிலோன் (பிரிஜிட்டுடன் இணைந்து - 2000)
- செரஸ் தேவதை (2015)
- ஆறாம்படை (2017)
- விடுதலைக் காளி - (நடிப்பு -1985)
- Counting and Cracking - (நடிப்பு -2019)
பதிப்பாசிரியர்
- குழந்தைப் போராளி
- அகாலம் - ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்
- குவர்னிகா (GUERNICA) - யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு மலர்
- தனுஜா - ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
நாவல்கள்
- Gorilla (2008, Random House) (English translation by Anushiya Ramaswamy)
- Traitor (2010, Penguin) (English translation by Anushiya Ramaswamy)
- La sterne rouge (2022, Zulma)
சிறுகதைத் தொகுப்புகள்
- The MGR Murder Trail (2014, Penguin) (English translation by Anushiya Ramaswamy)
- Friday et Friday (2018, Zulma, French translation by Faustine Imbert-Vier, Élisabeth Sethupathy and Farhaan Wahab)
வாழ்க்கை வரலாறுகள்
Shoba - Itinéraire d'un réfugié (2017, Le Livre de Poche)
இணைப்புகள்
- ஷோபாசக்தி இணையத்தளம்
- ஷோபா சக்தியின் இச்சா ஜிஃப்ரி ஹசன்
- கொரில்லா ஒரு பார்வை - ராஜேஷ் சந்திரா
- ஷோபா சக்தி சிறுகதைகள் அனோஜன் பாலகிருஷ்ணன்
- ஷோபா சக்தி - ஷங்கர் ராமசுப்ரமணியன்
- ஷோபா சக்தி நேர்காணல்
- ஷோபாசக்தியின் சிறுகதை முருகபூபதி
- மூமீன ஆர்.காளிப்பிரசாத்
- எம்ஜிஆர் கொலைவழக்கு- மல்லிகார்ஜுன்
- தேசத்துரோகி - மதிப்பீடு
- ஷோபா நேர்காணல்- அகரமுதல்வன்
- ஷோபாசக்தி ஒரு விவாதம்
- ஷோபா சக்தி- அ.முத்துலிங்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
25-Nov-2022, 08:24:43 IST