பெளத்தம்

From Tamil Wiki
புத்தர் (காந்தரக் கலை)

பெளத்தம் (பெளத்த மதம்) (புத்த தர்மம்) (பொ.மு 6-ம் நூற்றாண்டு) கெளதம புத்தரின் போதனைகளையும் சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவான மதம்.

வரலாறு

பொ.மு. 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தார்த்தர்/கெளதம புத்தர் கண்டடைந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு பெளத்த/புத்த மதம் உருவானது. பெளத்தர்களுக்கு புத்தர், தர்மம், சங்கம் ஆகிய மூன்றும் முக்கியமானவை. இவை மும்மணிகள் என அழைக்கப்பட்டன. இதில் சங்கம் என்பது உயர்ந்த இடத்தை வகித்தது. சங்கத்தின் அங்கமாக தேரர்கள் இருந்தனர். தேரர்கள் உலகெங்கும் பயணம் செய்து பெளத்த மதத்தைப் பரப்பினர். புத்தர் நிர்வாணம் அடைந்த பிறகு பிக்ஷுக்கள் மேலும் தீவிரமாக நாடெங்கும் பரவி பெளத்த மதத்தைப் பரப்பினர். அங்கு அரசர்களின் உதவியுடன் விகாரங்கள், பள்ளிகள், சேதியங்கள்(சைத்யங்கள்), ஆராமங்களைத் தோற்றுவித்தனர். மருத்துவம் பயின்று மருத்துவர்களாக அங்கு தொண்டு செய்தனர். பள்ளிசாலைகளை அமைத்து குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்தனர். புத்தருக்கு உரிய நாளில் குழந்தைகளுக்கு திரிபீடகம், புத்த ஜாதகக் கதைகள், புத்த சரித்திரம் ஆகியவற்றை போதித்தனர். உணவு கொடுக்க அறச்சாலைகளை அமைத்தனர்.

இவை தவிரவும் பெளத்த தர்மத்தில் தாய் தந்தையர் மக்களுக்குரிய ஒழுக்கங்கள், ஆசிரியர்-மாணவர்க்குரிய ஒழுக்கங்கள், நண்பர் ஒருவரிடத்தில் ஒருவர் நடந்து கொள்ளும் ஒழுக்கங்கள், முதலாளி-தொழிலாளருக்குரிய ஒழுக்கங்கள், இல்லறத்தார்-துறவிகளுக்குரிய ஒழுக்கங்கள் ஆகியவையும் விரிவாக கூறப்பட்டன. துறவிகள் இவ்வறங்களைக் கடைபிடிப்பதன் வழியாக பரிநிர்வாணம் எனும் துன்பமற்ற நிலையை அடையலாம்.

பெளத்த மாநாடுகள்

புத்தரின் மறைவுக்குப் பின் நான்கு பெளத்த மாநாடுகள் நடைபெற்றன.

ஆண்டு நடைபெற்ற இடம் தலைமை ஆதரவளித்த மன்னர் விளைவு
பொ.மு 483 ராஜகிருகம் (சட்டபானி குகைகள்) மகாகாஸ்யபர் அஜாதசத்ரு ஆனந்தர் புத்தரின் போதனைகள் அடங்கிய சுத்தபீடகத்தை இயற்றினார். உபாரி வினய பீடகத்தை இயற்றினார்.
பொ.மு 383 வைஷாலி சாபக்காமி அரசர் காலசோகா வினய பீடகத்தின் பத்து முக்கியமான பகுதிகளை விவாதிக்க வேண்டி கூட்டப்பட்டது. இங்கு நடந்த விவாதத்தின் வழியாக தேரவாதம், மகாயானம் ஆகிய இரு பெரும் பிரிவுகள் உருவாகின.
பொ.மு. 250 பாடலிபுத்திரம் மோகலிபுட்ட திஸ்ஸா அசோகர் பெளத்தத்தை தூய்மை செய்யவும், சங்கத்தில் நடைபெறும் ஊழலைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதிக்க கூட்டப்பட்டது. அபிதம்ம பீடகம் உருவானது. ஹீனயான பெளத்தம் தோன்றியது. பெளத்த மதத்தைப் பரப்ப பிட்சுக்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டனர்.
பொ.யு 72 குண்டலவானா, காஷ்மீர் அஸ்வகோஷர் கனிஷ்கர் சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அபிதம்ம பீடகம் பிராகிருதத்லிருந்து சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. மகாயானம், ஹீனயானம் என இரு பிரிவுகள் உருவாக்கப்பட்டது.

ஐந்தாவது மற்றும் ஆறாவது பெளத்த மாநாடுகள் முறையே 1871, 1954-ல் பர்மாவில் நடைபெற்றன. பர்மாவுக்கு வெளியே உள்ள பெளத்தர்களை அவை இணைத்துக் கொள்ளவில்லை.

தத்துவம்

நான்கு உண்மைகள்
  • துன்பம்/துக்கம் தவிர்க்க முடியாதது
  • ஆசையே துன்பத்திற்கு காரணம்
  • ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்
  • துன்பத்தை நீங்க எட்டு நெறிமுகள் உதவும்
எட்டு நெறிமுறைகள்
  • நற்காட்சி
  • நல்லெண்ணம்
  • நன்மொழி
  • நற்செய்கை
  • நல்வாழ்க்கை
  • நன்முயற்சி
  • நற்பிரக்ஞை
  • நற்தியானம்
நான்கு நினைவுகள்
  • உடல் தூய்மையற்றது என்று நினைத்தல்
  • நுகர்வுகளிலிருந்து உண்டாகும் கேடுகளை நினைத்தல்
  • எண்ணங்களின் நிலையற்ற தன்மையை நினைத்தல்
  • இருப்புக்கு இயல்பான தன்மைகளை நினைத்தல்
நான்கு நன்முயற்சிகள்
  • தீய குணங்கள் உண்டாகாமல் தடுக்க முயல்தல்
  • பின்னரே உண்டாகியிருக்கும் தீய குணங்களை விலக்க முயலுதல்
  • முன்பு இல்லாத நன்மைகளை உண்டாக்க முயலுதல்
  • முன்பு உண்டாகியுள்ள நன்மைகளை மிகைப்படுத்த முயலுதல்
ஐவகை ஆற்றல்கள்
  • ஸ்ரத்தை
  • திறமை
  • நினைவு
  • உருவேற்றம்
  • ஊகித்தல்
கருவிகள்

உண்மை ஞானத்தை உண்டாக்குவதற்குரிய கருவிகள்

  • திறமை
  • நினைவு
  • உருவேற்றல் (மனனம்)
  • திரிபீடக ஆராய்ச்சி
  • மகிழ்ச்சி
  • அமைதி
  • ஒத்த பார்வை (சமதிருஷ்டி)
பாவனைகள்

(பற்றை அறுக்கும் வழிகளாக பாவனைகள் உள்ளன)

  • மைத்ரி பாவனை - எல்லா உயிர்களும் பேராசை, நோய், துன்பம் இவற்றிலிருந்து விடுபட்டுக் களிப்புற்று வாழட்டும் என்று பாவித்தல்
  • கருணா பாவனை - வறியவர் வறுமை நீங்கிச் செல்வம் பெறுக என்று பாவித்தல்
  • முதித பாவனை - (முதிதம் என்பது மகிழ்ச்சி) ஒவ்வொருவரும் தத்தமக்கு அமைந்துள்ள நல்வினைப்பயனை அடைவராக என பாவித்தல்
  • அசுப பாவனை - உடல் என்பது மிகவும் இழிந்தது எனவும், அது வெறுத்தற்குரிய நாற்றத்தை வெளிப்படுத்துவது எனவும் பாவித்தல்
  • உபேட்சா பாவனை - எல்லா உயிர்களையும் ஒன்றாகக் கருதுதல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல் (உபேட்சா என்பது உதாசீனம்/அலட்சியம்)
தியானங்கள்

(பற்றை அறுக்கும் வழிகளாக நான்கு தியானங்கள் உள்ளன. இந்த தியானங்கள் சமாதிக்கு உதவுவன)

  • முதலாம் தியானம் - துறவி, காமம், பாவம் இவற்றிலிருந்து தன்னை விலக்கி மனனத்தோடும் ஆராய்ச்சியோடும் கூடியிருக்கும்போது அனுபவிக்கும் மகிழ்ச்சி நிலை
  • இரண்டாம் தியானம் - மனனமும் ஆராய்ச்சியும் இல்லாமல் அவை அடைக்கப்பட்டு இருக்கும்போது அமைதியிலிருந்து உண்டாகும் இன்ப நிலை.
  • மூன்றாம் தியானம் - துறவி, காமம் முதலியவற்றை ஒழித்து மகிழ்ச்சியைப் பெற்று, பொறுமை, அறிவு முதலியவற்றோடு கூடிய இன்பத்தை தன்னுள் அனுபவித்தல்
  • நான்காம் தியானம் - இன்பமும் இல்லாமல் துன்பமும் இல்லாமல் இருக்கின்ற ஒத்த பார்வையையும் அறிவையும் கொண்டுள்ள தூய நிலை.

பிரிவுகள்

  • தேரவாத பெளத்தம்:தாய்லாந்து, இலங்கை, கம்போடியா, லாவோஸ் மற்றும் பர்மாவில் பரவலாக உள்ளது
  • மஹாயான பெளத்தம்: சீனா, ஜப்பான், தைவான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவலாக உள்ளது
  • வஜ்ரயான பெளத்தம்: திபெத், பூடான், நேபாளம், லடாக், சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில் உள்ளது. திபெத்திய பௌத்தமும், ஷிங்கோன் பெளத்தமும் இதன் இரு பிரிவுகள்.
  • ஹீனயான பெளத்தம்: புத்தரின் நல்லொழுக்க நெறிகளை கடைப்பிடிப்பதன் மூலம் பரிநிர்வாணம் அடையலாம் என்பதை வலியுறுத்துவது. இப்பிரிவு அசோகர் காலத்தில் கிளைத்தது.
  • திபெத்திய பௌத்தம்: ஹீனயானத்தின் பிரிவுகளில் ஒன்று. திபெத், நேபாளம், மங்கோலியா, பூட்டான் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகள் மற்றும் வட இந்தியாவில் பரவலாக உள்ளது
  • ஜென் பௌத்தம்: மகாயான பௌத்தத்தின் ஒரு வடிவம். இது பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. மத நூல்கள், சடங்குகள் அல்லது கோட்பாடுகளுக்கு பதிலாக இது எளிமை மற்றும் தியானத்தை வலியுறுத்துகிறது. "ஜென்" என்ற வார்த்தை தியானம் என்று பொருள்.
  • நிர்வாண பௌத்தம்: தேரவாத பௌத்தத்துடன் நெருங்கிய தொடர்புடையது. ஆனால் நிர்வாணத்தின் கருத்து பௌத்தத்தின் பல பாதைகளுக்கு மையமானது. நிர்வாணம் என்ற சொல்லுக்கு மெழுகுவர்த்தி அணைக்கப்படுவது போல் "வெளியேறுவது" என்று பொருள்படும். அனைத்து பற்றுகளும் முக்தி நிலையை அடையும் ஆசையும் முடிவுக்கு வருகிறது.

பெளத்த நூல்கள்

  • திரிபீடகம் (சுத்தபீடகம், வினயபீடகம், அபிதம்மபீடகம்)
  • சூத்ரா
  • The Book of the Dead
  • தம்மபதம்
  • மிலிண்ட பானா
  • புத்தசரிதம்

தமிழ்நாட்டில் பெளத்தம்

பெளத்த மதம் பற்றிய குறிப்புகள் கடைச்சங்க காலத்து நூல்களாகிய சிலப்பதிகாரம், மணிமேகலையில் உள்ளன. மணிமேகலை எனும் பெளத்த காவியத்தை இயற்றியவர் கூலவணிகன் சீத்தலைச் சாத்தனார். இளம்போதியார் எனும் கடைச்சங்கப்புலவர் ஒரு பெளத்தர். இதன் வழியாக பொ.யு 1-2-ம் நூற்றாண்டுகளில் பெளத்தம் தமிழ் நாட்டில் இருந்ததை அறிய முடிகிறது. பொ.மு. 3-ம் நூற்றாண்டு காலத்தில் உள்ள அசோகரின் கல்வெட்டில் தமிழ் நாட்டில் பெளத்த மதம் பரவியதற்கான சான்றுகள் உள்ளன. மஹாவம்சம், தீபவம்சம் ஆகிய நூல்களில் இலங்கை அரசர் பெளத்த மதத்தை பாதுகாத்து வந்ததற்கான செய்திகள் உள்ளன. அசோகரால் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பட்ட மகேந்திரர் தமிழ் நாட்டிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. இலங்கை அரசனின் மாமனாரான அரிட்டரும் மகேந்திரரும் இணைந்து இங்கு மதப்பரப்புகை செய்திருக்கலாம் என்றும் நம்பப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள அரிட்டாபட்டி எனும் கிராமம் இதற்கு சான்று. தேவாரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பெரிய புராணம், நீலகேசி முதலிய இலக்கியங்களில் பெளத்தம் பற்றிய செய்திகள் உள்ளன. இந்து மதம் புத்தரை ஒரு அவதாரமாக ஏற்றுக் கொண்டது; வேள்விகளில் உயிர்க்கொலை நீக்கியது; அரசமரம் தொழுதலுக்குரிய ஒன்றாக ஆனது; பின்னாட்களில் பிற மதங்களிலும் மடங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது.

பெளத்த பெரியார்கள்

இளம்போதியார், அறவண அடிகள், மணிமேகலை இயற்றிய சீத்தலைச் சாத்தனார், சங்கமித்திரர், நாதகுத்தனார், புத்ததத்ததேரர், போதிதர்மர், திக்நாகர், தருமபால ஆசாரியார், ஆசாரிய தருமபாலர், புத்த நந்தி, சாரி புத்தர், புத்த மித்ரர், வஜ்ரபோதி, பெருந்தேவனார், ஆனந்ததேரர், தம்மகீர்த்தி, கவிராசராசர், காசப்பதேரர், சாரிபுத்தர், புத்தாதித்யர் ஆகியோர் தமிழகத்தில் வாழ்ந்த பெளத்த பெரியார்கள்

பெளத்த திருப்பதிகள்

காவிரிப்பூம்பட்டினம், பூதமங்கலம், போதிமங்கை, பொன்பற்றி, நாகைப்பட்டினம், புத்தகுடி, உறையூர், காஞ்சீபுரம், திருப்பதிரிப்புலியூர், சங்கமங்கை, கூவம், மதுரை, அரிட்டாபட்டி, தஞ்சை, திருமாலிருஞ்சோலை, வஞ்சி மாநகர் ஆகியவை பெளத்த திருப்பதிகள் என்று அழைக்கப்பட்டன.

பெளத்த நூல்கள்

மணிமேகலை, குண்டலகேசி, திருப்பதிகம், விம்பசார கதை, வளையாபதி ஆகியவை தமிழில் எழுதப்பட்ட பெளத்த நூல்கள்.

உசாத்துணை

  • மயிலை சீனி வேங்கடசாமி: பெளத்தமும் தமிழும்