under review

பாக்கியம் சங்கர்

From Tamil Wiki
பாக்கியம் சங்கர்

பாக்கியம் சங்கர் (செப்டம்பர் 26, 1976) உரைநடை, கவிதை, சிறுகதை, திரைப்படம் என பல்வேறு தளங்களில் பங்களிப்பைச் செலுத்துபவர்.

பிறப்பு, கல்வி

பாக்கியம் சங்கர் செப்டம்பர் 26, 1976-ல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் பிறந்தவர். பாக்கியம் சங்கரின் பூர்வீகம் திருநெல்வேலி. தேங்காய் வியாபாரம் செய்துள்ளார் இவரது தந்தை பழனிச்சாமி திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வேலைதேடி சென்னை வந்துவிட்டார். இவரது பெரிய குடும்பம் பெரும்பாலும் வறுமையிலேயே இருந்துள்ளது. வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 10-ம் வகுப்பு படிக்கும் போது படிப்பில் விருப்பமின்றிபள்ளிக்குச் செல்ல மறுத்து வேலைகளுக்குச் செல்லத் துவங்கினார்.

தனிவாழ்க்கை

தந்தை பழனிச்சாமி, தாய் பாக்கியம். அக்கா பெயர் சாந்தி, அண்ணன்கள் குமரன் மற்றும் சக்திவேல். இன்னொரு சகோதரி திருநங்கை சுதா.

இவரது மனைவி பெயர் ரேவதி. இவருக்கு கார்த்திகா, பாரதி கண்ணம்மா என்னும் இரு மகள்கள்.

கலை வாழ்க்கை

பத்தாம் வகுப்பின் இடையிலேயே படிப்பை நிறுத்திக்கொண்ட பாக்கியம் சங்கர் அக்காலகட்டத்தில் எழுத்தாளர் பாலகுமாரனின் தீவிர வாசகராக இருந்துள்ளார்.பின்னர் கோவிந்தசாமி எனும் உதவி இயக்குனரின் அறிமுகத்திற்குப் பின் சினிமாவிலும் தீவிர இலக்கியத்திலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பாலகுமாரன் வாசகராக இருந்த பாக்கியம் சங்கரை பிற இலக்கிய ஆக்கங்களைப் படிக்க வலியுறுத்தியுள்ளார் கோவிந்தசாமி. அதன் பின்னர் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.ச. ராமாமிர்தம், ந. பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி என்று தன் வாசிப்பை விரிவாக்கினார். இக்காலகட்டத்தில் பாக்கியம் சங்கர் கவிதைகள் கவிதைகள் எழுதி அவை இதழ்களிலும் பிரசுரம் ஆகின.

படிப்பைத் துறந்ததில் இருந்து சினிமாவில் சேரும் முன் வரை சேல்ஸ்மேன், சித்தாள், பர்மா பஜார் வியாபாரம், கவுன்சிலரின் உதவியாளர் எனப் பல வேலைகளைச் செய்துள்ளார். தற்போது சினிமாவில் திரைக்கதை மற்றும் வசன உருவாக்கத்திலும், நடிப்பிலும் பங்குபெற்றுள்ளார். 'வீரா' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்டவற்றையும், கோ-2 படத்திற்கு வசனமும் எழுதியுள்ள பாக்கியம் சங்கர் 'காதலும் கடந்துபோகும்', 'பகைவனுக்கருள்வாய்' படங்களில் வசனம் எழுதுவதில் கூடுதலாகப் பங்கெடுத்துள்ளார். 'ஜெயில்' திரைப்படத்தின் வசன உருவாக்கத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைந்து பங்காற்றியுள்ளார். 'வீரா', 'குருதியாட்டம்', 'மாடர்ன் லவ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உதவி இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

இதுவரை இணைய மற்றும் அச்சு இதழ்களில் வெளிவந்துள்ள தன்னுடைய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் பணியில் உள்ளார். வடசென்னை மக்களின் இயல்பான வாழ்க்கையினை 'வடசென்னைக்காரன்' என்ற கட்டுரைத் தொகுதியில் எழுதியுள்ளார். வடசென்னை மனிதர்களின் கதைகள் அடங்கிய மற்றொரு கட்டுரைத் தொகுப்பு 'நான்காம் சுவர்' ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. எழுத்தாளர்கள் தமிழ்ப் பிரபா, கரன் கார்க்கி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து பாக்கியம் சங்கர் 'சார்பட்டா பரம்பரை' குறித்த முன்கதை ஒன்றையும் எழுதிவருகிறார்.

இலக்கிய இடம்

"வடசென்னையின் வாழ்வு இன்னும் முழுமையாக ஆவணப் படுத்தப்படவில்லை. அது பற்றி நிறைய எழுதவேண்டும். கதையோ கட்டுரையோ நம்முடைய விருப்பத்தில் சுதந்திரமாக எழுதலாம். ஆனால், சினிமா எழுத்தாளனுக்குக் காட்சி அறிவு அவசியம்" என்கிறார் பாக்கியம் சங்கர்.

"பாக்கியம் சங்கரின் மொழி, அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகுடையதாக இருக்கிறது. அசலான மனிதர்களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது" என்று எழுத்தாளர் பிரபஞ்சன் 'வடசென்னைக்காரன்' நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

"பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார்" என்று பாக்கியம் சங்கரின் எழுத்து பற்றிக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

படைப்புகள்

கவிதைத் தொகுப்பு

  • வீடுகள் என்கிற அறைகள், 2005, நிவேதிதா பதிப்பகம்.

கட்டுரைத்தொகுப்புகள்

  • நான் வடசென்னைக்காரன், 2015, பாவைமதி, 2017, பாதரசம் வெளியீடு, 2019, யாவரும் பதிப்பகம்.
  • நான்காம் சுவர், 2019, யாவரும் பதிப்பகம்.

பாராட்டுகள்

வடசென்னைத் தமிழ்ச்சங்கம் 'நான்காம் சுவர்' நூலுக்குப் பாராட்டு விழா நடத்தி உள்ளது

உசாத்துணை


✅Finalised Page