பரமனைப் பாடுவார்
சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பது பேரைப் பற்றி பாடியுள்ளார். ‘பரமனைப் பாடுவார் புராணம்' என்பது அவற்றில் ஒன்று.
பரமனைப் பாடுவார் - விளக்கம்
"மனிதனுடைய கரணங்கள் மூன்று. மனம், வாக்கு, உடல் என்பனவே அவை. சிவனைப் பாடும் பக்தர்கள், தங்களுடைய மூன்று கரணங்களாலும் இறைவனை வழிபட்டு இறையருளைப் பெறுபவர்கள்.
தென்தமிழிலும் வடமொழியிலும் பிற மொழிகளிலும் இறைவனுடைய புகழைப் பாடி, உள்ளம் உருகி அன்பு செய்யும் பெருமக்கள் யாவருமே பரமனையே பாடுவார் ஆவர். " - என்று, சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)
பாடல்கள்
பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்
புரமூன்றுஞ் செற்ற னைப் பூணாக மணிந்தானை
யுரனில்வரு மொருபொருளை யுலகனைத்து மானானைக்
கரணங்கள் காணா மற் கண்ணார்ந்து நிறைந்தானைப்
பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவாம்
தனெ் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன
மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக
ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார்
பன்றியுடன் புள் காணாப் பரமனையே பாடுவார்
குரு பூஜை
பரமனைப் பாடுவார்களின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதத்தின் இறுதி நாளன்று நடைபெறுகிறது.
உசாத்துணை
- சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- சேக்கிழாரின் பெரிய புராணம்: பா.சு. ரமணன். தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு
✅Finalised Page