under review

பத்தராய்ப் பணிவார்

From Tamil Wiki
பத்தராய்ப் பணிவார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பது பேரைப் பற்றி பாடியுள்ளார்.‘பத்தராய்ப் பணிவார் புராணம்' என்பது அவற்றில் ஒன்று.

பத்தராய்ப் பணிவார் - விளக்கம்

“சிவபெருமானின் மீது அன்பு செலுத்தி, அவரையே தங்கள் தலைவராகக் கொண்டவர்களை, அன்போடு கொண்டாடி மகிழ்பவர்களே பக்தராய்ப் பணிபவர்கள். இறைவனின்மீது எல்லையற்ற அன்பு பூண்டிருப்பவர்களைக் கண்டால் இவர்கள் மிகவும் மனம் மகிழ்ந்து அவர்களைக் கொண்டாடி மகிழ்வார்கள். தாய்ப் பசுவைக் கன்று அணைவது போல இவர்கள் அந்த அடியவர்களைச் சார்ந்து அன்பு பாராட்டுவார்கள். பணிவும் இனிமையும் உடைய மொழிகளைப் பேசி மகிழ்வார்கள். சிவபெருமானை வழிபடுகிறவர்களைக் கண்டால் மகிழ்ந்து அவர்களைப் பூசிப்பார்கள். மிக்க தவமுடையவர்களான இவர்கள், தங்களுடைய உடலால் சிவபெருமானுக்குரிய திருத்தொண்டை இடைவிடாமல் செய்து கொண்டிருப்பார்கள்.

சிவபெருமான் பற்றிய கதைகளைக் கேட்டு மகிழ்ந்து மற்றவர்கள் அறியாதபடி மனம் உருகி அன்பு செய்வார்கள். இறைவனையே பணிந்து, இறைவனின் பெயரை யாரேனும் சொல்லக் கேட்டாலே நெஞ்சம் நெகிழ்ந்து பேரானந்தம் பெற்று, பேச்சு எழாமல் நாத்தழுதழுப்பார்கள். கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகப் பொழிந்து பூசியிருக்கும் திருநீற்றை அழிக்க, உடம்பெல்லாம் சிலிர்க்க உடல் நடுங்குவார்கள்.

மிகச் சிறந்த குணம் உடைய இவர்கள் நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் இறைவனின் திருப்பாதத்தை மறவாமல் என்றும் நினைத்திருப்பார்கள்.

அன்புணர்ச்சியோடு விளங்கும் இவர்கள், சிவபெருமானை எப்பொழுதும் நினைத்துத் தவம் செய்வார்கள்; ஆயினும் அதனால் வரும் பயனை விரும்பாது அவற்றால் உலகத்து மக்கள் நன்மை அடையும்படிச் செய்யும் பெருந்தன்மை மிக்கவர்கள். திருவாரூரை ஆளும் இறைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை சிந்தையில் என்றும் மறவாது வணங்கிப் போற்றும் உத்தம பக்தர்கள் இவர்கள்.” - என்று சேக்கிழார், பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்

ஈசருக்கே யன்பானார் யாவரையுந் தாங்கண்டாற்
கூசிமிகக் குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழவுற்
றாசையினா லாவின்பின் கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி யினியனவே பேசுவார்

அங்கணனை அடியாரை ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார்
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள்
தங்களுக்கும் சார்வு அரிய சரண் சாரும் தவம் உடையார்

சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய்
அங் கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால்
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார்
செங் கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள்

ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந்தாரை
மாசு இலா நீறு அழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக்
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார்

சங்கரனுக்கு ஆள் ஆன தவம் காட்டித் தாம் அதனால்
பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார்
அங் கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார்

குரு பூஜை

பத்தராய்ப் பணிவார்களின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதத்தின் இறுதி நாளன்று நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page