under review

கோ. கமலக்கண்ணன்

From Tamil Wiki
கோ. கமலக்கண்ணன்

கோ. கமலக்கண்ணன் (ஆகஸ்ட் 03, 1986) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர். கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

கமலக்கண்ணன் திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள பொன்மலையில் ஆ. கோபிநாதன் - கோ. கெம்புலெட்சுமி இணையருக்கு ஆகஸ்ட் 03, 1986 ல் பிறந்தார்.

தனது பள்ளிக் கல்வியை பொன்மலைப்பட்டி திரு இருதய மேனிலைப்பள்ளி மற்றும் இ.ஆர். மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நிறைவு செய்தார்.

கமலக்கண்ணன் இயன்முறை மருத்துவக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

தனிவாழ்க்கை

கமலக்கண்ணன் க. நர்கிஸ் பானுவை 2011-ல் மணந்தார். க. கவினெழில் மற்றும் க. ஸ்வரலிபி என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது தமிழக அரசுப்பணியில் உள்ளார். வேளாண்மை விற்பனைத் துறையில் பணிபுரிகிறார். திருச்சியில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

கமலக்கண்ணனின் முதல் சிறுகதை ஏப்ரல் 2019 ல் வெளியானது. ’கோதார்டின் குறிப்பேடு’ என்னும் அந்த அறிபுனை சிறுகதை அரூ இணைய இதழில் வெளியானது. பிற சிறுகதைகள் 'பதாகை' மற்றும் 'தமிழினி 'இதழ்களில் வெளியாயின. சிறுகதைகள் இன்னும் நூலாக்கம் பெறவில்லை. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என விக்டர் ஹியுகோ, ராபர்டோ பொலான்யோ, டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், ஐசக் பாஷவிஸ் சிங்கர், நீகாஸ் கசந்த்சாகீஸ், திருவள்ளுவர், கு. அழகிரிசாமி, ஜெயமோகன், ஃபிரான்சிஸ் கிருபா, எலீனா ஃபெராண்டே, பிரேம்சந்த் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்

தன் மீது செல்வாக்கு செலுத்திய பிற துறை முன்னோடிகள் என புத்தர், காந்தி, சார்ல்ஸ் டார்வின், நிகோலய் வாவிலோவ், கெஞ்சி மிசோகுச்சி, மசாகி கோபயாஷி, அகி கெளரிஷ்மகி, லூயி புனுவல், டிசிக மற்றும் தாமஸ் ஆண்டர்சன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்

உலகத் திரைப்படங்கள்

கமலக்கண்ணன் இலக்கியத்துக்கு இணையாகவே திரைப்படங்களிலும் ஆர்வம் உள்ளவர். உலகத் திரைப்பட மேதைகளைப் பற்றி இவர் எழுதியக் கட்டுரைகள் இதழ்களில் வெளியாகி உள்ளன. திரைப்படங்கள் குறித்தான 'நிலம் சிந்தும் குருதி' என்கிற கட்டுரை நூல் 2019 ம்-ஆண்டில் கிண்டிலில் வெளியானது.

மொழியாக்கங்கள்

ஐசக் பாஷவிஸ் சிங்கர் எழுதிய ‘ஷோஷா’ வின் தமிழ் மொழியக்கம் அவரது முதல் மொழிபெயர்ப்பு நூலாக தமிழினி பதிப்பகத்தில் 2021-ல் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் தீவிரமாக மொழியாக்கத்தில் கவனம் செலுத்தினார். நவீன இலக்கியத்தில் நீகாஸ் கசந்த்சாகீஸ் எழுதிய புகழ்பெற்ற 'Zorba the Greek' நாவலை 'சோர்பா என்ற கிரேக்கன்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். அம்மொழியாக்கம் பரவலான கவனம் பெற்றது.

கமலக்கண்னன் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்

இலக்கிய இடம்

உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்ததே கமலக்கண்ணனின் முதன்மைப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பில் தனது சரளமான நடைக்கும், மொழியாக்கங்களில் கைக்கொள்ளும் மரபுச் சொற்களுக்காகவும் அவர் கவனிக்கப் படுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான அவரது ஈடுபாடு, அவருடைய மொழியாக்கங்களின் தனித்தமிழ் சொற்களில் வெளிப்படுகிறது. கமல்க்கண்ணன் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்புகள்
  • மீள்வருகை
  • அபத்தமானவனின் கனவு
மொழியாக்கங்கள்
நாடகங்கள்
  • ஹேம்லட் | வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • மெக்பெத் | வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • ரோமியோ ஜூலியட் | வில்லியம் ஷேக்ஸ்பியர்
திரைக்கதை
  • கூண்டுப் பறவைகள் | மைக்கேல் ஹனகே
புதினங்கள்
  • சோர்பா என்ற கிரேக்கன் | நீகாஸ் கசந்த்சாகீஸ்
  • ஷோஷா | ஐசக் பாஷவிஸ் சிங்கர்
  • எலிவளை வாழ்க்கை | ஜான் ஸ்டெயின்பெக்
  • சித்தார்த்தன் | ஹெர்மன் ஹெஸ்ஸே
  • ஒரு மரணதண்டனைக் கைதியின் இறுதி நாள் | விக்டர் ஹியுகோ
  • மாளாக் காதல் | லேவ் தல்ஸ்தோய்
  • தீர்க்கதரிசி | கலீல் ஜிப்ரான் | உரைநடைக் கவிதை
  • முறிந்த சிறகுகள் | கலீல் ஜிப்ரான்
பிற படைப்புகள்

நிலம் சிந்தும் குருதி - கட்டுரைத் தொகுப்பு

உசாத்துணை


✅Finalised Page