under review

குரு நித்யா காவிய அரங்கு

From Tamil Wiki
குரு நித்யா
குரு நித்யா காவிய அரங்கு ஊட்டி 2013
குரு நித்யா அரங்கு வெள்ளிமலை 2025
ஊட்டி நாராயணகுருகுலம், 2012 குரு நித்யா ஆய்வரங்கம்

குரு நித்யா காவிய அரங்கு (தொடக்கம்: 1992) குரு நித்யா காவிய அரங்கு எழுத்தாளர் ஜெயமோகனால் அவருடைய ஆசிரியர் குரு நித்ய சைதன்ய யதியின் நினைவாக ஆண்டுதோறும் நடத்தப்படும் இலக்கியக் கூடுகை. தமிழ் இலக்கிய வாசகர்களும் எழுத்தாளர்களும் சந்தித்து இலக்கியம் பற்றி உரையாடும் நிகழ்வு இது.

தொடக்கம்

குரு நித்யா காவிய அரங்கு குரு நித்ய சைதன்ய யதி நினைவாக எழுத்தாளர் ஜெயமோகன் நடத்தும் இலக்கிய முகாம். 1993ல் குரு நித்யா வாழ்ந்த காலகட்டத்தில் அவர் தமிழ் இலக்கிய வாசகர்களைச் சந்திக்க விரும்பியமையால் ஜெயமோகன் அவருடனான இலக்கிய உரையாடல்களை ஒருங்கிணைத்தார். மூன்று மாதத்திற்கு ஒரு சந்திப்பு வீதம் அவை தொடர்ச்சியாக நடைபெற்றன. பெரும்பாலும் நவீனக் கவிதைகள் பற்றிய உரையாடல்களாகவே அவை நிகழ்ந்தன.

1999ல் குரு நித்யா மறைந்த பின் அந்நிகழ்வுகள் குரு நித்யா காவிய அரங்கு என பெயரிடப்பட்டு அவர் நினைவாக நடத்தப்படலாயின. குற்றாலத்தில் தமிழ்- மலையாள கவிஞர்கள் இணைந்து உரையாடும் கவிதைப்பரிமாற்ற அரங்கு 1999ல் குரு நித்யா காவிய அரங்கு என்ற பேரில் முதலில் நடைபெற்றது. சுந்தர ராமசாமி, தேவதேவன், தேவதச்சன், கலாப்ரியா, யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேதன் போன்றவர்கள் அதில் கலந்துகொண்டனர். மலையாளக் கவிஞர்கள் பி.ராமன், பி.பி.ராமசந்திரன், கல்பற்றா நாராயணன், ஆற்றூர் ரவிவர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்வு பின்னர் ஊட்டியில் ஆண்டுக்கு மூன்று முறை வீதம் தொடர்ச்சியாக நடைபெற்றது. ஹொகேனேக்கலிலும் ஒரு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் 2010 முதல் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இடம்

தொடக்கம் முதல் ஊட்டி நாராயண குருகுலம் ஊட்டியில் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன. ஒரு நிகழ்வு ஏற்காட்டிலும் ஒரு நிகழ்வு ஹொகெனெக்கலிலும் நடைபெற்றது. அதன்பின்னர் தொடர்ச்சியாக ஊட்டியில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன. 2020-2021 காலகட்டத்தில் கோவிட் தொற்று காலகட்டத்தில் நிகழ்வுகள் நடைபெறவில்லை. 2021 முதல் ஜெயமோகனால் நிறுவப்பட்ட வெள்ளிமலை நித்யவனம் என்னும் இடத்தில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஊட்டி நிகழ்வுகளை நிர்மால்யா ஒருங்கிணைத்தார்.

காலம்

குரு நித்யா காவிய அரங்கு பொதுவாக ஆண்டுதோறும் மே மாத இறுதியில் நிகழும். வார இறுதியில் வெள்ளி, சனி, ஞாயிறு தேதிகளில் நிகழும் இந்த முகாமில் பங்கேற்பாளர்கள் சேர்ந்து தங்கி விவாதிப்பார்கள். சராசரியாக நூறு பங்கேற்பாளர்கள் தமிழகம் முழுக்க இருந்து வந்து பங்கெடுப்பார்கள். மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் வந்து கலந்துகொள்வதுண்டு.

நோக்கம்

குரு நித்யா காவிய அரங்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்தித்து இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தும் நோக்கம் கொண்டது. கவிதை, நாவல், மரபிலக்கியம், இலக்கிய விமர்சனம் ஆகிய துறைகளில் உரைகள் முன்வைக்கப்பட்ட பின் அவற்றுக்குமேல் விவாதங்கள் நிகழும். இலக்கிய உரையாடல் இந்நிகழ்வுகளின் நோக்கம்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jun-2025, 21:16:09 IST