எண்செய்யுள்
To read the article in English: Enseyyul.
எண்செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவன் ஒருவனின் ஊரையும் பெயரையும் சிறப்பித்து, பத்து முதல் ஆயிரம் பாடல்கள் வரை அமையப்பெற்றது எண்செய்யுள் . ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பாடலை இறைவன் குடிகொண்டுள்ள அல்லது அரசன் வாழும் ஊரின் பெயரைச் சொல்லிப் புகழ்வது எண்செய்யுள்.
ஒத்திடும் பாட்டுடைத்தலைவன் ஊர்பெயரினை
எடுத்தும் எண்ணால் பெயர் பெற
ஈரைந்து கவிமுதல் ஆயிரம்வரை சொல்லல்
எண்செய்யுள் ஆகுமன்றே
- பிரபந்த தீபிகை - பாடல் 15
பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் என்ற இலக்கிய வகையில் பல பிரிவுகள் உண்டென்பதும் பத்து பாடல்கள் முதல் ஆயிரம் பாடல்கள் வரை பாடப்படும் எண் செய்யுள்கள் பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர்பெறும் என்பதும் பெறப்படுகின்றது.
ஊரையும் பெயரையும் உவந்து எண்ணாலே
சீரிதின் பாடல் எண்செய்யுள் ஆகும் - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 848
இலக்கண விளக்கப் பாட்டியல் எண் செய்யுள் நூற்பாவிற்கு எழுதியுள்ள உரையில், “பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது
எடுத்துக்காட்டு நூல்கள்
எண்செய்யுள் நூல்கள் சில:
- முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டியர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு ஒவ்வொருவர் மீதும் தொள்ளாயிரம் பாடல்கள் அமையப் பாடப்பட்டிருக்கலாம் என்றும் . அதனால் இது முத்தொள்ளாயிரம் (மூன்று தொள்ளாயிரம்) எனப் பெயர் பெற்றதாகவும் கருதப்பட்டது. அறிஞர்கள் மூவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களே இருந்திருக்கக் கூடும் எனக் கருதுகின்றனர். முத்தொள்ளாயிரத்தில் 108 பாடல்களே கிடைத்திருக்கின்றன.
- அரும்பைத்தொள்ளாயிரம்
- வச்சத்தொள்ளாயிரம்
- திருஈங்கோய்மலை எழுபது,
- திருவொற்றியூர் ஒருபா ஒருபது
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page