being created

மணிக்கொடி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
Line 57: Line 57:


* http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=9547
* http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=9547
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/may/16/அக்கிரஹாரத்தின்-அதிசய-மனிதர்-183243.html


{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 05:51, 23 May 2022

மணிக்கொடி காலம்

மணிக்கொடி ( 1933- ) தேசிய இயக்கத்துக்கும் தமிழிலக்கிய மறுமலர்ச்சிக்கும் பங்களிப்பாற்றிய இதழ். அரசியல் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வார இதழ் பின்னர் இலக்கிய மாத இதழாக மாறியது. தமிழ்ச் சிறுகதைகளின் உருவாக்கம் மணிக்கொடியில் நிகழ்ந்தது. மணிக்கொடி இதழை ஒட்டி உருவான இலக்கியவாதிகளின் சிறு வட்டம் மணிக்கொடி எழுத்தாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

பின்புலம்

இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் 1922 ல் சௌரி சௌரா என்னுமிடத்தில் நிகழ்ந்த வன்முறையை ஒட்டி காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை பின்னிழுத்துக்கொண்டு காங்கிரஸ் அமைப்பை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டார். இது பொதுவாகச் சுதந்திரப்போராட்டக் களத்தில் ஒரு சோர்வை உருவாக்கினாலும் களப்போராளிகளாக திகழ்ந்த பலர் கலையிலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இந்திய மொழிகளில் இலக்கிய வளர்ச்சி நிகழ்ந்தது. இதழ்கள் பல தொடங்கப்பட்டன.

சுதந்திரப்போராட்டக் காலத்தில் சிறைவாசத்தின்போது வ.ரா.வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் நெருங்கிய நண்பர்களானார்கள். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, இலக்கியப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டார் சீனிவாசன். திருப்பழனத்துக்குச் சென்று அங்கே வசித்து வந்த வ.ரா.வை அழைத்துவந்தார். அவ்வாறு தொடங்கப்பட்ட தேசிய இதழ்களில் ஒன்று மணிக்கொடி.

ஆங்கில இலக்கியம் முன்னேறியது போன்று தமிழ் இலக்கியமும் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர் வ.ரா.

முதல் காலகட்டம்

1933 செப்டம்பர் 17-ம் பிறந்த வார ஏடு 'மணிக்கொடி' அரசியல் பத்திரிகையாகத்தான் செயலாற்றியது. ஆரம்பத்தில் வ.ராமசாமி ஐயங்கார், டி.எஸ். சொக்கலிங்கம், கே. சீனிவாசன் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அது இயங்கியது.

வார இதழின் ஆரம்பகாலத்தில் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. கே.சீனிவாசன், வ. ரா., டி.எஸ். சொக்கலிங்கம் கட்டுரைகள் புதுமையாகவும், சிந்தனை வேகத்துடனும் அமைந்தன. தமிழில் புது முயற்சியான 'நடைச்சித்திரம்' என்பதை வ. ரா. இதில் தொடர்ந்து எழுதினார். வாழ்க்கையில் காணப்படுகிற பல தொழில் துறை நபர்களையும் பற்றிய விவரணைச் சித்திரங்கள் இவை.

சிட்டி, ந. ராமரத்னம், கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி முதலியோர் முதலில் கட்டுரைகளே எழுதினார்கள். பின்னர் மணிக் கொடி வார இதழில் சிறுகதைகளும் வெளியாகின. மணிக்கொடி வார இதழ் பெரிய அளவில் வந்து கொண்டிருந்தது.

அரசியல் மற்றும் சமூக விஷயங்களுக்கும், கட்டுரைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தது 'மணிக்கொடி' வாரப் பதிப்பு.

பின்னர், பத்திரிகையின் கூட்டுப் பொறுப்பாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் 'மணிக்கொடி' ஜனவரி 1935-ல் நின்று விட்டது.

அதன் பிறகு, 1935 மார்ச் முதல்- பி.எஸ். ராமையாவின் பெரும் முயற்சியால், மணிக்கொடி கதைப் பத்திரிகையாக வெளிவந்தது.

இரண்டாம் காலகட்டம்

பி.எஸ். ராமையா மணிக்கொடி இதழ்பற்றி அறிந்து அதன் நிறுவனர் சீனிவாசனைச் சந்தித்தார். அவர், ராமையாவை விளம்பர சேகரிப்பாளராகப் பணியமர்த்தினார். அப்போது மணிக்கொடி சமூக, அரசியல் இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. அவ்வப்போது அதில் சிறுகதைகளும் வெளிவந்தன. ராமையா அதில் பல சிறுகதைகளையும், மொழிபெயர்ப்புக் கதைகளையும் எழுதினார்.

கருத்து வேறுபாட்டால் அதன் ஆசிரியர்கள் அதிலிருந்து விலகியபோது, ராமையா மணிக்கொடியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பி.எஸ். ராமையா தீவிரமாக முயன்று, மார்ச் 1935 முதல் 'மணிக்கொடி'யை மாதம் இருமுறை பத்திரிகையாகக் கொண்டு வந்தார்.

மணிக்கொடியின் அமைப்பும் உள்ளடக்கமும், நோக்கும் முற்றிலும் மாறுபட்டுவிட்ட போதிலும், அது பழைய தொடர்ச்சியாகவே கணக்கிடப்பட்டது. கதைமட்டுமாக வந்த இதழ் 'கொடி 3, மணி 1' என்று இலக்கம் பெற்றிருந்தது.

இந்த முதல் இதழில் புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி’, சி.சு. செல்லப்பாவின் 'ஸரஸாவின் பொம்மை', பி.எஸ். ராமையாவின் 'புலியின் பெண்டாட்டி', சங்கு சுப்பிரமணியனின் 'வேதாளம் சொன்ன கதை' முதலியன பிரசுரம் பெற்றன.

மணிக்கொடி என்றால் பி.எஸ். ராமையா என்று அடையாளப்படுத்துமளவிற்கு அந்த இதழைப் பல்லாண்டு காலம் உழைத்து நிலை நிறுத்தினார். ஆனால் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்திடையேயான கருத்து வேறுபாட்டால் திடீரென முன்னறிவிப்பின்றி மணிக்கொடி ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராமையா நீக்கப்பட்டார்.

பங்களிப்பு

மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். மணிக்கொடி சீனிவாசன், பி.எஸ். ராமையா, புதுமைப்பித்தன், கு.ப. ரா., இவர்கள் ஒரு பிரிவு. க.நா.சு., சி.சு. செல்லப்பா, தி.ஜா., சிட்டி, மௌனி, லா.ச.ரா., நா. சிதம்பர சுப்பிரமணியன் இவர்கள் இரண்டாம் பிரிவினர், றாலி போன்றோர் மூன்றாம் பிரிவினர்.

முதல் பிரிவினர், மணிக்கொடியின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் துணை நின்றவர்கள். சிறுகதையின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள். இரண்டாம் பிரிவினர் சிறுகதை, நாவல், கவிதை என்ற பிரிவுகளில் சோதனை முயற்சிகள் செய்தவர்கள். பிறநாட்டு சாத்திரங்களைப் படித்து அதுபோலவே எழுத முன் வந்தவர்கள்.

புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், பி.எஸ். ராமையா, ந. சிதம்பரசுப்பிரமணியன், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சி.சு. செல்லப்பா, மௌனி ஆகிய படைப்பாளிகளின் சிறந்த கதைகள் பலவற்றை மணிக்கொடி வெளியிட்டுள்ளது. பின்னர் க. நா. சுப்ரமண்யமும் இக்குழுவில் சேர்ந்தார். கி.ரா., எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், லா.ச. ராமாமிர்தம் முதலிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிக்கொடிக்கு உண்டு.

இலக்கிய இடம்

’தமிழில் சிறுகதைக்கு என்று தனியாக ஒரு பத்திரிகை இல்லாத குறையை நீக்குவதற்காகவும், பிற நாட்டவர் கண்டு போற்றும்படியான உயர்ந்த கதைகளை எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்களை வெளிப்படுத்தவும்,மணிக்கொடி தோன்றியுள்ளது ’என்று பி.எஸ். ராமையா முதல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். பிச்சமூர்த்தியின் 'தாய்' போன்ற உயர்ந்த தரத்துச் சில கதைகளை வெளியிட வாய்த்ததிலேயே, மணிக்கொடி கதைப் பதிப்பு முயற்சி ஒரு சாதனையாக நிறைவு பெற்று விட்டது என்று கூறலாம். மணிக்கொடி காலம் என்பதற்கு அந்த மாதிரி இலக்கியத்தரமான கதைகள் எழுதப்பட்ட ஒரு காலகட்டம் என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது என்று அவர் கூறுகிறார்('மணிக்கொடி காலம்').

மணிக்கொடி போன்ற தனித்தன்மை உள்ள ஒரு பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.இது குறித்துப் புதுமைப்பித்தன் 'ஆண்மை' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் கூறியிருக்கிறார்.’

'மணிக்கொடி பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய இடம் தொடுக்கும்- உற்காகம் ஊட்டும்- வரவேற்கும் பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் நன்கு அறிந்திருந்த திறமையாளர்கள் இலக்கியத்தரமான சிறுகதைகளை- கதைக்கலையின் பல்வேறு தன்மையான படைப்புகளை- வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஆழ்ந்து அலசிப் பார்த்து உண்மைகளை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் சிருஷ்டிகளை- பலரகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். இத்தகைய புது முயற்சிகளுக்கு மணிக்கொடி இடம் அளித்தது.' என்கிறார் வல்லிக்கண்ணன்

உசாத்துணை

  • தமிழில் சிறு பத்திரிகைகள் - வல்லிக் கண்ணன் (மணிவாசகர் பதிப்பகம்)
  • 'மணிக்கொடி காலம்' - பி.எஸ். ராமையா (மெய்யப்பன் பதிப்பகம்)

https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/may/16/அக்கிரஹாரத்தின்-அதிசய-மனிதர்-183243.html



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.