under review

பி.எஸ். ராமையா

From Tamil Wiki
பி. எஸ். இராமையா (1905 - 1983) (நன்றி: அழியாச்சுடர்கள்)

பி. எஸ். ராமையா (மார்ச் 24, 1905 - மே 18, 1983) சிறுகதை எழுத்தாளர், மணிக்கொடி இதழை நடத்திய ஆசிரியர், திரைப்பட எழுத்தாளர். தமிழில் சிறுகதை மலர்ச்சிக்கு காரணமான முன்னோடி.

பிறப்பு, கல்வி

பி. எஸ். ராமையா என்று அழைக்கப்படும் வத்தலகுண்டு ராமையா தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் சுப்பிரமணிய ஐயர்,மீனாட்சியம்மாள் இணையரின் இளைய மகனாக மார்ச் 24, 1905-ல் பிறந்தார். வறுமைச் சூழலால் பள்ளியில் நான்காவது படிவம் (ஒன்பதாம் வகுப்பு) வரை மட்டுமே படித்தார்.

அரசியல்

பள்ளிப்படிப்பை நிறுத்திய பின் ராமையா பத்தாண்டுகளாக துணிக்கடை விற்பனையாளர், உணவு விடுதிப் பணியாளர், கதர் விற்பனைப் பிரதிநிதி என பல வேலைகள் செய்தார். சங்கு சுப்ரமணியம் நடத்திவந்த சுதந்திரச் சங்கு இதழில் வெளியான கட்டுரைகள் மூலமாக சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் கொண்டு வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். ஆறுமாதம் திருச்சி சிறையில் இருந்தவருக்கு ஏ.என். சிவராமன், வ.ராமசாமி ஐயங்கார், டி.வி. சுப்பிரமணியம் ஆகியோரின் நட்பு கிடைத்தது. சிறையில் ஹிந்தி கற்றுக்கொண்டார்.

சிறையிலிருந்து வெளிவந்ததும் காந்தியின் தொண்டர் படை முகாமில் பயிற்றுநராக பணியாற்றினார். கதர் ஆடைகளைத் தோளில் சுமந்தபடி விற்றும் சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்றும் இயக்கப்பணி செய்தார். தூத்துக்குடி, இராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களில் மகாத்மாவின் தொண்டர் படை முகாம்கள் அமைத்தார். 1932 முதல் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட ராமையா இந்திய சுதந்திரத்திற்குப் பின் இலக்கியத்தில் மட்டும் ஈடுபட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

சங்கு சுப்ரமணியத்தின் தூண்டுதலால் ராமையா 18-வது வயதில் தனது முதல் கதையை 1933-ல் எழுதினார். "மலரும் மணமும்" என்ற அந்தக்கதை ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப்பரிசாக பத்து ரூபாய் பெற்றது. பின்னர் கல்கி, ஏ. என். சிவராமன், வ.ரா. ஆகியோரின் ஊக்குவிப்பால் தொடந்து எழுதினார். ஆனந்த விகடன் (வாக்குரிமை, கூப்பாடிட்டான் கோவில்), சுதேசமித்திரன், காந்தி (கடைசித் தலைமுறை, மாஜிக்கணவர்), கலைமகள் (நட்சத்திரக் குழந்தைகள்) ஆகிய இதழ்களில் ராமையாவின் சிறுகதைகள் வெளிவந்தன.

சிறுகதைகள்

பி.எஸ்.ராமையா தமிழில் சிறுகதை இலக்கியம் உருவான தொடக்ககாலத்தில் எழுதிய முன்னோடியாகக் கருதப்படுகிறார். 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றில் நட்சத்திரக் குழந்தைகள் அவருடைய மிகச்சிறந்த சிறுகதையாகக் கருதப்படுகிறது. விமர்சகரான சி.சு. செல்லப்பா அவரை தமிழ்ச்சிறுகதையின் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதுகிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

நாவல்கள்

ராமையா ஏழு நாவல்கள் எழுதியுள்ளார்.

நாடகங்கள்

7 நாடகங்கள் 5 வானொளி நாடகங்கள் எழுதியுள்ளார்.

திரைப்படம்

போலீஸ்காரன் மகள், பிரசிடென்ட் பஞ்சாட்சரம் ஆகிய நாடகங்கள் திரைப்படமாக வெளிவந்தன.

இதழியல்

பி.எஸ்.ராமையா மூன்று மாதங்கள் ’ஜயபாரதி’ இதழில் இருபது ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மணிக்கொடி இதழுக்கு விளம்பர சேகரிப்பாளராக வேலை செய்தார். மணிக்கொடியில் மொழிபெயர்ப்புக் கதைகளையும், பல சிறுகதைகளையும் எழுதினார்.

ராமையா மார்ச் 1935 முதல் ஜனவரி 27, 1938 வரை மணிக்கொடி இதழின் ஆசிரியராக இருந்தார். சமூக, அரசியல் இதழாக இருந்த மணிகொடியை சிறுகதைகளுக்கென்று வெளியாகும் மாதமிருமுறை இதழாக மாற்றினார். மணிக்கொடி எழுத்தாளர்கள் என அறியப்படும் அணி ராமையாவின் முன்னெடுப்பில் உருவாகியது. அது தமிழ்ச்சிறுகதையில் மறுமலர்ச்சியை உருவாக்கியது. புதுமைப்பித்தன் எழுதிய புகழ்பெற்ற கதைகள் மணிக்கொண்டியில் வெளிவந்தன. 'மெளனி' என்று புனைபெயரை சூட்டி எழுத வைத்தவர் பி.எஸ்.ராமையா.மணிகொடி காலம் (1933-1939) என்ற பெயரில் தன் மணிக்கொடி அனுபவங்களை எழுதியிருக்கிறார். தீபம் இதழில் தொடராக வெளிவந்தது இந்நூல்

அடிச்சாரைச் சொல்லியழு, வளையல் துண்டு, ஜானகிக்காக மாத்திரமல்ல, திரிலோகாதிபத்திய ரகசியம், ஆக்கினைகள் செய்து வைப்போம், நட்சத்திரக் குழந்தைகள், குங்குமப்பொட்டு குமாரசாமி, அமிஞ்சிக்கரை சோமு, கார்னிவல் (1936), கானல் நீர், கூப்பாடிட்டான் கோயில், தழும்பு, பணம் பிழைத்தது உள்ளிட்ட

வைவஸ்வதன், ஸ்ரீமதி சௌபாக்கியம் ஆகியவை புனைப்பெயர்கள்.

விருது

பி.எஸ். ராமையா மணிக்கொடி கால அனுபவங்கள் பற்றி எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

மறைவு

பி. எஸ். ராமையா, தொண்டையில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மே 18, 1983-ல் தனது 78-வது வயதில் காலமானார்.

இலக்கிய அழகியல்

நவீன தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் மணிக்கொடியை ஒரு அளவீடாக கருதும் அளவுக்கு ராமையா செயலாற்றியவர். தமிழ் சிறுகதை வரலாற்றில் மணிக்கொடிக்கு முக்கிய இடத்தை உருவாக்கினார். எழுத்து இதழுக்கு (ஜூன், 1965) வழங்கிய பேட்டியில் " சிறுகதை உருவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. கதை எழுதும்போது வாசகனைப் பற்றிய பிரக்ஞை கூட இருக்காது. எழுத்தாளன் தன் வாழ்க்கை அனுபவத்தில் தனக்கான தளத்தைத் தேர்ந்தெடுக்கிறான்" என்று சொல்கிறார்.

எழுத்து – வெளி வெளியீடாக 1998-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட "ராமையாவின் சிறுகதைப் பாணி" நூலின் முன்னுரையில் சி.சு.செல்லப்பா 'ராமையா ஒரு நல்ல சிறுகதையைக்கூட எழுதியதில்லை’ என்ற க.நா. சுப்ரமணியத்தின் நிராகரிப்பை புறந்தள்ளி மணிக்கொடி எழுத்தாளர்களான மௌனி, கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா ஆகியோரை முக்கிய சிறுகதையாசிரியர்களாக முன்னிறுத்துகிறார். தமிழ்ச்சிறுகதையைப் பற்றி பி.எஸ்.ராமையா எழுதிய 'மணிக்கொடிக் காலம்’ நூல் வரலாற்றை அருகே நின்று கண்டு அவ்வரலாற்றை உருவாக்கியவர்களுள் ஒருவரால் எழுதப்பட்டது என ஜெயமோகன் கூறுகிறார். எஸ். ராமகிருஷ்ணன் இவரது நட்சத்திரக் குழந்தைகள் சிறுகதையை நூறு சிறந்த தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

முதல் சிறுகதைத்தொகுப்பு

நூல் பட்டியல்

சிறுகதைத்தொகுப்புகள்
  • மலரும் மணமும் - அல்லயன்ஸ் பதிப்பகம்
  • ஞானோதயம்
  • பாக்யத்தின் பாக்கியம்
  • புதுமைக்கோவில்
  • பூவும் பொன்னும்
நாவல்கள்
  • பிரேம ஹாரம்
  • நந்தா விளக்கு
  • தினை விதைத்தவன்
  • சந்தைப் பேட்டை
  • கைலாச ஐயரின் கெடுமதி
  • விதியின் விளையாட்டு
  • கோமளா
தமிழ் இலக்கிய வரலாறு
இலக்கிய வரலாறு
  • மணிக்கொடி காலம் - மெய்யப்பன் பதிப்பகம்
நாடகங்கள்
  • தேரோட்டி மகன்
  • மல்லியம் மங்களம்
  • பூ விலங்கு
  • பாஞ்சாலி சபதம்
  • களப்பலி
  • போலீஸ்காரன் மகள்
  • பிரசிடென்ட் பஞ்சாட்சரம் (1957) நிகோலாய் கோகோலின் "இன்ஸ்பெக்டர் ஜெனரல்" நாடகத்தை தழுவி எழுதப்பட்டது.
வானொலி நாடகங்கள் தொகுப்பு
  • பதச்சோறு
  • அரவான்
  • சாகத் துணிந்தவன்
  • வேதவதி
  • தங்கச் சங்கிலி
முழு சிறுகதைத்தொகுப்பு
  • 1998 - ராமையாவின் சிறுகதை பாணி - (ராமையாவின் சிறுகதைகளைப் பற்றிய பார்வை. ஆசிரியர்: சி.சு.செல்லப்பா)
மற்ற நூல்கள்
  • 1943 - சினிமா - திரைப்படம் பற்றிய நூல்

பங்களித்த திரைப்படங்கள்

  • 1940 - பூலோக ரம்பை - வசனம்
  • 1940 - மணி மேகலை - வசனம்
  • 1941 - மதனகாமராஜன் - கதை, வசனம்
  • 1943 - குபேர குசேலா வசனம் (கே எஸ் மணியுடன் சேர்ந்து இயக்கம்)
  • 1945 - சாலிவாஹனன் - கதை
  • 1945 - பரஞ்சோதி - கதை, வசனம்
  • 1945 - பக்த நாரதர் - வசனம்
  • 1946 - அர்த்த நாரி - கதை, வசனம்
  • 1946 - விசித்திர வனிதா - திரைக்கதை, வசனம்
  • 1947 - தன அமராவதி - கதை, வசனம், இயக்கம்
  • 1947 - மகாத்மா உதங்கர் - கதை, வசனம்
  • 1948 - தேவதாசி - கதை, வசனம்
  • 1949 - ரத்னகுமார் - கதை
  • 1952 - மாய ரம்பை - வசனம்
  • 1959 - பிரசிடென்ட் பஞ்சாட்சரம் - கதை, வசனம்
  • 1960 - ராஜ மகுடம் - வசனம்
  • 1962 - போலீஸ்காரன் மகள் - கதை
  • 1963 - பணத்தோட்டம் - கதை
  • 1963 - மல்லியம் மங்களம் - கதை

உசாத்துணை


✅Finalised Page