under review

சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்

From Tamil Wiki
வழக்குரைஞர் ராஜாஜி
முதலமைச்சர் ராஜாஜி
நேரு, இந்திராவுடன் கவர்னர் ஜெனரல் ராஜாஜி
காந்தியும் ராஜாஜியும்
நேரு - ராஜாஜி - சர்தார் வல்லபபாய்ப் படேல்
நண்பர் ஈ.வெ.ரா.வுடன் ராஜாஜி
ராஜாஜி
இலக்கியவாதி ராஜாஜி

சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் (ராஜகோபாலன்; ராஜன்; ராஜாஜி; ராஜகோபாலாசாரியார்; சி.ஆர்; மூதறிஞர் ராஜாஜி. இராஜாஜி;) (டிசம்பர் 10, 1878-டிசம்பர்-25, 1972) வழக்குரைஞர். சுதந்திரப் போராட்ட வீரர். சமூக சீர்த்திருத்தவாதி. அரசியல் கட்சித் தலைவர். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். சென்னை மாகாண முதல்வர்; மேற்கு வங்க ஆளுநர் எனப் பல பொறுப்புகளை வகித்தார்.  பாரத ரத்னா விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாசாரியார், ஓசுர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில், சக்கரவர்த்தி ஐயங்கார்-சிங்காரம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 10, 1878-ல் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். தந்தை கிராம முன்சீஃப் ஆகப் பணியாற்றினார். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே போதிக்கப்பட்டது. உயர்நிலைக் கல்வியை ஓசூரிலும், மேல்நிலைக் கல்வியை பெங்களூர் லண்டன் மிஷன் பள்ளியிலும் கற்றார். பெங்களூரில் உள்ள மத்திய இந்துக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். பின் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

சட்டம் பயின்ற ராஜாஜி, சேலத்தில் வழக்குரைஞராகத் தொழில் செய்தார். நுணுக்கமாகப் பல வழக்குகளில் வாதாடி நற்பெயர் பெற்றார். மனைவி அலர்மேலு மங்கை. இவர்களுக்கு மூன்று ஆண், இரண்டு பெண்பிள்ளைகள். மகன் சி. ஆர். நரசிம்மன் இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். ராஜாஜியின் மகள் லட்சுமி, காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தார். ராஜாஜி, இளம் வயதிலேயே மனைவியை இழந்தார். மறுமணம் செய்துகொள்ளவில்லை.

சமூக வாழ்க்கை

சேலத்தில் மூத்த வழக்குரைஞர் விஜயராகவாசாரியாரின் நட்பைப் பெற்றார் ராஜாஜி. சமூக சேவைகள் பலவற்றில் பங்கெடுத்தார். சேலம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, மது ஒழிப்பு போன்றவற்றில் மிகுந்த அக்கறை செலுத்தினார்.

தெருக்கள் தோறும் குழாய் மூலம் தண்ணீர் விநியோக ஏற்பாட்டை முன் நின்று செய்தார். வைதீகர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது தாழ்த்தப்பட்டோரின் உயர்வு மற்றும் உரிமைக்காகப் பல நற்பணிகளைத் முன்னெடுத்தார்.

அரசியல் வாழ்க்கை

விஜயராகவாச்சாரியாரால் அரசியல் நோக்கி ஈர்க்கப்பட்டார் ராஜாஜி. சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். திலகரது செயல்பாடுகளை ஆதரித்தார். பாரதியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை போன்றோருக்கு நண்பராக இருந்து உதவினார். அன்னிபெஸண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தில் பங்குகொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ராஜாஜி, தானும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட விருப்பம் கொண்டார். சேலம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ’தி இந்து’ இதழின் ஆசிரியர் ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காரின் வலியுறுத்தலினால் சென்னைக்கு வந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிக் கொண்டே அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.

சென்னைக்கு அரசியல் சுற்றுப்பயணம் வந்த காந்தி, ராஜாஜியின் ’திலகர் பவனம்’  இல்லத்தில் தங்கினார். அந்தச் சந்திப்பு ராஜாஜியின் வாழ்வில் திருப்பு முனை ஆனது. இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாயினர். ராஜாஜி, காந்தியின் மனசாட்சி என்று காந்தியடிகளாலேயே போற்றப்பட்டார்.

காந்தியின் வேண்டுகோளை ஏற்றுப் பலர் தமது தொழிலை, வேலையை உதறி விட்டு  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜாஜியும் தனது வழக்குரைஞர் தொழிலில் இருந்து விலகி தேச சேவையில் ஈடுபட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலட் சட்டத்திற்கு எதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் கலந்துகொண்டார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார்.

காந்தி ஆச்ரமம்

ராஜாஜி, காந்தியின் மீது கொண்ட பற்றால், 1924-ல், திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையத்தில் காந்தி ஆச்ரமத்தை நிறுவினார். குடும்பத்துடன் அங்கு ஒரு குடிசையில் தங்கிக் கொண்டு, சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டார். கதர் உற்பத்தி, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்றவற்றை வலியுறுத்திப் பிரசாரம் செய்தார்.

உப்பு சத்தியாக்கிரகம்

1930-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி, வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்திற்கு, ராஜாஜி தலைமை வகித்தார். ருக்மணி லட்சுமிபதி, மட்டப்பாறை வேங்கடராம ஐயர் உள்ளிட்ட தொண்டர்கள் பலருடன் கைதானார். சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் தனது அரசியல் சமூகப் பணிகளைத் தொடர்ந்தார்.

காந்தியுடன் முரண்பாடு

ஆகஸ்ட் 1942-ல், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை காந்தி தொடங்கியபோது ராஜாஜி அதனை ஆதரிக்கவில்லை. காந்தியுடன் அவர் முரண்பட்டார்.

அரசியல் நண்பர்கள்

சகஜானந்தர், சேலம் எஸ். விஜயராகவாச்சாரியார், கஸ்தூரிரங்க ஐயங்கார், பாரதியார், வ.வே.சு. ஐயர், எஸ். சத்தியமூர்த்தி, டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, டி.எஸ்.எஸ். ராஜன், சிங்காரவேலு செட்டியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் உள்ளிட்ட பலருக்கு ராஜாஜி நண்பராக இருந்தார்.

தமிழக காங்கிரஸில் ராஜாஜி, காமராஜ் இருவரும் எதிர் எதிர்த் துருவங்களாகச் செயல்பட்டனர். என்றாலும் ஒருவர் மீது மற்றொருவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். 1957 மற்றும் 1962-ல், ராஜாஜியின் மகனான சி. ஆர். நரசிம்மனை, சேலத்தில், காங்கிரஸ் சார்பாக நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிட வைத்து வெற்றிபெற வைத்தார் காமராஜர்.

சர்ச்சைகள்

ராஜாஜி , 1934-ல் நடந்த தேர்தலின் போது, சேலத்தில் ஆர்.கே. சண்முகம் செட்டியாருக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்தி தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். அதனால் ‘குல்லூகப் பட்டர்’ என்று வசைபாடப்பட்டார். (குல்லூகப் பட்டர் என்பவர் மனு தர்ம சாஸ்திரத்திற்கு முற்காலத்தில் உரை எழுதியவர். ராஜாஜி, காந்தி மற்றும் காங்கிரஸின் கொள்கைகளுக்கு புதுவகையில் விளக்கம் கூறி வந்ததால் அவ்வாறு வசை பாடப்பட்டார்)

காந்தியுடன் சில விஷயங்களில் முரண்பாடு, நேருவுடன் கருத்து வேறுபாடு என்று தொடங்கி காமராஜர் உடன் சச்சரவு, திராவிட மற்றும் திராவிட முன்னேற்ற இயக்கத்தினரின் எதிர்ப்புகள், பெரியாரின் திருமணத்தால் விளைந்த சங்கடங்கள் என்று தன் வாழ்நாளில் தொடர்ந்து பல சர்ச்சைகளை எதிர்கொண்டார் ராஜாஜி.

இந்தியப் பிரிவினை

இந்தியா, பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்யப்படும் என்றால், பாகிஸ்தான் பிரிந்து தனிநாடாக்கப் பட வேண்டும் வேண்டும் என்று முகமதலி ஜின்னா அறிவித்தார். அல்லது முஸ்லீம் லீக்கின் சில கொள்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு ஆதரவு, எதிர்ப்பு என்று இருவேறு தரப்புகள் நிலவின. எப்படியாவது விடுதலை பெற வேண்டும் என்று விரும்பிய ராஜாஜி பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தார். அல்லது முஸ்லீம் லீக்கின் கொள்கைகள் ஏற்கப்பட வேண்டுமென்றார். ‘ஒரு குடும்பத்தில் ஒருவர் தனியாகக் குடித்தனம் நடத்தச் செல்வேன் என்று முரண்டு பிடித்தால் குடும்ப நன்மைக்காக அதை ஏற்க வேண்டியதுதான்’ என்பதாக, பிரிவினையை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்தார். அதனால் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார்.

சென்னை மாகாண முதலமைச்சர்

ராஜாஜி, 1937-ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் முதன் மந்திரியாக பொறுப்பேற்றார். 1940 வரை பதவி வகித்தார். அக்காலகட்டத்தில் கிராம மக்கள் குடிநீர் வசதித் திட்டம், விவசாயிகள் கடன் உதவித் திட்டம், விவசாயிகள் கடன் நிவாரணச் சட்டம், மதுவிலக்கு, ஆலயப் பிரவேசப் பாதுகாப்புச் சட்டம், சுகாதாரச் சட்டம் போனறவற்றை அமல்படுத்தினார். இந்தி மொழி கட்டாயப் பாடத் திட்டத்தை அறிவித்தார்.

1938-ல், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் ஏ. வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்த ஆலயப் பிரவேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தியை கட்டாயப் பாடமாக்கியதற்கும், ஹரிஜன ஆலயப் பிரவேச பாதுகாப்பு சட்டத்திற்கும் கடும் எதிர்ப்புகளை சந்தித்தார் ராஜாஜி.

சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார் ராஜாஜி. அப்போது, மாணவர்களது பள்ளிக் கல்வியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். பள்ளிக் கல்வி நேரம் நாளொன்று மூன்று மணி நேரமாகவும், மீதி நேரத்தில் அவர்கள் தந்தை அல்லது குடும்பத் தொழில்களைக்  கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இக்கல்வித் திட்டம் ‘குலக்கல்வித் திட்டம்’ என்று தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகளால் பெயர் சூட்டப்பட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.

ராஜாஜி, தனது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளை நிறுவினார். பல்வேறு மக்கள் நலத் திட்டப்பணிகளை முன்னெடுத்தார். அரசு நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அவர் அறிமுகப்படுத்திய புதிய விற்பனை வரிக்கும், புகையிலை வரிக்கும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அரசியல் வாழ்வில் பல போராட்டங்களை, எதிர்ப்புகளைத் தொடர்ந்து எதிர்கொண்டார்.

பொறுப்புகள்

1937-ல், சென்னை ராஜதானியின் முதலமைச்சர்.

1946-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சர்.

1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுநர்.

1948 முதல் 1950 வரை  சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்.

1951 முதல் 1952 வரை மத்திய உள்துறை அமைச்சர்.

1952 முதல் 1953 வரை சென்னை மாநிலத்தின் முதலமைச்சர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்.

சுதந்திரா கட்சி

காங்கிரஸ் மீது கொண்ட கருத்து மாறுபாட்டால் அதிலிருந்து விலகி, தங்கதூரி பிரகாசம் பந்துலு, மினு மசானி, பேராசிரியர் என்.ஜி. ரங்கா, கே.எம்.முன்ஷி ஆகியோருடன் இணைந்து 1959-ல், சுதந்திரா கட்சியை நிறுவினார் ராஜாஜி. காங்கிரஸ் கட்சியின் தீர்மானங்கள் இடதுசாரிக் கொள்கையின் அடிப்படையில் இருந்ததால் ‘சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையே தேவை’ என்ற நோக்கிலேயே சுதந்திரா கட்சி தொடங்கப்பட்டது. அதன் மூலம் தனது அரசியல் பணிகளைத் தொடர்ந்தார்.

காங்கிரஸின் சோஷலிசக் கொள்கைகளை சுதந்திராக் கட்சி கடுமையாக எதிர்த்தது. ராஜாஜி தலைமையிலான இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து, 1967-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது.

1972-ல் கட்சியின் நிறுவனர் ராஜாஜி மறைவுக்குப் பின் இக்கட்சி, சரண்சிங்கைத் தலைவராகக் கொண்ட பாரதிய லோக் தளம் கட்சியுடன் இணைந்தது.

அணு ஆயுத எதிர்ப்பு

ராஜாஜி, அணு ஆயுதச் செயல்பாடுகளை, அழிவுக்கான அதன் பயன்பாடுகளை எதிர்த்தார். 1962-ல், இதற்காகத் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்கா சென்று கென்னடியைச் சந்தித்து ஆணு ஆயுதப் பயன்பாடுகளைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டார்.

பிற்காலத்தில் தீவிர அரசியலிலிருந்து விலகி இலக்கிய, சமூகப் பணிகளை முன்னெடுத்தார்.

விமோசனம் இதழ்

இதழியல் வாழ்க்கை

ராஜாஜி, சேலத்தில் தான் தோற்றுவித்த ’தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கம்’ மூலம் இதழ் ஒன்றை நடத்தினார். ஆனால், வரவேற்பு இல்லாததால் அந்த இதழ் சில மாதங்களோடு நின்று போனது.

ராஜாஜி, மதுவிலக்கு பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில், திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் மூலம் ‘விமோசனம்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். கல்கி அதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். மதுவின் தீமையைக் கருவாகக் கொண்ட பல சிறுகதைகளையும் கட்டுரைகளையும் அதில் இருவரும் இணைந்து எழுதினர்.

திருச்செங்கோடு காந்தி ஆச்ரமம் மூலம் ‘குடி கெடுகும் கள்’ உள்ளிட்ட சில நூல்களை அச்சிட்டு வெளியிட்டார் ராஜாஜி.

காந்தியின் ’யங் இந்தியா’ இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார்.

ராஜாஜி எழுதிய நூல்கள் சில.

இலக்கிய வாழ்க்கை

ராஜாஜி சேலத்தில் வாழ்ந்தபோது, இலக்கிய வளர்ச்சிக்காக சேலம் இலக்கிய சங்கத்தை நிறுவிக் கூட்டங்கள் பலவற்றை நடத்தினார். தமிழில் கலைச்சொற்களை உருவாக்க ‘தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கம் ' (Tamil Scientific Terms Society) என்ற அமைப்பை நிறுவி, பல துறைகளில் தமிழில் கலைச் சொற்கள் உருவாக்கும் முயற்சியை முன்னெடுத்தார்.

கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சி. ஆகியோரோடு குற்றாலத்தில் நடந்த ‘வட்டத்தொட்டி’ இலக்கிய ஆய்வுகளில் கலந்துகொண்டார்.

ராஜாஜி, தமிழில் ‘கல்கி’யிலும் ‘யங் இந்தியா’, ‘சுயராஜ்யா’ போன்ற ஆங்கில இதழ்களிலும் புகழ்பெற்ற பிற ஆங்கில நாளிதழ்களிலும் கதைகள், கட்டுரைகளை எழுதினார். ‘ஸோக்ரதர்’ (சாக்ரடீஸின் வாழ்க்கை) என்பதே ராஜாஜி முதன் முதலில் எழுதிய நூல். 1921-ல் சிறையில் இருந்தபோது, தனது சிறைச்சாலை அனுபவங்களை தினந்தோறும் நாட்குறிப்பாக எழுதி வந்தார். அதுவே பின்னர், ’சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜகோபாலாசாரியாரின் சிறைவாசம்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.

இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் ராஜாஜியை மிகவும் கவர்ந்தன. ராமாயணத்தை எளிய தமிழில் 'சக்கரவர்த்தித் திருமகன்' என்ற நூலாக எழுதினார். மகாபாரதத்தை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் 'வியாஸர் விருந்து' என்ற பெயரில் அளித்தார். பகவத் கீதை 'கண்ணன் காட்டிய வழி' ஆனது. இவை தவிர ’திருமூலர் தவமொழி', 'துறவி லாரென்ஸ்' எனப் பல நூல்களைப் படைத்தார். ‘உபநிஷதப் பலகணி’, 'கண்ணன் காட்டிய வழி', ‘ஆத்ம சிந்தனை’ எனும் மூன்று நூல்கள் தொகுக்கப்பட்டு ‘அற நூல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்தன. கல்கியில், ராஜாஜி எழுதிய ’ராமகிருஷ்ண பரமஹம்சர்’ பற்றிய தொடர், தொகுக்கப்பட்டு ‘ராமகிருஷ்ண உபநிஷதம்’ என்ற தலைப்பில் வெளியானது.

ராஜாஜி, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சிறுகதைகள், கட்டுரைகள், நாவல் எனப் பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். இவர் எழுதிய நாவல் 'திக்கற்ற பார்வதி' திரைப்படமாகிப் புகழ் பெற்றது  இசைப் பாடல்கள் சிலவற்றையும் எழுதினார். கல்கியுடன் இணைந்து தமிழிசை இயக்க ஆதரவாளராகச் செயல்பட்டார். எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிப் பிரபலமான, ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ பாடலை எழுதியது ராஜாஜிதான்.

ஆங்கிலத்தில் 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அல்லயன்ஸ் பதிப்பகத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தன்னுடைய நூல்கள் பலவற்றை நிபந்தனையின்றி அளித்து ’அல்லயன்ஸ் பதிப்பகம்’ வெற்றிகரமாகச் செயல்பட உறுதுணையாக இருந்தார்.

விருதுகள்

  • 1954-ல், இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
  • சாகித்ய அகாதமி விருது - 1958-ல், ’சக்கரவர்த்தித் திருமகன்’ நூலுக்காக வழங்கப்பட்டது.

மறைவு

டிசம்பர் 25, 1972-ல் தனது 95-ஆம் வயதில் ராஜாஜி காலமானார்.

ராஜாஜி பற்றிய நூல்கள் சில

ராஜாஜி - வாழ்க்கை வரலாற்று நூல்கள்

ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை அவரது பேரன் ராஜ்மோகன் காந்தி (காந்திஜியின் மகன் தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் பிறந்தவர்) 'Rajaji: A Life' என்ற பெயரில் எழுதியிருக்கிறார் [1] .

நாரண துரைக்கண்ணன் ‘ராஜாஜி’ என்ற தலைப்பில், ராஜாஜியின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார் [2] .

ம.பொ. சிவஞானம், ராஜாஜியுடனான தனது அனுபவங்களை’ நானறிந்த ராஜாஜி’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார் [3].

’கிளைவ் முதல் ராஜாஜி வரை’ என்ற நூலை பி.ஸ்ரீ. ஆச்சார்யா எழுதியுள்ளார் [4].

'நமது ராஜாஜி’ என்ற தலைப்பில், எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் ராஜாஜியின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார் [5].

பத்திரிகையாளர், எழுத்தாளர் ஆர். வெங்கடேஷ், சாகித்ய அகாதமியின் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல் வரிசையில் ராஜாஜியின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார் [6] .

ராஜாஜியின் வாழ்க்கையைப் பற்றி பலர் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியுள்ளனர் [7].

ராஜாஜியின் ஒரு சில நூல்கள் தமிழ் இணைய மின்னூலகத்திலும், ஆர்கைவ் தளத்திலும் சேகரிக்கப்பட்டுள்ளன.

நினைவேந்தல்

ராஜாஜி பிறந்து வாழ்ந்த தொரப்பள்ளி கிராமத்து இல்லம், தமிழக அரசால் அவரது நினைவிடமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கிண்டியில், ராஜாஜி நினைவாக ‘ராஜாஜி மண்டபம்’ அமைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ’ராஜாஜி மண்டபம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மதிப்பீடு

ராஜாஜி அடிப்படையில் சுதந்திரப் போராட்ட வீரர்; சமூக சேவகர். மது விலக்கைத் தீவிரமாக வலியுறுத்தியவர். லட்சியப் பிடிப்புடன் தனது பணிகளை முன்னெடுத்தவர். அரசியலாளராக ராஜாஜியின் சாதனைகள் பற்றி ஜெயமோகன், “இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல அடிப்படைக் கட்டுமானங்களை ராஜாஜிதான் திட்டமிட்டு அமைத்தார். அதன் பலன்களையே இன்றும் தமிழகம் அனுபவிக்கிறது. ஓசூர் தொழிற்பேட்டை அவரது கனவு. சென்னை துறைமுகவிரிவாக்கம் அவரது சாதனை.... ராஜாஜி இல்லையேல் சென்னை தமிழ்நாட்டுக்கு இல்லை என்பதே வரலாற்று உண்மை. இன்றைய தமிழக எல்லைகளை அமைக்க காரணமாக அமைந்தவர் அன்றைய முதல்வரான ராஜாஜிதான்.” என்கிறார் [8]. ()

இலக்கிய இடம்

‘தேவானை’, ‘சபேசன் காப்பி’, ‘சீதையின் கனவு’ போன்ற குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை ராஜாஜி எழுதியுள்ளார் என்றாலும், அவரது பெரும்பாலான படைப்புகள் பிரச்சாரத்தையும் சமூகச் சீர்த்திருத்தத்தையுமே அடிப்படை நோக்கமாகக் கொண்டவை. ‘அறம்’ பிறழாது அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துபவை. ராஜாஜியின் கதைகள் பற்றி, “ராஜாஜியின் கதைகளைப் பொறுத்தவரையில் அவை யாவும் பிரச்சாரக் கதைகள் என்று ஒரேயடியாகச் சொல்லிவிடலாம். ஆனால், பிரச்சாரப் போக்கினால் அவற்றின் நயம் ஒரு போதும் குறைந்துவிடவில்லை” என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ளதாக சிட்டி-சோ. சிவபாதசுந்தரம் கூறுகின்றனர். (தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்). மேலும் அவர்கள், ராஜாஜியின் கதைகள் குறித்து, ”ராஜாஜியின் கதைகளில் பிரச்சாரம் தனியாக நிற்கிறது. சமுதாயத்தில் அவர் கண்ட வறுமைப் பிணியின் அல்லல்கள், சாதி வேற்றுமைகள், அலங்கோலங்கள், டாம்பீக வாழ்க்கையின் ஊழல்கள் அவரது கதைகளில் பொதிந்திருக்கக் காணலாம். அவற்றைச் சுற்றி வளைத்திருக்கும் இலக்கிய வாசகமும் வெறும் வார்த்தைப் பந்தராயிருக்காது. கருத்தழகும் வசீகரமும் கொண்டது. ஆழம், அமைதி முதலிய பண்புகள் நிறைந்தது” என்று மதிப்பிட்டுள்ளனர். (தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் நூல்)

ராஜாஜியின் இலக்கிய முயற்சிகள் பற்றி ஜெயமோகன், “ராஜாஜியின் இலக்கிய ஆர்வம் நேர்மையானதென்றாலும் இலக்கிய நோக்கு பழமையானது. நீதி சொல்வதே இலக்கியம் என நம்பினார். அவ்வகை இலக்கியத்தையே அவர் வளர்த்தெடுத்தார். மாறான நவீன இலக்கியத்தை அவர் பொருட்படுத்தவில்லை." என்கிறார் [9].

ராஜாஜியின் ஒரு சில நூல்கள் மட்டுமே தற்போது அச்சில் உள்ளன. ’சக்கரவர்த்தித் திருமகன்', ’வியாசர் விருந்து’ என்ற நூல்களை எழுதியவர் என்ற முறையிலேயே ராஜாஜி பொது வாசகர்களால் அறியப்படுகிறார். எழுத்தாளர், இலக்கியவாதி, தமிழிசை ஆதரவாளர் என்பதைத் தாண்டி அரசியல்வாதியாகவே ராஜாஜி மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • ராஜாஜி இயற்றிய குட்டிக் கதைகள்
  • பிள்ளையார் காப்பாற்றினார்
  • ராஜாஜி கதைகள்
  • குடி கெடுக்கும் கள்
நாவல்கள்
  • திக்கற்ற பார்வதி
கட்டுரை நூல்கள்
  • ஸோக்ரதர்
  • திண்ணை ரசாயனம்
  • திருமூலர் தவமொழி
  • துறவி லாரென்ஸ்
  • உபநிஷதப் பலகணி
  • சிசு பரிபாலனம்
  • நிரந்தரச் செல்வம்
  • தம்பி வா
  • ஆத்ம சிந்தனை
  • ராஜாஜி கட்டுரைகள்
  • கைவிளக்கு
  • தாவரங்களின் இல்லறம்
  • கதோபநிஷத்: பொருள் விளக்கம்
  • சக்கரவர்த்தித் திருமகன்
  • வியாசர் விருந்து
  • கண்ணன் காட்டிய வழி அல்லது பகவத் கீதையின் பொருள் விளக்கம்
  • பஜகோவிந்தம்
  • தமிழில் முடியுமா
  • ரகுபதி ராகவ
  • மார்க்க அரேலியர் உபதேச மொழிகள்
  • மெய்ப்பொருள்
  • பக்திநெறி
  • ஆற்றின் மோகம்
  • அற நூல்கள்
  • வள்ளுவர் வாசகம்
  • ராமகிருஷ்ண உபநிஷதம்
  • முதல் மூவர் (மீ.ப.சோமுவுடன் இணைந்து எழுதியது)
  • வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகச் சரித்திரம் (ஜி. ராமச்சந்திரன், டி.ஆர். பத்மநாபனுடன் இணைந்து எழுதியது)
  • ஊர்க் கடுப்பாடு
ஆங்கில நூல்கள்
  • Gandhi-Jinnah Talks
  • Hinduism Doctrine And Way Of Life
  • Marcus Aurelius
  • The Bhagavad Gita
  • Tirukkural
  • Bhaja Govindham
  • Mahabharata
  • Ramayana
  • Upanishads
  • The Ayodhya Canto Of The Ramayana As Told By Kamban
  • Ambedkar Refuted

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.