under review

கணியான் கூத்து

From Tamil Wiki
முத்தம்பெருமாள் கணியான் குழு

கணியான் கூத்து தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வழக்கில் உள்ள நாட்டார் நிகழ்த்து கலை. அண்ணாவி ஒருவர் பாட அவருடன் இருவர் ஆடுவதும், இருவர் மகுடம் இசைப்பதுமாக இந்நிகழ்த்துகலை அமையும். இந்நிகழ்த்துகலை வழிபாடு, புராணம், சடங்குகள் சார்ந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் வாழும் கணியான் சாதியினர் கணியான் கூத்தை நிகழ்த்துகின்றனர்.

பார்க்க: பேயாட்டம், அம்மன் ஆட்டம்

கணியான் கூத்து

ஆட்டக்காரர்கள்

கணியான் கூத்து நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் நிகழும் நிகழ்த்து கலை. இக்கலை சுடலைமாடன் கோவிலிலும், அம்மன் கோவில்களிலும் விஷேச நாட்களில் நிகழ்த்தப்படும். கோவிலின் முக்கிய தெய்வம் இருக்கும் அறையின் எதிர்ப் பகுதியில் கணியான் ஆட்டம் நிகழும். இக்கலை சடங்கு சார்ந்தது என்பதால் தெய்வத்தின் நேர் எதிரில் நின்று நிகழ்த்தப்பட வேண்டும் என்பது நியதி. அவ்வாறு இடம் இல்லாத கோவில்களில் வலதுபுறமோ, இடதுபுறமோ கூத்து நிகழ்த்தப்படும். கோவிலில் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள இடங்களில் சாமியாடி வரும் போது கரகம், நையாண்டி மேளத்துடன் சேர்ந்து கணியான் குழுவினரும் ஆடிப்பாடி வருவர்.

கணியான் ஆட்டக்கதையில் பெரும்பாலும் அது நிகழும் கோவில் சார்ந்த மூலத் தெய்வத்தின் கதைகளே பாடப்படும். அதன் பின் கோவிலின் துணை தெய்வங்கள் தொடர்பான கதைகளைப் பாடுவர். முந்தைய காலங்களில் மாடன் கதைகளையும், காளி கதைகளையும் மட்டுமே பாடும் வழக்கம் இருந்தது. வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் ராமாயண, பாரதக் கதைகள் பாடத் தொடங்கிய போது கணியான் அண்ணாவிகளும் அக்கதைகளைப் பாடத் தொடங்கினர்.

ஆட்டமுறை

Kaniyan koothu1.jpg

கணியான் ஆட்டக் குழுவில் எட்டு அல்லது ஐந்து பேர் இருப்பர். எட்டு பேர் கொண்ட குழுவில் அண்ணாவி ஒருவர், பின்பாட்டுக்காரர் இருவர், மகுடக்காரர்கள் இருவர், தாளம்/ ஜால்ரா அடிப்பவர் ஒருவர், நடனமாடுவர் இருவர் இருப்பர். ஐவர் குழுவில் அண்ணாவி, பின்பாட்டுக்காரர், நடனமாடுபவர் தலா ஒருவரும், மகுடக்காரர்கள் இருவரும் இருப்பர். கணியான் ஆட்டத்தின் துணை நிகழ்வுகளில்பங்கெடுக்கும் கைவெட்டுக்காரர், அம்மன்கூத்து ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர் இந்த எண்ணிக்கையில் அடங்க மாட்டார்கள்.

ஆட்டத்தின் நிகழ்த்து முறை பாட்டு, கதை விளக்கம், ஆட்டம் என அமையும். பாட்டும், மகுட இசையும், ஆட்டமும் ஒருங்கேயும், கதை விளக்கம் தனியாகவும் நிகழும். மையக் கருவறை எதிரே நின்றுக் கொண்டு அண்ணாவி பாடுவார். அவருக்கு இருபுறமும் சற்று இடைவெளி விட்டு பின்பாட்டுக்காரர் நிற்பார். இவரே தாளமும் அடிப்பார். அண்ணாவியும், பின்பாட்டுக்காரரும், மகுடக்காரரும் நின்றுக் கொண்டு பாடி, இசைக்க ஆட்டக்காரர் கதையின் தன்மைக்கு ஏற்ப ஆடுகளத்தில் ஆடி வருவார்.

Kaniyan koothu2.jpg

முதலில் அண்ணாவி பாடுவார், பாட்டின் போது மகுடம் அடித்தல், ஆட்டக்காரர்கள் ஆடரங்கில் ஆடுதல் நிகழும். பின் அண்ணாவி பாடிய பகுதிகளுக்கு உரைநடையில் விளக்கம் கூறுதல் பகுதி நிகழும். அண்ணாவி விளக்கம் கூறும் போது ஆட்டக்காரர்கள் ஆடுவதும், மகுடம் இசைப்பதும் நிகழாது. அண்ணாவியின் உரைநடை விளக்கமும் ராகத்திலேயே அமைந்திருக்கும். அண்ணாவி விளக்கம் சொல்லும் போது ஆட்டக்காரர்கள் முக்கிய தெய்வத்திற்கு தங்கள் பின்புறத்தை காட்டாது வந்து நிற்பர். அதற்கு ஏற்ப ஆட்டக்காரர்கள் காலால் தரையை தட்டி சிறிதாக சலங்கை ஒலி எழுப்புவர். அண்ணாவி விளக்கம் சொல்லும் போது பின்பாட்டுக்காரர்களும், மகுடக்காரர்களும் ‘ஆமா’ என ஒத்து போட வேண்டும்.

பொதுவாக ஆட்டமுறையை வட்டவடிவ ஆட்டமுறை, நேர்கோட்டு ஆட்டமுறை என இரண்டாகப் பிரிப்பர். இதில் வட்டவடிவ ஆட்டமுறை பழமையானது. ஆனால் தற்போது கணியான் ஆட்டத்தின் பெரும்பாலான ஆடல் நேர்கோட்டிலேயே நிகழ்கிறது. ஆனால் சாமியாடி வந்தாடும் போது ஆட்டக்காரர்களை தன்னுடன் ஆடும்படி பணிவார். அவர்கள் ஆடும் போது அண்ணாவி கும்மிப் பாட்டு பாடுவார். பின்பாட்டுக்காரர்களும், மகுடக்காரர்களும் சேர்ந்து பாடுவர். அப்போது ஆட்டம் வட்ட வடிவில் மாறிவிடும். இது மரபாக நிகழும் கும்மி ஆட்டம் போன்றது.

கணியான் கூத்தின் ஆட்டமுறை தொடக்கம், வேகம், அதிவேகம் என மூன்று நிலைகளாக அமையும். அண்ணாவி பாடத் தொடங்கியதும் ஆட்டக்காரர்கள் தங்கள் பாதங்களை மெல்ல தட்டிக் கொண்டும், கைகளை அசைத்துக் கொண்டும் தொடங்கி பின் வேக நிலையிலும், அதிவேக நிலையிலும் சுழன்று ஆடி வருவர். ஆட்டக்காரர்கள் அதிவேக நிலையில் ஆடும் போது மகுடம் உச்சத்தில் ஒலிக்கும்.

கலைஞர்கள்

அண்ணாவி

Kaniyan koothu4.jpg

புலவர் என்று பொதுவாக அழைக்கப்படும் அண்ணாவியே குழுவின் தலைவராக இருந்து அதனை வழிநடத்திச் செல்வார். கூத்தில் அண்ணாவியே முன் நின்று பாடுவார். அண்ணாவி பட்டு ஜிப்பாவும், வேட்டியும் அணிந்திருப்பார்.

பின்பாட்டுக்காரர்

Kaniyan koothu5.jpg

அண்ணாவிக்கு சற்று இடைவெளிவிட்டு பின்பாட்டுக்காரர் நிற்பார். அண்ணாவி பாடும் போது உடன் பாடுவதும், தாளம் இசைப்பதும் இவர் நிகழ்த்துவார். அண்ணாவி பாட்டின் நடுவே ஓய்வெடுக்கும் போது இவரே முன் நின்று பாடுவதும் உண்டு.

மகுடக்காரர்

Muthamperumal2.jpg

மகுடக்காரர்கள் அண்ணாவிக்கும், பாடுபவர்களுக்கும் இடமும் வலமுமாக நிற்பர். மகுடத்தின் தன்மை பொறுத்து அவர்களின் இடம் அமையும். மகுடத்தில் உச்சம், மந்தம் என இருவகை உண்டு. உச்ச மகுடம் அடிப்பவர் வலது பக்கமும், மத்த மகுடம் இசைப்பவர் இடது பக்கமும் இருப்பர். உச்ச மகுடத்தை உச்சக்கட்ட மகுடம், தொப்பி என்றழைப்பர். மந்த மகுடத்தை மந்தகட்டம், விளித்தலை என்று குறிப்பிடுகின்றனர். இதில் மந்த மகுடத்தை விட உச்ச மகுடம் அளவில் பெரியது. மகுடக்காரர்கள் பாட்டின் தாளத்திற்கு ஏற்ப உச்ச மகுடத்தையும், மந்த மகுடத்தையும் இசைப்பர்.

நடனமாடுபவர்கள்

ஆட்டக்காரர் இருவரும் மகுடக்காரருக்கு அடுத்து நிற்பர். இவர்கள் இருவரும் பெண் வேடம் அணிந்திருப்பர். மைய கருவறைக்கும் அண்ணாவிக்கும் நடுவில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் ஆடுகளத்தின் இரண்டு பக்கமும் இருப்பர். நடனக்காரர் ஆடுகளத்தின் முழுவதும் ஆடிவருவார். பேயாட்டம் ஆடுபவருடன் ஆட்டக்காரர்கள் ஆடுவதும் உண்டு. ஆட்டக்காரர்கள் காலில் சலங்கை கட்டியிருப்பர். இதனை 'கெச்சம் கட்டுதல்' என்பர்.

நடனக்காரர் கதையின் தன்மைக்கு ஏற்ப தங்கள் ஆடலை அமைத்துக் கொள்வர். கதையின் உச்சத் தருணங்களில் உக்கிரமாகவும், பிற தருணங்களில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டு கோமாளித் தனமாகவும் ஆடுவர். சில சமயம் பார்வையாளர்களைச் சீண்டுதல், அவர்களுடன் சேர்ந்து ஆடுவதும் நிகழும்.

இசைக்கருவி

Muthamperumal4.jpg

மகுடம், ஜால்ரா இரண்டும் கணியான் ஆட்டத்திற்கு உரிய இசைக்கருவிகள். இதில் மகுடமே முக்கிய இசைக்கருவி என்பதால் இக்கலை 'மகுடாட்டம்' என்றும் அழைக்கப்படுகிறது. தெய்வத்திற்கு கோமரமாடுபவரின் (சாமியாடுபவர்) கோமரத்தை (தெய்வ அருள்) கூட்ட மகுடம் அடிக்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது. மகுடத்தின் ஒலி சாமியாடுபவரை உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும்.

முந்தைய காலங்களில் கோவில்களில் வில், மகுடம் போன்ற இசைக்கருவிகள் கோவிலுக்குச் சொந்தமாக வைத்திருந்தனர். விழாக்களில் அவற்றை முக்கிய தெய்வத்தின் முன் வைத்து பூஜை செய்து கலைஞர்களிடம் கொடுப்பர்.

பார்க்க: மகுடம்

வழிபாட்டுக் கூறுகள்

Kaniyan koothu6.jpg

கணியான் கூத்தின் பகுதியாக வழிபாட்டு கூறுகளாகவும் காப்புக்கட்டல், கைவெட்டு, திரளை வீசுதல், பேயாட்டம், அம்மன் கூத்து ஆகியன நிகழும்.

காப்புக்கட்டல்

தங்கராசு - கணியான் (அண்ணாவி)

நாட்டுப்புறத் தெய்வக் கோவிலின் விழாவின் தொடக்கத்தில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். திருநெல்வேலி, தூத்தூக்குடி மாவட்டங்களில் காப்புக்கட்டுதல் முக்கிய நிகழ்வாக நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில கோவில்களில் மட்டும் நடைபெறும் வழக்கம் உள்ளது. விழா தொடங்கும் நாள் மாலை அந்தியில் குடி எழுப்பல் நிகழ்ச்சி முதலில் நடக்கும். நையாண்டி மேளத்துடன், கரகாட்டம், கணியான் ஆட்டம் மூன்றும் சிறிது நேரம் நிகழும். குடி எழுப்பல் முடிந்ததும் காப்புக்கட்டல் நிகழும். விழா எந்த ஊரில் நிகழ்ந்தாலும் கணியான் சாதியினரே காப்புக்கட்டிக் கொள்வர். ஆனால் இவர்கள் கணியான் ஆட்டக்குழுவின் உறுப்பினர் அல்ல. கோவில் கமிட்டியைச் சார்ந்தவர் இவரைத் தனியாக அழைத்து வருவார்.

காப்புக்கட்டுக் கொள்பவர் காப்புக்கட்டிய நாளிலிருந்து தனித்து விரதமிருக்க வேண்டும். அவர் தனியாக சமைத்துக் கொள்ள அரிசியும், பருப்பும் கோவில் கமிட்டி சார்பாக வழங்குவர். விழா தொடங்கும் நாளில் காப்புக்கட்டிக் கொள்பவர் எண்ணெய் தேய்த்துக் குளித்து புது வேட்டியால் தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு முப்புரிநூல் அணிந்து நெற்றியில் திருநீறு இட்டு மைய தெய்வம் இருக்கும் கருவறைக்கு அருகில் கிழக்கு பார்த்து அமர்வார். இவருக்கு முன்னால் ஒரு முறத்தில் வெள்ளி/வெண்கல நாழி நிறைய நெல் வைக்கப்பட்டிருக்கும். இதனை நிறைநாழி என்றழைக்கின்றனர். இதனுடன் உடைக்காத தேங்காய் ஐந்து, இரும்புத்துண்டுகள் மூன்று, மஞ்சள் துண்டு ஒன்று, மஞ்சள் தேய்த்த காப்பு நூல் இருக்கும்.

காப்புக்கட்டிக் கொண்டவருக்கு எதிரே சாமியாடுபவர் குளித்து ஈரத் துணியுடன் அமர்ந்திருப்பார். விழா தொடங்கியதும் நையாண்டி மேளம், மகுடம் இசைக்க காப்புக் கட்டுக் கொள்பவர் தெய்வத்தை வணங்கிவிட்டு மஞ்சள் நூலை எடுத்து கையில் கட்டிக் கொள்வார்.

கைவெட்டு

காப்புக்கட்டிக் கொண்டவர் தெய்வத்திற்கு பலி நடக்கும் முன் தன் கையையும், நாக்கையும் கீறி ரத்தத்தை தெய்வத்திற்கு முன் விரிக்கப்பட்டிருக்கும் வாழையிலையில் சொட்டுவார். இச்சடங்கை கைவெட்டு என்றழைக்கின்றனர். திருநெல்வேலி, தூத்தூக்குடி மாவட்டத்தில் சுடலை மாடன் கோவிலில் இச்சடங்கு நிகழும். அம்மன் கோவில்களில் அரிதாகவே இந்நிகழ்வு உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட அம்மன் கோவில்களில் இந்நிகழ்வு விரும்பிச் செய்யப்படுகிறது.

காப்புக்கட்டிக் கொண்ட தினத்திற்கு மறுநாள் இரவு கணியான் ஆட்டம் தொடங்கும். அன்று சரியாக பன்னிரெண்டு மணிக்கு சாமியாடி மையக் கருவறை முன் அருள் வேண்டி ஆடுவார். சாமியாடிக்கு அருள் வந்ததும் காப்புக்கட்டிக் கொண்டவர் சாமியாடியின் அருகே வந்து கைவெட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகும். விழா நிகழும் கோவிலின் பரம்பரை பூசாரி இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளக் கூடாது. காப்புக்கட்டியவர் கைவெட்டியதும் ரத்தத்தை வாழையிலையில் விடுவார். பழைய மரபுப் படி 21 சொட்டு ரத்தம் விட வேண்டும் என்பது கணக்கு.

கைவெட்டு நிகழ்ச்சி முடிந்த பின்னர் தெய்வத்திற்கு பலி கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். ஆடு, கோழி, பன்றி ஆகியன பலி கொடுக்கப்பட்ட பின் காப்புக்கட்டிக் கொண்டவர் தன் முன்னால் உள்ள முறத்தில் உடைக்காத தேங்காயை எடுத்து கல் உரல் மீது உருட்டி மீண்டும் முறத்தில் வைப்பார். பின் தெய்வத்தை வணங்கிவிட்டு உரல் மீது ஏறி நின்று பாடத் தொடங்குவார். பாடல் முடிந்ததும் உரலிலிருந்து இறங்கி மும்முறை கூச்சலிடுவார். பின் உரல் மீது அமர்ந்து கையில் கீறி ரத்தத்தை உரலைச் சுற்றியிருக்கும் இலைமீது சொட்டுவார். பின் காயம்பட்ட இடத்தை அரளிப்பூவால் தேய்த்துவிடுவர். சில கோவில்களில் நாக்கில் வெட்டி ரத்தம் விடுவதும் வழக்கில் உள்ளது. சில ஊர்களில் நாக்கை வெட்டுவது பாவனையாக நிகழும்.

முன்னாளில் கைவெட்டுக்காரர்களுக்கு கையில் தங்கம் அல்லது வெள்ளியாலான கடகம் போடும் வழக்கம் இருந்தது. இப்போது புது வேட்டி, துண்டு எடுத்துக் கொடுக்கும் வழக்கம் உள்ளது. உரலுக்கு பதில் நாற்காலி இடுகின்றனர்.

திரளை வீசுதல்

ஒப்பனை செய்தல் (நன்றி: தி இந்து)

கைவெட்டு முடிந்ததும் திரளை வீசுதல் சடங்கு நிகழும். பச்சரிசிச் சோறு, கைவெட்டுக்காரரின் குருதி, பலிக்கொடுக்கப்பட்ட விலங்கின் குருதி மூன்றையும் சேர்த்து உருட்டி ஆகாயத்தில் எறிவர். இதனையும் காப்புக்கட்டிக் கொண்டு கைவெட்டுபவரே நிகழ்த்துவார். திரளை வீசுதல் என்பது பேய்களுக்கு உணவுட்டுதல் , சோற்றை உருட்டு வீசுதல் எனப் பொருள் கொள்கின்றனர். இந்நிகழ்வு சுடலைமாடன் கோவில்களில் மட்டும் நிகழ்கிறது. திரளை விசுதல் ஊரின் தெற்கு பக்கமாகவோ, சுடலையிலோ (சுடுகாடு) நடைபெறும். சுடலைக்கு கைவெட்டுக்காரர், மகுடக்காரர், கோவில் சாமியாடி, பந்தம் பிடிப்பவர் மட்டுமே செல்லவேண்டும். மற்றவர்கள் உடன் சென்றாலும் திரளை வீசும் இடத்திற்கு தொலைவிலேயே நிற்பர்.

கைவெட்டுதல் (நன்றி: தி இந்து)

திரளை வீசும் இடத்தில் மண்ணைக் குழைத்து சிறிய மாடன் செய்து வைப்பர். மாடன் முன் வாழை இலையை விரித்து அதில் தேங்காய், பழம், மஞ்சள், பச்சரிசிச் சோறு படைக்கப்படும். கைவெட்டுக்காரர் மாடனுக்கு பூஜைகளை நிகழ்த்துவார். பூஜை தொடங்கியதும் கைவெட்டுக்காரர் மகுடக்காரரை நிறுத்தும் படி சமிக்ஞை செய்வார். பின் கைவெட்டுக்காரர் திரளையை எடுத்து மாடனை வணங்கிவிட்டு மேற்கு திசையை தவிர மற்ற மூன்று திசைகளிலும் வீசுவார். திரளை சோறு தரையில் விழாமல் பேய்கள் தின்றுவிடும் என்பது நம்பிக்கை. திரளை வீசி முடிந்ததும் சுடுகாட்டில் யாரும் நிற்கக்கூடாது.

பலி வேண்டாம் என முடிவு செய்யப்பட்ட கோவில்களில் பச்சரிசிச் சோற்றுடன் குங்குமத்தைக் கலந்து வீசுவர். விலங்குகளுக்கு பதில் பூசணிக்காய் வெட்டுவதும் நிகழ்கிறது.

பேயாட்டம்

Kaniyan koothu10.jpg

கோவில் விழாவின் இரண்டாம் நாள் திரளை வீச்சு முடிந்ததும் சாமியாடி ‘ஓய், ஓம்’ என சத்தமிட்டுக் கொண்டே ஆடுவார். அவருடன் சேர்ந்து கைவெட்டுக்காரரும் பயங்கர தோற்றமுடைய முகமூடியை அணிந்துக் கொண்டு ஆடுவார். இவரது ஆட்டம் உக்கிரமாகவும், சாமியாடியின் அருளைக் கூட்டுவதாகவும் அமையும். பேயாட்டத்தின் போது சுடலைமாடன் கதையில் வரும் திகிலூட்டும் பகுதி அல்லது ஓசை மிகுந்த பாடலை அண்ணாவி பாடுவார்.

பார்க்க: பேயாட்டம்

அம்மன் கூத்து

அம்மன் கூத்து அம்மன் கோவில் விழாக்களில் மட்டும் நிகழ்வது. அம்மன் கூத்தும் பேயாட்டம் போன்றது தான். பெயரும், ஒப்பனையும் வேறுபடும்.

பார்க்க: அம்மன் கூத்து

நிகழும் ஊர்கள்

Kaniyan koothu11.jpg

கணியான் கூத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்தூக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள நாட்டுப்புறத் தெய்வக் கோவில்களின் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. இக்கலை சுடலைமாடன் கோவிலிலும், அம்மன் கோவில்களிலும் நிகழ்த்தப்படும்.

நிகழ்த்தும் சாதியினர்

இந்நிகழ்த்துக்கலையை திருநெல்வேலி, தூத்தூக்குடி மாவட்டங்களில் வாழும் கணியான் சாதியினர் நிகழ்த்துகின்றனர்.

நிகழும் மாதங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்களின் விழாக்கள் பங்குனி முதல் புரட்டாசி வரை நிகழும். பிற மாதங்களில் தனிப்பட்ட காரணங்களால் விழா நிகழ்த்தப்படுவதும் உண்டு. பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பெருமளவும் கொடை நிகழும். ஆடி மாதத்திலும், கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமைகளிலும் அம்மன் கோவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நிகழும். இக்காலங்களில் கோவில்களில் கணியான் கூத்து நிகழும். குலத் தெய்வ கோவில் திருவிழாவான பங்குனி உத்திரம் நாளிலும் கணியான் ஆட்டம் நிகழ்த்தப்படும்.

சுடலை மாடன் கோவில் விழாக்கள் வியாழன், வெள்ளி, சனி நாட்களிலும், அம்மன் கோவில் விழாக்கள் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளிலும் நிகழும். கணியான் ஆட்டம் கோவிலின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ஒரு நாளிலிருந்து மூன்று நாட்கள் வரை நிகழும்.

நிகழும் நேரம்

கணியான் கூத்து பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நிகழும். இரவு எட்டு மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை நான்கு, ஐந்து மணி வரை நிகழும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இரவு 12 - 2 க்குள் முடித்துவிட்டு மீதி கதையை மறுநாள் தொடரும் வழக்கம் உள்ளது.

தோற்றக் கதை

கணியான் இனமும், கூத்தும் தோன்றியதற்குக் காரணமாகக் கூறப்படும் வாய்மொழி கதைகள் இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று சுடலைமாடன் கதை ஏட்டிலும் உள்ளது.

பார்க்க: கணியான் தோற்றக் கதை

கணியான் கூத்து கதைகள்

கணியான் ஆட்டத்தில் பாடப்படும் கதைகளின் பட்டியல்,

ஆண் தெய்வக் கோவில் விழாக்களில் பாடப்படுவன

  • முண்டன் கதை
  • சிவனணைந்த பெருமாள் கதை
  • பல்வேசக்காரன் கதை
  • வல்லரக்கன் கதை
  • சுடலைமாடன் கதை
  • பன்றிமாடன் கதை
  • சப்பாணிமாடன் கதை
  • தளவாய்மாடன் கதை
  • வண்ணாரமாடன் கதை
  • காலசாமி கதை

பெண் தெய்வக் கோவில் விழாக்களில் பாடப்படுவன

  • பேச்சி அம்மன் கதை
  • காளி அம்மன் கதை
  • பிரம்மசக்தி அம்மன் கதை
  • இசக்கி அம்மன் கதை
  • பத்ரகாளி அம்மன் கதை
  • முத்தாரம்மன் கதை
  • முப்புடாரி கதை
  • சந்தனமாரி கதை
  • உச்சினிமாகாளி கதை
  • துர்க்கை அம்மன் கதை

அகால மரணத் தெய்வக் கதைகள்

  • சின்னதம்பி கதை
  • முத்துப்பட்டன் கதை
  • மந்திரமூர்த்தி கதை
  • மதுரைவீரன் கதை
  • பொம்மி கதை

பிற கதைகள்

  • அரிச்சந்திரன் கதை
  • குருபத்திரன் கதை
  • கிருஷ்ணசாமி கதை
  • மார்க்கண்டேயன் கதை
  • மீனாட்சி கல்யாணம்
  • பார்வதி கல்யாணம்
  • வாலி மோட்சம்
  • சீதா கல்யாணம்
  • வள்ளி திருமணம்
  • பாரதக் கதைகள்
  • கந்தபுராணக் கதைகள்
  • திருவிளையாடல் புராணக் கதைகள்

கற்கும்/கற்பிக்கும் முறை

மற்ற நிகழ்த்துக்கலைகள் போல் கணியான் ஆட்டத்தில் ஆட்டத்தையோ, பாட்டையோ, மகுடம் அடிப்பதையோ குருவிடமோ, தந்தையிடமோ பயில வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சிறுவயதிலேயே உறவினர்களுடன் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று நேரடியாக கற்றுக் கொள்ளும் அனுபவம் மட்டுமே உள்ளது. அண்ணாவியுடன் பின்பாட்டிற்கும், சில எடுபிடி வேலைகளுக்கும் செல்வது கலையை கற்றுக் கொள்வதன் முதல் நிலை.

மூத்த கலைஞர்கள் நிகழ்வு இல்லாத நாட்களில் கலையின் அடிப்படைகளைக் கற்றுக் கொடுப்பதும் உண்டு. தற்போது மகுடக் கலைஞர்கள் தவில் வித்துவானிடம் அடிப்படைகளைக் கற்கும் வழக்கமும் உள்ளது. அண்ணாவியும் கதைப்பாடல்களையும், ராக தாளங்களையும் முறையாக குருவிடம் கற்கும் வழக்கம் இல்லை. கதைப்பாடல்களை ஏட்டில் எழுதி வைக்கும் வழக்கமும் இல்லை. கதைப்பாடல்களை கூத்து கேட்டு செவிவழியாக பயிலும் வழக்கம் மட்டுமே உள்ளது.

ஸ்பெஷல் நாடகமும் கணியான் கூத்தும்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்பெஷல் நாடகம் அரங்கேற்றிய போது கணியான் ஆட்டக்காரர்கள் பெண் வேஷம் கட்டி ஆடினர். அதன் பின் ஸ்பெஷல் நாடகத்தின் செல்வாக்கால் கணியான் ஆட்டம் மாற்றமடைந்தது. சமகாலத்தில் கணியான் ஆட்டக்காரர்கள் சுடிதார் அணிந்துக் கொண்டு ஆடுவது வரை அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

கூத்து பற்றிய ஆய்வு

  • கணியான் கூத்து பற்றி சோமலெ தன் ‘Folklore of Tamilnadu (1973)’ நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் சோமலெ குறிப்பிடும் ஆணும் பெண்ணுமாக இரண்டு கோமாளிகள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவர் என்னும் குறிப்பு தவறானது.
  • 1976-ம் ஆண்டு ஏ.என். பெருமாள் தாமரை மாத இதழில் கணியான் கூத்து பற்றி குறிப்பு எழுதியுள்ளார்.
  • முனைவர் அ.கா. பெருமாள் ராஜபாளையத்திலிருந்து வெளிவந்த யாத்ரா காலாண்டு இதழில் கணியான் ஆட்டம் பற்றி விரிவான கட்டுரையை 1980-ம் ஆண்டு எழுதியுள்ளார்.
  • 1982-ல் அனந்தசயனம் கணியான் கூத்து பற்றி எம்.ஃபில் ஆய்வு செய்துள்ளார்.
  • 1986-ல் இரா. பாலசுப்பிரமணியம் கணியான் கூத்து பற்றி பாளையங்கோட்டையில் நூல் வெளியிட்டுள்ளார்.
  • 1988-ல் நாட்டுப்புற இயல் ஆய்வுக் கோவையில் ‘வில்லிசையும் கணியான் கூத்தும்’ என்ற தலைப்பில் முத்து சண்முகம் கட்டுரை எழுதியுள்ளார்.
  • 1987-ல் நாட்டுப்புற இயல் ஆய்வுக் கோவையில் அனந்தசயனம் ’இறைவழிபாட்டில் கணியான் ஆட்டம்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
  • 1988-ல் ஜெயலட்சுமி கணியான் கூத்து கலைகள், கலைஞர்கள் பற்றி எம்.ஃபில் ஆய்வேட்டை சமர்ப்பித்துள்ளார்.
  • மு. ராமசாமி நடத்திய விழிகள் இதழில் ’கணியான் கூத்தும் சாக்கையர் கூத்தும்’ என்ற கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
  • மகுடாட்டக் கலையில் சமுதாயமும் பண்பாடும் (1990) என்ற தலைப்பில் கன்னிகா விசயசிம்மன் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார்.
  • 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தென்மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் மாநாட்டின்போது கணியான் கூத்து கலைஞர்களைப் பேட்டி கண்டு தமிழக இயலிசை நாடக மன்றத்திற்கு கணியான் சமூகம் பற்றிய ஒரு அறிக்கையையும் முனைவர். அ.கா. பெருமாள் சமர்ப்பித்துள்ளார்.


உசாத்துணை

உள் இணைப்புகள்

வெளி இணைப்புகள்


✅Finalised Page