under review

மகுடம்

From Tamil Wiki
Kaniyan koothu5.jpg

மகுடம் தொன்மையான தோலிசைக் கருவி. இதனை கணியான் கூத்தின் பக்கவாத்தியமாகப் பயன்படுத்துகின்றனர். மகுடத்தை தொன்மையான தமிழிசைக் கருவி எனக் குறிப்பிடுபவர்களும் உண்டு. இது தப்பாட்டம் அல்லது பறையாட்டத்திற்கு பயன்படும் பறை இசைக்கருவியை வடிவத்தில் ஒத்தித்திருந்தாலும் இரண்டு இசைக்கருவிகளும் வேறு. இதனை பேச்சு வழக்கில் மகிடம் என்றழைக்கின்றனர்.

வடிவமைப்பு

Kaniyan koothu6.jpg

மகுடம் நாற்பது செண்டிமீட்டர் வட்டமும், கஞ்சிரா போன்ற வடிவமும் உடையது. மகுடத்தின் வட்டமான பகுதியை வேம்பு, மஞ்சணத்தி, பூவரசு மரங்களில் ஏதேனும் ஒன்றையோ, மூன்றின் மரப்பட்டைகளையோ சேர்த்து ஒட்ட வைத்தோ செய்வர். அதன் பின் ஈரப்பதம் நிறைந்த எருமைத் தோல் கொண்டு மகுடத்தின் வட்டப்பகுதியை போர்த்துவர். இறுதியாக அதன் மேல் புளியங்கொட்டைப் பசையை பூசி சூரிய ஒளியில் உலர்த்துவர். மகுடம் தயாரானதும் அதன் வட்டச்சுற்று பகுதியை இரும்பு போல்ட்டால் இணைத்துக் கட்டுபவர்களும் உண்டு.

வகைகள்

ஓசையின் அடிப்படையில் மகுடத்தை உச்ச மகுடம், மந்த மகுடம் என இரண்டாகப் பிரிப்பர். மந்த மகுடத்தை விட உச்ச மகுடம் அளவில் பெரியது. மகுடம் மாட்டுத்தோலில் செய்யப்பட்டாலும் உச்ச மகுடத்தை எருமைக் கன்றுத் தோலால் இழுத்துக் கட்டியிருப்பர்.

உச்ச மகுடத்தை உச்சக்கட்ட மகுடம், தொப்பி எனக் குறிப்பிடுவர். மந்த மகுடத்தை மந்தகட்டம், விளித்தலை என்னும் பெயரால் அழைப்பர். உச்ச மகுடம் உச்ச சத்தத்தில் ஒலிப்பதற்காக அதன் தோலின் வாய்ப் பகுதியை நெருப்பில் வாட்டுவர். இதனை மகுடம் காய்ச்சுதல் என்பர்.

வாய்மொழி கதை

மகுடத்தின் உருவாக்கம் பற்றி ஒரு வாய்மொழிக் கதை வழக்கில் உள்ளது. மகிஷாசுரனை காளி வதம் செய்த போது[1] அவன் தோலால் முதன்முதலில் மகுடம் உருவாக்கப்பட்டது என்ற கதை உள்ளது. சிவன் தன் தலையில் உள்ள மகுடத்தை இசைக்கருவியாக செய்து கொடுத்தார் என்ற கதையும் வழக்கில் உள்ளது.

கணியான் கூத்து

மகுடம் கணியான் கூத்தின் பிரதான இசைக்கருவி. கணியான் கூத்தின் போது அண்ணாவியின் பாடலுக்கு ஏற்ப மகுடத்தை இசைப்பர். இது தென் தமிழ் மாவட்டங்களில் உள்ள கணியான் சாதியினரால் நிகழ்த்தப்படுவதால் இவ்வாத்தியத்தையும் அவர்களே தயார் செய்கின்றனர்.

பார்க்க: கணியான் கூத்து

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. மகிஷன் - எருமைத் தலையுடையவன்


✅Finalised Page