under review

ஆழ்வார்கள்

From Tamil Wiki
Revision as of 20:09, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றித் தமிழ்ப் பாசுரங்கள் இயற்றிய வைணவ அடியார்கள். தமிழில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அல்லது ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர்.

சொற்பொருள்

ஆழ்வார் என்னும் சொல்லுக்கு இறைவனின் கல்யாணகுணங்களில் ஆழ்ந்து கிடப்பவர் என்று பொருள் என ம.பெ.ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகிறார். மணவாள மாமுனிகளின் உபதேச ரத்னமாலையில் ‘அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்’என்று ஆழ்வார்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

நூல்

வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக ஆழ்வார்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. முன்பு இது 'அருளிச்செயல்' என அழைக்கப்பட்டது

காலம்

பொதுவாக ஆழ்வார்களின் காலம் என்பது பொயு 700 முதல் பொயு 900 வரை என்பது எஸ். வையாபுரிப் பிள்ளை, மு. அருணாசலம் ஆகியோரின் கருத்து

ஆழ்வார் வரலாற்று ஆதாரங்கள்

சம்ஸ்கிருதம்
  • கருடவாகன பண்டிதர் இயற்றிய திவ்வியசூரி சரிதம்
  • அனந்தாசாரியார் இயற்றிய பிரபந்தாம்ருதம்
மணிப்பிரவாளம்
  • பின்பழகிய பெருமாள் ஜீயர் எழுதிய ஆறாயிரப்படி குருபரம்பரை
தமிழ்
  • வடிவழகியநம்பி தாசர் இயற்றிய ஆழ்வார்கள் விபவம்
  • கீழையூர் சடகோபதாசர் இயற்றிய அரிசமய தீபம்
  • சுவாமி தேசிகன் எழுதிய பிரபந்த சாரம்
  • மணவாள மாமுனிகள் இயற்றிய உபதேச ரத்ன மாலை
  • ஆண்பிள்ளை கந்தாடையப்பன் எழுதிய பெரிய திருமுடியடைவு
  • திருவரங்கம் கோயில் ஒழுகு

ஆழ்வார்கள் எண்ணிக்கை

ஆழ்வார்களின் பட்டியலை மணவாள மாமுனிகள் அவருடைய உபதேச ரத்னமாலை என்னும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்,

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு.

இதில் ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. ஆழ்வார்கள் பத்துபேர் என்று சொல்வதே பழைய மரபு. ஆண்டாளும் மதுரகவி ஆழ்வாரும் அதற்குப்பின் சேர்க்கப்பட்டனர்.

பட்டியல்

தனித்தன்மைகள்

காலத்தால் மற்றைய ஆழ்வார்களுக்கு முந்தியோர் ஆதலால் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் மூவரும் சமகாலத்தினர் என தொன்மக் கதைகள் சொல்கின்றன. தொன்மங்களின்படி முதல் ஆழ்வார்கள் மூவரும் தாயின் வயிற்றில் பிறக்காமல் தானே தோன்றியவர்கள்.ஆ ழ்வார்களில் முதலிடம் கொண்டவர் நம்மாழ்வார். இறைவனே அவரை அவ்வண்ணம் நம் ஆழ்வார் என்று சொல்லிச் சிறப்பித்ததாக தொன்மங்கள் சொல்கின்றன.

ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் இறைவனைப் பாடாமல் தன்னுடைய குருவான நம்மாழ்வாரைப் பற்றிய பாசுரங்கள் மட்டுமே பாடினார். திருப்பாணாழ்வார் திருக்குலத்தோர் என அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட குடியைச் சேர்ந்தவர்.

ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண்.

நூலோதல்

ஆழ்வார்களின் பாசுரங்கள் தமிழ் வேதம் என்றும் திராவிட வேதம் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை ராமானுஜரை முதன்மை ஆசிரியராகக் கொண்ட ஸ்ரீசம்பிரதாயம் என்னும் வைணவப்பிரிவின் மூலநூல்களாக கருதப்படுகின்றன. தமிழகத்திலும் கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களிலும் ஸ்ரீசம்பிரதாயத்தைச் சேர்ந்த வைணவ ஆலயங்களில் அவை வெவ்வேறு வகைகளில் நாள்தோறும் பாடப்படுகின்றன. அரையர் சேவை போன்ற நிகழ்த்துகலை வடிவங்களிலும் நடத்தப்படுகின்றன.

வழிபாடுகள்

பன்னிரு ஆழ்வார்களுக்கு வைணவ ஆலயங்களில் வழிபாட்டுக்குரிய இடம் உண்டு. நம்மாழ்வார், ஆண்டாள் இருவருக்கும் பல வைணவ ஆலயங்களுக்குள் துணை ஆலயங்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் பூசையும் வழிபாடும் நடைபெற்று வருகிறது.

உசாத்துணை


✅Finalised Page