under review

பொய்கையாழ்வார்

From Tamil Wiki
sripaadham.wordpress.com

பொய்கையாழ்வார் தமிழ் வைணவ நெறியின் பன்னிரு ஆழ்வார்களிலும், முதலாழ்வார்கள் மூவரிலும் முதல்வர்.

பொய்கையாழ்வார் பாடிய 100 அந்தாதிகளின் தொகுப்பு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாம் திருவந்தாதி எனப்படுகிறது. முழுமுதல் தெய்வமாக திருமாலையே பாடிய போதும், சிவ விஷ்ணு பேதம் பார்க்காமல், இருபெரும் தெய்வமும் ஒன்றே என்று பாடியவர்.

பிறப்பு

சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்-திருவெஃகா

காஞ்சிபுரத்தில் சித்தார்த்தி வருடம் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா என்னும் ஊரிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலைச் சேர்ந்த பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தார். பொய்கையில் கண்டெடுக்கப்பட்டதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார். ஆழ்வார்களில் சிலர் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் பெருமாளின் சங்கின் அம்சமாகக் கருதப்படுகிறார். பொ. யு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய இளமைப் பருவம் பற்றிய செய்திகள் அறியக் கிடைப்பதில்லை.

சங்க காலத்தில் வாழ்ந்து சேரமான் புகழ்பாடிய பொய்கையாரும், பின்னர்க் களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் , பொய்கையாழ்வாரும் வேறானவர்கள்.

திருக்கோயிலூரில் சந்திப்பு, முதல் திருவந்தாதி இயற்றல்

(பார்க்க : முதலாழ்வார்கள்- திருக்கோயிலூரில் சந்திப்பு)

பொய்கையாழ்வார் திருக்கோயிலூருக்கு உலகளந்த பெருமாளை தரிசிக்கச் சென்று, மழைக்கு ஓர் இடைகழியில் ஒதுங்கியபோது அங்கு வந்த பூதத்தாழ்வாருடனும், பேயாழ்வாருடனும் சந்திப்பு எற்பட்டது. மூவருடன் நான்காவதாக ஒருவர் நெருக்கி நிற்பதையுணர்ந்து அவர் யார் எனப் பார்க்க வேண்டி, விளக்கு இல்லாததால் தன் பாடலால் விளக்கேற்ற முற்பட்டார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று

எனத் தொடங்கி இயற்றிய 100 வெண்பாக்களைக் கொண்டது முதலாம் திருவந்தாதி என்று பெயர் பெற்றது. அந்தாதித்தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும். முதல் திருவந்தாதி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் 'இயற்பா' தொகுப்பில் இடம்பெறுகிறது.

முக்கியமான பாசுரங்கள்

ஆழ்வார் காலத்தில் இறைவழிபாடு எவ்வாறு நடந்தது என்பதனை முதல் திருவந்தாதியில் காணலாம்.

பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர்

பொருள்: மலரும், நீரும், நறும்புகையும், ஒளிவிளக்கும் கொண்டு வழிபட்டும் வேள்விகள் செய்தும், மந்திரம் சொல்லியும் பிறவாறும் தொழுதனர் என்பது அவர் தம் பாடல்களால் அறியலாம்.

திருமாலை வணங்குவார் அடையும் பேறுகள் இன்னின்ன, திருமாலின் அடியவர், எத்தகைய தீவினைகளைச் செய்தவராயினும், அவர்களைத் தண்டிக்க எமன் அஞ்சி விலகிப் போவான் என்கின்றார்.

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் - நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார்

பொய்கையாழ்வாரின் முக்கியமான பாடல்களில் ஒன்று:

என்று கடல் கடைந்தது இவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை உணரேன் நான் - அன்று
படைத்து உடைத்து கண் படுத்த ஆழி , இது நீ
படைத்து இடத்து உண்டு உமிழ்ந்த பார்

பொருள்: அன்று கடலை ஏன் கடைந்தாய்? ஏன் உலகை நீரால் நிரப்பினாய் ஒன்றையும் நான் உணரவில்லை. அன்று அந்த கடலானது உன்னால் பாலம் கட்டப்பட்டு அடைக்கப்பட்டது.ராவணனை வென்றதும் அதன் மலைக்கற்கள் உடைக்கப்பட்டன. நடந்த கால்கள் நொந்ததால் ஆழியில் நீ பள்ளி கொண்டாய். இந்த உலகத்தைநீ படைத்து,இடந்து(வராக அவதாரத்தில் பூமியைப் பிளந்து),உண்டு (பிரளயவெள்ளத்தில் உலகை உண்டு பாதுகாத்து) மீண்டும் உமிழ்ந்தாய்.

பொய்கையாழ்வாரின் பரந்துபட்ட நோக்கையும், அனைத்திலும் திருமாலைக் காணும் தன்மையையும் சொல்லும் பாடல்கள்:

தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்ததுள் எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்

பொருள்: எந்த உருவத்தை விரும்புகிறோமோ அது அவன் உருவம்.எந்தப் பெயரைக் கொடுக்கிறோமோ அது அவன் பெயர் எவ்விதமாக சிந்தித்து இடைவிடாமல் தியானம் செய்வீர்களோ அந்த விதமாகவே இருப்பான் சக்கரத்தான்.

அவரவர் தாம் அறிந்த வகையில் இறைவனைத் தொழலாம்

அவரவர் தாம்தாம் அறிந்தவாரேத்தி
இவர் இவர் என் பெருமான் என்று – சுவர்மிசை
சார்த்தியும் வைத்தும தொழுவார் உலகளந்த
மூர்த்தி உருவே முதல்

(பொருள் : அவரவர் தாம் அறிந்த வகையில் தொழுது இவர்தான் என் கடவுள் என்று சொல்லி சுவரில் சித்திரமாக வரைந்து சார்த்தியும் வைத்தும் தொழுவர், ஆனால் இதற்கெல்லாம் ஆதி காரணம் உலகை அளந்த அந்த திருமாலின் உருவமே))

சைவ வைணவ ஒற்றுமை

முதல் ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் சைவ வைணவப் பிணக்குகள் பண்டிதர்களிடம் அதிகமாக இருந்தன. இரண்டு தெய்வங்களும் ஒன்றே என்று கூறும் முதல் குரல் பொய்கையாழ்வாருடையது.

பொன் திகழும் மேனிப் புரி சடைஅம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும்- என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேனும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்

பொருள்: பொன் போன்ற மேனியும் பின்னி விட்ட சடையும் கொண்ட சிவபெருமானும் நின்றுகொண்டே உலகை அளந்த நெடிய திருமாலும் இரண்டு உடல்களில் திரிவார்கள் என்றாலும் ஒருவரில் ஒருவர் என்றும் உளர்.

இருப்பினும் திருமாலே முதல் தெய்வம் (மூவருள்ளும் முதலாவான்) என்றும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்
முதலாவான் மூரிநீர் வண்ணன், - முதலாய
நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,
பல்லார் அருளும் பழுது

பொருள்: பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவருமே முதலான தெய்வங்கள் எனினும் அவர்களுள் முதலானவன் திருமாலே, அவன் அருளின்றி, மற்ற தெய்வங்களின் அருளும் பயனற்றது.

மங்களாசாசனம் செய்த (வணங்கிப் பாடிய) திருத்தலங்கள்

  • திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)[1]
  • திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)[2]
  • திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)[3]
  • திருப்பாற்கடல்
  • திருவரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)[4]

பொய்கையாழ்வாரின் வாழி திருநாமம்

செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல
    முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா
    லீர்ந்தான் இரணியன தாகம் இருஞ்சிறைப் புள்
    ளூர்ந்தான் உலகளந்த நான்று

  2. வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத
    பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்
    நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,
    என்றால் கெடுமாம் இடர்.

  3. பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்- வளவ துரையன் சொல்வனம் ஆகஸ்ட் 2022
  4. ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்
    இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று-
    கருஅரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
    திருவரங்கம் மேயான் திசை.


✅Finalised Page