பொய்கையார்
பொய்கையார் சங்ககாலப் புலவர். இவரது மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
தொண்டி, நறவு, மாந்தை ஆகிய பேரூர்களை அரசாண்ட சேரமான் கணைக்காலிரும்பொறையின் அவைக்களப் புலவர். இவர் வறுமையில் வாடும் புலவர்களைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுப்படுத்தினார்.
இலக்கிய வாழ்க்கை
நற்றிணை 18, புறநானூறு 48, 49 ஆகிய சங்கப்பாடல்கள் பொய்கையார் எழுதியவை. செங்கணான் என்ற சோழ அரசனுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் கழுமலம் அடுத்துள்ள திருப்போர்ப்புறத்தில் போர் நிகழ்ந்தது. இப்போரில் சேரமான் இரும்பொறை தோற்றார். செங்கணான் சேரனை குடவாயிற் கோட்டத்துச் சிறையில் காவல் வைத்தார். சிறையில் அவர் இறந்ததாகப் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. சேரமான் கணைக்காலிரும்பொறை இறந்தபின் பொய்கையார் கழுமலப் போரின் சிறப்பையும் அவரின் வெற்றிப் பெருமைகளையும் களவழி நாற்பது என்ற நூலில் பாடினார்.
கழுமலத்தில் சோழ மன்னனான கோச்செங்கணானுடன் நடைபெற்ற போரில் சேரமன்னன் தோற்று சிறையிலிடப்பட்டபோது பொய்கையார் சோழ மன்னனை சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் செய்தி கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழனுலா, குலோத்துங்க சோழனுலா, ராஜராஜசோழனுலா, பழம்பாடல் போன்ற நூல்களில் உள்ளது.கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றிய வர்ணனைகளும் களவழி நாற்பது நூலில் இடம்பெறுகின்றன.
குறிப்பு:
- புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.
- களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்
பொய்கையார் இரும்பொறையைப் பாடியது
களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன்
கால்வழித்தளையை வெட்டி அரசிட்ட பரிசும்
- விக்கிரம சோழனுலா
மேதக்கபொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத்தளைவிட்ட பார்த்திபனும்
- குலோத்துங்க சோழனுலா
பொறையனைப் பொய்கைக் கவிக்குக்
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோனும்
- ராஜராஜசோழனுலா
பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்ட கோன்
- பழம்பாடல்
செய்கை அரியகளவழிப்பா முன்செய்த
பொய்கை யொருவனாற் போந்தராமோ?
பாடல் நடை
- நற்றிணைச் செய்யுள் (18)
மூவன்
முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின்
கானலந் தொண்டிப் பொருநன்; வென்வேல்
தெறலருந் தானைப் பொறையன்; பாசறை
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரைதபு கடலின் இனிதுகண் படுப்பக்
கடாஅம் கழீஇய கதனடங்கு யானைத்
தடவுநிலை ஒருகோடு
- புறநானூறு (49)
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும், 5
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!
- புறநானூறு (48)
கோதை மார்பிற் கோதை யானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்,
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்,
கள்நா றும்மே, கானல்அம் தொண்டி;
அதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்; 5
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை, நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3
- தமிழ்ச்சுரங்கம் -புறநானூறு-49
- தமிழ்ச்சுரங்கம் -புறநானூறு-48
✅Finalised Page