being created

ஆனந்த விகடன்: Difference between revisions

From Tamil Wiki
(Para Added and Edited)
(Para Added and Edited)
Line 123: Line 123:
* தமிழ் இதழியல் வரலாறு, மா.சு. சம்பந்தன்
* தமிழ் இதழியல் வரலாறு, மா.சு. சம்பந்தன்
* History of Indian Journalism, R.A. Padmanaban
* History of Indian Journalism, R.A. Padmanaban
{{Being created}}

Revision as of 21:31, 29 March 2024

ஆனந்த விகடன் (பூதூர் வைத்தியநாதய்யர் இதழ்) விளம்பரம். 1926
ஆனந்த விகடன் (எஸ்.எஸ். வாசன் இதழ்) விளம்பரம் - 1930
ஆனந்த விகடன் இதழ் - 1936 (படம் நன்றி: ஸ்ரீதேவி ரங்கராஜ்)
ஆனந்த விகடன் இதழ் முகப்பு - 1935 (நன்றி: ஸ்ரீதேவி ரங்கராஜ்)
விகடன் 1929 பிப்ரவரி இதழ்

ஆனந்த விகடன் (1926) தமிழின் முன்னோடி இதழ்களுள் ஒன்று. இதனை பூதூர் வைத்தியநாதய்யர் தொடங்கினார். 1928-ல் எஸ்.எஸ். வாசன் இவ்விதழின் உரிமையாளரானார். கல்கி, தேவன் தொடங்கி பலர் இதன் ஆசிரியராகப் பணிபுரிந்தனர். ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து வெளியான இதழ், தற்காலத்தில் பொது வாசிப்புக்குரிய பல்சுவை இதழாக வெளிவருகிறது. தி. முருகன் இதழின் நிர்வாக ஆசிரியர்.

பிரசுரம்/வெளியீடு

பூதூர் வைத்தியநாத அய்யரின் ஆனந்த விகடன்

அக்காலத்தில் பலராலும் விரும்பி வாசிக்கப்பட்ட இதழ் ஆனந்தபோதினி அவ்விதழின் பாதிப்பால ’ஆனந்தகுண போதினி’ என்ற இதழ் வெளிவந்தது. அதுபோல நகைச்சுவைக்கு முக்கியமளித்து அக்காலத்தில் ‘மஹா விகடன்’, ’மஹா விகட தூதன்’, ’வினோத விகடன்’, ‘விகட தூதன்’ போன்ற பெயர்களில் இதழ்கள் வெளிவந்தன. அவ்வகையில் ‘ஆனந்த’ மற்றும் ‘விகடன்’ என்ற பெயர்கள் மீது கொண்ட ஈர்ப்பால், சாந்தலிங்க ஐயரின் மகனான பூதூர் வைத்தியநாதய்யர், 1926 பிப்ரவரியில் ’ஆனந்த விகடன்’ இதழைத் தொடங்கினார்.

பூதூர் வைத்தியநாதய்யரின் ஆசிரியத்துவத்தில் 40 பக்கங்களைக் கொண்ட இதழாக ஆனந்த விகடன் வெளிவந்தது. இதழின் சந்தா இரண்டு ரூபாய். வெளிநாடுகளுக்கு இரண்டு ரூபாய் எட்டணா. சந்தா செலுத்துபவர்களுக்கு இனாமாக விநாயக புராண வசனம், பட்டினத்தார் உரை, குமரேச சதகம் உரை போன்ற பக்திப் புத்தகங்களைப் பரிசாக அளிப்பதாக அறிவித்து வாசகர்களை ஈர்த்தார் வைத்தியநாத ஐயர்.

உள்ளடக்கம்

இதழில் தேவாரம், திருவாசகம் , பெரிய புராணக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள், மகான்களின் கதைகள், கட்டுரைகளோடு நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டார். ‘முத்தாம்பாள்’ என்னும் நாவலும் இவ்விதழில் தொடராக வெளிவந்தது சுமார் 40 இதழ்கள் வரை வெளிவந்த நிலையில் நிதி நெருக்கடியைச் சந்தித்தது ஆனந்த விகடன்

நிர்வாக மாற்றம்

எஸ். எஸ். வாசன், ஆரம்ப காலத்தில், எழுத்தாளராக, புத்தக விற்பனையாளராக மட்டுமல்லாமல், விளம்பர முகவராகவும் பணியாற்றினார். அவர், தான், ஆனந்த விகடனுக்கு அளித்த விளம்பரம் வெளியாகாததன் காரணத்தை அறிய விரும்பி இதழை நடத்தி வந்த பூதூர் வைத்தியநாத ஐயரைச் சந்தித்தார். ஐயர் தன் நிதி நெருக்கடி தொடர்பான பிரச்சனைகளைச் சொல்லி, அதனைத் தீர்க்க வாசனின் ஆலோசனையைக் கேட்டார். வாசனும் சில ஆலோசனைகளைத் தெரிவித்தார்.

வாசன் சொன்ன ஆலோசனைகளைக் கேட்க இயலாத நிலையில் இருந்த பூதூர் வைத்தியநாத அய்யர், இதழை வாசனே ஏற்று நடத்துமாறு வேண்டினார். வாசனும் அதற்குச் சம்மதித்தார். அதன் படி, ‘ஆனந்த விகடன்’ என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ரூ. 25 வீதம் (8 X 25 = 200) கொடுத்து, ஐயரிடமிருந்து ஆனந்தவிகடனை விலைக்கு வாங்கினார் வாசன்.

வாசனின் ஆனந்த விகடன்

பிப்ரவரி 1928ல் அதிகாரப் பூர்வமாக ஆனந்தவிகடனின் பொறுப்பை ஏற்று அதன் அதிபர் மற்றும் ஆசிரியரானார் வாசன். பக்கங்களை 64 ஆக ஆக்கியதுமில்லாமல், அதன் ஆண்டு சந்தாவையும் ரூபாய் ஒன்றாகக் குறைத்தார். உடன் இதழின் விற்பனை அதிகரித்தது.

உள்ளடக்கம்

ஆனந்த விகடனில் அது வரை வெளிவந்த பக்தி, வேதாந்தக் கதை, கட்டுரைகளுக்கு மாறாக தலையங்கம், கவிதை, கதை, கட்டுரை, விவசாயம், மாணவர் பகுதி, சுகாதாரம், பெண் மக்கட் பகுதி, விகடன் பேச்சு, துக்கடாப் பகுதி, துணுக்குகள், தொடர் கதை எனப் பல்வேறு அம்சங்களுடன் இதழ் வெளியானது. நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள், சுருக்கக் கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் எனப் புதிய பரிமாணத்தில் வெளிவந்தது விகடன்.

”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!” என்ற தாயுமானவரின் வரிகள், ஆனந்தவிகடனின் முகப்பில் 1928-ம், ஆண்டு முதல் இடம்பெற்றது. விகடனின் அடையாளமாகக் கருதப்படும் ‘விகடன் தாத்தா’வின் உருவம் காலமாற்றத்திற்கேற்ப சிற்சில மாற்றங்களைக் கண்டது.

விகடன் புதிர்ப்போட்டி விளம்பரம்

ஆசிரியர் கல்கி

‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற நகைச்சுவைக் கட்டுரை மூலம் விகடனுக்கு அறிமுகமான கல்கி’யை விகடனின் துணை ஆசிரியராக நியமித்தார் வாசன். கல்கி, இதழை இலக்கியம், ஜனரஞ்சகம் கலந்த இதழாக உருமாற்றினார். ‘கர்நாடகம்’ என்ற புனைபெயரில் அவர் எழுதிய கட்டுரைகளும், ‘தியாக பூமி’, ‘கள்வனின் காதலி’ போன்ற தொடர்களும் இதழின் விற்பனை பெருகக் காரணமாயின. விகடன் நடத்திய ‘புதிர்ப் போட்டி’ அனைவராலும் விரும்பப்பட்டது. தசாவதாரச் சித்திரப் போட்டி, தலைக்கிழ்ச் சித்திரப் போட்டி, மாறெழுத்துச் சித்திரப் போட்டி, விளம்பரச் சித்திரப் போட்டி எனப் பல போட்டிகளை வெளியிட்டது.

நாடோடியின் நகைச்சுவை கட்டுரைகளும், எஸ்.வி.வி.யின் வாழ்க்கை அனுபவச் சித்தரிப்புகளும், டி.கே.சி.யின் சித்திரக் காட்சிகளும், பி.ஸ்ரீ.யின் கம்ப சித்திரம், சிவநேச செல்வர்கள், சித்திர ராமாயணம் போன்ற இலக்கியத் தொடர்களும் விகடனின் மதிப்பை வெகுவாக உயர்த்தின. 1932 முதல், வண்ணமிகு ஓவியங்களையும் இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகளையும் கொண்ட தீபாவளி மலர்களை வெளியிட்டு வாசகர்களை ஈர்த்தது விகடன்.

ஆனந்த விகடனுடன் ‘ஆனந்த வாஹினி’ என்னும் தெலுங்கு மாத இதழையும், ’தி மெர்ரி மாகஸீன்’ என்னும் ஆங்கில மாதம் இருமுறை இதழையும் வாசன் நடத்தினார்

தடைகள்

ஆனந்த விகடன் தனது வளர்ச்சியில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டது. 1930-ல், ‘ஆனந்த வாஹினி’ தெலுங்கு இதழில் வெளியான செய்திக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் 2000 ரூபாய் அபராதம் விதித்தது. ஜாமீன் செலுத்திய பிறகு, தன்னுடைய நோக்கம் போல் ஆங்கில அரசுக்கு எதிராக எதனையும் வெளியிடக்கூடாது என்றும் அறிவித்தது. ஜாமீன் கட்ட விரும்பாத வாஸன், ஆனந்த வாஹினி இதழுடன், விகடன் இதழையும் இரு மாத காலம் நிறுத்திவிட்டார். வாசகர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து இரு மாத இடைவெளிக்குப் பின் ஆனந்த விகடன் இதழ் வெளிவந்தது. ஆனால், ஆனந்த வாஹினி இதழ் நிறுத்தப்பட்டது.

பங்களிப்புகள்

1932 ஆண்டு ஜனவரியிலிருந்து விகடன் மாதமிருமுறையாக மாறியது. பின்னர் மும்முறை இதழாக மாறி, 1933 நவம்பர் முதல் வார இதழாக வெளிவந்தது. கல்கியைத் தொடர்ந்து துமிலன், தேவன், சாவி, மணியன் ஆகியோர் ஆசியராக இருந்து இதழை வளர்த்தனர். உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ விகடனில் 122 வாரங்கள் வெளியானது. உ.வே.சா.விற்கு ‘தமிழ்த் தாத்தா’ என்ற பட்டம் கொடுத்தது விகடன் தான். தேவனின் ‘துப்பறியும் சாம்பு’வைப் படிப்பதற்காகவே விகடன் வாங்கியோர் பலர். மாலி, ராஜு, தாணு, சில்பி, கோபுலு, ஸ்ரீதர் ஆகியோரின் ஓவியங்களும், நகைச்சுவைத் துணுக்குகளும் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. தமிழின் முதன்மை இதழாக விகடன் உயர்ந்தது.

சிறுகதைப் போட்டி

சிறந்த சிறுகதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விகடன் வெளியிட்டது. தமிழ் இதழியல் வரலாற்றில் முதன்முறையாக சிறுகதைப் போட்டி நடத்தியது ஆனந்தவிகடன். அது பற்றி, “தமிழ்நாட்டில் எழுதும் துறையில் ஈடுபட விரும்பும் நேயர்கள் அனைவருக்கும் தங்களுடைய ஆற்றல் முழுவதையும் பயன்படுத்த ஒரு சந்தர்ப்பம் அளிப்பதென விகடன் தீர்மானித்திருக்கிறான். தமிழ்மொழியில் சொந்த மனோதர்மத்தினைக் கொண்டு எழுதப்படும் சிறந்த கற்பனைக் கதைக்கு ரூ. 100 ரொக்கப்பரிசு அளிக்க உத்தேசித்திருக்கிறான்” என்று இதழில் அறிவிப்புச் செய்தது. (ஆனந்தவிகடன், 1933, ஜனவரி 15 இதழ்)

அச்சிறுகதைப் போட்டியில் பலர் கலந்துகொண்டனர். போட்டியில் ராமலிங்கம் என்ற ‘றாலி’ எழுதிய ’ஊமச்சியின் காதல்’என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. பி.எஸ். ராமையா எழுதிய ‘மலரும் மாலையும்’மற்றும் ஸ்ரீ கண்டன் எழுதிய ‘தோல்வி’ என்ற இரு சிறுகதைகளும் இரண்டாம் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ‘றாலி’ பின்னர் விகடனின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். ராமையா, ‘மணிக்கொடி’இதழ் மூலம் சிறந்த இலக்கிவாதியாகப் பரிணமித்தார். ஸ்ரீகண்டன் பல சிறுகதைகளை எழுதிப் புகழ்பெற்றார்.

விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்

விகடன் குழுமத்தினை தொடங்கிய எஸ்.எஸ்.வாசனால் 1956-ல் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இத்திட்டம் மூலம் கல்லூரியில் பயில்கின்ற மாணவர்களில் பத்திரிக்கை துறையில் ஆர்வமுடையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது விகடன். ஆர்வமுள்ள, தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்கும் விகடன், இத்திட்டத்தினால் பயனடைந்தவர்களைத் தன்னுடைய குழுமத்தில் பணிக்கு அமர்த்தியது.

விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் விகடன் இதழில் பணியாற்றிய சிலர், பிற்காலத்தில் தொலைக்காட்சி, திரைப்படத் துறையில் பணியாற்றினர்.

விகடன் ஆசிரியர்கள்

தொடக்க கால விகடனில் துமிலன், நாடோடி, றாலி, பரதன், ரா. அ. பத்மநாபன், சாவி, கோபு போன்றோர் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றி இதழின் வளர்ச்சிக்கு உதவினர்.

ஆசிரியர் தேவன்

விகடனில் பணியாற்றி வந்த கல்கி, சுதந்திரப் போராட்டத்தில் தொடர்ந்து பங்கெடுத்து வந்தார். ஒரு சமயம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட கல்கி விரும்பினார். ஆனால், வாசனின் அனுமதி கிடைக்காதால் விகடனின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். வாசன், மகாதேவன் என்னும் தேவனை விகடனின் ஆசிரியராக நியமித்தார். தேவன், ஆனந்த விகடன் இதழில் ஆன்மீகம், நகைச்சுவை, சமூகம், குடும்பம் எனப் பல வகைமைகளில் பங்களித்தார். சிறுகதை, நாவல், பயணக் கட்டுரை, செய்தி விமர்சனம் எழுதினார். ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரை இறுதிவரை தனது பெயரைக் குறிப்பிடாமல் எழுதினார்.

‘அப்பளக் கச்சேரி’, ’ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்’, ’விச்சுவுக்குக் கடிதங்கள்’ போன்றவை வாசக வரவேற்பைப் பெற்றன. தேவன் எழுதிய ’துப்பறியும் சாம்பு’ கதைகள் ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன. தேவன், புதிய பல உத்திகளைக் கையாண்டு விகடனின் விற்பனையை உயர்த்தினார். அதன் வாசகப் பரப்பை விரிவாக்கினார்.

ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன்

வாசனின் புதல்வரான எஸ். பாலசுப்பிரமணியன் ஆசிரியராகப் பொறுப்பேற்றது முதல் தன்னை விகடன் பலவிதங்களில் புதுப்பித்துக் கொண்டது. ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகளை வெளியிட்டது. அசோகமித்திரன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகளின் படைப்புகள் விகடனில் வெளியாகின. பரணீதரனின் அருணாசல மகிமை, ஆலயதரிசனம், கேரள தரிசனம், வடநாட்டு யாத்திரை போன்ற தொடர்கள் வாசகர்களால் வரவேற்கப்பட்டன. மதன் வரைந்த ரெட்டை வால் ரங்குடு போன்ற கேலிச்சித்திரத் தொடர்கள் புகழ்பெற்றன.

சிவசங்கரியின் பாலங்கள், ராஜேஷ்குமாரின் துப்பறியும் தொடர், பட்டுக்கோட்டை பிரபாகரின் காதல் தொடர், தேவிபாலாவின் ஆயகொலைகள் அறுபத்து நாலு, இந்திரா சௌந்தர்ராஜனின் மர்மத் தொடர்கள் விகடனின் வாசகப் பரப்பை விரிவாக்கின. தேவிபாலாவின் மடிசார் மாமி தொடருக்கு மிகப் பெரிய கட் அவுட்களை அண்ணாசாலையில் வைத்து கவனம் ஈர்த்தது.

கைது

29-03-1987 இதழில், படுதலம் சுகுமாரன் எழுதிய நகைச்சுவைத் துணுக்கை வெளியிட்டதன் காரணமாக, விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். அட்டைப்பட நகைச்சுவையைக் குறிப்பிட்டு அப்போதைய எம்.எல்.ஏ. என்.எஸ்.வி. சித்தன் சட்டசபையில் கேள்வி எழுப்ப, அப்போதைய சபாநாயகர் பி.எச். பாண்டியன், விளக்கம் தர விகடனுக்கு எந்த வாய்ப்பும் தராமல் அதன் ஆசிரியரான எஸ். பாலசுப்பிரமணியத்தைக் கைது செய்ய உத்தரவிட்டார் எஸ். பாலசுப்பிரமணியனுக்கு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பால் மூன்றே நாட்களில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆசிரியர் பா. சீனிவாசன்

விகடனின் ஆசிரியராக எஸ். பாலசுப்பிரமணியனின் மகன் பா. சீனிவாசன் பொறுப்பேற்ற காலத்தில் விகடன், கால மாற்றத்திற்கேற்ப பல்வேறு புதுமைகளைக் கையாண்டது. இதழின் வடிவமைப்பு முழுமையாக மாறியது. விகடனின் மொழி நடையும் மாறியது. ஃபேஸ்புக், ட்விட்டர் (எக்ஸ்) தளங்களில் வெளியான சுவையான கருத்துக்களை இதழில் பதிவு செய்து வாசகர்களைக் கவர்ந்தது. புதிய பல பகுதிகள் விகடனில் வெளியாகின. இணைப்பு இதழாக ‘என் விகடன்’ என்ற இணைப்பு அளிக்கப்பட்டது.

ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், ஞாநி போன்றோர் எழுதிய புதிய பல பத்திகளை விகடன் அறிமுகப்படுத்தியது. பல புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்து.. விகடனில் தொடர்கள் எழுதிய சிம்புதேவன், ராஜு முருகன், மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல் உள்ளிட்ட சில எழுத்தாளர்கள், இதழாளர்கள் நாளடைவில் திரைப்படத்துறையிலும் இயக்குநர்களாகப் பங்களித்தனர். விகடன் இதழ் விளம்பரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது.

1972 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் சிகரெட் போன்ற மக்கள் நலத்துக்கான எதிரான விளம்பரங்களை விகடன் வெளியிடுவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துச் செயல்பட்டது. விகடனின் முதல் வண்ண விளம்பரம் ஆகஸ்ட் 09, 81 இதழில் வெளியானது. தொடர்ந்து பல வண்ணங்களில் விகடனில் விளம்பரங்கள் வெளியாகின.

விகடன் குழும இதழ்கள்

ஆனந்த விகடன் தனது நிறுவனத்திலிருந்து கீழ்க்காணும் இதழ்களை வெளியிட்டது.

ஜூனியர் போஸ்ட்

விகடன் குழுமத்தின் சார்பில், செப்டம்பர், 1988-ல் ‘ஜுனியர் போஸ்ட்’ இதழ் தொடங்கப்பட்டது. டேப்லாய்ட் வடிவில் இருந்த அந்த இதழ் முற்றிலும் விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் வெளிவந்தது. சுஜாதா, மதன் உள்ளிட்டோர் அவ்விதழுக்கு சிறந்த பங்களிப்புகளைத் தந்தனர். ஜி. கௌதம் ஆசிரியராகப் பணியாற்றினார். எட்டு ஆண்டுகள் வெளிவந்த ‘ஜுனியர் போஸ்ட்’ இதழ், தவிர்க்க இயலாத காரணங்களால் ஒன்பதாம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

விகடன் பிரசுரம்

ஆனந்த விகடனில் வெளியான தொடர்களையும், பிற எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளையும் வெளியிடுவதற்காக விகடன் பிரசுரம் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் கொத்தமங்கலம் சுப்பு, பரணீதரன், சேவற்கொடியோன், பி.ஸ்ரீ. போன்றோரது நூல்கள் வெளியாகின. பிற்காலத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர், எஸ். ராமகிருஷ்ணன், பி. சுவாமிநாதன், சாலமன் பாப்பையா, கலாப்ரியா, கு. சிவராமன், அ. வெண்ணிலா, சு. வெங்கடேசன், நரன், ராம் வசந்த், ஆ. சாந்தி கணேஷ், ஆர். வைதேகி, பவா செல்லதுரை, பா. ராஜநாராயணன், ரவிபிரகாஷ் உள்ளிட்ட பலரது நூல்கள் வெளியாகின.

ஊடகம்

’விகடன் டெலிவிஸ்டால்’ என்ற பெயரில் ஆனந்த விகடன், 1998-ல், தொலைக்காட்சியில் தடம்பதித்தது. தியாக பூமி‟ கதையை ஆனந்தவிகடனில் வெளியிடும்போதே அதற்குத் திரைவடிவம் கொடுத்ததுபோல், ‘அட்சயா’ என்ற தொடரை விகடனில் எழுத்தாகவும், சன் டி.வி.யில் தொலைக்காட்சித் தொடராகவும் ஒரே நேரத்தில் விகடன் வழங்கியது. தொடர்ந்து பல தொடர்களை விகடன் ஓளித்திரை மூலம் தயாரித்து வெளியிட்டது.

திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ்களையும் விகடன் குழுமம் தயாரித்து வெளியிட்டது.

விகடன் குழும இதழ்கள் இணையத்திலும் வெளியாகி உலகளாவிய வாசகர்களைப் பெற்றது. தலையங்கம், கட்டுரை, கவிதை, சிறுகதை, தொடர்கதை,கருத்துப் படம், கேலிச்சித்திரம், துணுக்குகள், திரை விமர்சனம், கேள்வி பதில், பேட்டி, ஓவியம், ஆசிரியருக்குக் கடிதம், நூல் மதிப்புரை, எனப்[ பல பகுடிகள் விகடனில் வெளியாகின. மணியன், மதன், வியெஸ்வி, அசோகன், ரா. கண்ணன் எனப் பலர் விகடனின் வளர்ச்சியில் முக்கிய பொறுப்பு வகித்தனர். நூறாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் விகடன் அட்டையுடன் சேர்த்து 100 பக்கங்களில் வெளியாகிறது. இதன் விலை ரூபாய் – 40/- தி. முருகன் விகடனின் நிர்வாக ஆசிரியர்.

சமூகப் பணிகள்

இதழியல் பணிகளோடு சமூக நற்பணிகள் பலவற்றிலும் விகடன் ஈடுபட்டது. வறுமையில் வாடுவோர், ஆதரவற்றோர், ஏதிலிகள், மேற்கல்வி படிக்க இயலாமல் தடைபட்டவர்கள், மருத்துவச் செலவினங்களுக்காக உதவி வேண்டுபவர்கள் எனப் பலரைப் பற்றிய விரிவான செய்திகளை விகடன் வெளியிட்டது. வாசகர்கள் மூலமும், அரசின் மூலமும் அவர்கள் துயர் போக்க உதவியது.

தானே துயர் துடைப்போம் பணி

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளைத் தாக்கிய தானே புயலில் ஏற்பட்ட சேதத்தினையும், மக்கள் துன்பங்களையும் நீக்கும் பொருட்டு விகடன் குழுமம் ஓவிய விற்பனைக் கண்காட்சியை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் விற்கப்பட்ட ஓவியங்களிலிருந்து கிடைத்த நிதி துயருற்ற அம்மக்களுக்காக செலவிடப்பட்டது.

மதிப்பீடு

தொடக்க காலத்தில் குடும்பப் பத்திரிகை என்னும் இலக்கணத்திற்குள் நின்று பிராமணப் பண்பாட்டுச் சாயலுடன் ஆனந்த விகடன் வெளிவந்தது. பிற்காலத்தில் அதனை முற்றிலுமாக மாற்றிக் கொண்டது. நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆனந்த விகடன் தமிழில் வெளியாகும் முன்னோடி வெகுஜன இதழாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

  • விகடன் தளம்
  • விகடன் பொக்கிஷம் தொகுப்பு
  • விகடன் காலப்பெட்டகம் தொகுப்பு
  • விகடன் பவழ விழா மலர்
  • தமிழ் இதழியல் வரலாறு, மா.சு. சம்பந்தன்
  • History of Indian Journalism, R.A. Padmanaban


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.