நாடோடி (எழுத்தாளர்)
நாடோடி (எம். வேங்கடராமன்) (ஜனவரி 17, 1912 – மே 24, 2014) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர். நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகளை எழுதினார். அவரது படைப்புகள் பெரும்பாலும் குடும்ப நிகழ்வுகளை மையமாகக் கொண்டவை.
பிறப்பு, கல்வி
எம். வேங்கடராமன் என்ற இயற்பெயர் கொண்ட நாடோடி, திருச்சியில் ஜனவரி 17, 1912 அன்று பிறந்தார். திருச்சியில் பள்ளிக் கல்வியை முடித்தார். இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
எம். வேங்கடராமன் இதழாளராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: சரஸ்வதி. மகள்: அனுராதா.
இலக்கிய வாழ்க்கை
நாடோடி ஆனந்த விகடனில் பல நகைச்சுவைக் கட்டுரைகளை, கதைகளை எழுதினார். விகடனில் ஆசிரியராக இருந்த கல்கியால் ஊக்குவிக்கப்பட்டார். ’நாடோடி’ என்ற புனை பெயரைச் சூட்டிக் கொண்டு எழுதினார். விகடனிலும், கல்கியிலும் நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகளை எழுதினார்.
‘நாடகமே உலகம்’ என்பது நாடோடியின், முதல் நகைச்சுவைக் கட்டுரைத் தொகுப்பு 1943-ல் வெளியான அந்த நூலுக்கு கல்கி முன்னுரை எழுதி ஊக்குவித்தார். கல்கி இதழில் நாடோடி எழுதிய ’எங்கள் குடும்பம் பெரிது’, ‘இதுவும் ஒரு பிரகிருதி’ போன்ற தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. அடுத்த வீட்டு அண்ணாசாமி அய்யர், மனைவி சரசு, மகள் அனுராதா ஆகியோரைப் பாத்திரங்களாக்கி எழுதினார். பிற்காலத்தில் தினமணி, ராமகிருஷ்ண விஜயம் போன்ற இதழ்களில் சமய, ஆன்மிகக் கட்டுரைகளை எழுதினார்.
நாடோடியின் கதைகளும், கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. பல பதிப்புகள் கண்டன.
இதழியல்
நாடோடி 1936-ல், ஆனந்த விகடனில் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். எழுத்தாளர் கல்கி தொடங்கிய கல்கி இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 'நாடோடி' என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினார்.
பதிப்பு
நாடோடி தனது நூல்களை வெளியிடுவதற்காக ‘நாடோடி’ என்ற பதிப்பகத்தையும், ‘காமதேனு பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பக நிறுவனத்தையும் நடத்தினார்.
விருதுகள்/பரிசுகள்
- நாடோடியின் சிறுகதைகளுக்குப் சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகள் கிடைத்தன.
- ஆனந்த விகடன் அளித்த பாரதி தங்கப் பதக்கப் பரிசு பெற்றார்.
மறைவு
நாடோடி, மே 24, 2014 அன்று புதுடில்லியில் காலமானார்.
ஆவணம்
நாடோடியின் நூல்கள் சில தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
நாடோடி சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், குடும்ப நிகழ்வுகளையும் நகைச்சுவை கலந்து எழுதினார். நாடோடியின் படைப்புகள் பொது வாசிப்புக்குரியவை. எளிமையான மொழியில் அமைந்தவை. இது பற்றிக் கல்கி, “தமிழ் நாட்டு வசன இலக்கியத்தில் நாடோடி ஒரு தனி வழியை உண்டுபண்ணிக் கொண்டார். அதிலே மேலும் மேலும் முன்னேறிச் சென்று வருகிறார். நல்ல வசன நடைக்கு இருக்க வேண்டிய எல்லா இலட்சணங்களும் அவருடைய நடையில் நன்கு அமைந்திருக்கின்றன. அதில் எளிமை இருக்கிறது. தெளிவு இருக்கிறது. இலேசான உயர்தர நகைச்சுவை இருக்கிறது” என்று மதிப்பிட்டார்.
நாடோடி எஸ்.வி.வி., துமிலன், தேவன், சாவி, வரிசையில் தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
நூல்கள்
- நாடகமே உலகம்
- ஒரு நாள் கூத்து
- முடியாத யுத்தம்
- ஹே, அனுராதா
- அட பரமசிவா
- என்னைக் கேளுங்கோன்னா...
- பிழைக்கும் வழி
- எப்படித் தெரியுமா?
- படித்த பெண் வேண்டாம்
- கிழவியும், குமரியும்
- வாழ்க்கைச் சக்கரம்
- இதுவும் ஒரு பிரகிருதி
- ஸ்திரீகள் ஜாக்கிரதை
- புருஷர்களுக்கு மட்டும்
- உலகம் பலவிதம்
- சிறுவர்களுக்கான இராமாயணம்
- ஆயிரம் வருஷங்களுக்கு அப்பால்..
- இந்த ரீதியில் போனால்…
- பயப்படாதீர்கள்
- ஆயிரம் நீதிக் கதைகள் – பத்து பாகங்கள்
- சாகசக் கதைகள்
- சாதுரியக் கதைகள்
- தமிழா தூங்காதே
- கிழவியும் குமரியும்
- பேசும் பதுமை
- ரஷ்ய நீதிக் கதைகள்
- நாடோடியின் நகைச்சுவை விருந்து
- நான் கதை எழுதின கதை
- மாயப் பிரபஞ்சம்
- வினோபாவின் பொன்மொழிகள்
- நாடகம்
- பரந்த அனுபவம்
- குடும்ப ரகசியம்
- வாழ்க்கை வரலாறு
- மோட்டார் மன்னன் ஹென்றி போர்ட்
உசாத்துணை
- நாடோடி நூல்கள்
- நாடோடி நூல்கள்: தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்
- நாடோடி அஞ்சலிக் குறிப்பு: ஹிந்து.காம்
- நாடோடி கட்டுரைகள்: பசுபதி தளம்
- எழுதுவது எப்படி?, தொகுதி-1, தொகுப்பாசிரியர்: மகரம், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, இரண்டாம் பதிப்பு: 2001
✅Finalised Page