under review

அருண்மொழிநங்கை

From Tamil Wiki
Revision as of 07:24, 7 July 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Arunmozhinangai. ‎

எழுத்தாளர் அருண்மொழிநங்கை

அருண்மொழிநங்கை (மார்ச் 6, 1970) விமர்சகர், எழுத்தாளர். தன்னுடைய வலைப்பூவில் தன்வரலாற்றுக் குறிப்புகளை இலக்கியத் தரத்தில் எழுதியதால் பெரிதும் கவனிப்புக்குள்ளானவர். அந்தக் கட்டுரைகள் ‘பனி உருகுவதில்லை’ என்ற தலைப்பில் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன.

பிறப்பு,கல்வி

அருண்மொழிநங்கை சற்குணம் - சரோஜா தம்பதியருக்கு மார்ச் 6, 1970-ல் பிறந்தார். சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகே உள்ள புள்ளமங்கலம் கிராமம். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். இவரின் தந்தை வழி தாத்தா இராமச்சந்திரன் பிள்ளை ஆசிரியராகப் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர்.

அருண்மொழி நங்கைக்கு மிக சிறு வயதிலேயே இலக்கியமும் இசையும் அறிமுகமாகின. ஆலத்தூர், மதுக்கூர் ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி கற்றார். திருச்சி சாவித்ரி வித்யாலயாவில் பள்ளியிறுதிக் கல்வியும் மேல்நிலைக் கல்வியும் முடித்து இளங்கலைப் பட்டப்படிப்பை மதுரை வேளாண்மை கல்லூரியில் முடித்தார்

தனிவாழ்க்கை

8 ஆகஸ்ட் 1991 ல் எழுத்தாளர் ஜெயமோகனை காதல்மணம் புரிந்துகொண்டார். இவர்களுக்கு அஜிதன், சைதன்யா என இரு குழந்தைகள். 1993 ல் திருப்பத்தூர் தலைமை தபால்நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். தர்மபுரி, நல்லம்பள்ளி, தக்கலை, முளகுமூடு, ஆசாரிப்பள்ளம் ஆகிய ஊர்களில் பணியாற்றி 2018ல் விருப்ப ஓய்வு பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

இலக்கியம், இசை மீது பற்றுக்கொண்டவர். பயணங்களின் மீதும் விருப்பம் கொண்டவர். ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். ஆண்டுதோறும் இந்தியப் பயணத்தை மேற்கொள்பவர்.

அருண்மொழிநங்கையின் இலக்கிய ஆதர்சங்கள் எனத் தமிழில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அ. முத்துலிங்கம் ஆகியோரையும் இந்திய இலக்கியங்களில் வைக்கம் முகமது பஷீர், எஸ்.எல்.பைரப்பா, சிவராம காரந்த், தாரா சங்கர் பானர்ஜி, அதின் பந்தோபாத்யாயா ஆகியோரையும் உலக இலக்கியகளில் டால்ஸ்டாய், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, நிகோஸ் கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோரையும் குறிப்பிடலாம். இவர்கள் அனைவரையும் தாண்டி எழுத்தாளர் ஜெயமோகன் இவருக்கு மிகவும் அணுக்கமானவர்.

இலக்கிய இடம்

அருண்மொழி நங்கை சுபமங்களா இதழிலும் சொல் புதிது இதழிலும் ஐசக் டெனிஸன் போன்ற பெண் எழுத்தாளர்களின் கதைகளையும், ரிச்சர்ட் ரீஸ்டாக் போன்ற உளவியலாளர்களின் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்துள்ளார். சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலுக்கு இவர் எழுதிய மதிப்புரையும், நீல பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் நாவலுக்கு எழுதிய மதிப்புரையும் வெளியாயின. சுந்தர ராமசாமி ஓர் எழுத்தாளரின் வருகை என பாராட்டினார். ஆனாலும் இவர் தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபடவில்லை. தனது பணி ஓய்வுக்குப் பின்னர் எழுத தொடங்கி நிகாஸ் கஸண்ட்ஸகிஸின் ஸோர்பா எனும் கிரேக்கன் முதலிய மேல்நாட்டு எழுத்துக்களையும் ம.நவீனின் பேய்ச்சி, சுனீல் கிருஷ்ணனின் நீலகண்டம் போன்ற சமகாலத் தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களையும் மதிப்பிட்டு விமர்சனக் கட்டுரைகள் எழுதினார்.

தன் இளமைக்கால வாழ்வைச் சுயமதிப்பீடு செய்யும் வகையில் இவர் தன்னுடைய வலைப்பூவில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் பரவலாக வாசகர் ஏற்பினைப் பெற்றன. தமிழில் இவை புதுவகை பெண்எழுத்தாகவும் நுட்பமான தகவல்களைச் செறிவாக அடுக்கி எழுதப்பட்ட இலக்கிய ஆக்கங்களாகவும் கருதப்பட்டன. அவை ‘பனி உருகுவதில்லை’ எனும் தலைப்பில் நூலாயின. அருண்மொழி நங்கை தன் வலைப்பக்கத்தில் இசைபற்றிய கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவருகிறார்.

நூல்கள்

உசாத்துணை

இணைப்புகள்

அருண்மொழிநங்கையின் உரைகளின் காணொலிகள் -


✅Finalised Page