standardised

திருத்தொண்டர் திருவந்தாதி

From Tamil Wiki
Revision as of 06:22, 16 October 2022 by Jayashree (talk | contribs)

திருத்தொண்டர் திருவந்தாதி சைவ சமயம் சார்ந்த நூல். இதனை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி. இந்நூல் பன்னிரு திருமுறைகளில், பதினோராம் திருமறையாக இடம் பெற்றுள்ளது.

திருத்தொண்டர் திருவந்தாதி விளக்கம்

அந்தாதி என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. காரைக்கால் அம்மையாரின் ‘அற்புதத் திருவந்தாதி’ தமிழின் முதல் அந்தாதி நூலாகக் கருதப்படுகிறது. நம்பியாண்டார் நம்பி, சுந்தரர் இயற்றிய  ‘திருத்தொண்டத்தொகை’யினை மூல நூலாகக் கொண்டும், பொள்ளாப் பிள்ளையார் தனக்கு உபதேசித்த நாயன்மார்களின் பிற வரலாற்றுச் செய்திகளை இணைத்தும் ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ என்ற நூலை இயற்றினார். இதன் காலம் பொதுயுகம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

திருத்தொண்டர் திருவந்தாதியில் 63 நாயன்மார்களைப் பற்றிய 90 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பெரியபுராணம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிவத்தொண்டை விரிவாக விளக்கும் நூல். திருத்தொண்டர் திருவந்தாதி அந்நாயன்மார்களின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகிறது. இந்நூலை வழிநூலாகவும், சுந்தரரின் நூலை முதல் நூலாகவும் கொண்டே சேக்கிழார் பெருமான் பெரியபுராணம் நூலைப் படைத்தார்.

திருத்தொண்டர் திருவந்தாதி நூலின் முதல் பாடல் கணக்கில் கொள்ளப்படவில்லை. ‘செப்பத் தகுபுகழ்த் தில்லை’ என இரண்டாம் பாடல் தொடங்குகிறது.

செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரி னூரெரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே

நூலின் இறுதிப் பாடல்

ஓடிடும் பஞ்சேந் திரிய மொடுக்கியென் னூழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர்
சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையினுள்ள
சேடர்தஞ் செல்வப் பெரும்புக ழந்தாதி செப்பிடவே.

என்று முடிகிறது.

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.