திருவள்ளுவமாலை
திருவள்ளுவமாலை, திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளை புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு நூல். திருவள்ளுவமாலை நூலின் காலம் 11- ஆம் நூற்றாண்டு.
பெயர்க் காரணம்
திருவள்ளுவரை வாழ்த்தும் ஐம்பத்து ஐந்து பாடல்களால் தொடுக்கப்பட்ட மாலை என்ற பொருளில் இந்நூலுக்கு திருவள்ளுவமாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காலம்
திருவள்ளுவமாலை நூலில் உள்ள பாடல்களின் சொல் அமைப்பினை நோக்கும்போது இந்நூலின் காலம் 11- ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.
பாடியவர்கள்
திருவள்ளுவமாலை நூலில் உள்ள 55 பாடல்களை 53 புலவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொன்பது பேரும் பாடிய பாடல்களுமாகக் கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக வள்ளுவமாலை முதலில் அறியப்பட்டது. அவற்றுடன் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.
மாறுபட்ட கருத்துகள்
திருவள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் மட்டுமே. அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொன்பதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை. வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களை சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணம் அமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே திருக்குறளைப் பற்றி சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே திருவள்ளுவமாலை என்பது பொருந்தாத கூற்றாகும்.
இந்நூல் அனைத்தும் ஒரே புலவரால் பாடி இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும் அறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்தப் பாராட்டு மாலை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. திருவள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் எனவும் கொள்ள முடிகிறது.
சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே திருவள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. திருவள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பது ஏற்கத்தக்கதாக உள்ளது.
திருவள்ளுவமாலை நூலைப்போல, ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படிப் பல புலவர்கள் பெயரில் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த சிறப்பு.
இடைக்காடர், ஔவையார் என்ற பெயர்களில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூன்று பாடல்களும் வெண்பாக்களாலும், திருவள்ளுவரையும் திருக்குறளையும் புகழும் வண்ணம் பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடல்கள்;
(தலைப்பாக அமைந்தவை பாடிய புலவர்களின் பெயராக குறிப்பிடப்பட்டுள்ளவை)
அசரீரி
திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ டுருத்தகு நற்பலகை யொக்க-விருக்க வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி லொருக்கவோ வென்றதோர் சொல் |
மதுரைத் தமிழ்நாகனார்
எல்லாப் பொருளு மிதன்பா லுளவிதன்பா லில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற் பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார் சுரந்தபா வையத் துணை. |
நாமகள்
நாடா முதனான் மறைநான் முகனாவிற் பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின் வள்ளுவன் வாயதென் வாக்கு. |
பாரதம் பாடிய பெருந்தேவனார்
எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச் செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப் பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர். |
இறையனார்
என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க் - குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன் மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல். |
உருத்திர சன்மகண்ணர்
மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத் துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க் காய்தொறு மூறு மறிவு. |
உக்கிரப் பெருவழுதியார்
நான்மறையின் மெய்ப்பொருளை முகப்பொருளா நான்முகத்தோன் றான்மறைந்த வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ் சிந்திக்க கேட்க செவி. |
பெருஞ்சித்திரனார்
ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவினா லோதிய வொண்பொரு ளெல்லா- முரைத்ததனாற் றாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த வேதமே மேதக் கன. |
கபிலர்
தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி. |
நரிவெரூஉத் தலையார்
இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு முன்பறியச் சொன்ன முதுமொழிநூன்- மன்பதைகட் குள்ள வரிதென் றவைவள் ளுவருலகங் கொள்ள மொழிந்தார் குறள். |
பரணர்
மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான் ஞால முழுது நயந்தளந்தான் -வாலறிவின் வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா ருள்ளுவ்வெல் லாமளந்தா ரோர்ந்து. |
மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்
புலவர் திருவருள் ளுவரன்றிப் பூமேற் சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றுங் கறங்கிருண்மா லைக்கும் பெயர். |
நக்கீரர்
தானேமுழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா லான வறமுதலா வந்நான்கு - மேனோருக் கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்று மற்று. |
மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்
இன்பமுந் துன்பமு மென்னு மிவையிரண்டு மன்பதைக் கெல்லா மனமகிழ- வன்பொழியா துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து. |
மாமூலனார்
அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார். |
கவிசாகரப் பெருந்தேவனார்
மாவிற் கருமுனியா யானைக்- கமரரும்பல் தேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண் பா |
கல்லாடர்
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி. |
மதுரைப்பெருமருதனார்
திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால் வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா ரோதவழுக் கற்ற துலகு. |
சீத்தலைச் சாத்தனார்
மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந் தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ பாமுறைதேர் வள்ளுவர்முப் பால். |
கோவூர்க் கிழார்
அறமுத னான்கு மகலிடத்தேச ரெல்லாந் திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனார் பான்முறைநே ரொவ்வாதே முன்னை முதுவோர் மொழி. |
மருத்துவன் தாமோதரனார்
சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய் மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் - காந்தி மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற் றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு |
உறையூர் முதுகூற்றனார்
பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார்- நாவிற் குயலில்லை சொற்சுவை யோர்வில்லை மற்றுஞ் செயலில்லை யென்னுந் திரு. |
நாகன் தேவனார்
தாளார் மலர்ப்பொய்கை தாங்குடைவார் தண்ணீரை வேளா தொழிதல் வியப்பன்று - வாளாதா மப்பா லொருபாவை யாப்பவோ வள்ளுவனார் முப்பால் மொழிமூழ்கு வார். |
இழிகண் பெருங்கண்ணனார்
செம்மை நெறியிற் றெளிவுபெற - மும்மையின் வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார் பாடின ரின்குறள்வெண் பா. |
அரிசில்கிழார்
பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லால். |
செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத் - தேவர் திருவள் ளுவர்தாமுஞ் செப்பியவே செய்வார் பொருவி லொழுக்கம் பூண்டார். |
பொன்முடியார்
கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன் கூநின் றளந்த குறளென்ப--நுன்முறையான் வானின்று மண்ணின் றளந்ததே வள்ளுவனார் தாநின் றளந்த குறள். |
செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்
ரோதத் தமிழா லுரைசெய்தா - ராதலா லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு. |
கோதமனார்
ஆற்ற லழியுமென் றந்தணர்க ணான்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதா--ரேட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல்சோர் வின்று. |
வண்ணக்கஞ் சாத்தனார்
சீரிய தென்றொன்றைச் செப்பரிதா- லாரியம் வேத முடைத்து தமிழ்திரு வள்ளுவனா ரோது குறட்பா வுடைத்து. |
நத்தத்தனார்
ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும் பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்--போயொருத்தர் வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம். |
களத்தூர்க் கிழார்
தரும முதனான்குஞ் சாலு - மருமறைக ளைந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார் புந்தி மொழிந்த பொருள். |
முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத் தெள்ளுத லன்றே செயற்பால--வள்ளுவனார் முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வா ரெப்பா வலரினு மில். |
நச்சுமனார்
வழுக்கில் வனப்பணி வண்ண- மிழுக்கின்றி யென்றெவர் செய்தன வெல்லா மியம்பின வின்றிவ ரின்குறள்வெண் பா. |
ஆசிரியர் நல்லந்துவனார்
சாற்றிய பல்கலையுந் தப்பா வருமறையும் போற்றி யுரைத்த பொருளெல்லாந்--தோற்றவே முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பா ரெப்பா வலரினு மில் |
அக்காரக்கனி நச்சுமனார்
னிலைநிரம்பு நீர்மைத் தெனினுந்- தொலைவிலா வானூர் மதியந் தனக்குண்டோ வள்ளுவர்முப் பானூ னயத்தின் பயன். |
கீரந்தையார்
தப்பா முதற்பாவாற் றாமாண்ட பாடலினான் முப்பாலி னாற்பான் மொழிந்தவ-- ரெப்பாலும் வைவைத்த கூர்மேல் வழுதி மனமகிழத் தெய்வத் திருவள் ளுவர். |
நப்பாலத்தனார்
சிறந்தநெய் செஞ்சொற்றீத் தண்டு-குறும்பாவா வள்ளுவனா ரியற்றினார் வையத்து வாழ்வார்க ளுள்ளிரு ணீக்கும் விளக்கு. |
சிறுமேதாவியார்
வீடொன்று பாயிர நான்கு விளங்கற நாடிய முப்பத்து மூன்றென்றூழ்-கூடுபொரு ளெள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம் வள்ளுவர் சொன்னவகை. |
குலபதி நயனார்
தள்ளற் கரியவிரு டள்ளுதலால்-வள்ளுவனார் வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரு மொக்குமெனக் கொள்ளத் தருங்குணத்தைக் கண்டு. |
நல்கூர் வேள்வியார்
உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா னுத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்க மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு |
தேனிக்குடிக் கீரனார்
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில் தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால் வையத்து வாழ்வார் மனத்து |
தொடித்தலை விழுத்தண்டினார்
அறநான் கறிபொரு ளேழொன்று காமத் திறமூன் றெனப்பகுதி செய்து-பெறலரிய நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார் போலு மொழிந்த பொருள். |
கொடிஞாழல் மாணிபூதனார்
திறனறிந்தேம் வீடு தெளிந்தேம்- மறனெறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற் கேளா தனவெல்லாங் கேட்டு |
வெள்ளி வீதியார்
செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா வதற்குரிய ரந்தணரே யாராயி னேனை யிதற்குரிய ரல்லாதா ரில் |
கவுணியனார்
வந்த விருவினைக்கு மாமருந்து-முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய வின்குறள்வெண் பா. |
மாங்குடி மருதனார்
ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோ ருள்ளாதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு. |
மதுரைப் பாலாசிரியனார்
பொள்ளென நீக்கும் புறவிருளைத்-தென்னிய வள்ளுவ ரின்குறள் வெண்பா வகிலத்தோர் ருள்ளிரு ணீக்கு மொளி. |
எறிச்சலூர் மலாடனார்
தூய துறவறமொன் றூழாக - வாய வறத்துப்பா னால்வகையா வாய்ந்துரைத்தார் நூலின் றிறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து. |
ஆலங்குடி வங்கனார்
தெள்ளமுதின் றீஞ்சுவையு மொவ்வாதால்-தெள்ளமுதம் உண்டறிவார் தேவ ருலகடைய வுண்ணுமால் வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து. |
போத்தியார்
அரசிய லையைந் தமைச்சிய லீரைந் துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல் திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன் றெண்பொரு ளேழா மிவை. |
இடைக்காடர்
குறுகத் தறுத்த குறள். |
மோசிகீரனார்
ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார் நாமத்தின் வள்ளுவனார் நன்கு. |
ஔவையார்
குறுகத் தறித்த குறள். |
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
ஐயாறு நூறு மதிகார மூன்றுமா மெய்யாய வேதப் பொருள்விளங்கிப் - பொய்யாது. தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி யந்தா மரைமே லயன். |
உசாத்துணை
- திருவள்ளுவமாலை, மூலமும் தெளிவுரையும், பேராசிரியர் அ. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம்
- திருவள்ளுவமாலை, குறள்.திறன்; http://kuralthiran.com/Valluvar/ValluvaMaalai.aspx