second review completed

மரியதெரசா

From Tamil Wiki
Revision as of 08:51, 17 April 2024 by Tamizhkalai (talk | contribs)
முனைவர் மரியதெரசா

மரியதெரசா (முனைவர் மரியதெரசா) (பிறப்பு: ஜூன் 22, 1955) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மரியதெரசா, காரைக்காலில், ஜூன் 22, 1955 அன்று, ரொபேர் சேழான் - பிளான்ஷேத் சேழான் இணையருக்கு மகளாகப் பிறந்தார். பள்ளிக் கல்வி கற்றார். இளங்கலை ஆங்கில இலக்கியம் கற்றார். முதுகலை தமிழ் இலக்கியம் மற்றும் முதுகலை ஹிந்தி பயின்று பட்டம் பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பி.எட். படித்தார். முனைவர் பட்டம் பெற்றார்.

முனைவர் மரியதெரசா (படம் நன்றி: தினமணி)

தனி வாழ்க்கை

மரியதெரசா சென்னை ஆவடியில் உள்ள விஜயந்தா சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள, ரங்கசாமி கல்வியல் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். மணம் செய்துகொள்ளவில்லை.

மரியதெரசா புத்தகங்கள்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

மரிய தெரசாவின் தாய், பாட்டனார், சகோதர் மூவருமே கவிஞர்கள். அவர்கள் மூலம் ஊக்கம் பெற்ற மரிய தெரசா, இலக்கியச் சிற்றிதழ்களில் கவிதைகளை எழுதினார். முதலில் ஹிந்தியில் கவிதைகள் எழுதினார். பின் தமிழில் எழுதினார். மரியதெரசாவின் கவிதைகள் தாய்மண், கவிதை உறவு, முகம், உரத்த சிந்தனை, கண்ணியம், குங்குமம், அமுதசுரபி, கவிஓவியா, பொதிகை மின்னல், புதிய தென்றல், மனித நேயம், சிகரம், ராணி, மதுரைத் தென்றல், உண்மைக்குரல், கவிதை வட்டம், வண்ணக்கதிர், ஏழைதாசன், தமிழ்ப்பாவை, நாற்று, உதவும் உள்ளங்கள், பாவையர் மலர், புதிய உதயம், சிறகு, சோழநாடு, தகவல் முத்துகள், திசை எட்டும், தமிழ் லெமூரியா, இலக்கியச்சாரல், மகாகவி உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகின.

கவிதைத் தொகுப்புகள்

மரிய தெரசாவின் முதல் கவிதைத் தொகுப்பு ’நிழல் தேடும் மரங்கள்’, 1998-ல் வெளியானது. தொடர்ந்து பல நூல்களை எழுதினார். ஒரே மேடையில் நாற்பது நூல்களை வெளியிட்டார். தொடர்ந்து ஒரே மேடையில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார். மரியதெரசா 250-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். உள்நாடு, வெளிநாடுகளில் நடந்த கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு கட்டுரை வாசித்தார்.

மரியதெரசா நூல்கள்
புதுக்கவிதைகள்

மரியதெரசா துளிப்பா எனப்படும் ஹைக்கூ கவிதைப் பிரிவில் முரண் கூ, போதனைக் கூ, மோனைக் கூ, எதுகைக் கூ, குறில் கூ, நெடில் கூ, சென்றியு கூ, மூன்றியோ கூ, லிமரைக் கூ, குறள் கூ, போன்ற வகைகளைப் பற்றி முதன் முதலில் தமிழில் எழுதி அறிமுகப்படுத்தினார். இந்த வகைமைகளில் கவிதைகள் எழுதிய முதல் பெண் கவிஞராக அறியப்படுகிறார். ஒரே விஷயத்தை மரபு, புதுக்கவிதை, ஹைக்கூ, வசனக் கவிதை என்று ஒன்பது வகைப் பொருண்மைகளில் கவிதைகளாக எழுதினார்.

ஆய்வும் பாடமும்

மரிய தெரசாவின் கவிதை நூல்களை பதினெட்டு மாணவர்கள் ஆய்வு செய்து முனைவர், ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றனர். பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி இளங்கலைப் பாடத்திட்டத்தில் மரியதெரசாவின் கவிதைகள் இடம்பெற்றன. கேரளாவில் பனிரெண்டாம் வகுப்பு தமிழ் மேனிலை ஆசிரியர் பனுவலில் மரியதெரசாவின் கவிதை இடம்பெற்றது. சுற்றுச்சூழல் பற்றி மரியதெரசா எழுதிய நூல், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது.

மொழிபெயர்ப்பு

மரியதெரசா, தமிழிலிருந்து ஹிந்திக்குச் சில நூல்களை மொழிபெயர்த்தார். அவற்றுள் இரா. இரவியின் ஆயிரம் கவிதைகள் அடங்கிய, ‘தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ’ நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

ஊடகம்

வானொலியில் மரியதெரசாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகின. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல கவிதைகளை வாசித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்டார்.

பொறுப்பு

  • திருவள்ளுவர் பைந்தமிழ் இலக்கிய மன்ற மகளிரணிச் செயலாளர்
  • ’கிறிஸ்துவின் தமிழ்’ எழுத்தாளர் ஒன்றிணைப்பின் தலைவர்
விருதுகள் உடன் மரிய தெரசா
புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது

விருதுகள்

  • தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது
  • வாழ்நாள் சாதனையாளர் விருது
  • கவியருவி
  • கவிமதி
  • தமிழருவி
  • கவிக்குயில்
  • கவிப்புயல்
  • கவிமாமணி
  • கவிச்சுடர்
  • கவிச்சிற்பி
  • கவிச்செல்வர்
  • கவித்தென்றல்
  • கவிதை ஞானி
  • முத்தமிழ்ச்சுடர்
  • எழுத்து வித்தகர்
  • சாதனைச் செம்மல்
  • சேவா ரத்னா
  • கவி நிலவு
  • மக்கள் கவிஞர்
  • திருக்குறள் மாமணி விருது
  • சிறுகதைச் செம்மல் விருது
  • பாரதி பணிச்செல்வர்
  • சிந்தனைச் செம்மல் விருது
  • கண்ணியச் செம்மல் விருது
  • சிறந்த பெண் சாதனையாளர்
  • பாரதி கவிச்செல்வர்
  • பாரதிதாசன் கவிச்செல்வர்
  • வண்ணப்பூங்கா வாசன் விருது
  • தாராபாரதி விருது
  • மகாத்மா காந்தியடிகள் நூலக விருது
  • இலக்கியச் செல்வி விருது
  • தமிழ்த் தோன்றல் விருது
  • எழுத்து இமயம் விருது
  • பாவேந்தர் நெறிச்செம்மல் விருது
  • நிஜ நாயகி விருது
  • தமிழ் மாமணி விருது
  • நற்றமிழ்க் கவிச்செம்மல் விருது
  • செல்லம்மாள் பாரதி விருது
  • மனித நேயக் கவிஞர் விருது
  • நக்கீரன் விருது
  • செயல் மறவர் விருது
  • அரிமா சங்கத்தின் நல்லாசிரியர் விருது
  • மனித நேயப் படைப்பாளர் விருது
  • பைந்தமிழ்க் கவிஞர் விருது
  • எழுத்தாளி விருது
  • கம்பதாசன் கவிச்செல்வர் விருது
  • துளிப்பாச்சுடர் விருது
  • திருக்குறள் விருது

மற்றும் பல

மதிப்பீடு

மரியதெரசா பொது வாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். துளிப்பா எனப்படும் ஹைக்கூ கவிதைப் பிரிவில் பல்வேறு வகைமைகளில் புதிய பல கவிதைகளை அறிமுகப்படுத்தினார். பல்வேறு வகைமைகளில் பல கவிதைகளை எழுதிய முன்னோடிப் பெண் கவிஞராக அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • நிழல் தேடும் மரங்கள்
  • இரவு தழுவாத பூமி
  • புல்வெளிப் புன்னகை
  • காகித மேடை
  • கரையைத் தொடாத அலைகள்
  • முதலோவியம்
  • தொட்டுச் செல்லும் தென்றல்
  • முகில் பாடும் பூபாளம்
  • ஒரு பிடி ஆசை
  • மலர மறுக்கும் மொட்டுக்கள்
  • துளிப்பா தோப்பு
  • ஒரு தேவதையின் முந்தானை
  • சுமையாகும் இமைகள்
  • பிடிக்குள் பூங்காற்று
  • அக்னி வளையல்
  • தென்றலின் தாய்வீடு
  • தூரிகை தேசம்
  • உயிர் எழுத்துக்களின் தாலாட்டு
  • நெருப்பு விரல்கள்
  • பூக்களின் மாநாடு
  • வானம் உதறிய நட்சத்திரம்
  • குடிமகனுக்கு ஓரு கடிதம்
  • எழுத்துப் பல்லக்கு
  • பச்சை தேவதைகள்
  • பாரம் சுமக்கும் குருவிகள்
  • அடுப்பங்கரைப் புல்லாங்குழல்
  • மண்ணுக்கல்ல பெண் குழந்தை
  • ஈரமற்ற மழைத்துளிகள்
  • சேகரிக்காதப் பனித்துளிகள்
  • பேரின்பப் பேரிகை
  • மனப்பிரமிடுகள்
  • நந்தவனங்கள் பேசுகின்றன
  • காற்றில் வடித்த சிலைகள்
  • பூச்சும்மாடு
  • புல்லாங்குழலில் புகுந்த புயல் காற்று
  • மேகத்தின் தாகம்
  • இதழ்களே இறைவனைப் பாடுங்கள்
  • பால் சோறு கேட்ட நிலவு
  • பேசும் முத்துக்கள்
சிறார் நூல்கள்
  • மழை யாசிக்கும் வானம்
  • மிட்டாய் தோட்டம்
  • சிவப்பு காக்கையும் சேவல் முட்டையும்
  • பலூன் பூக்கள்
  • வண்ணத்துப்பூச்சியின் நண்பன்
  • பட்டதாரி எறும்பு
சிறுகதைத் தொகுப்பு
  • முதுகில் நெளியும் மின்னல்
  • நிறம் கேட்கும் மேகங்கள்
  • திருக்குறள் சிறுகதைகள்
  • நேசிக்கப்படாத நிழல்கள்
  • மலர்களை பிரசவிக்கும் கனிகள்
நாவல்
  • கிழக்கின் மடியில் மேற்கு
மொழியாக்கம்

தமிழிலிருந்து ஹிந்தி:

  • நிலவின் வாரிசுகள்
  • ஒளி வங்கி
  • சிற்பியை தேடும் சிலைகள்
  • சொல்லத் திறக்கும் கதவு
  • ஐம்பூத நாயகி
  • வால் முளைத்த பந்து
  • வளையாத வானவில்
  • இப்படிக்கு முகங்கள்
  • உறவுத் தோரணங்கள்
  • சூரிய விதைகள்
  • மோனைக் காற்று
  • சிக்கு சிக்கு ரயில் வண்டி
  • யானை பிடித்த கொழுக்கட்டை
  • வண்ண அடுக்கு மல்லிகை
  • மலர் விடு தூது
  • குளிர் காயும் கதிரவன்
  • விற்பனைக்கு புன்னகை
  • நிழலில் உறங்கும் வெயில்
  • மனம் கேட்கும் தாலாட்டு
  • மணல் பூக்கள்
  • கனவுத் தோரணங்கள்
  • சொற்களில் உறங்கும் மௌனம்
  • சிறகு முளைத்த பனித்துளிகள்
  • நீர்க்குமிழிகளின் வேர்கள்
  • சொல் மறவோர் பாசறை
  • நிலவை கொத்தும் பறவை
  • பரிதியின் கால்கள்
  • ஒரு புல்லின் வியர்வை
  • சக்கரங்கள் இல்லாத தேர்கள்
தொகுப்பு நூல்கள்
  • நிலாச்சூடிய நெற்றி
  • எங்கள் எண்ணங்கள்
  • மாமனிதர் அப்துல்கலாம்
  • கனவு நனவாகும்
  • புதிய சகாப்தம்
  • உதிர நிறப்பொட்டு
  • அறைகூவல்
  • கவிச்சோலை
  • கண்ணாடிச் சித்திரங்கள்
  • அமுதமழை
  • மறத்தமிழர் வீழ்ச்சி எழுவதற்கே
  • சாவித் துவாரத்தில் சூரியன்
  • அன்புள்ள அப்பாவுக்கு
  • கூட்டாஞ்சோறு
  • தென்றலின் சுவடுகள் (பெண்கள் ஹைக்கூ தொகுப்பு)
  • காக்கைக்கூடு (முதல் லிமரைக்கூ தொகுப்பு)
  • வியர்வை விதைகள்
  • குயில் முட்டை மற்றும் தேநீர்க் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ காலமெல்லாம் கவிதை
  • தமிழ்க்கூடல்
  • சிறுவர் இலக்கியப் படைப்பாளர்கள்
  • தமிழர் வாழ்வில் கல்வியா? செல்வமா? வீரமா?
  • உலகச் சாதனை கவியரங்க கவிதைகள்
  • கிறிஸ்தவ தமிழ்த் தொண்டர்கள்
  • திசைகளின் தேடல்கள்
  • பைந்தமிழ்ப் பாமாலை
  • தோற்றாலும் வெல்வோம்
  • விதையாய் விழுந்த கவிதை
  • ஹைக்கூ பூக்கள்
  • எண்ணங்களின் களஞ்சியம்
  • கலாமைப்பாடிய கவிக்குயில்கள்
  • கவிதைப் பூக்கள்
  • கலாமுக்கு ஒரு கவிதாஞ்சலி
  • தீர்ப்புகள் திருத்தப்படலாம்
  • வைய மலர்கள்
  • எட்டுத்திக்கும் எங்கள் பாட்டு
  • மக்கள் போற்றும் மனித நேயம்
  • குழந்தை
  • தமிழ் ஹைக்கூ ஆயிரம்
  • மகளிர் மனம்
  • சங்கக் கவிதைகள்
  • அவிழட்டும் அடிமை முடிச்சு
  • கதைச்சோலை
  • சுனாமி நினைவலைகள்
  • சொல் அல்ல வில்
  • இனிது இனிது இல்லறம் இனிது
  • பொம்மை
  • தமிழ்ப் புதையல்கள்
  • கவிதை வனம்
  • தேன்துளிகள்
  • கவிதை மழை

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.