under review

ஆற்றுப்படை

From Tamil Wiki
Revision as of 08:55, 22 October 2022 by Meenambigai (talk | contribs) (Spell Check done)

To read the article in English: Aatrupadai. ‎

ஆற்றுப்படை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல் என்னும் பொருள் உடையது. விறலியர், பாணர், கூத்தர், பொருநர் என்போர் தமது வறுமையைப் போக்க வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது அக்கால வழக்கம். அவ்வாறு பரிசு பெற்றுச் செல்லும் ஒருவன், பரிசு பெறச் செல்லும் இன்னொருவனை வழிப்படுத்தும் முறையில் அமைவதே ஆற்றுப்படை ஆகும். அகவற்பாக்களாக அமையும் இப் பாடல்கள் தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவதாக அமையும்.[1].

பாடுபொருள்

கூத்தர், பாணர், பொருணர், விறலி முதலிய கலைஞர்கள் பரிசில் பெற்று, வரும் வழியில் இன்னும் பரிசில் பெறாத கலைஞனை தனக்குப் பொருள் அளித்த வள்ளலிடம் செல்லுமாறு வழிப்படுத்துதல் ஆற்றுப்படை என ஆற்றுப்படைக்குத் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது[2]. பிற்காலத்தில் வந்த பாட்டியல் நூல்களும் ஆற்றுப்படைக்கு இதுபோலவே இலக்கணம் வகுக்கிறது.[3]

திருமுருகாற்றுப்படையைத் தவிர மற்ற ஆற்றுப்படை நூல்களில் மன்னர்களையும் வள்ளல்களையுமே பாட்டுடைத் தலைவராக வைத்துப் பாடப் பெற்றுள்ளன. பாட்டுடைத்தலைவனின் குலப்பெருமை, அறச்சிறப்பு, வீரச்சிறப்பு முதலியவைகளும் அவன் நாட்டிற்குச் செல்லும் வழிகளைப் பற்றிய செய்தியும் இறுதியில் அவனிடத்தில் பெறத்தக்க பரிசில் வகைகளையும் பற்றிக் குறிப்பிடும்.

நூல்கள்

சங்க இலக்கியத்தில் உள்ள 27 ஆற்றுப்படைப் பாடல்களில் எட்டுத்தொகையில் 14 பாடல்களும் (பாணர் - 8, விறலி -4, புலவர் - 2), பதிற்றுப்பத்தில் 8 பாடல்களும் (பாணர் - 2, விறலி - 6), பத்துப்பாட்டில் 5 பாடல்களும் (திருமுருகாற்றுப்படை, பாணாற்றுப்படை -2, கூத்தராற்றுப்படை - 1, பொருநராற்றுப்படை - 1).

குறிப்புகள்

  1. முத்துவீரியம், பாடல் 113
  2. கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

    பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

    சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்

    தொல்காப்பியம் - புறத்திணை இயல் 88: 3-6

  3. புரவலன் பரிசில் கொண்டு மீண்ட

    இரவலன் வெயில்தோறும் இருங்கா னத்திடை

    வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்

    பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப்

    புரவலன் நாடூர் பெயர்கொடை பராஅய்

    அங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை

    அதுதான் அகவலின் வருமே

    - பன்னிரு பாட்டியல் 202

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page