under review

விறலியாற்றுப்படை

From Tamil Wiki

விறலியாற்றுப்படை என்பது ஆற்றுப்படைப் பாடல்களில் ஒருவகை. பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. விறலியரை வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்தும் பாடல்கள். இப்பாடல்களில் வழிப்படுத்திப் பாடப்படும் விறலியர் பாண்மகள் எனப்படும் இசைக்கலைஞர்கள். யாழ், ஆகுளி, பதலை ஆகிய இசைக் கருவிகளைப் கையாள்பவர்கள்.

விளக்கம்

வள்ளலிடம் கொடை பெற்றுவந்த ஒருவன் விறலியை அந்த வள்ளலிடம் செல்வதற்கு வழி கூறி ஆற்றுப்படுத்துவது விறலியாற்றுப்படை என்பது தொல்காப்பியம் கூறும் இலக்கணம்.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்

      - தொல்காப்பியம் புறத்திணையியல் 30, பாடாண் திணை

புறப்பொருள் வெண்பாமாலை

விறலி எனில் உள்ளக் குறிப்பு வெளிப்பட ஆடுபவள் என்று பொருள். இவள் பாணர் குல மகள். புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு பரிசில் பெற்று வரும் விறலி, பெறாத விறலியை வள்ளலிடத்து ஆற்றுப்படுத்துவது என்று இலக்கணம் கூறுகிறது.

திறல் வேந்தன் புகழ்பாடும்
விறலியை ஆற்றுப்படுத்தன்று (கொளு.31)

வெற்றியைக் கொண்ட மன்னனது புகழைப்பாடும் விறலியை வள்ளலிடத்தில் ஆற்றுப்படுத்தல் என்று பொருள்

சில்வளைக்கைச் செவ்வாய் விறலிசெருப் படையான்
பல்புகழ் பாடிப் படர்தியேல் - நல் அவையோர்
ஏத்த இழை அணிந்(து) இன்னே வருதியால்
பூத்த கொடிபோல் புனைந்து

‘விறலியே! படைவலிமை மிக்க அவ்வள்ளலின் புகழைப் பாடிக்கொண்டு சென்றால், அவன் தரும் அணிகலன்களால் பூங்கொடி போலப் பொலிவு பெறுவாய்’ என, வெண்பா விறலியை ஆற்றுப்படுத்தும் வகையைக் காட்டுகிறது.

பாடல்கள்

விறலியாற்றுப்படை என்னும் துறையைச் சேர்ந்த பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் நான்கு உள்ளன[1]. இந்தத் துறை புறநானூற்றில் பாடாண் திணையில் வருகிறது. புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் விறலியாற்றுப்படைப் பாடல்கள் ஒன்பது இருக்கின்றன. அவற்றில் நான்கு பாடல்கள் 'செல்லாமோ’ (இருவரும் செல்லலாமா) எனப் பாடுகின்றன. ஏனைய ஐந்தும் விறலியை மட்டும் ஆற்றுப்படுத்துகின்றன.

விறலியுடன் தானும் (பாடுபவரும்) செல்லல்

  • கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனிடம் பரணர் ஆற்றுப்படுத்துவது [2]
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆற்றுப்படுத்துவது[3]
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆற்றுப்படுத்துவது[4]
  • பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் நெடும்பல்லியத்தனார் ஆற்றுப்படுத்துவது[5]

விறலியை மட்டும் ஆற்றுப்படுத்துதல்

  • தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அரிசில் கிழார் ஆற்றுப்படுத்துவது.[6]
  • இளஞ்சேரல் இரும்பொறையிடம் பெருங்குன்றூர் கிழார் ஆற்றுப்படுத்துவது[7]
  • அதியமான் நெடுமான் அஞ்சியிடம் ஔவையார் ஆற்றுப்படுத்துவது[8]
  • வேள் பாரியிடம் கபிலர் ஆற்றுப்படுத்துவது [9]
  • வேள் ஆய் அண்டிரனிடம் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆற்றுப்படுத்துவது[10]

எடுத்துக்காட்டு

புறநானூறு 105
  • திணை: பாடாண் துறை: விறலியாற்றுப்படை
  • பாடியவர்: கபிலர்
  • பாடப்பட்டோன்: வேள் பாரி

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினும் அருவி
கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆக
மால்புடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.(105)

"ஒளி பொருந்திய நெற்றியையுடைய விறலி! பெரிய நீர்ச்சுனைகளில் தழைத்த கரிய இதழ்களுடைய குவளையின் வண்டுகள் மொய்க்கும் புது மலர்களில் குளிர்ந்த மழைத்துளிகள் கலக்குமாறு மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும், மேகங்கள் மோதுகின்ற நெடிய பறம்பு மலையின் சிகரங்களிலிருந்து வரும் அருவிகளின் நீர், கொள் விளைப்பதற்காக உழுத வயல்களில் வாய்க்காலாக ஓடி வருகிறது. அந்த நீரினும் மிகவும் இனிய தன்மை வாய்ந்தவன் வேள் பாரி. நீ அவனை பாடிச் சென்றால் சிவந்த பொன்னாலான அணிகலன்களைப் பெறுவாய்" - என விறலி ஆற்றுப்படுத்தப்படுகிறாள்..

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Nov-2023, 09:39:32 IST