ஜீ. முருகன்
ஜீ. முருகன் (1967) தமிழில் எழுதும் எழுத்தாளர், கட்டுரையாளர்.
பிறப்பு, கல்வி
ஜீ. முருகன் 1967 ஆம் ஆண்டு கோவிந்தசாமி - கமலா இணையருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வட்டத்தில் ஜவ்வாது மலை அடிவார கிராமமான கொட்டாவூரில் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று மூத்த சகோதரிகள்.
கொட்டாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1977 இல் ஆரம்ப கல்வியையும் 1982 இல் பரமனந்தல் அரசு பள்ளியில் உயர்நிலை கல்வியையும் 1984 இல் செங்கம் அரசு ஆண்கள் பள்ளியில் மேல்நிலை கல்வியையும் பயின்றார். பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து 1987 இல் மின்னணு மற்றும் தொடர்பியல்(D.E.C.E) துறையில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
தனிவாழ்க்கை
பட்டப்படிப்பிற்கு பின் கோவையில் டிவி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். 1992 ஆம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் சொந்த ஊரான கொட்டாவூருக்கு திரும்பி இயற்கை விவசாயத்தில் ஈடுப்பட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு பின் செங்கத்தில் 1997 இல் கணினி அச்சாக்கம் தொடங்கி 9 ஆண்டுகள் நடத்தினார். பின்னர் 2005 இல் தினமணியில் உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். மூத்த உதவி ஆசிரியர் பணி உயர்வுடன் தினமணியில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ காரணங்களால் 2015 இல் தினமணி உதவி ஆசிரியர் பணியில் இருந்து விலகினார். தற்போது செங்கத்தில் தனது வீட்டிலிருந்தபடி பதிப்பகங்களுக்கும் நண்பர்களுக்கும் கணினியில் புத்தக வடிவமைப்பு செய்து தருகிறார்.
1991 ஆம் ஆண்டு அனிதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிபி, ரிஷி என இரு மகன்கள் உள்ளனர்.
இலக்கிய வாழ்க்கை
14 வயதில் பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு பரமனந்தல் கிராம கிளை நூலகத்திற்கு சென்று வாசிக்க தொடங்கினார். கோவையில் பணியாற்றிய போது கோவை ஞானியை 1988 இல் சந்தித்தார். அந்நட்பின் மூலம் முறையான இலக்கிய, அறிவியக்க அறிமுகத்தை அடைந்தார்.
ஜீ. முருகனின் முதல் நாவலான மின்மினிகளின் கனவுக்காலம் 1993 ஆம் ஆண்டு கோவை ஞானியின் நிகழ் பதிப்பகத்தின் மூலம் வெளியானது. 2007 ஆம் ஆண்டு உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த மரம் நாவல் பரவலான கவனத்தை பெற்றது. மேற்கு வங்கம் சிங்கூரில் தொடங்கப்பட்ட நானோ கார் தொழிற்சாலை பிரச்சனையை அடிப்படையாக கொண்டு 2009 இல் இனியவன் இறந்துவிட்டான் என்ற குறுநாவலை எழுதினார். ஜீ. முருகனின் முதல் சிறுகதை தொகுப்பு சாயுங்காலம் 2000 ஆம் ஆண்டு வெளியானது. ஜீ. முருகன் எழுதிய கவிதைகள் காட்டோவியம் என்ற தலைப்பில் 2009 இல் நூலாக்கம் பெற்றது.
உலக இலக்கியத்தில் டால்ஸ்டாய், தாஸ்தாவஸ்கி, செக்காவ், காஃப்கா, மார்க்வஸ், இட்டாலோ கால்வினோ, கவாபட்டா ஆகியோரையும் இந்திய இலக்கியத்தில் பஷீர், பால் சக்காரியா ஆகிய தமிழில் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிர்தம், மௌனி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, திலீப் குமார், கோபிகிருஷ்ணன் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாக குறிப்பிடுகிறார்.
கட்டுரைகள்
ரஷ்ய இயக்குநனர் ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் (Andrei Tarkovsky) திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு அவரது முழுநீளப்படங்களை அறிமுகப்படுத்தும் வகையில் கட்டுரைகள் எழுதினார். இவை பின்னர் ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றன.
லாரி பெக்கரின் கட்டடக்கலையால் ஈர்க்கப்பட்டு, அந்த முறையில் ஒரு வீட்டைக் கட்டினார். அந்தத் தொழில்நுட்ப அனுபவத்தை ‘இந்து தமிழ் திசை’யில் தொடராக எழுதினர். அது ‘நமக்கான நம் வீடு’ என யாவரும் பதிப்பகத்தில் 2021-ல் புத்தகமாக வெளிவந்தது.
இதழியல்
கவிஞர் ஸ்ரீநேசனோடு இணைந்து 2005-ல் வனம் அச்சு இதழை தொடங்கி நடத்தினார். இது இளம் படைப்பாளிகள் எழுதுவதற்கான சூழலை உருவாக்கி கொடுத்தது. பிரம்மராஜன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் நீண்ட நேர்காணல்களையும், கோணங்கி, ஆத்மாநாம் ஆகியோரின் படைப்புலகம் குறித்த ஆழ்ந்த உரையாடல்களையும் பதிவு செய்தது.
நேர்காணல்
சா.தேவதாஸ், ஸ்ரீநேசன் இருவரும் பதிவு செய்த இவரது நீண்ட நேர்காணல் கல்குதிரை சிற்றிதழில் வெளியானது.
பிற பணிகள்
2022-ல் ‘ஜீவா தமிழ்’ என்ற எழுத்துரு மென்பொருளை உருவாக்கினார். இதில் 150 தமிழ் எழுத்துருக்களும், JF, TAM, Unicode வகை எழுத்துருக்களை 5 வகையில் தட்டுச்சு செய்யும் 15 மென்பொருள் செயல் நிரலிகளையும் உருவாக்கியுள்ளார்.
விருதுகள்
- ஆனந்த விகடன் - 2011 (சிறந்த சிறுகதை தொகுப்பு)
- உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை விருது - 2018 (சிறந்த சிறுகதை தொகுப்பு)
நூல்கள்
கவிதை தொகுப்பு
- காட்டோவியம் (2009)
சிறுகதை தொகுப்புகள்
- சாயும் காலம் (2000)
- கறுப்பு நாய்க்குட்டி (2002)
- சாம்பல் நிற தேவதை (2005)
- கண்ணாடி (2017)
- தேவதையை தரிசித்த மனிதன் (2022)
- காண்டாமிருகம்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2010)
- ஜீ. முருகன் சிறுகதைகள் (2016)
- ஜீ. முருகன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2019)
- எழுபது கதைகள் (2022)
நாவல்கள்
- மின்மினிகளின் கனவுக்காலம் (1993)
- மரம் (2007)
குறுநாவல்
- இனியவன் இறந்துவிட்டான் (2009)
கட்டுரை தொகுப்புகள்
- ஆந்த்ரே தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் (2012)
- நமக்கான நம் வீடு (2021)
இணைப்புகள்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.