second review completed

எஸ்ஸார்சி

From Tamil Wiki
Revision as of 02:26, 25 October 2024 by Jayashree (talk | contribs)
எஸ்ஸார்சி @எஸ். ராமச்சந்திரன்

எஸ்ஸார்சி (எஸ். ராமச்சந்திரன்) (பிறப்பு: மார்ச் 04, 1954) எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை எழுதினார். தொலைபேசித் துறையில் பணியாற்றினார். மார்க்சீய சித்தாந்தவாதி. ‘திசை எட்டும்’ மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

எஸ். ராமச்சந்திரன் என்னும் இயற்பெயரை உடைய எஸ்ஸார்சி, மார்ச் 04, 1954 அன்று, கடலூர் மாவட்டம் தருமநல்லூரில், சுந்தரேசர் ஐயர் - மீனாட்சி இணையருக்குப் பிறந்தார். கம்பாபுரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். வளையமாதேவியில் உள்ள வள்ளலார் உயர்நிலைப்பள்ளியில் இடைநிலைக்கல்வி கற்றார். உயர்நிலை மற்றும் மேல் நிலைக் கல்விகளை கம்பாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதுமுக வகுப்பு (பி.யூ.சி.) மற்றும் இளம் அறிவியலில் (B.Sc.) வேதியியல் கற்றார். மதுரை காமராசர் பல்கலையில் பயின்று ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். எம்.பில் பட்டம் பெற்றார். இதழியல் மற்றும் தொழிலாளர் நிர்வாகவியல் குறித்துப் பயின்று பட்டயம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.

தனி வாழ்க்கை

எஸ்ஸார்சி, 1974-ல், வடலூரில் உள்ள சேஷசாயி நிறுவனத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். 1975 முதல் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றினார். இளநிலைக் கணக்கு அதிகாரி, முதுநிலைத் தொலைபேசி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து 2014-ல் பணி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி, பானுமதி. மகன்கள், அஜய்சுந்தர், லட்சுமணபாரதி

எஸ்ஸார்சியின் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

எஸ்ஸார்சி, 1972-ல், பல்கலைக்கழக ஆண்டு மலரில் ‘பாரதிதாசன் பனுவலில் சில’ என்னும் கட்டுரையை எழுதினார். அதுவே எஸ்ஸார்சியின் அச்சில் வந்த முதல் படைப்பு. இலக்கிய ஆர்வத்தால் சிறுகதைகள் எழுதினார். எஸ். ராமச்சந்திரன் என்னும் தன் பெயரைச் சுருக்கி ’எஸ்ஸார்சி’ என்ற பெயரில் எழுதினார். முதல் சிறுகதை’ குட்டிச்சுவர்’ கணையாழியில் பிரசுரமானது. முதல் கவிதை கோவை ஞானி நடத்தி வந்த நிகழ் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து எஸ்ஸார்சியின் படைப்புகள் தாமரை, சுபமங்களா, மஞ்சரி, கவிதாசரண், பாட்டாளித் தோழன், சாரல் போன்ற இதழ்களிலும், சொல்வனம் போன்ற இணையதளங்களிலும் வெளியாகின. முதல் சிறுகதைத்தொகுப்பு, ‘மறுபக்கம்’, வே. சபாநாயகம் முன்னுரையுடன் வெளி வந்தது. ‘மண்ணுக்குள் உயிர்ப்பு.’ எனும் எஸ்ஸார்சியின் முதல் நாவலை குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகம் வெளியிட்டது. எஸ்ஸார்சி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு ஆறு தொகுதிகளாக வெளிவந்தன.

எஸ்ஸார்சியின், ‘யாதுமாகி’ என்னும் சிறுகதை நூல், காஞ்சி மாமுனிவர் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்பிற்குத் துணைப்பாடமாக வைக்கப்பட்டது. எஸ்ஸார்சி, புதுவை அகில இந்திய வானொலியில் இலக்கியம் சார்ந்து பல உரைகளை நிகழ்த்தினார். பத்து உபநிடதங்களை, நான்கு வேதங்களை புதுக்கவிதை நடையில் எழுதியது எஸ்ஸார்சியின் குறிப்பிடத்தகுந்த இலக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

மொழிபெயர்ப்பு

எஸ்ஸார்சி ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு ‘ரெயின் போ’ என்னும் கவிதை நூலையும், ‘பேகனும் திருவள்ளுவரும்’ எனும் ஒப்பீட்டு நூலையும் எழுதினார். மகேந்திர பட்நாகரின் ஆங்கிலக் கவிதைகளை ’காலம் மாறும்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ராஜாஜி எழுதிய இந்துத் தத்துவ நூல் ஒன்றை ’ஆன்ம தரிசனம்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

எஸ்ஸார்சி, கல்லூரிக் காலத்தில் சிதம்பரம் காந்தி அமைதி நிலையத்து அன்பர்களோடு ஏற்பட்ட தொடர்பால் காந்திய சித்தாந்தத்தைப் பின்பற்றினார். சமூக சேவைகள் பலவற்றில் ஈடுபட்டார். நான்'சாந்தி சேனா' அமைப்பின் உறுப்பினராகி, அவர்கள் நடத்திய அகில இந்திய முகாமில் கலந்து கொண்டார். கர்நாடக மாநிலம் கடோலி கிராமத்தில் நடந்த சர்வோதய முகாமில் பங்குகொண்டு களப்பணியாற்றினார். எஸ்ஸார்சி, பிற்காலத்தில் மார்க்சீயத்தால் ஈர்க்கப்பட்டார் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டார். கடலூரில் 'சிரில் அறக்கட்டளை' என்னும் தொலைபேசி ஊழியர்கள் தமிழ் அமைப்பில் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.

எஸ்ஸார்சி கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற இலக்கிய அமைப்புகளுடன் தொடர்புகொண்டு பல இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார். கடலூர் மாவட்டத்தின் கலை இலக்கியப் பெருமன்ற செயலாளராகப் பணிபுரிந்தார். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். அவற்றில் தி.வே. கோபாலய்யர், ஞானக்கூத்தன், ராஜம் கிருஷ்ணன், பொன்னீலன், பிரபஞ்சன், குறிஞ்சிவேலன், சபாநாயகம், பழமலய், தனுஷ்கோடி ராமசாமி உள்ளிட்ட பலரைப் பங்கு கொள்ளச் செய்தார்.

இதழியல்

  • ‘தொண்டு’ காந்திய இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
  • குறிஞ்சிவேலன் நடத்திவரும் ‘திசை எட்டும்’ மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்.
  • பட்டுக்கோட்டையில் இருந்து வெளிவரும் ‘இலக்கியச் சிறகு’ மற்றும் SHINE இதழ்களின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.

விருதுகள்/பரிசுகள்

  • ’ஆன்ம தரிசனம்’ நூலுக்கு தமிழக அரசின் மொழிபெயர்ப்பு உதவித்தொகை கிடைத்தது.
  • மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம், எஸ்ஸார்சி எழுதிய ‘சிந்தனை விழுதுகள்’ என்னும் கட்டுரை நூலைத் தேர்வு செய்து, அதனை நாடு முழுவதுமுள்ள மைய அரசின் நூலகங்களுக்கு விநியோகித்தது.
  • எஸ்ஸார்சி எழுதிய ‘நெருப்புக்கு ஏது உறக்கம்’ எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  • ‘நெருப்புக்கு ஏது உறக்கம்’ நூலுக்கு சேலம் தாரையார் விருது கிடைத்தது.
  • ’கனவு மெய்ப்படும்’ நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு, எட்டையபுரம் தமிழ்ச் சங்கப் பரிசு, பாரத மாநில வங்கி விருது, என். எல். சி. நிறுவன விருது என நான்கு பரிசுகள் கிடைத்தன.
  • ‘பாரதம் போற்றும் பைந்தமிழ்ப் புலவர்கள்’ நூலுக்கு, கம்பம் பாரதி சங்க விருது கிடைத்தது.
  • எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அளித்த சிறந்த எழுத்தாளர் விருது
எஸ்ஸார்சி வாழ்க்கை வரலாறு

ஆவணம்

எஸ்ஸார்சியின் வாழ்க்கை வரலாற்றை சுப. வேல்முருகன் எழுதினார். 2015-ல், கலைஞன் பதிப்பகம், தமிழியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஆய்வியல் துறை மலாயாவுடன் இணைந்து வெளியிட்டது.

மதிப்பீடு

எஸ்ஸார்சி, பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். சமூக அவலங்கள் பலவற்றைப் பேசும் கதைகளை எழுதினார். மார்க்சீய நெறி சார்ந்து இயங்கும் தமிழ்ப் படைப்பாளிகளுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • ரணம் சுமந்து
  • ஞானத்தீ
  • வேதவனம்
சிறுகதைத் தொகுப்பு
  • மறுபக்கம்
  • யாதுமாகி
  • உரைகல்
  • செய்தவம்
  • பட்டறிவு
  • தேசம்
நாவல்
  • மண்ணுக்குள் உயிர்ப்பு
  • கனவு மெய்ப்படும்
  • நெருப்புக்கு ஏது உறக்கம்
  • எதிர்வு
கட்டுரைத் தொகுப்பு
  • சில ஆய்வுகள், மதிப்புரைகள், விமர்சனங்கள்
  • படித்தலும் படைத்தலும்
  • சிந்தனை விழுதுகள்
  • பாரதம் போற்றும் பைந்தமிழ்க் கவிஞர்கள்
மொழிபெயர்ப்பு
  • காலம் மாறும் (மூலம்: மகேந்திர பட்னாகர்)
  • ஆன்ம தரிசனம் (மூலம்: ராஜாஜி)
ஆங்கில நூல்கள்
  • Rainbow (Poem)
  • Bacon and Thiruvalluvar (Comparative Study)

உசாத்துணை




✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.