ஶ்ரீநேசன்
ஶ்ரீநேசன் (த. நேசன்) (பிறப்பு : பிப்ரவரி 15, 1966) தமிழ்க் கவிஞர், கட்டுரையாளர்.
பிறப்பு,கல்வி
ஶ்ரீநேசனின் இயற்பெயர் த.நேசன். ஶ்ரீநேசன் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள குந்தாணிமேடு கிராமத்தில் பிப்ரவரி 15, 1966 அன்று நா.தேவராஜன் – பட்டம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஒரு தம்பியும் இரு சகோதரிகளும்.
ஶ்ரீநேசன் தொடக்கக் கல்வியை குந்தாணிமேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விகளை வாணியம்பாடி இந்து மேல்நிலைப்பள்ளியிலும் கான்கார்டியா மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார். வாணியம்பாடி இஸ்லாமியக் கலைக்கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் கல்வியை(எம்.ஏ. & எம்.பில்) சென்னை புதுக்கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்கள் பெற்றார். சென்னைப் பல்கலைகழகத்தில் பேராசிரியர் வீ.அரசுவின் நெறியாளுகையில் 'நவீன புனைகதை வரலாறு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஶ்ரீநேசன் 2000 முதல் 2010 வரை பல்வேறு தனியார் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2011-ம் ஆண்டு முதல் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் துறைப் பேராசிரியாராகப் பணியாற்றுகிறார்.
ஶ்ரீநேசன் பிப்ரவரி 12, 2003 அன்று அ.தமிழ்தென்றலை திருமணம் செய்துகொண்டார். மகன்கள் சர்வஞ்ஞன், பேரிசைஞன்.
இலக்கிய வாழ்க்கை
ஶ்ரீநேசன் கல்லூரிக் காலத்தில் இருந்தே கவிதைகள் எழுதுவதில் ஈடுபாடு கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார். கவிராத்ரி நிகழ்வில் முதல் பரிசு வென்று, இஸ்லாமியக் கல்லூரியின் 1987-ம் ஆண்டின் ஆண்டு மலரில் வெளியான 'கரும்பலகை' என்ற கவிதையே அச்சில் வெளிவந்த முதல் படைப்பு. கல்லூரிக் காலத்தில் கவிஞர்கள் அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், இன்குலாப் ஆகியோரிடம் மாணவராக பயின்றுள்ளார். அவர்களின் வழியாக இலக்கிய வாசிப்பு தீவிரமடைந்தை குறிப்பிடுகிறார். கல்லூரிக் காலத்தில் தன்னுடைய ஆதர்சங்களாக அப்துல் ரகுமான், அபி, அறிவுமதி, கு.ராமலிங்கம், மு.குலசேகரன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.
ஶ்ரீநேசனின் முதல் கவிதை 'சிக்கல்' 1997-ல் கனவு காலாண்டிதழில் வெளியானது. முதல் கவிதைத் தொகுப்பு 'காலத்தின் முன் ஒரு செடி' 2002 -ல் ' புது எழுத்து' வெளியீடாகப் பிரசுரமானது. தீவிர இலக்கியத்தில் தன் படைப்பில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக விக்ரமாதித்யன், ஞானக்கூத்தன், நகுலன், பிரமிள், ஆத்மாநாம், பிரம்மராஜன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், பா.வெங்கடேசன், தேவதச்சன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
இதழியல்
ஶ்ரீநேசன் எழுத்தாளர் ஜீ. முருகனுடன் இணைந்து வனம் காலண்டிதழின் எட்டு இதழ்களில் இணையாசிரியராக பங்களித்துள்ளார்.
அமைப்புப் பணிகள்
ஶ்ரீநேசன் 1995-ல் நண்பர்களுடன் இணைந்து வாணியம்பாடியில் உள்ள இலக்கிய வாசகர்களை மையமாக கொண்ட 'நவீனர்' குழுவை உருவாக்கினார், இக்குழுவினர் மாதந்தோறும் இலக்கிய சந்திப்புகளையும் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் ஏலகிரி, ஜமுனாமரத்தூர் மலைப்பகுதிகளிலும் இலக்கிய கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்தனர்,
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தி வளர்க்கும் பொருட்டு 'நூல்வாசி' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
ஐதரபாத் உஸ்மானியா பல்கலைகழகம் மற்றும் ஜம்மு பல்கலைகழகத்தின் கவிதை அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
பிரம்மராஜன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஶ்ரீநேசனின் எட்டுக் கவிதைகள் 'Muse India' ஆங்கில இணைய இதழில் பிரசுரமாகின. கே.எஸ் சுப்ரமணியம் மற்றும் லதா ராமகிருஷ்ணன் ஆகியோரின் ஆங்கில மொழியாக்க கவிதைத்தொகுதிகளில் ஶ்ரீநேசனின் கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
விருதுகள்
- உயிர்மை சுஜாதா அறக்கட்டளை விருது – 2011
- அன்னம் விருது - 2018 (இலக்கிய வீதி)
- கலைஞர் நவீன கவிதை விருது – 2023 (மாநிலக் கல்லூரி)
ஆவணப்படம்
ஶ்ரீநேசனின் 'புகைப்பவர்கள்' என்னும் கவிதை போடி ராஜ்குமாரால் குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது[1]
இலக்கிய இடம்
காலத்தின் முன் ஒரு செடி தொகுப்பிலிருக்கும் கவிதைகளை, "தனிமை மீது பித்தேறி அலையும் மனிதன் ஒருவனின் கண நேர மயக்கங்கள், அவனுக்கு அதீதமான தவிப்பை எப்போதும் தந்துவிடும் தனிமையின் அத்தனை சுவைகளையும் உள்ளடக்கிய பல்வேறு கவிதைகள்" என்று கனலி இதழாசிரியர் க.விக்னேஸ்வரன் மதிப்பிடுகிறார்.
நூல்கள்
கவிதை தொகுப்புகள்
- காலத்தின் முன் ஒரு செடி (புது எழுத்து ,2002)
- ஏரிக்கரையில் வசிப்பவன் (ஆழி பதிப்பகம்,2011)
- மூன்று பாட்டிகள் (சால்ட் பதிப்பகம்,2021)
- கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார் (தன்னறம்,2023)
- தப்பு விதை (தன்னறம், 2023)
- குறுமுப்பத்தாறு (நாதன் பதிப்பகம் 2024)
கட்டுரை நூல்கள்
- தமிழின் முதல் இரு நாவல்கள்
- சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகள் (நூலாக்கம் பெற்ற ஆய்வேடுகள், தி பார்க்கர் வெளியீடு, 2008)
- கவிஞயம் (2021)
- 8 கட்டுரைகள் (இருநூல்களும் யாவரும் பதிப்பகம், 2023)
தொகுப்பு நூல்கள்
- மகரந்த வாசல் (இசுலாமியாக் கல்லூரி மாணவர் கவிதைகள், தமிழ்த்துறை வெளியீடு, 2004)
- வனப்பாதையில் (வனம் இதழ் நேர்காணல்கள் தொகுப்பு, 2021)
இணைப்புகள்
- தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது -பகுதி-1:கனலி விக்னேஷ்வரன்
- தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது-ஸ்ரீநேசன்,பகுதி 2:கனலி விக்னேஷ்வரன்
- புகைப்பவர்கள் குறும்படம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.